Monday, June 23, 2025

எல்லாத்துறைகளிலும், சிறப்பாகச் செய்யும் நாட்டில் வாழும் மக்கள் எளிதில் மனநிறைவு அடைவதில்லை. கருத்துரைக்க.


பாண்டியன் மல்லிகா ஶ்ரீ - 405 - 2025 

எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாடுகளில், அமெரிக்க, ஜப்பான், பின்லாந்து, சிங்கப்பூர் போன்ற பற்பல நாடுகள் அடங்கும். இந்நாடுகள், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்வதால், அந்நாட்டு மக்கள் மனநிறைவு அடைகிறார்களா? முதலில், மனநிறைவு எப்படி நம் வயிறு நிரம்பியவுடன் போதும் என்று தோன்றுகிறதோ, அவ்வாறு மனம் கிடைத்ததை வைத்து நிறைவு அடைவது ஆகும். ஆனால், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாடுகளில், போட்டித்தன்மை, விலைவாசி உயர்வு, அதிகரித்த எதிர்பார்ப்புகள், மனஅழுத்தும் போன்ற காரணங்களால் அந்நாடுகளில் வாழும் மக்கள் எளிதில் மனநிறைவு அடைவதில்லை என்பது என் ஆணித்தரமான கருத்தாகும். இக்கட்டுரையில், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாட்டில் வாழும் மக்கள் எளிதில் மனநிறைவு அடையாததன் காரணங்களை விளக்குகிறேன்.

முதலாவதாக, போட்டித்எண்மை அதிகரிப்பு. எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாடுகளில், எடுத்துக்காட்டாக, தொழில் நுட்பம் அதிவேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அசுரவளர்ச்சி அடைந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ள இயலாதவர்களால், போட்டித்தன்மை மிகுந்த உலகில் முன்னேற இயலாது. இம்மாதிரியான போட்டித்தன்மையால், குறைந்த வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அதோடு, வேலை செய்பவர்களும் தொடர்ந்து தங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால், வேலை வாய்ப்புகளைத் தேடும் நபர்களும் வேலை வாய்ப்பை நழுவவிடாமல் கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் நபர்களும் போட்டித்தன்மையால் மன அழுத்தத்திற்கு ஆளாகுகின்றனர்.

உதாரணமாக, 2024 ஆம் ஆண்டில், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் ஒரு நாடாக திகழும் சிங்கப்பூர், போட்டித்தன்மைத் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பெற்றதாக 'தமிழ் முரசு குறிப்பிட்டது. மேலும், சிங்கப்பூரில், மன அழுத்த சதவீதம் 2021 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றும், 87 சதவீதம் சிங்கப்பூரர்கள் மன அழுத்தத்தை உணர்ந்ததாக

தெரிவித்துள்ளனர் என்று 'CNA' தெரிவித்துள்ளது. இதனால், சிங்கப்பூரில் கல்வித்துறை சிறந்து விளங்குவதால், அனைத்து மாணவர்களுக்கும் போதுமான கற்றல் பாடங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், அனைத்து மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க, கடினமாக உழைத்து கற்றுக்கொள்கிறார்கள். சிங்கப்பூர் மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சிபெறாமல் இருந்தால், மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். 

‘NTU’ வெளியிட்ட தகவலின்படி, 86 சதவீதம் சிங்கப்பூர் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கல்வித்துறையில் அல்லது எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடுகளில் போட்டித்தன்மை அதிகரிப்பால் அந்நாட்டு மக்கள் மனநிறைவு அடைவதில்லை. பொருளாதார உயர்வுக்கும் காரணமாக அமைந்துள்ளது. ஒரு நாடு எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படுவதால், அதனுடைய பொருளாதாரமும் உயரும். அந்நாட்டில் பொருளாதாரம் அதிகரிப்பால், விலைவாசியும் உயருகிறது. விலைவாசி உயர்ந்தாலும், மக்களது சம்பளம் அதிகமாகாமல் இருப்பதால், மக்கள் பணப்பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கையின் தினசரி தேவைகள் படிப்படியாக உயர்கின்ற நிலையில், பணப்பற்றாக்குறை ஏற்படுவதால், மக்கள் மேலும் கடினமாக உழைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால், மக்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, மருத்துவத்திலும் சிறந்து விளங்கும் நாடாகத் திகழும் சிங்கப்பூரில், மருத்துவ சேவைகளின் செலவுகள் மிகவும் விலையுயர்ந்ததாக இருக்கின்றன. மருத்துவ சேவைகளின் தரம் உயர்ந்ததாக இருப்பதால், கட்டணங்களும் அதிகரிக்கின்றன. இதனால், மக்கள் மருத்துவச் செலவுகளைக் கண்டு மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.இதனால், எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கும் நாட்டில் வாழும் மக்கள், விலைவாசி உயர்வால், மனநிறைவு அடைவதில்லை.

மூன்றாவதாக, அதிகரிக்கும் எதிர்ப்பார்ப்புகள். எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடுகளில், பெரும்பாலான  சேவைகளும் வசதிகளும் சிறந்த தரத்தில் இருக்கும். இவையெல்லாம் மந்திரத்தினால் வருவதில்லை, அந்நாட்டில் உள்ள உழைப்பாளர்கள் கடினமாக உழைத்து நாட்டின்

பொருளாதாரத்தை உயர்த்தியும், அரசாங்கத்தின் நல்ல அணுகுமுறைகளாலும் திட்டங்களாலும் உருவாக்கப்படுகின்றன. எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல் படுகின்ற நாடாக உலகளவில்  தோன்றுவது அந்நாட்டின் மக்களுக்குப் பெருமையாக இருப்பதோடு மற்ற நாடுகளுக்கும் அந்நாடு ஒரு முன்மாதிரியாகத் திகழும். எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடு என்ற முத்திரையை ஒரு நாடு அடையும்போது, அதைப் பல வருடங்களுக்கு தக்கவைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்களும் அரசாங்கமும் ஆசைப்படும். இதனால், இம்முத்திரையை நிலைக்க வைக்க, அந்நாட்டு மக்கள் மேலும் தங்களது. வேலைகளில் சிறந்து செயல்பட்டு, மேலும் கடினமாக உழைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இம்மாதிரியான எதிர்பார்ப்புகளால், எல்லாத்துறைகளிலும்  சிறந்து செயல்படும் நாட்டில் வாழும் மக்கள் மனநிறைவு அடைவதில்லை.

"மனநிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடம்

உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாமே 

தேடிக்கொள்ளும் வறுமை

 

என்று சாக்ரடீஸ் கூறியதுபோல, மனிதர்களாகிய நாம், நம்மிடம் இருப்பதை வைத்து எந்நேரமும் மகிழ்ச்சியாகவோ மனநிறைவாகவோ இருந்ததில்லை. நாம் எப்பொழுதும் முன்னேறப் பார்க்கிறோம். இதனால், நம்மிடம் இருக்கும் செல்வத்தை நாம் பொருட்படுத்தாமல், மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டும், நம்மை நாமே மாற்றிக்கொள்கிறோம். 

இதனால், எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடுகளில் இருக்கின்ற மக்கள், தங்களது நிலையின் மதிப்பை அறியாமல் நன்றியற்றவராக இருக்கின்றனர். எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படாத நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையை ஒப்பிடும்போது, எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும் மக்களின் நிலை ஓரளவிற்கு மேம்பட்டு இருக்கும். ஆனால், இதை அந்நாட்டு மக்கள் புரிந்துகொள்ளாததாலும், அந்நாடு வழங்கும் வசதிகளையும் சேவைகளையும் பொருட்படுத்தாததாலும், அந்நாட்டு மக்கள் மனநிறைவு அடைவதில்லை. தங்களிடம் இருக்கும் செல்வத்தை வைத்து அவரவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தாலே, அவர்கள் எப்பொழுதும் மனநிறைவாக இருப்பார்கள். இதனால், எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும் மக்கள், மனிதனின் ஆசைப்படும் குணத்தால் மனநிறைவு அடைவதில்லை.

இக்கட்டுரையில், எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும் மக்கள் மனநிறைவு அடையாததற்கான  காரணங்களைப் பற்றி என் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். சுருக்கமாக, அதிகரிக்கும் போட்டித்தன்மையினால் ஏற்படும் மன அழுத்தம், பொருளாதார உயர்வால் விளையும் விலைவாசி உயர்வு, 'எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடு' என்ற எதிர்ப்பார்ப்பைத் தக்கவைப்பது மற்றும் மனிதனின் ஆசைப்படும் குணம் ஆகிய காரணங்களால் எல்லாத்துறைகளிலும்,சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும் மக்கள் மனநிறைவு அடைவதில்லை, என்ற எனது ஆணத்தரமான கருத்தை இக்கட்டுரையில் முன்வைத்துள்ளேன். 

****************


Saturday, June 21, 2025

நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிச் சேர்ப்பதால் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சியைப் பெற்றுவிட இயலாது. இக்கருத்தினை நீ ஏற்றுக்கொள்கிறாயா? ஏன்?

 

    

LAKSHMI KANTHAN SRIVIKA

         Class 405 - 2025 

    மகிழ்ச்சி, அப்படியென்றால் என்ன? மகிழ்ச்சி என்பது பல பாகங்களைக் கொண்ட, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறாக அர்த்தமளிக்கும், வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்ச்சியாகும். யாருக்க்கு எது மகிழ்ச்சியளுக்கும் என்பது யாராலும் கணிக்க இயலாது; சில சமயங்களில் அவர்களாலே கணிக்க இயலாது. ஆனால், அதுதான் இவ்வுலகில் உள்ள அனைவரும் அடைய விழையும் மிகத் தலைமையான லட்சியம். ஒவ்வொருவரும் நாம் நம் வாழ்க்கையில் எதைச் செய்தால் நம் வாழ்வு ஓர் இன்பக் கடலாய் மாறும் என்று பாடுபடுகிறார்கள். அவற்றில் சிலர், பொருட்செல்வத்தையே மிக முக்கியமாக கருதுகிறார்கள். அவ்வாறானோர், நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிச் சேர்ப்பதால் மட்டும் மகிழ்ச்சியைப் பெற்றுவிட இயலும் என்றெண்ணுகிறார்கள். என்னைப் பொருத்தமட்டில், இக்கருத்தை நான் அறவே ஏற்றுக்கொள்ளமாட்டேன். இவ்வாறு எண்ணுபவர்கள் பெரும்பாலும் சிறிய பிள்ளைகள்தான் என்று அலட்சியாஅக விட்டுவிடுவது தவறு. ஏனெனில், பெரியோர்கள் பலரும்கூட பல பொருட்களைச் சேர்த்தால் மனநிறைவு அடைந்து, நாளடைவில் மகிழ்ச்சியையும் அடையலாம் என்ற தவறான சிந்தனையோட்டத்தைக் கொண்டுள்ளனர். அவற்றையெல்லாம் உடைத்து, இக்கருத்தையொட்டி என்னுடைய வாதத்தை நிலைநாட்டவே இக்கட்டுரையை எழுதியுள்ளேன். 

    பல புதிய பொருட்களுக்கு உரிமை கொண்டாடினாலே இன்பத்தை அடையமுடியும் எனில், வசதி குறைவுள்ளோர் மகிழ்ச்சியாக வாழத் தகிதியற்றவர்களா? உதாரணத்திற்கு, புதிய ஒரு விளையாட்டுப்பொருளை ஒரு தம்பதியினரால் தங்கள் மகனுக்கு வாங்கித்தர முடியவில்லையெனில், அவன் மகிழ்ச்சியாக வாழவில்லை என்பதில்லையே. அவ்வாறான குழந்தைகள், தங்களின் பெற்றோருடன் நேரம் செலவிடுவதை பொன்னான நேரமாக கருதுவார்கள். குறிப்பாக, இருவரும் வேலைக்குச் சென்று பணம் ஈட்ட பாடுபடும்போது, வாரயிறுதி நாட்களில் ஒன்றாக உணவகம் சென்றாலே அவர்களுக்குப் போதும். புதிய பொருட்களைச் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்திற்கு இடமேயில்லை. பெரியோர்க்கும் இது பொருந்தும். அந்தத் தந்தையானவர், புதிதாக வெளிவந்த உந்துவண்டியை வாங்கினால் மட்டுமே மகிழ்ச்சியை எட்டுவார் என்றில்லை. தன் மனைவி மற்றும் மகனுடன் சிறுசிறு செயல்களைச் செய்வதோ, அன்பான வார்த்தைகளை உதிர்ப்பதோதான் எப்பொருளைக் காட்டிலும் அவருக்கு பேரின்பத்தைத் தேடித்தரும். இத்தகைய பல குடும்பங்கள் கவலையின்றி மனநிறைவுடன் வாழும்போது, புதிய புதிய பொருள்களைச் சேர்ப்பதால் மட்டும் மகிழ்ச்சியைப் பெற்றுவிடமுடியும் என்றெண்ணுவது மெய்யாகாது.

    ஆனால், ஒருவருக்கு நிறைய பணச்செல்வம் இருந்தாலும், அவற்றையெல்லாம் பயன்படுத்திப் பொருட்களை உடனுக்குடன் வாங்கிக்கொண்டாலும், அவர் பெருமகிழ்ச்சி அடைவார் என்று திண்ணமாக கூற இயலாது. உணமையான மகிழ்ச்சி என்பது உறவுகள் மூலமே தோன்றும். ஒருவர் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் ஆளும் அளவு செல்வம் கொண்டிருந்தாலும், தனிமையை எதிர்நோக்கினால், மகிழ்ச்சியை அடைய வழியின்றி திணறுவார். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒருவர் கொள்ளும் உறவு விலைமதிப்பில்லா ஒன்றாகும். நம் வாழ்க்கையை நாம் தனியே செலுத்தாமல், நம்முடன் ஒருவர் நடக்கும்போதுதான் உறவுகளின் சிறப்பை அறிந்து இன்னும் அதிகமான இன்பத்தைக் காணமுடியும். மனிதனுக்குத் தேவைப்படும் துணை, புரிந்துணர்வு, அன்பு போன்றவற்றை இன்னொரு மனிதன்தான் வழங்கமுடியும். உணர்ச்சியளவில் எப்பயனும் தராத பொருட்களை வாங்குவதன் மூலமே மகிழ்ச்சியை அடைந்துவிடமுடியும் என்றெண்ணுபவர், தன்னத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

    இருப்பினும், புதிய பொருள்களை உடனுக்குடன் வாங்குவதால் மட்டுமே மகிழ்ச்சியைப் பெற்றுவிடமுடியும் என்றெண்ணுவோரின் சிந்தனைக்கும் சில அடிப்படை காரணங்கள் உள்ளன. சிங்கப்பூர் போன்ற போட்டித்தன்மை மிக்க தேசத்தில், பின்தங்கிவிடகூடாது என்ற அச்சத்தை அனைவரும் கொண்டிருப்பது இயல்பு. சில மாணவர்கள், தாமும் மற்ற மாணவர்களைப் போலவே இருக்கவேண்டும் என்ற இச்சையால், தங்கள் பெற்றோரிடம் இவ்வாறான பொருட்களை வாங்கிக்கொடுக்குமாறு வேண்டுகிறார்கள். மற்றவர்கள் தன்னைத் தாழ்வாக எண்ணினால், தனக்கு நண்பர்கள் இருக்கமாட்டார்கள் என்று அஞ்சுவார்கள். இக்கருத்து வேலைக்குச் செல்லும் பெரியோர்க்கும் பொருந்தும். தங்களிடம் உள்ள பொருள்களைப் பற்றி பெருமையாக பேசுவதில் அவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.

     இம்மாற்றுக்கருத்துக்களைப்பற்றி நான் விளக்கினாலும், நான் என் வாதத்தை முழுமனதுடன் மீண்டும் நிலைநாட்டுகிறேன். பொருட்களுக்கு உயிரில்லை. அந்த நிறுவனம் வேறு ஏதேனும் புதிய பொருளை வெளியிட்டால், அனைவரும் அதை வாங்க விழைவார்கள். ஒவ்வோராண்டும், ‘ஐஃபோன்’ நிறுவனம் புதிய தொலைபேசியை வெளியிட்டவுடன், அதில் எவ்வித மாற்றமும் இல்லாவிடிலும், அதை அனைவரும் வாங்குவதைப்போல், புதிய பொருட்கள் ஒருநாள் பழையதாக மாறும். அவ்வாறு பொருள்கள் பழையதாக மாறும்போது, அவை மகிழ்ச்சியளிக்கப்போவதில்லை. நம் வாழ்நாள் முழுதும் நிலைக்கப்போவது நம் உறவுகள்தான். பொருட்செல்வன் ஓர் ஆற்றில் வாழும் பறவைகள் போன்றவை. ஆறு நாளடைவில் வற்றினாலும், அல்லது வற்றாத நிலையிலும், அதாவது காலம் உருண்டோடியவுடன், பறவைகள் வேறு ஆற்றைத் தேடிச் சென்றுவிடும். அதைப் போலவெ, நம் வாழ்வில் நாம் சேர்த்துவைத்திருந்த பொருட்களுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். ஆனால், நம் உறவுகள் அவ்வாற்றில் வாழும் மீன்கள் மற்றும் செடிகள் போன்றவை. எவ்வளவுதான் காலம் கடந்தாலும் நம்முடனே இருப்பார்கள்; நம் வாழ்க்கையில் வாழ்நாள் முழுதும் வெளிச்சத்தை அளிப்பார்கள். 

     இரண்டாவதாக, நம்மை மற்றவர்கள் தாழ்வாக எண்ணக்கூடாது என்பதற்காகவே பல பொருள்களை வாங்கக்கூடாது.

உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே

 இடுக்கண் களைவதாம் நட்பு”

என்ற திருக்குறளிற்கேற்ப, நட்பு என்பது துணை, உதவி, அன்பால் கட்டப்பட்ட ஒரு வீடாகும். ஒருவன் வசதி குறைந்தவனாக இருப்பதாலே அந்த வீடு உடைந்து பாழாகுமெனில், அந்த வீடு உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படவில்லை. அவ்வாறு ஏற்படும்போது, அந்நட்பை விட்டொழித்துவிட்டு நமக்கு உண்மையான அன்பளிக்கும் நண்பர்களுடன் பழகினாலே மகிழ்ச்சி கிட்டும்.

     சுருக்கமாக, நிறுவனங்கள் அறிமுகப்ப்டுத்தும் புதிய பொருள்களை உடனக்குடன் வாங்கிச் சேர்பதால் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சியைப் பெற்றுவிட இயலாது என்பதை நான் உறுதியாக ஏற்கிறேன். நாளடைவில் பழையதாக மாறும் பொருட்களால் விளையும் எவ்வித இன்பமும் நிலைத்திருக்காது. ஆகவே, அதற்குப் பதிலாக, நம் வாழ்நாள் முழுதும் நம்முடன் பயனிக்கும் நபர்களுடன் சிறந்த உறவைக் கொண்டாடுவதே உண்மையான பெருமகிழ்ச்சியை நம் வாழ்விற்குச் சேர்க்கும்.

                               ********************

 


Monday, May 26, 2025

சொற்பொழிவு - தேசியதினக் கொண்டாட்டத்தை ஒட்டிப் பேச்சுப்போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. அதில் நீ கலந்துகொள்ளவிருக்கிறாய். “பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு” எனும் தலைப்பில் ஒரு சிற்றுரை எழுதவும்.


SELVAKUMAR KANISHKA - YEAR 4 - 407- 2025 


“கசடதபற வல்லினம், ஙஞநணமன மெல்லினம், யரலவழள இடையினம், யாவரும் இங்கே ஓரினம்!”


அமுதே, தமிழே, அழகிய மொழியே எனதுயிரே! முதலில் உன்னை மனம், மொழி, மெய்யால் வணங்கி மகிழ்கிறேன். அடுத்து, என்னருந் தமிழ்மொழி என்போன்ற இளம்பருவத்தினர் நாவிலும் நற்சிந்தையிலும் நிலைத்திட வேண்டும் என்னும் நன்னோக்கத்தில் இப்போட்டியை ஏற்பாடு செய்த குழுவினருக்கும் இங்கு வருகை புரிந்துள்ள அனைவருக்கும் இன்தமிழ் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


வேற்றுமை மறந்து ஒற்றுமை என்ற கூற்றிற்கேற்ப, சமூக ஒற்றுமை என்பது அனைத்து இனங்களைச் சார்ந்த மக்களும், இனம், மதம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் முதலிய வேறுபாடுகளைத் தாண்டி கூட்டுறவுடன் வாழ்வதாகும். அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தின் அடித்தளமானது சமூக ஒற்றுமை. இது நிலைத்திருத்தல் என்பது, எப்போதும், இன்னும் வரவிருக்கும் தலைமுறைகளிலும் சமூக ஒற்றுமை வேறூன்றியிருப்பதைக் குறிக்கிறது. இவ்வாறு பல இனத்தவரும் வாழும் சிங்கை நாட்டில் சமூக ஒற்றுமையை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவர்களின் இன்றியமையாத பங்கு என்ன என ஆராய்வோம். 


இக்காலக்கட்டத்தில், பள்ளியில் மாணவர்கள் கற்றலில் மட்டும்தான் ஈடுபடுகிறார்களா என்ன? இணைப்பாடம், குழு திட்டப்பணிகள், கலை சார்ந்த நடவடிக்கைகள் என எண்ணற்ற வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. சமூக ஒற்றுமை என்பதற்கான அஸ்திவாரம் சமூகப் பிணைப்பு என்பதில் துளி அளவும் ஐயம் இல்லை. தமக்கு முக்கியமான சமூக பிரச்சனைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் சக மாணவர்களுடன் ஈடுபட ஏகப்பட்ட வாய்ப்புகளும் ஆதரவும் பள்ளிகளால் வழங்கப்படுகையில், பெரும்பாலான மாணவர்கள் மக்கள் சார்ந்த சமூக பிணைப்பை மேம்படுத்த முன்வருகின்றனர். மற்ற அமைப்புகளுடன் ஒன்றாகச் செயற்பட்டு பலதரப்பட்ட மக்களிடையே இன நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் அதிகரிக்க, நிகழ்ச்சிகள் பலவற்றை அரங்கேற்றுகின்றனர். சிங்கப்பூரிலுள்ள பல இனங்களையும் அவற்றின் தனித்துவமான கலாச்சாரத்தையும் வெளிக்கொண்டுவருவதற்காக, கலை அரங்கேற்றங்கள், பாரம்பரிய விளையாட்டுகளைக் கொண்ட குடும்ப விழாக்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கக்கூடிய நடவடிக்கைகள், முதலியவற்றை மாணவர்களே தன்னிச்சையாகத் திட்டமிட்டு நடத்துகின்றனர். தேசிய அளவில் நிகழும் நிகழ்ச்சிகளில் கூட, குழுக்களில் செயற்படும் மாணவர்கள் இன நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையைப் பற்றியும் பொதுமக்களுக்குக் கற்பிக்க, பயிலரங்குகள், கண்காட்சிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்கின்றனர். 


இதற்கெல்லாம் முக்கிய காரணங்கள் மாணவர்களின் ஆர்வமும் பற்றுமே ஆகும். பள்ளியில் செய்யவேண்டும் என்பதற்காக ஏனோ தானோ என மாணவர்கள் திட்டப்பணிகளில் ஈடுபடுவரில்லை. “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்பதற்கேற்ப, சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையைத் தக்கவைப்பதில் தம்முடைய இன்றியமையாப் பங்கை உணர்ந்து மாணவர்கள் முழு மனதுடனும் உந்துதலுடனும் செயல்படுகின்றனர். அவர்கள் நடத்தும் இந்நிகழ்ச்சிகள் எவ்வாறு உண்மையான, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என நீங்கள் நினைக்கலாம். கலாச்சாரம் ஒட்டிய கருத்துப்பரிமாற்றம் மூலம், மக்கள் ஒருவரையொருவர் பொருத்துக்கொள்ளாமல் புரிந்துகொள்கின்றனர்; மற்ற இனங்களைப் பற்றிய ஆர்வத்தை வளர்த்துக்கொள்கின்றனர். 


இரண்டாவதாக, இன்றைய மாணவ செல்வங்களாகிய நாம்தான் நாளைய தூண்களாவோம், அடுத்த தலைமுறையே நம்மால்தான் வடிவமைக்கப்படுகிறது என்ற கருத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். அவ்வாறு இருக்கையில், சமூக ஒற்றுமையைக் கட்டி காக்க வேண்டுமென்றால், நாம் தானே முதல் குரலை எழுப்பவேண்டும்? என்னதான் நிகழ்ச்சிகள், அரங்கேற்றங்கள், கண்காட்சிகள் போன்றவற்றை நடத்தினாலும், உண்மையான சமூகப் பிணைப்பை வளர்ப்பது அதையும் தாண்டியது. மாணவ குரல்களாகிய நமக்குதான் சமுதாயத்தோடு தொடர்புகொண்டு மனந்திறந்து பேசுவதற்கான தளங்களை உருவாக்கவேண்டிய கடமை உள்ளது. “கூட்டுறவே நாட்டு உயர்வு” என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர். முதலில் கூட்டுறவை வளர்ப்பதற்கு எது தேவை? மக்கள் ஒருவரோடு ஒருவர் முகம் பார்த்துப் பேசவேண்டும். மாணவ பேச்சு தளங்கள், பட்டிமன்றங்கள், சமூக உரையாடல் மேடைகள் முதலியவை சில எடுத்துக்காட்டுகள். நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் பேச்சு போட்டியைவிட வேறு சிறந்த உதாரணம் இல்லை. என்ன கூற வருகிறேன் என்றால், சமூக ஒற்றுமையை வளர்ப்பதற்கு மாணவர்கள் தாமே உரையாடல் தளங்களை உருவாக்குகின்றனர், மற்றவர்களை அவற்றில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்துகின்றனர். தினசரி சமுதாய சிக்கல்களையும் அவற்றைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளையும் மாணவர்கள் ஒன்றாகத் திரட்டுகின்றனர். இதன்மூலம், சமூக ஒற்றுமை இல்லாததற்கான மூல காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காண்கிறார்கள். 


இறுதியாக, மாணவர்கள் சமூக ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எந்த அளவிற்குப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கின்றனரோ, அதே அளவிற்குத் தம் சொந்த பள்ளிகளிலும் சக மாணவர்களுக்கும் பாடங்கள் மூலமும் விளையாட்டுகள் மூலமும் சுலபமாக கற்பிக்கின்றனர். முன்புபோல், சமூக நல்லிணக்கத்தை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உணர்த்துவதில்லை, மாணவர்களே கற்கிறார்கள், கற்பிக்கிறார்கள். தொடக்கநிலை மாணவர்களிலிருத்து உயர்நிலை மாணவர்கள் வரைக்கும், சமூக ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதற்கான வழிகள், ஆலோசனைகள், ஒற்றுமையை ஒட்டிய குழு நடவடிக்கைகள் முதலியவை வழங்கப்படுகின்றன. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பதற்கேற்ப, சிறு வயதிலிருந்தே சமூக ஒற்றுமையை வாழ்க்கையின் அடிப்படையாக மாணவர்கள் காண்பதால், எதிர்காலத்திலும் அதைக் கடைப்பிடிக்கின்றனர். 


சுருங்கக் கூறின், பள்ளி திட்டப்பணிகள் மூலம் சமூக பிணைப்பை வட்டாரங்களில் வளர்ப்பது, மக்களுக்கு திறந்த உரையாடல் தளங்களை அமைத்துக்கொடுப்பது, மற்றும் சக மாணவர்களையும் சமூக ஒற்றுமை குறித்த கற்றலில் ஈடுபடுத்துவது ஆகிய வழிகள் மூலம் மாணவர்கள் சமூக ஒற்றுமை நிலைத்திருக்க பங்காற்றுகின்றனர். இதுவரை என் உரையைச் செவிமடுத்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். 


~ முற்றும் ~


Saturday, May 24, 2025

சொற்பொழிவு - பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு

            RADHAKRISHNAN SUJITHA - உயர்நிலை 4 ஆம் ஆண்டு - 2025

எனது தாய்மொழியான தமிழை வணங்கி இந்த அவையில் இருக்கும் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு தரப்பினர் சிங்கப்பூரில் குடியேறுகின்றனர். சீனாவிலிருந்து வருகிறார்கள். இந்தியாவிலிருந்து வருகிறார்கள். ஏன், அமெரிக்காவிலிருந்து கூட வருகிறார்கள். இந்த உலகமயமாக்கும் சூழலில் பலர் வேலை வாய்ப்புகளுக்காக சிங்கப்பூருக்கு வருகின்றனர் என்பதே உண்மை. ஆகவே, சிங்கப்பூரில் பல்லினத்தவர் வாழும் நிலை ஏற்படுகிறது. சேர்ந்து படிக்கும் நிலை ஏற்படுகிறது. இதை மனதில்கொண்டு “பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு” என்ற தலைப்பையொட்டி உங்களிடம் பேசப்போகிறேன்.


சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு. உலகத்தில் வெரும் சின்ன புள்ளிதான். சிறிய நாடாக இருந்தாலும் உலகத்திலே உள்ள முதல் 20 செழிப்பான நாடுகளில் இடம்பெறுகிறது. ஏன்? சிறப்பான நீதி, தேர்ச்சிப்பெற்ற பலர் என்ற பல காரணங்களை சொல்லிக்கொண்டே வரலாம். ஆனால், முக்கியக் காரணம்? சமூக ஒற்றுமையே! சிங்கப்பூர் என்பது ஒரு மரம் போல, சமூக ஒற்றுமை என்பது அதன் வேர்கள் போல. வேர்கள் இல்லாவிட்டால், மரமே சாய்ந்துவிடும். ஏன்? வேர்களே மரத்தின் அடித்தளம். அதே போல் நமது அடித்தளமான சமூக ஒற்றுமை கலந்துவிட்டால், சிங்கப்பூர் சிரமப்படும் அவல நிலை ஏற்படும். அதற்கு பிறகு கரை ஏறுவது மிகவும் சிரமம்.


சரி, நான் ஏன் சமூக ஒற்றுமை முக்கியம் என்று சொல்லிவிட்டேன். ஆனால், மாணவர்களின் பங்கு என்ன? இப்போது பார்ப்போம். மாணவர்கள் என்பவர்கள் நமது அடுத்த தலைமுறையினர். அவர்கள் தான் எதிர்காலத்தில் சிங்கப்பூரை ஆள்வார்கள். ஆகவே, மாணவர் பருவத்திலே சமூக ஒற்றுமையை கடைப்பிடிக்கும் பழக்கத்தை வைத்துக்கொண்டால்தான் எதிர்காலத்தில் அவர்கள் சமூக ஒற்றுமையைச் சிங்கப்பூரில் நிலைநாட்ட முடியும். “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை,” என்று நமது முன்னோர் சொல்லியிருக்கின்றனர். ஆகவே, சிறு வயதிலிருந்தே மாணவர்கள் ஒவ்வொரு இனத்தவருடன் பழகுவது இன்றியமையாததாகும். அதுமட்டுமா? இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் வீட்டில் செலவிடும் நேரத்தை விட பள்ளியில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். ஆகவே, மாணவர்கள் தங்களுடைய பங்கை ஆற்றாவிட்டால், பள்ளி படிப்பதற்கு ஒரு சிறந்த சூழலாக அமையாது. அவர்களுக்கிடையே சண்டைப்போட்டால் என்ன பயன்? மற்றவருக்குத் தீமையே அளிக்கும். எந்த நன்மையும் இருக்காது. ஆகவே, மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் எந்த இனத்தவராக இருந்தாலும் சரி, பழகிக்கொள்ள கற்றுக்கொள்ளவேண்டும். பழக வேண்டும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் நமக்கு இருக்கும் நிம்மதி சீர்குலைய அதிக வாய்ப்புள்ளது.


”வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்” என்று நமது முன்னோர் சொல்லியிருக்கின்றனர். ஏன்? ஒரு பிரச்சனை வரும் முன் நாம் ஆயுத்தமாய் இருந்தால்தான் நம்மை ஒரு பிரச்சனையின் விளைவுகளுக்கு ஆளாகாமல் தற்காத்துக்கொள்ளலாம். இது சிங்கப்பூருக்கும் பொருந்தும். சிங்கப்பூர் முதலில் சுதந்திரம் பெற்றபோது, பல பூசல்கள், பல சண்டைகள் என்று நிலவின. நீங்கள் பெரியவர்கள் மட்டுமே இந்த பூசல்களில் பங்கேற்றனர் என்று நினைத்திருக்காலாம். ஆனால், அவ்வாறு அல்ல. மாணவர்கள் கூட இது போன்ற சண்டைகளில் ஈடுப்பட்டனர். இந்த சண்டைகளில் பலர் காயமடைந்தனர், கட்டடங்கள் சேதமடைந்தன. சிலர் அதிக காயங்களாலும் உயிரை இழந்தனர். சிங்கப்பூரின் நிலையே கண்ணீரும் கம்பலையுமாக இருந்தது. இது போன்ற நிலை யாருக்கும் ஏற்படக்க்கூடாது என்ற மனப்போக்கை நாம் கொண்டிருக்க வேண்டும். ஆகவே, இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல், தற்காத்துக்கொள்ள மாணவர்கள் தங்கள் பங்கையாற்ற வேண்டும். எவ்வாறு? அவர்கள் பள்ளியில் சிறு வாக்குவாதங்களை பெரும் சண்டையாக உருவாவதை தடுக்க வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இனத்தைப் பற்றி பேசாமல், பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். இத்தகைய வழிகள் மூலம் சிறு வாக்குவாதங்கள் பெரிதாக்காமல் இருக்கும்.


அடுத்து, சமூக ஒற்றுமை என்பது ஒரு வாழ்க்கைத்திறன் என்று நான் முழுமனதோடு நம்புகிறேன். ஆகவே, அவர்கள் வெளிநாட்டிற்கு செல்லும்போதோ, அல்லது சிங்கப்பூரிலோ மற்றவர்களுடன் சேர்ந்து வேலைகளை வாக்குவாதமின்றி செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். “ஒரு கைத் தட்டினால் ஓசை எழும்புமா?” என்பது போல சமூக ஒற்றுமையோடு ஒருவருடன் ஒருவர் வேலை செய்தால்தான் நாம் எதிர்காலத்தில் ஒரு சிறந்த வேலை செய்யும் சூழலை உருவாக்க இயலும். மாணவர்கள் இப்போதே ஒப்படைப்புகளின்போது மற்ற இனத்தவருடன் சேர்ந்து செய்ய முடியாவிட்டால், எதிர்காலத்தில் எப்படி செய்வார்கள்? நீங்கள் இவ்வாறு மாணவர்களால் செய்ய முடியும் என்று நினைத்தால், இது ஒரு மூட நம்பிக்கை என்று நானே கூறுகிறேன். சமூக ஒற்றுமையை நிலைநாட்டும் கடமை மாணவர்களின் கைகளிலே இருக்கிறது. அந்த கடமையை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான், தற்போதைய வேளையிலும், எதிர்காலத்திலும் சமூக ஒற்றுமையை நிலை நாட்ட முடியும் என்று நான் நம்புகிறேன். 


இறுதியாக, மாணவர்கள் தான் எதிர்காலத்தில் சமூகத்தில் பெரியவர்களாக வாழ்வார்கள். அவர்கள் வீடு வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆகவே, புது வாழ்வை எதிர்காலத்தில் வாழும்போது மற்ற இனத்தவருடன் ஒற்றுமையாக வாழவேண்டும். சிங்கப்பூரில் சுமார் 70% மக்கள் அடுக்குமாடி கட்டடங்களில் வசிக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்த சதவிதம் மாறும். ஆகவே, ஒரே மாடியில், ஒரே கட்டடத்தில் பல்லினத்தவர் சேர்ந்து வாழும் நிலை ஏற்படும். ஆகவே, மாணவர்கள் இப்போதிலிருந்தே அண்டைவீட்டார் வீட்டுக்கு வரும்போது இன்முகத்தோடு வரவேற்க வேண்டும். விருந்தோம்பலை கடைப்பிடித்து வாழ வேண்டும். இவ்வாறுச் செய்யாவிட்டால், மற்றவர்களின் உணர்வுகள் அதிக அளவில் பாதிக்கப்படும். செடிகளை தட்டுவது, முட்டைகளை எறிவது என்று பல நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்க அதிக வாய்புண்டு. ஆகவே, எதிர்காலத்திலும், இப்போதைய சூழலிலும், கட்டடங்களிலே சமூக ஒற்றுமையை நிலைநாட்டுவது முக்கியம்.


ஆகவே, மாணவர்களே! நமது பங்கு சமூக ஒற்றுமைக்கு மிகவும் முக்கியம். சமூக ஒற்றுமைக்கு நாமே ஒரு நுழைவுச்சீட்டுப் போல். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதை கடைப்பிடித்து வாழ்ந்து நிம்மதியாக வாழ்வோம். முழு சமூக ஒற்றுமையை அடைவது கடினம் என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால், மற்றவர்களை மதிப்பது, மற்ற கலாச்சாரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது, வாக்குவாதங்களை பெரிதுபடுத்தாமல் இருப்பது போன்ற எளிய முறைகளின் மூலம் இந்த இலக்கை அடையலாம். சிரமமாக இருந்தாலும் ஒன்றுபட்டு இந்த இலக்கை அடைவோம். ஆகவே, இந்த அவையில் இருக்கும் ஆட்கள் மாணவர்களாக இருந்தால், இந்த பாட்டை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


’வெற்றிக்கொடி கட்டு

மலையை முட்டும் வரை முட்டு 

இலட்சியம் எட்டும் வரை எட்டு

படையெடு படையப்பா’


வெற்றிக்கொடியைக் கட்டுவோம். சிரமமாக இருந்தாலும் இலட்சியத்தை எட்டுவோம், சமூக ஒற்றுமையை நிலைத்திருப்போம். இதோடு எனது உரையை முடித்துக்கொள்றேன்.

அனைவருக்கும் தேசிய தின நல்வாழ்த்துக்கள்!


நன்றி வணக்கம்!


Wednesday, December 11, 2024

“நம் கலையும் பண்பாடும் நம்மிரு கண்கள் போல” என்னும் தலைப்பை ஒட்டி உம் வட்டாரப் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் பேச்சுப்போட்டியில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு

 

   

பெயர்: கப. நிவேதா - வகுப்பு: S3-05 - ஆண்டு - 2024

‘’தமிழர் என்றோர் இனமுண்டு,

   தனியே அவர்க்கோர் குணமுண்டு,

   மானம் பெரிதென உயிர்விடுவான், 

   மற்றவர்க்காகத் துயர்படுவான்’’

என நாமக்கல் கவிஞர் தமிழரைப் பற்றிகக் கூறிய வார்த்தைகளுடன் நான் என் சொற்பொழிவைத் தொடங்குகிறேன். அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று, நான் என் சொற்பொழிவில் கலையும் பண்பாடும் நம்மிரு கண்கள் போல என்ற கருத்தில் சொற்பொழிவு ஆற்றவுள்ளேன். ஒரு மனிதனுக்கு அவன் இரண்டு கண்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு நம் கலைகளும் பண்பாடும் நமக்கு முக்கியம். பார்வையின் மூலம் ஒரு பொருளைப் பார்த்துப் புரிந்துகொள்ளவும் அதன் வண்ணமயத்தையும் அழகையும் ரசிக்கவும் முடிவதுபோல், கலைகள் மற்றும் பண்பாடு மூலம் நம்மால் நம் கலாச்சாரத்தின் அழகையும் நுட்பத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. நம் ஒவ்வொருவருக்கும் நம் பண்பாடு ஒரு அடையாளமாகவும் பெருமையாகவும் திகழ்கிறது.

“கலை என்பது உணர்வின் வெளிப்பாடு. அது உணர்வை வெளியிடுவதுடன் பிறருக்கு அவ்வுணர்வை ஊட்டும் பெருமை உடையது” என்றார் டால்ஸ்டாய். கலை கருத்தின் உறைவிடம்; அழகின் பிறப்பிடம்; நாகரிகத்தின் ஒளிவிளக்கு என்றும் குறிப்பிடுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கலையில் தமிழர்கள் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தனர். 

முதலாவதாக, கலைகள் தமிழரின் பெருமையாக இன்றும் திகழ்கின்றன. முற்காலத்தில் எழுதப்பட்ட பொன்மொழிகள், வரையப்பட்ட ஓவியங்கள், கட்டப்பட்ட கட்டடங்கள் முதலிய பல வியப்புமிக்க கலையாற்றல்களை இன்றும் நாம் கொண்டாடுகிறோம், கண்டு பெருமைப்படுகிறோம். 1000 ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரியகோவில் இன்றும் நம் நாட்டின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும்  பெருமிதமாகவும் நிமிர்ந்து நின்றுகொண்டிருக்கிறது. நினைத்துப் பார்க்கவே வியப்பாகவுள்ளதல்லவா? எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், எவ்வித தொழில்நுட்பமோ இயந்திரமோ இல்லாமல் எவ்வாறு இவ்வளவு உறுதியான, திடமான கோவிலைக் கட்ட முடிந்தது என்று யோசித்துப் பார்க்கவே ஆச்சரியமாகவுள்ளதல்லவா? அதுமட்டுமல்லாமல், நம் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இன்று உலகளவில் போற்றப்படும் நூலாக விளங்குகிறது. ஒன்றே முக்கால் வரியில் அறக்கருத்துகளை எல்லாக் காலங்களிலும் வாழக்கூடிய மனிதர்களுக்கு பொருந்தும் வகையில் எழுதியவர் திருவள்ளுவர். இவ்வாறு தமிழர் தம் கலைகளின் மூலம் நாட்டில் மட்டுமின்றி உலகத்திலேயே அளவில்லா மாற்றத்தை ஏற்படுத்திவுள்ளனர்; நமக்குப் புகழையும் பெருமையையும் கொண்டுவந்துள்ளனர். கலைகளுக்கு உலகில் பெரிய மாற்றத்தை எற்படுத்தும் ஆற்றல் உள்ளது. நாம் நம் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே நாட்டிற்கும் உலகிற்கும் நல்ல முன்னேற்றம் கொண்டுவர இயலும்.

இரண்டாவதாக, நம் கலைகளின் மூலம் நம்மால் நம் முன்னோர்களின் வாழ்க்கைமுறையைப் பற்றி மேலும் அறிய முடிகிறது. பரதநாட்டியம் போன்ற கலைகளிலிருந்து நாம் நம் முன்னோர்கள் கூறிய கதைகளைப் பற்றி மேலும் அறிய முடிகிறது! வார்த்தைகளாலும், பாவனைகளாலும் நம்மால் கதைகளையும் உணர்வுகளையும் காண முடிவது நம் நாட்டியக்கலையின் சிறப்பாகும். 

இவற்றிலிருந்து, நம்மால் நம் தமிழரின் கலைகளின் மகிமையையும் பெருமையையும் புரிந்துகொள்ளமுடிகிறது, அல்லவா? இவ்வளவு அழகான கலைகளும் நம் அனைவரின் பிறப்பு, வாழ்வு, இறப்பு என்று அனைத்திலும் பங்கேற்று நமக்கு வாழ்வில் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இதனால்தான், நாம் நம் கலைகளை மதித்து, போற்றி, கற்றுக்கொண்டு அவற்றிற்கு உயிர் கொடுக்க வேண்டும். நம் தமிழரின் பெருமையை விட்டுக்கொடுக்காமல், இக்கலைகளைப் பெருமையுடன் உலகிற்குக்  காண்பிக்க வேண்டும்; தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். 

சரி, இவ்வளவு நேரம் நம் இரு கண்களில் ஒன்றான கலைகளின் பெருமையை எடுத்துரைத்தேன். இனி, நம் மற்றொரு கண்ணாகிய பண்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குகிறேன்.

நம் பண்பாடு நமக்குப் பல நல்ல பாடங்களைச் சொல்லித் தருகிறது. அதனால், அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் நமக்குப் பல நன்மைகளும் ஏற்படும்! எப்படி? ஒருவர் இப்படித்தான் வாழவேண்டும், இப்படி வாழக்கூடாது; இதைத் தான் செய்யவேண்டும், இதைச் செய்யக்கூடாது; மீறீச் செய்தால் இத்தகைய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பன போன்ற வாழ்க்கை விதிமுறைகளை எடுத்துக்கூறுவது நம் பண்பாடு. அந்த வகையில் பார்த்தால், அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் நீதிநூல்கள் அனைத்தும் நம் பண்பாடை பறைசாற்றுகின்றன என்று கூறினால் அது மிகையாகாது. திண்ணை கட்டுதல், கோலம் இடுதல், விருந்தோம்பல் முதலிய பல செயல்களைக் காலங்காலமாக நாம் செய்துவருகிறோம். ஆனால், இச்செயல்கள் எல்லாம் தமிழரின் நற்குணத்தைக் காட்டுகின்றன என்பதை நம்மில் பலர் அறிந்திருக்கமாட்டோம். அரிசி மாவால் கோலமிட்டு எறும்பு பூச்சிகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று எண்ணிய தமிழரே, வந்து போகும் எவரும் இளைப்பாற தங்கள் வீட்டின் வெளியே திண்ணைகளைக் கட்டியிருக்கிறார்கள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று புறநானூற்றின் வரிகளுக்கு ஏற்ப,  தெரிந்தவர், தெரியாதவர் என்று பார்க்காமல் அனைவரையும் சொந்தம் என்று எண்ணி தம் வீட்டினுள் அழைத்து வயிறு நிரம்பும்வரை உணவு பரிமாறினர்.

மற்றவருக்கு நலன் அளிப்பது மட்டுமல்லாமல், தன் நலனிற்காகவும் தன்னைச் சுற்றியுள்ளோரின் நலனிற்காகவும் தமிழர் சில பாரம்பரிய பழக்கங்களை வைத்திருந்தனர். அவற்றை நாம் இன்றும் பின்பற்றினாலும், காரணம் அறியாமல் பெற்றோர் கூறுவதாலே பின்பற்றுகிறோம். நாம் வணக்கம் கூறும் முறை நம் சொந்த தூய்மையையும் சுத்தத்தையும் கடைப்பிடித்து, தன்னிடம் இருக்கும் கிருமியை மற்றவருக்குச் கொடுக்காமலும், மற்றவரிடம் இருக்கும் கிருமியை வாங்கிக்கொள்ளாமலும் இருப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாம். ஒரு சிறு வணக்கத்திற்கே இவ்வளவு பெரிய காரணம் இருப்பது ஆச்சரியமாக உள்ளது! அதுமட்டுமின்றி, ஒருவர் தம் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்குமுன், மாப்பிள்ளையின் வீரத்தை அளவிட அவரை, காளை அடக்குதல், பெருங்கல் சுமத்தல் முதலிய விளையாட்டுகளில் ஈடுபடச் சொல்லுவர். இந்நடவடிக்கைகளின் மூலம் மாப்பிளையின் வீரத்தையும், பலத்தையும் மட்டும் பார்ப்பதில்லை, எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை வலிமையுடன் நின்று சமாளிக்க முடியுமா என்பதையும் பார்க்கின்றனர். இப்பண்பாட்டு நடவடிக்கைகள்  பார்ப்பதற்குக்  காரணமில்லாமல் செய்வதுபோல் தெரிந்தாலும், ஒவ்வொன்றிருக்கும் சரியான காரணமும் நன்மையும் உள்ளது!

பண்பாடு என்பது வளர்வது: மனதால் உயர்வது; எல்லோருக்கும் பயன்படும் வகையில் உதவுவது; உலகிற்கு நல்ல ஆதாரமாக இருப்பது. நம் தமிழர் பண்பாடு ஆழமான, அழகான ஒன்றாகும். அதன் நுட்பத்தையும், எழிலையும் புரிந்துகொள்வது நமக்குக் கிடைத்த பாக்கியம். இப்பண்பாடு நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள மக்கள், விலங்கு, செடி அனைத்திற்கும் நன்மை அளிக்கும் விதத்தில் இருப்பதால் அது நமக்கு மிகவும் முக்கியமானது!

இரத்தினச் சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால், நம் கலைகளும் பண்பாடும் நம் வாழ்விலும் வரலாற்றிலும் இன்றியமையாத இடம் பிடித்துள்ளன. இவை நமக்கு நன்மை அளிப்பது மட்டுமின்றி, நமக்குக்  கதைகள், பாடங்கள் புகட்டி நாட்டிற்கே பெருமையும் தந்துள்ளன என்று கூறினால் அது மிகையாகாது. இத்தகைய காரணங்களால், நாம் நம் கலைகளையும் பண்பாட்டையும் மறந்து கைவிட்டுவிடாமல் அவற்றைக் கற்றுக்கொண்டு வாழ வைக்கவேண்டும்! நாம் இக்கலைகளை மதித்துக் கற்றுக்கொண்டால்தான், எதிர்காலத்தில் இவற்றை நம் பிள்ளைகளிடம் கற்றுக்கொடுத்து, கலைகளைக் காலத்தைத் தாண்டி நிற்க வைக்கவேண்டும். இவ்வளவு மகிமையான, அழகான நம் தமிழர் அடையாளத்தை நாம் ஒவ்வொருவரும் உயிர் போல் காத்து, காப்பாற்றினால்தான் அடுத்த தலைமுறையும் நம் கலாச்சாரத்தின் தனித்துவத்தையும் புரிந்துகொள்ளவும், அனுபவிக்கவும் முடியும். மாணவர்களான நாம் அனைவரும் நம் கலைகளையும் பண்பாட்டையும் இரு கண்கள் போல் எண்ணி அவற்றில் பெருமையோடும் பற்றோடும் பங்கேற்க வேண்டும். நீங்கள் அனைவரும் அதைச் செய்வீர்கள் என்று நான் மனதார நம்புகிறேன். கலைகளும் பண்பாடும் நமக்கு மிகவும் முக்கியமானவை; நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் அழகையும் கொடுப்பவை. இத்தகைய கலைகளையும் பண்பாட்டையும் போற்றுவதில் எவ்வித தவறும் இல்லை னே? யோசித்து பாருங்கள்! இதுவரை என் சொற்பொழிவைக் கேட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம், நன்றி வணக்கம்!


Tuesday, December 10, 2024

“நம் கலையும் பண்பாடும் நம்மிரு கண்கள் போல” என்னும் தலைப்பை ஒட்டி நீவிர் ஆற்றும் சொற்பொழிவு. SELVAKUMAR KANISHKA - வகுப்பு 307 - 2024


‘’தமிழர் என்றோர் இனமுண்டு,

   தனியே அவர்க்கோர் குணமுண்டு "

அமுதே, தமிழே, அழகிய மொழியே, எனதுயிரே!

முதலில் உன்னை என் மனம், மொழி, மெய்யால் வணங்கி மகிழ்கிறேன். அடுத்து என்னருந் தமிழ்ழொழி என் போன்ற இளம்பருவத்தினர் நாவிலும் நற்சிந்தையிலும் நானிலம் போற்றும் நவநாகரிகச் சிங்கையிலும் நிலைத்திட வேண்டும் என்னும் நன்னோக்கத்தில் இப்போட்டியை ஏற்பாடு செய்த குழுவினருக்கும், இங்கு வருகை புரிந்துள்ள பெற்றோருக்கும் பெரியோருக்கும் எனைப் போன்ற மாணவச் செல்வங்களுக்கும் இன்தமிழ் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


தமிழர் பண்பாட்டின் தனித்துவத்தை உணர்த்தும் நாமக்கல் கவிஞரின் வரிகளோடு என் சொற்பொழிவைத் தொடங்கினேன். இதிலிருந்தே உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்ன நினைக்கிறேன் என்று. ஆம், நம் கலையும் பண்பாடும் நம்மிரு கண்கள் போல என்ற தலைப்பைப் பற்றி நான் உரையாற்றப்போகிறேன். 


கலைகள் என்பவை எவற்றைக் குறிக்கின்றன? நம் இந்தியக் கிராமியக்  கலைகளான  ஒயிலாட்டம், கரகாட்டம், முதலிய நடன வகைகளையும், நுண்கலைகளான ஓவியக் கலை, சிற்பக்கலை, பிரமிப்பூட்டக்கூடிய கட்டடக்கலைகளையும்,  வில்லுப்பாட்டு, கர்னாடக வாய்ப்பாட்டு போன்ற இசை வகைகளையும், அடிமுறை, சிலம்பம், ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகளையும் குறிக்கின்றன. நம் பண்பாடு என்பது விழுமிய பண்புகள் பலவும் நிரம்பப் பெற்றுக் குடும்பத்தாருடனும் உலகத்தாருடனும் பொருந்தி அன்புற்று வாழும் மனப்பக்குவத்தைக் குறிக்கிறது. பொறுமை, விட்டுக்கொடுத்தல், பிறர்நலம் பேணுதல் முதலான பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது நம் பண்பாடு.


கலையும் பண்பாடும் காலங்காலமாக ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன. இவை இரண்டையும் ஒரு மரத்தின் வேர்களோடு ஒப்பிடலாம். ஒரு மரத்திற்கு வேர்கள் உறுதியையும் ஊட்டச்சத்தையும் வழங்குவது போல, கலையும் பண்பாடும் நமக்கு ஒரு அடித்தளத்தை வழங்கி நமது பாரம்பரியத்துடன் இருக்கும் தொடர்பையும் ஒற்றுமையையும் அதிகரிக்கின்றன.

முதலாவதாக, நம்மிரு கண்களால் எவ்வாறு வெவ்வேறு பொருட்களை வேறுபடுத்திப் பார்க்க முடிகிறதோ, அதே போல நம் கலையும் பண்பாடும் நம்முடைய சிறப்பு அம்சங்களை வெளிக்காட்டி நம் சமூகத்ததின் தனித்துவத்தைப் புலப்படுகின்றன. 

நாம் யாரென்று இவ்வுலகத்திற்கு நம்மை அடையாளப்படுத்துவது நம் கலையும் பண்பாடும்தான். நமக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிப் பிற கலாச்சாரங்கள் மத்தியில் நமக்கென ஓர் அங்கீகாரம் வழங்குவது நம் பாரம்பரியக் கலைகளின் தனிச் சிறப்பே ஆகும். தஞ்சாவூர் என்றாலே முதலில் உங்களுக்கு நினைவிற்கு வருவது என்ன? தஞ்சைப் பெரிய கோவில் தானே? நம் இந்தியக் கட்டடக்கலையின் பெருமையை உணர்த்துவதற்கு அக்காலத்தில் ராஜராஜ சோழரால் கட்டப்பட்ட இக்கோவிலைவிட வேறு சிறந்த எடுத்துக்காட்டு இல்லை.கி.பி 1010 இல் கட்டப்பட்டிருந்தாலும் இன்றுவரை உலகம் முழுவதும் போற்றப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் அதன் பின்னால் இருக்கும் வரலாறும் கலைத்திறனுமே காரணங்களாகும். 

நம் கலையும் பண்பாடும் நம்மால் பின்பற்றப்படவில்லை என்றால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எடுத்துக்காட்டு ஒன்று கூறுகிறேன். சமோவா, பிஜி போன்ற சிறிய நாடுகள் மேற்கத்திய தாக்கங்களால் குறிப்பிடத்தக்க கலாச்சார மாற்றங்களை அனுபவித்துள்ளன. ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organisation - UNESCO) நடத்திய ஆய்வில், இன்னும் 50 வருடங்களில் இதுபோன்ற சிறிய நாடுகளின் மரபும் பண்பாடும் 40% குறைந்துவிடும் எனத் தெரியவந்தது. பாரம்பரியப் பண்பாடுகளைக் கடைப்பிடிக்காவிட்டால், சமூக ஒருங்கிணைப்பில் எதிர்மறை மாற்றங்கள் ஏற்படுவதோடு, நம் வாழ்க்கை முறையும் நிலையற்றதாக மாறிவிடும். 

அதுமட்டுமல்லாமல், பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளில் முன்பு செழித்திருந்த, போற்றப்பட்ட பலவிதமான கலைகள் தற்போது நவீனமயமாக்கலால் அழிந்துகொண்டு வருகின்றன. அந்நாட்டின் கலாச்சார ஆணையம் நடத்திய ஆய்வில், 70% பாரம்பரிய இசை மற்றும் நடன வகைகள் இன்னும் இரு தலைமுறைகளுக்குப் பிறகு,  காலவோட்டத்தில் மறைந்துவிட வாய்ப்புகள் இருக்கின்றன எனக் கண்டுபிடிக்கப்பட்டது. முக்கியமாக இளையர்கள் இக்கலைகளைப் பயிலவில்லை என்றால் அவை அடுத்த தலைமுறையினரைச் சென்றடையப்போவதில்லை. இதனாலேயே “பண்பாடு இழந்து முன்னேறுவதை விட பண்பாடு குறையாமல் பின்தங்கி இருந்தாலும் தவறில்லை” என்று சிலரால் கூறப்படுகிறது. 

கலையும் பண்பாடும் இல்லையென்றால் கலாச்சாரம் என்ற நம் வாழ்வின் முக்கியப் பங்கு ஒட்டுமொத்தமாக மறைந்துவிடும் என்று மேற்கூறிய சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, நம் அடையாளத்தைக் காப்பதற்குக் கலையும் பண்பாடும் அத்தியாவசியமானவை என்ற கருத்தை உங்களால் மறுக்க முடியுமா?

அடுத்ததாக, நம் கண்களால் எவ்வாறு மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியுமோ, அதே போலக் கலையும் பண்பாடும், பெரியவர் சிறியவர் என அனைத்து வயதினருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பளிக்கின்றன.  


கலைக்கு என்னதான் சக்தி உள்ளது என்று நீங்கள் கேட்கலாம். அறிவியலுக்கும் கலைக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? உள்ளதை உள்ளவாறு சொல்ல முயல்வது அறிவியல். உள்ளதை உணர்ந்தவாறு உணர்த்துவது கலை. அறிவும், ஆராய்ச்சியும் கொண்டு வளர்வது அறிவியல். உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்வது கலை. அந்தக் கற்பனையைத் தூண்டி மனதில் நினைப்பதை உணர்ச்சியுடன் மற்றவர்களுக்கு வெளிக்காட்டக்கூடிய ஆற்றல் கலைக்கு உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. 


“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

பகவன் முதற்றே உலகு”


அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை என்பது போல, என்னைப் பொறுத்தவரையில் உணர்ச்சியின் வெளிப்பாட்டிற்கு முதன்மையானவை கலையும் பண்பாடுமே ஆகும். மனிதன் முதன்முதலில் அவனுக்குத் தோன்றிய கருத்துக்களைப் பதிவு செய்யப் பயன்படுத்தியவை பாறைகளே. அதிலிருந்து மெதுவாக, இயற்கையான சாயங்களைப் பயன்படுத்தி ஓவியம் தீட்டியும், சிற்பங்கள் செதுக்கியும் அவன் தகவல் பறிமாற்றம் செய்யக் கற்றுக்கொண்டான். 


கலையின் மூலம் உரையாடுவதற்கு மொழி தேவையா? சொற்கள் தேவையா? இல்லை. "கலை ஒரு ஆன்மா, மற்றொரு ஆன்மாவுடன் உரையாடும் சங்கேத மொழியாகும்." என்று ரஸ்கின் பாண்டின் கூறுகிறார். ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வெறும் பாவனைகளைக் கொண்டே நடித்துக்காட்டும் கதக்களி நடனத்திலிருந்து, வண்ணங்களால் மட்டுமே எண்ணங்களை வெளிப்படுத்தும் மதுபானி ஓவியக் கலை வரைக்கும், உணர்வுகளைத் தனித்துவமான வகைகளில் வெளிக்காட்ட உதவுகின்றன நம் கலைகள்.  


‘கலை என்பது உணர்வின் வெளிப்பாடு. அது உணர்வை வெளிக்காட்டுவதுடன் பிறருக்கும் அதே உணர்வை ஊட்டும் திறன் கொண்டது" என்கிறார் டால்ஸ்டாய். கலை என்பது கருத்தின் உறைவிடம்; அழகின் பிறப்பிடம்; மகிழ்ச்சியின் மாட்சி; இத்தகைய சிறப்பு வாய்ந்த கலையில் தமிழர்கள் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தனர். பல அரிய கலைகளைப் படைத்தனர். கலை உணர்வு கொண்ட தமிழர்களின் பண்பாட்டைத் தெரிந்துகொள்வதற்கு அவை அடிப்படைச் சான்றுகளாக அமைந்துள்ளன.


"பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்

அஃதின்றேல் மண்புக்கு மாய்வது மன்" என்று மொழிந்தார் வள்ளுவர் 


தமிழரின் தலைசிறந்த பண்பாடுகளில் ஒன்று விருந்தோம்பல் ஆகும். முகம் தெரியாதவர் வீட்டிற்கு வந்தால் கூட அவர்களை அன்போடு உபசரித்து, உணவளித்து, புன்சிரிப்புடன் வழியனுப்பிவைக்கும் பழக்கம் காலங்காலமாய்ப் பின்பற்றப்பட்டு வருகிறது. நம் பண்பாடு மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்குவதால் அனைத்து மனிதர்களிடமும் தூய்மையான பாசத்துடன் பழகவேண்டும் என்று இலக்கியங்கள் வழிகாட்டுகின்றன.  இதன் மூலம், அன்பு, பரிவு, இரக்கம் முதலிய பண்புகளை, எவ்வளவு பரபரப்பான வாழ்க்கைச் சூழலிலும், மறந்துவிடுவதில்லை. நம் பண்பாட்டைக் கடைப்பிடிப்பதால் தானே நாம் சிறந்த மனிதர்களாக நம்மை மேம்படுத்திக்கொள்வது மட்டுமல்லாமல், மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் ஒளிவிளக்குகளாகத் திகழ்கிறோம்?


நம் கலையும் பண்பாடும் நம்முடைய தனித்துவத்தையும் அடையாளத்தையும் வலியுறுத்துவதாலும், பண்புகளையும் உணர்வுகளையும் வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பளிப்பதாலும் அவை நம்மிரு கண்களுக்குச் சமம் என ஆணித்தரமாகக் கூறுகிறேன். 


கண் பார்வையை இழந்தால் அதைச் சுலபமாக திரும்பப் பெற முடியுமா? அதேபோல, நம் பாரம்பரியத்தையும் பண்பாடையும் மறந்துவிட்டால் அவற்றை மறுபடியும் நடைமுறைக்குக் கொண்டு வருவது சாத்தியமா? "வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்" என்பதற்கேற்ப, அவற்றை இரு கண்களாகக் கருதி பாதுகாக்கவேண்டியது நம் கடமையாகும். 


"அப்பியாச வித்தைக்கு அழிவில்லை."  என்றொரு பழமொழி உண்டு. வெறுமையான ஏட்டுக் கல்வி கூடச் சில நாளில் மறந்து போய்விடலாம். ஆனால் ஒன்றைச் செய்முறை பயிற்சி செய்து பார்த்துவிட்டோமானால் அதை என்றுமே மறக்கமாட்டோம் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது. ஆகவே, அடுத்த தலைமுறையை வழிநடத்தப்போகும் இளையர்களாகிய நாம், நமது கலையையும் பண்பாட்டையும் கற்போம், கற்பிப்போம், கட்டிக் காப்போம்! கலையும் பண்பாடும் வரும் காலங்களில் அருங்காட்சியகங்களில் காணும் காட்சிகளாக இல்லாமல், மலரும் அரும்புகளின் வளர்ச்சிபோல் அமையட்டும்.


- முற்றும் - 




Sunday, May 5, 2024

ஒருவர் ஆற்றல் மிக்க தலைவராகத் திகழ்வதற்குப் பண்புகளைவிடத் தலைமைத்துவத் திறன்களே தேவை. விவாதிக்க.

லக்‌ஷணா ராஜதுரை உயர்நிலை 3 - 2024 ஆம், ஒருவர் ஆற்றல் மிக்க தலைவராகத் திகழ்வதற்குப் பண்புகளைவிடத் தலைமைத்துவத் திறன்களே தேவை என்பது என் கருத்து. ஆற்றல் என்றால் திறமை. அதனால், ஒருவர் ஆற்றல்மிக்க தலைவராகத் திகழ திறமையுடையவராக இருக்கவேண்டும். திறன் என்பது செயல், தொழில், வேலை முதலானவற்றில் திறமையாகச் செயல்படும் ஆற்றலைக் குறிக்கின்றது. பண்பு என்பது குணம், தன்மை மற்றும் இயல்பைக் குறிக்கின்றது. பண்புகள் இருப்பதைவிட திறன்கள் இருந்தால்தான் ஒருவரால் ஆற்றல் மிகுந்த தலைவராகச் செயல்பட முடியும். ஒருவருக்குத் திறன்கள் இருந்தால் பண்புகள் தானாகவே இருக்கும். எனவே, திறமையாக செயல்படத் திறன்கள் அவசியம் தேவை என்பதையும் திறன்கள் இருந்தால் பண்புகள் தானாகவே வளரும் என்பதையும் இக்கட்டுரையில் காண்போம். முதலாவதாக, தீர்வு காணும் திறன் ஒரு ஆற்றல்மிக்க தலைவருக்கு அவசியம். தலைவர்கள் அடிக்கடி சவால்கள் மற்றும் தடைகளை எதிர்கொள்வார்கள். சிக்கல்களை அடையாளம் கண்டு, மூல காரணங்களைப் பகுப்பாய்வு செய்து, பயனுள்ள தீர்வுகளைக் காணத் தீர்வு காணும் திறன் தேவை. குழு உறுப்பினர்களிடையே நம்பிக்கையைப் பெறவும், யாரையும் சார்ந்து இருக்காமலிருக்கவும் இத்திறன் உதவும். தீர்வு காண்பதன் மூலம் நாம் சில பண்புகளையும் வளர்த்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, சவால்களைச் சமாளிக்கும்போது நாம் மீளும் தன்மையை வளர்த்துக்கொள்கின்றோம். அதோடு, பிரச்சனைகளுக்குப் புதுமையான தீர்வுகளைத் தேடிக் கண்டுப்பிடிப்பது கற்பனையாற்றலையும் தரும். ஆகவே, ஆற்றல் மிக்க தலைவர்களுக்கத் தீர்வு காணும் திறன் தேவை. இரண்டாவதாக, தொடர்புத்திறன் ஒரு ஆற்றல்மிக்க தலைவருக்கு அவசியம். தகவல்களை விரைவாகவும் சரியாகவும் வழங்கும் ஆற்றல் ஒரு தலைவருக்கு மிக அவசியம். மற்றவர்களது கருத்துக்களைக் காதுகொடுத்தக் கேட்பதும் தொடர்புத்திறன் ஆகும். அதுமட்டுமில்லாமல், எத்தகைய செய்திகளை எந்த நேரத்தில் வழங்க வேண்டுமோ அவற்றைப் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான வடிவத்தில் வழங்குவது தொடர்புத்திறன். தொடர்புத்திறன் தவறான புரிதல்களையும் பிழைகளையும் குறைத்து, கருத்துக்கள் தெளிவாக தெரிவிக்கப்படுவதை உறுதி செய்கிறது. தொடர்புத்திறன் இருந்தால் நாம் சில பண்புகளையும் வளர்த்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, தெளிவாகத் தொடர்புகொள்ளும்போது கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதிலும் நம்பிக்கையை அதிகரித்து, தன்னம்பிக்கையையும் துணிவையும் அளிக்கின்றது. மூன்றாவதாக, தகவமைத் திறன் ஒரு ஆற்றல்மிக்க தலைவருக்கு அவசியம். மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடப்பதே தகவமைத் திறனாகும். திறமையான தலைவர்கள் துன்பங்களை எதிர்கொள்ளும்போது நெகிழ்வுடனும் திறந்த மனத்துடனும் இருப்பதன் மூலம் தகவமைப்புத் திறனை வெளிப்படுத்துகிறார்கள். இன்றைய வேகமான மற்றும் சுறுசுறுப்பான உலகில், தகவமைப்புத் திறனைக்கொண்டுள்ள தலைவர்கள், சூழ்நிலைக்கு ஏற்ப உத்திகளையும் அணுகுமுறைகளையும் மாற்றி வெற்றி பெறலாம். தகவமைத் திறன் இருந்தால் நாம் சில பண்புகளையும் வளர்த்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, தகவமைக்கக்கூடிய தலைவர்கள் புதிய யோசனைகள் மற்றும் அணுகுமுறைகளுக்குத் திறந்த மனத்துடன் இருப்பர். எனவே அவர்கள் பல தகவல்களைக் கற்றுக்கொண்டு கற்பனையாற்றலை வளர்த்துக்கொள்வர். இறுதியாக, துணிவுடன் முடிவெடுக்கும் திறன் ஒரு ஆற்றல்மிக்க தலைவருக்கு அவசியம். இத்திறன் தலைவர்களைத் தயக்கமின்றி விரைவாக முடிவெடுக்க உதவுகிறது, ஏனெனில் அவர்கள் ஆபத்துகளை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். துணிவுடன் முடிவெடுக்கும் திறனைக் கொண்ட தலைவர்கள் தமது முடிவுகள் மேல் நம்பிக்கை கொண்டிருப்பர், எனவே அனைவரும் அவர்களை நம்புவார்கள்; மதிப்பளிப்பார்கள். துணிவுடன் முடிவெடுக்கும் திறன் இருந்தால் நாம் சில பண்புகளையும் வளர்த்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, துணிவுடன் முடிவெடுக்கும் தலைவர்கள் சுயமாகச் செயற்படுவர்; ஒரு முடிவுக்கு வரும்போது மற்றவர்களின் கருத்துக்களைச் சார்ந்திருக்கமாட்டார்கள். உலகில் பிரபலமான தலைவராகத் திகழ்ந்த திரு லீ குவான் யூ தொடர்புத்திறனைக் கொண்டிருந்தார். அவர் தமது பார்வைகளையும் கொள்கைகளையும் பொதுமக்களிடம் திறம்பட வெளிப்படுத்தினார். தெளிவாகவும் உறுதியாகவும் தொடர்புகொள்ளும் திறன் அவரது முயற்சிகளுக்கு ஆதரவைப் பெறவும் வேறுபட்ட விருப்பங்களைக் கொண்டுள்ள மக்களுக்கு ஒருங்கிணைப்பைப் பெற்றுக்கொடுக்கவும் உதவியளித்தது. அதுமட்டுமின்றி, அவர் மூலோபாய சிந்தனை திறனைக் கொண்டிருந்தார். சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியையும் இன நல்லிணக்கத்தையும் உறுதி செய்ய தகுந்த கொள்கைகளையும் முயற்சிகளையும் எடுத்தார். ஆகவே, பல திறன்களைக் கொண்டிருந்த திரு லீ குவான் யூ ஒரு ஆற்றல்மிக்க தலைவருக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாகத் திகழ்கிறார். இந்தியாவில் பார்வையற்றவராகப் பிறந்தார், ஶ்ரீகாந்த் பொலா. சிறுவயதிலேயே அவரைக் கைவிட அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறினர். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் அவரது பெற்றோர் அன்புடன் அவரை வளர்த்தனர். அவர் சிரமப்பட்டுப் படித்தார்; பெறோரும் அவருக்கு ஆதரவளித்தனர். இறுதியில், அவர் ஒரு $80 மில்லியன் நிறுவனத்திற்கு “சி.யி.ஒ”வாக திகழ்ந்தார். வணிக வேலைகளைக் கற்றுக்கொள்ள காது மற்றும் கை போன்ற பிற புலன்களைப் பயன்படுத்தும் திறனை வைத்துத் தான் அவர் அவ்வளவு பெரிய நிறுவனத்திற்கே தலைவராகியிருப்பார். எனவே, ஶ்ரீகாந்த் பொலா என்பவர் ஆற்றல்மிக்க தலைவருக்கு மற்றொரு நல்ல உதாரணமாகத் திகழ்கிறார். ஒருவர் ஆற்றல் மிக்க தலைவராகத் திகழ்வதற்கத் தலைமைத்துவத் திறன்களைவிட பண்புகளே தேவை எனச் சிலர் கருதுவர். அவர்கள் பண்புகள் தான் ஒரு தலைவருக்கு அடிப்படையாக இருக்க வேண்டியவை எனக் கூறுவர். ஆனால், நான் அதை மறுக்கிறேன். பண்பு என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்க வேண்டியது. திறன்கள் இருந்தால்தான் ஒரு மனிதனால் தலைவனாக முடியும்; பண்புகள் இருந்தால் மட்டும் போதாது. ஏனெனில், அந்தப் பண்புகளைச் செயற்படுத்த திறன்கள் தேவை. உதாரணத்திற்கு, ஒருவருக்குத் துணிவு என்ற பண்பு இருப்பதோடு துணிவுடன் முடிவெடுக்கும் திறன் இருந்தால் தலைவனாக இருக்கலாம்; ஆனால், துணிவு என்ற பண்பு இருந்தும் துணிவுடன் முடிவெடுக்கும் திறன் இல்லாவிட்டால் அவன் சாதாரண மனிதனாகத் தான் கருதப்படுவான். எனவே, பண்பு இருந்தும் திறன் இல்லாவிட்டால் ஒரு மனிதன் தலைவராக முடியாது; ஆற்றல்மிக்க தலைவராகத் திகழ முடியாது. சுருங்கக்கூறின், ஒருவர் ஆற்றல்மிக்க தலைவராகத் திகழ, பண்புகளைவிட திறன்களே தேவை. ஒரு தலைவரைச் சாதாரண மனிதரிடமிருந்து வேறுபடுத்துவது அவரிடமிருக்கும் திறன்கள் ஆகும். பண்புகள் என்பது பக்க உணவு போன்றது; திறன்கள் என்பது பிரதான உணவு போன்றது. பிறதான உணவு இல்லாமல், பக்க உணவை மட்டும் எவ்வாறு சாப்பிட முடியாதோ, அதே போல திறன்கள் இன்றி, பண்புகளை மட்டுமே கொண்ட ஒரு மனிதனால் ஆற்றல்மிக்க தலைவராகத் திகழ இயலாது. ஆனால், பக்க உணவு இல்லாமலும் பிரதான உணவை எவ்வாறு சாப்பிடமுடியுமோ, அதே போல பண்புகள் இல்லாமலும், திறன்களைக் கொண்ட மனிதன் தலைவராகத் திகழ முடியும்; சிறிது சுவையாக மட்டும் இருக்காது. ஆகவே, ஒருவர் ஆற்றல் மிக்க தலைவராகத் திகழ்வதற்குப் பண்புகளைவிடத் தலைமைத்துவத் திறன்களே தேவை என்பதே என் வாதமாகும்.

குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...