SELVAKUMAR KANISHKA - YEAR 4 - 407- 2025
“கசடதபற வல்லினம், ஙஞநணமன மெல்லினம், யரலவழள இடையினம், யாவரும் இங்கே ஓரினம்!”
அமுதே, தமிழே, அழகிய மொழியே எனதுயிரே! முதலில் உன்னை மனம், மொழி, மெய்யால் வணங்கி மகிழ்கிறேன். அடுத்து, என்னருந் தமிழ்மொழி என்போன்ற இளம்பருவத்தினர் நாவிலும் நற்சிந்தையிலும் நிலைத்திட வேண்டும் என்னும் நன்னோக்கத்தில் இப்போட்டியை ஏற்பாடு செய்த குழுவினருக்கும் இங்கு வருகை புரிந்துள்ள அனைவருக்கும் இன்தமிழ் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வேற்றுமை மறந்து ஒற்றுமை என்ற கூற்றிற்கேற்ப, சமூக ஒற்றுமை என்பது அனைத்து இனங்களைச் சார்ந்த மக்களும், இனம், மதம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் முதலிய வேறுபாடுகளைத் தாண்டி கூட்டுறவுடன் வாழ்வதாகும். அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தின் அடித்தளமானது சமூக ஒற்றுமை. இது நிலைத்திருத்தல் என்பது, எப்போதும், இன்னும் வரவிருக்கும் தலைமுறைகளிலும் சமூக ஒற்றுமை வேறூன்றியிருப்பதைக் குறிக்கிறது. இவ்வாறு பல இனத்தவரும் வாழும் சிங்கை நாட்டில் சமூக ஒற்றுமையை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவர்களின் இன்றியமையாத பங்கு என்ன என ஆராய்வோம்.
இக்காலக்கட்டத்தில், பள்ளியில் மாணவர்கள் கற்றலில் மட்டும்தான் ஈடுபடுகிறார்களா என்ன? இணைப்பாடம், குழு திட்டப்பணிகள், கலை சார்ந்த நடவடிக்கைகள் என எண்ணற்ற வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. சமூக ஒற்றுமை என்பதற்கான அஸ்திவாரம் சமூகப் பிணைப்பு என்பதில் துளி அளவும் ஐயம் இல்லை. தமக்கு முக்கியமான சமூக பிரச்சனைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் சக மாணவர்களுடன் ஈடுபட ஏகப்பட்ட வாய்ப்புகளும் ஆதரவும் பள்ளிகளால் வழங்கப்படுகையில், பெரும்பாலான மாணவர்கள் மக்கள் சார்ந்த சமூக பிணைப்பை மேம்படுத்த முன்வருகின்றனர். மற்ற அமைப்புகளுடன் ஒன்றாகச் செயற்பட்டு பலதரப்பட்ட மக்களிடையே இன நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் அதிகரிக்க, நிகழ்ச்சிகள் பலவற்றை அரங்கேற்றுகின்றனர். சிங்கப்பூரிலுள்ள பல இனங்களையும் அவற்றின் தனித்துவமான கலாச்சாரத்தையும் வெளிக்கொண்டுவருவதற்காக, கலை அரங்கேற்றங்கள், பாரம்பரிய விளையாட்டுகளைக் கொண்ட குடும்ப விழாக்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கக்கூடிய நடவடிக்கைகள், முதலியவற்றை மாணவர்களே தன்னிச்சையாகத் திட்டமிட்டு நடத்துகின்றனர். தேசிய அளவில் நிகழும் நிகழ்ச்சிகளில் கூட, குழுக்களில் செயற்படும் மாணவர்கள் இன நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையைப் பற்றியும் பொதுமக்களுக்குக் கற்பிக்க, பயிலரங்குகள், கண்காட்சிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்கின்றனர்.
இதற்கெல்லாம் முக்கிய காரணங்கள் மாணவர்களின் ஆர்வமும் பற்றுமே ஆகும். பள்ளியில் செய்யவேண்டும் என்பதற்காக ஏனோ தானோ என மாணவர்கள் திட்டப்பணிகளில் ஈடுபடுவரில்லை. “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்பதற்கேற்ப, சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையைத் தக்கவைப்பதில் தம்முடைய இன்றியமையாப் பங்கை உணர்ந்து மாணவர்கள் முழு மனதுடனும் உந்துதலுடனும் செயல்படுகின்றனர். அவர்கள் நடத்தும் இந்நிகழ்ச்சிகள் எவ்வாறு உண்மையான, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என நீங்கள் நினைக்கலாம். கலாச்சாரம் ஒட்டிய கருத்துப்பரிமாற்றம் மூலம், மக்கள் ஒருவரையொருவர் பொருத்துக்கொள்ளாமல் புரிந்துகொள்கின்றனர்; மற்ற இனங்களைப் பற்றிய ஆர்வத்தை வளர்த்துக்கொள்கின்றனர்.
இரண்டாவதாக, இன்றைய மாணவ செல்வங்களாகிய நாம்தான் நாளைய தூண்களாவோம், அடுத்த தலைமுறையே நம்மால்தான் வடிவமைக்கப்படுகிறது என்ற கருத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். அவ்வாறு இருக்கையில், சமூக ஒற்றுமையைக் கட்டி காக்க வேண்டுமென்றால், நாம் தானே முதல் குரலை எழுப்பவேண்டும்? என்னதான் நிகழ்ச்சிகள், அரங்கேற்றங்கள், கண்காட்சிகள் போன்றவற்றை நடத்தினாலும், உண்மையான சமூகப் பிணைப்பை வளர்ப்பது அதையும் தாண்டியது. மாணவ குரல்களாகிய நமக்குதான் சமுதாயத்தோடு தொடர்புகொண்டு மனந்திறந்து பேசுவதற்கான தளங்களை உருவாக்கவேண்டிய கடமை உள்ளது. “கூட்டுறவே நாட்டு உயர்வு” என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர். முதலில் கூட்டுறவை வளர்ப்பதற்கு எது தேவை? மக்கள் ஒருவரோடு ஒருவர் முகம் பார்த்துப் பேசவேண்டும். மாணவ பேச்சு தளங்கள், பட்டிமன்றங்கள், சமூக உரையாடல் மேடைகள் முதலியவை சில எடுத்துக்காட்டுகள். நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் பேச்சு போட்டியைவிட வேறு சிறந்த உதாரணம் இல்லை. என்ன கூற வருகிறேன் என்றால், சமூக ஒற்றுமையை வளர்ப்பதற்கு மாணவர்கள் தாமே உரையாடல் தளங்களை உருவாக்குகின்றனர், மற்றவர்களை அவற்றில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்துகின்றனர். தினசரி சமுதாய சிக்கல்களையும் அவற்றைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளையும் மாணவர்கள் ஒன்றாகத் திரட்டுகின்றனர். இதன்மூலம், சமூக ஒற்றுமை இல்லாததற்கான மூல காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காண்கிறார்கள்.
இறுதியாக, மாணவர்கள் சமூக ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எந்த அளவிற்குப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கின்றனரோ, அதே அளவிற்குத் தம் சொந்த பள்ளிகளிலும் சக மாணவர்களுக்கும் பாடங்கள் மூலமும் விளையாட்டுகள் மூலமும் சுலபமாக கற்பிக்கின்றனர். முன்புபோல், சமூக நல்லிணக்கத்தை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உணர்த்துவதில்லை, மாணவர்களே கற்கிறார்கள், கற்பிக்கிறார்கள். தொடக்கநிலை மாணவர்களிலிருத்து உயர்நிலை மாணவர்கள் வரைக்கும், சமூக ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதற்கான வழிகள், ஆலோசனைகள், ஒற்றுமையை ஒட்டிய குழு நடவடிக்கைகள் முதலியவை வழங்கப்படுகின்றன. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பதற்கேற்ப, சிறு வயதிலிருந்தே சமூக ஒற்றுமையை வாழ்க்கையின் அடிப்படையாக மாணவர்கள் காண்பதால், எதிர்காலத்திலும் அதைக் கடைப்பிடிக்கின்றனர்.
சுருங்கக் கூறின், பள்ளி திட்டப்பணிகள் மூலம் சமூக பிணைப்பை வட்டாரங்களில் வளர்ப்பது, மக்களுக்கு திறந்த உரையாடல் தளங்களை அமைத்துக்கொடுப்பது, மற்றும் சக மாணவர்களையும் சமூக ஒற்றுமை குறித்த கற்றலில் ஈடுபடுத்துவது ஆகிய வழிகள் மூலம் மாணவர்கள் சமூக ஒற்றுமை நிலைத்திருக்க பங்காற்றுகின்றனர். இதுவரை என் உரையைச் செவிமடுத்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.
~ முற்றும் ~
No comments:
Post a Comment