2019 ஆம் ஆண்டு உயர்நிலை நான்காமாண்டு மாணவியர்களின் கவிதைகள்
கரு : இயற்கை மற்றும் சுற்றுச்சூழல்
பூமித்தாய்
ஸ்வேதா சரவணன் (401)
மனிதன் உன் மேல் நடந்தான்; உனை இகழ்ந்து வீடுகள் கட்டினான்
காடுகளை அழித்தான்; குப்பைகளால் உன் முகத்தை மறைத்தான்
கழிவுப் பொருட்கள், புகை, இரசாயனம், உனை வருடவே;
நீயும் எழுந்தாய், கோபக்கனலாய்
பூகம்பமாய் விழுங்கினாய்; எரிமலையாய்ச் சுட்டெரித்தாய்
காட்டுத் தீயாய் வளத்தை அழித்தாய்; சூறைக்காற்றாய் வீசிச் சூரையாடினாய்
சுனாமியாய் எழுந்து அடித்துச் சென்றாய்; அசுரப் பனியாய்ப் பொழிந்தாய்
பேய் மழை பெய்து வெள்ளமாய்ச் சூழ்ந்து நின்றாய்
பூமி தாயே, உன் பொறுமைக்கும் எல்லை உண்டு என்று காட்டிவிட்டாய்
இனியாவது நாங்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என்று உணர்த்திவிட்டாய்
நாளைய தலைமுறையை வாழ வைப்பது ஒவ்வொருவரின் கையிலே
இயற்கையைச் சேதமின்றி பாதுகாக்க அக்கறைக் கொள்வோம் இனி நம் முயற்சிகளிலே!
************************
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
இனியா (401)
காடுகளை அழித்தோம்
கேடு வந்தது!
மரங்களை வெட்டிச் சாய்த்தோம்
மழை நின்றது!
வெட்டபட்ட மரங்களால்
புவி வெப்பமயமானது!
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினோம்
பூமி மாசுபட்டது!
தொழிற்சாலைகளைப் பெருக்கினோம்
சுவாசக்காற்றும் சுருங்கிப் போனது!
தொழில்நுட்ப வளர்ச்சியென
இயற்கையைத் தொலைக்கிறோம்!
இயற்கையை அழிக்க நினைப்பது பாவம்
ஆகவே சுற்றுச்சூழலைக் காப்போம்!
அதற்காகத் தொண்டுகள் பல செய்வோம்!
************************
கண்ணீர் குடிநீர்
ப்ரீத்தி (401)
நீல வானில் அலைபாயும்
கார்முகிலும்,
கண்ணீரை உரமாக்கி தலை
கவிழ்ந்து காத்திருந்த
உழவனை வஞ்சித்து
கடல் மீது கன மழையாய்
பொழிந்தது.
கண்ணீரை குடிநீராய்
மாற்ற வேண்டிய காலம் வருமுன்
கிடைக்கும் மழைநீரை
சேமிக்கும் வழிவகுத்து
உழவனின் தலையை நிமிர்த்திடுவோம்.
************************
முட்டாள் மனிதன்
ஹர்ஷா (401)
ஐந்தறிவு படைத்த பறவைகள் கூட
யோசிக்கின்றன மரங்களைக் கொத்த
ஆறறிவு கொண்ட மனிதனோ
சுயநலவாதியாய் மரங்களை வெட்டிச் சாய்க்கிறான்
தண்ணீருக்குப் பஞ்சமில்லாத காலம் அன்று
தண்ணீருக்காகக் கண்ணீர் விட வேண்டிய நிலை இன்று
பிறந்ததிலிருந்து எல்லாவற்றையும் தந்தாள்
மனிதன் அவற்றை பறித்து வந்தான்
பூமி தாயை அழிப்பதாய் எண்ணி
முட்டாள் மனிதன் தன்னையே அழித்துக்கொள்கிறான்
************************
நேரம் இருந்திருந்தால்
அதிதி (401)
சுதந்திரமாய் சிறகடித்து ஆகாயத்தை அலங்கரிக்கும் பறவைகள் எங்கே?
அவற்றிற்குப் பதிலாக வானில் கரும்புகை ஏன்?
நதியில் நிதானமாய் நீந்திச் செல்லும் வண்ண மீன்கள் எங்கே?
மங்கலானக் காட்சி அவற்றை மறைக்கிறதே, ஏன்?
மரக்கிளையில் மௌனமாய் குனுகும் ஜோடிப் புறாக்கள் எங்கே?
அவற்றின் சத்தத்திற்குப் பதில் மௌனத்தின் கூச்சல், ஏதோ தவறு நடக்கிறது.
கடிகார முள்ளை திருப்ப மனம் ஏங்குகிறது,
நேரம் இருந்திருந்தால் இவ்வுயிர்களைக் காத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
சிறிது நேரம் – புவிக்கு நாம் ஏற்படுத்தும் அழிவை உணர,
சிறிது நேரம் – நம் பாவங்களை எண்ணிப் பதற.
எங்கேயும் அலைப்பாயும் மனிதனின் மாசுப்பட்டப் பேராசைகள்,
அவற்றின் மத்தியில் கரைசேருமா கடல் அலைகள்.
************************
என்னைக் காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்
கீர்த்தனா (401)
என் குடும்பமான மரங்களைக் கொடூரமாக அழித்து, அவர்களின் கல்லறையில் புதுமனைப்
புகுவிழாவை நடத்துகிறான் அவன்
காடுகளில் உல்லாசமாக வாழ்ந்த என் தோழர்களைத் துரத்தி விரட்டி, கூண்டுகளில்
அடைக்கிறான் அவன்
என்னையும் விட்டுவிடவில்லை; கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்து, சித்திரவதைச் செய்து,
சாகடிக்கிறான் அவன்
குப்பைகளால் என்னையும் மண்ணோடு மண்ணாகப் புதைக்கிறான் அவன்
தீ, புகை, இரசாயனத்தால் என்னை நாசமாக்குகிறான் அவன்
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி மூச்சுத் திணறும் அளவுக்கு என்னை அடைத்துத்
திணிக்கிறான் அவன்
உலக வெப்பத்தை ஏற்றி எனக்கு இடைவிடாத காய்ச்சல் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான்
அவன்
என் வாழ்வை நரகமாக்கித் தன் வாழ்க்கையைச் சொர்க்கமாக்கிக் கொள்கிறான் அவன்
அவன் வாழ்வியலுக்கே அடிப்படையான என்னை அழிப்பதால் அவனுக்கு என்னை நன்மை
கிட்டப் போகிறது?
இவன்போன்ற சுயநலவாதியைப் பாரில் எங்காவது கண்டதுண்டோ? இந்த கொடுமையைத்
தட்டி கேட்க யாருமில்லையா?
தயவுசெய்து, என்னை காப்பாற்றுங்கள், என்னை காப்பாற்றுங்கள்
************************************************************************
அழிவின் விளிம்பில்
மீனுலேகா (401)
நடந்துச் சென்ற பச்சை வெளிகள் கட்டடங்களாய் மாறின
பட்டம் விட்ட வானில் மாசு நிறைந்திருக்கிறது
மீன்கள் நீந்திய நதிகள் வற்றிப் போய்விட்டன
வாழ இடமில்லாமல் வாயில்லா ஜீவன் தவிக்கின்றது
நாம் இந்த உலகத்தில் வாழ நாம் செய்த புண்ணியம் என்ன
நாம் இந்த உலகத்தில் வாழ இவ்வுலகம் செய்த பாவம் என்ன
நாம் அமைக்க நினைத்ததோ ஒரு நகரம்
ஆனால், நாம் உருவக்கியுள்ளதோ ஒரு நரகம்
நம் முன்னோர்கள் விதைத்த விதை
இப்போது என்ன ஆயிற்று அதன் நிலை
நம் வளர்ச்சிகளால் நேர்ந்தது காயம்
எங்கே போனது நமது மனித நேயம்
************************
மென்தோல் கன்னிகையே
ஷஹானா (402)
இயற்கையே, இளையக் கன்னியாய் காட்சியளித்த நீ
இன்றோ ஔவையாகிப் போனாய்!
கார்முகில்கள் மோதிடும் நின் குறிஞ்சி மேனியோ
மரங்களின்றி இன்று பாலை நிலமாகியதே!
பசும்வெளிப் போர்த்திய நின் மேனியோ
நெகிழிகளால் இன்று கிழிந்தச் சேலையானதே!
என்று நான் மீண்டும் உன்னை
இளையக் கன்னியாய் காண்பேன்?
ஐயோ என் நெஞ்சம் வெடித்து
கண்ணீர் வறண்டு பார்வையும் புண்ணானதே!
************************
சிறுகும் நெஞ்சம் குறுகுறுக்குமோ
ஹர்ஷிதா (402)
காலையில் எழுந்திருக்கக் குயிலின் கீதமும்,
ஜன்னலைத் திறந்தவுடன் காணக் கண்களுக்குக் குளிர்ச்சியாக
பச்சைப் பசேல் என்று எங்குப் பார்த்தாலும்
மரங்களும், செடி கொடிகளும், தாவரங்களும்
பூங்காவனம் போல் காட்சியளித்து மனதை இலேசாக்கும்போது,
அதன் அருமையைப் புரிந்துகொள்ளாமல்,
குயில்களை அலாரங்களாக்கி
மரங்களைக் கட்டடமாக்கி
செடி கொடிகளைக் கம்பிகளாக்கி
இயற்கை அன்னையின் அடிவயிற்றில் ஒங்கி மிதித்தப் பாவத்திற்கு
இன்று நீ வாழும் பூமி மயாணமாகுவதைப் பார்க்கும்போது,
உன் நெஞ்சம் குற்ற உணர்ச்சியால் குறுகுறுக்கவில்லையா மானிடா?
************************
என்று விமோசனம்?
ஷன்மதி (402)
சுவாசிப்பதற்குத் தூய்மையான காற்றைக் கொடுத்தாய்
மலை உச்சியிலிருந்து அருவியாய்க் கொட்டிப் பருகுவதற்கு நீரைக் கொடுத்தாய்
உண்பதற்குச் சுவையான காயும் கனியும் கொடுத்தாய்
ஆனால் மனிதனோ அறிவியல் வளர்ச்சியின் பெயரில் உன்னை கொஞ்சம் கொஞ்சமாக
அழிக்கிறான்
கட்டடங்களை எழுப்ப மரங்களை வெட்டுகிறான்
குப்பைகளால் உன் முகத்தை மறைக்கிறான்
அணு கழிவினால் உன் உடலை சிதைக்கிறான்
எங்கள் அறியாமையைப் போக்கி உன் சினத்தை குறைத்துக் கொள்வாயோ?
இந்த சீற்றம் தான் சுனாமியும் எரிமலை வெடிப்புமோ?
தவறு புரியும் மானிடர்களை மன்னிக்கமாட்டாயா?
************************
தேடலற்ற மூடன்
அபிராமி (402)
அழகின் வடிவமாக தெரிகிறதே அந்த மலை
புனித்ததின் உருவமாக இருக்கிறதே அந்த நிலவு
செவிகளுக்கு மெல்லிசையாக கேட்கிறதே அந்த நதி
மனதிற்குப் புத்துணர்ச்சி அளிகின்றதே அந்த மேகங்கள்
பருவநிலைக்கேற்ப இதமாக வீசுகிறதே அந்தக் காற்று
இதையெல்லாம் கவனிக்காமல் போகிறானே, மனிதன் ஒரு மூடன்.
************************
செமாக்காவ் தீவு
கெஜ ஷ்ரேயா (402)
நட்சத்திரங்கள் எங்கே?— சிறு வயதில்
நான் கண்ட நட்சத்திரங்கள் எங்கே?
இதோ இந்தச் சாம்பல் காட்டில்
நாட்டிற்குள் காணமுடியாத இவற்றை - இந்த சாம்பல்
காட்டிற்குள் கொண்டு வந்து வைத்தது யார்?
ஆமாம்! ஏது இந்தச் சாம்பல்? எங்கிருந்து வந்தது?
பொறுப்பில்லாதவர்கள் புறந்தள்ளிய குப்பைத்தொட்டிகள்
போதுமென்ற மனமில்லாப் பேதைகளின் பேராசை
வீணர்கள் குவித்துத் தள்ளிய உணவுக் கழிவு
இவை எல்லாம் இங்குச் சாம்பலாய்
ஈராயிரத்து நாற்பதுவரை நமக்குப் போதுமாம் இந்தக் கொள்ளிடம்
இன்றை மட்டும் எண்ணும் நாம் எங்கே தேடுவது வேறிடம்!
************************
நெஞ்சுப் பொறுக்குதில்லையே
ஐஸ்வர்யா (402)
நான் அழிகிறேன்; அழுகிறேன்
உதவிக்காகக் கதறி, உன் காலடியில் கெஞ்சுகிறேன்
ஒரு காலத்தில் ஓடிக்கொண்டிருந்த என் நதிகள் வற்றலாய் வறண்டுகிடக்கின்றன
பசுமை நிறைந்த என் காடுகள் இப்பொது உயிரற்றப் பாலைவனங்களாய்
உலர்ந்துகிடக்கின்றன
செழிப்புடன் வளர்ந்த என் மரங்கள் தீப்பற்றி எரிகின்றன
என் கடல்களில் நீந்திய மீன்கள், பிளாஸ்டிக்கில் சிக்கித் திணறி மிதக்கின்றன
நெருப்பாய்க் கொந்தளிக்கும் என் ஆத்மாவில் எண்ணையை ஊற்றிவிட்டாய்
என்னைக் காயப்படுத்திவிட்டாய்; என் சாபத்தைப் பெற்றுவிட்டாய்
கடுமையான வறட்சியின்போது, ஆகாயத்தைப் பார்த்து மழையிற்காக வேண்டுகிறாய்
வெயில் உன்னைச் சுட்டெரிக்கையில், வெப்பம் தாங்காமல் மயங்கிவிழுகிறாய்
கண் கெட்டப் பின் சூரிய வணக்கம் எதற்கோ?
************************
தொப்புள்கொடி அறுத்தோம்
விஷ்ணு (402)
பிணமாகும்முன்னே சிறியனச் சரியெனச் செய்தவனின்
உணர்ச்சியில் நன்றி ஊனமாகி - இகழ்ச்சியால்
கனம் தலைக்கொண்டு அன்னையை அடிமையாக்க
அனல்வீசும் காற்றில் ஒற்றை மரமும் அசையவில்லை
பணமே நிரந்தரம் எனும் மாயையில் தவித்தவனின்
குணவரங்கள் மாசுக்காற்றோடு காற்றாகக் கறைந்து
வனத்திலுறை ஜீவன்களைத் துடைத்தொழித்து வீடுகட்ட
தனவந்த மரங்களின் ஒடிந்தகைகளில் நாடியில்லை
இரணங்கள்நிறை அன்னையின் மேனியிலே, நெஞ்சினிலே
மனிதஇனம் தற்காலிகமாய் தழைக்கச் செய்யும்குற்றங்களால்
சினக்கனலெழுந்து அவள்மக்களே அவளுக்கு எதிரியாகிவிட்டனரே - இன்று
பாசமணம் நீசமடைந்து போகின்றதே நமதுலகில்.
************************
மரம்
தேஜஷ்வி (402)
உயிர் கொடுத்தாய்
உயிருக்கெல்லாம் நிழல் கொடுத்தாய்
உண்ண கனி கொடுத்தாய்
உத்தம புத்தருக்கோ ஞானம் கொடுத்தாய்
ஊருக்கெல்லாம் மழை கொடுத்தாய்
கொடுத்து கொடுத்து சலித்தாயோ?
உனக்கு மனிதன் மரணத்தை கொடுத்தான்
உன் மரணம் தன் மரணம் என அறிந்தான்
உடனே விழித்தான், பறவை போல் செயல்பட்டான்
உன் விதையால் விதைபந்தை தயாரித்தான்
ஊரூராய் உருட்டிவிட உறுதிக்கொண்டான்
கொடுத்தான், கொடுத்தான், தன்னுயிர் காக்க சலிப்பானோ?
************************
தூய காற்று எங்கே?
ஸ்ருதி அ. (403)
காற்றே, தூயக் காற்றே
நீ எங்கே சென்றாயோ
மக்கள் கக்கிடும் புகையினால்
நீ ஒளிந்துகொண்டாயோ
அலைகளின் புகைப் போதாதோ
மனிதனும் புகைப் பிடிக்கிறான்
நெல்லை விதைக்க தீயைக்கொண்டு
காட்டை வதைக்கிறான்!
காற்றே, தூயக் காற்றே
நீ மீண்டும் வருவாயா?
மக்கள் திருந்தினால்
நீ திரும்பி வருவாயா?
************************
இயற்கையின் குமுறல்
காருண்யா (403)
இலையுதிர் முடிவு, சிலுசிலுவென்ற தென்றலின் ஆரம்பம்
இப்பொழுது காடெங்கும் ஒலிக்கின்றது ரம்பம்
முதற்பனி விழும் நேரம், சொர்க்கம் போல் தோன்றும்
இப்பொழுது நிற்காமல் சிந்தும் வானின் கண்ணீர், ஏன் என்று தோன்றும்
குளிரால் மூக்கின் நுனி சிவக்க, கீழமர்ந்திருந்த மரத்தின் காம்பு நுனி முறியும்
இப்பொழுது தொழிற்சாலைகள் அதிகரிக்க, வனக்குருவிககளின் பாடல் குறையும்
கடலின் அலைகள் இதமாக வெள்ளை மணலில் நுறைய, மீன்கள் சூரியனைப் பிடிக்க
முயன்றன
இப்பொழுது, மணலில் குப்பையும் கூளமும் நிறைய, அதே மீன்கள் வாழ வீட்டை
தேடுகின்றன
கண்கள் குளிரவும் நெஞ்சம் நெகிழவும் பார்ப்பது, பறவைகள் நீந்தும் முடியா நீல
எல்லையையும், பச்சை இலைகளையும்
இப்பொழுது ரசிப்பது, அதே அதிசயத்தை மீண்டும் மீண்டும் காண்பிக்கின்ற இயந்திர
பெட்டிகளை
எங்குச் சென்றன இந்த மெல்லிய காற்று, இதமான அலைகள், ரகசிய வனங்கள்
இப்பொழுது அவற்றைக் காப்பாற்றத் தேவையானது நமது எண்ணங்கள்
************************
மனித நேயம்
ரச்சனா (403)
எங்குப் பார்த்தாலும் கருமையான புகை மூட்டம்
அங்குமிங்கும் பாயும் பரிதாபமில்லாதத் தீப்பொறிகள்
அச்சத்தால் அங்கிருந்து தப்பிக்க முயலும் விலங்குகள்
சில வினாடிகளுக்கு முன் பச்சைப் பசேலென்று இருந்த காடுகள்
இக்காட்சிகளைச் செய்தித்தாள்களில் பார்க்கிறோம்
ஆனால், நாம் மனமாற முயல்கிறோமா?
அசுத்தமானக் காற்றினால் நோய்கள் பரவுகின்றன
கடும் நோயால் அப்பாவியான மக்கள் மாள்கின்றனர்
இருந்தாலும் இரக்கமில்லாத மனிதர்கள் சுயநலம் கருதி
சுற்றுபுறச் சுகாதாரத்தைப் பாதிக்கும் நடவடிக்கைளில் ஈடுபடுகின்றனர்
காற்றுத் தூய்மைக் கேடு அதிகரிக்கும்போது
மனிதனுக்குள்ள மனித நேயம் குறைகிறது
************************
சமுத்திரத்தின் குரல்
சுபத்திரா மணிகண்டன் (403)
பூமியின் பல கறைகளை என்னுடைய கரங்களால் துடைத்தேன்
பூமியின் பல விலங்குகளுக்கு உயிர் கொடுத்து வாழ்வித்தேன்
பூமியின் பல மனிதர்களை என் இரு விழிகளாய்க் காத்தேன்.
பூமியின் பல தளங்களை என் தூய மனதால் புனிதமாக்கினேன்.
வாடகை வாங்காமல் ஜீவராசிகளைக் காத்தருள்கிற ஒரே மனையை இரக்கமில்லாமல்
அழித்தாய்!
யமுனை, கங்கை கலந்த புனித மங்கை மீது ப்ளாஸ்டிக் கழிவுகளை எறிந்தாய்!
கரையோரக் கட்டடங்கள் கட்டி உன் உயிர் நாடியை நீயே வெட்டினாய்!
கரியமில வாயுவை இஷ்டம் போல விடுவித்து, வெப்பத்தால் என்னைச் சுட்டெரித்தாய்!
தரையோடுத் தரையாய்த் தவழ்ந்து வந்து காப்பாற்றக் கெஞ்சியபோது - என் வார்த்தை மீது
மௌனம் வைத்தாய்
எரிமலையாய்க் குமுறி நகரங்களை அழித்துப் பார்த்தேன், வற்றி, நீரின்மையின் வலியைப்
புரியவைத்துப் பார்த்தேன் - ஒரே நாளில் போதனையை மறந்தாய்
துக்கங்களைச் சொல்ல யாருமில்லாமல் கண்ணீரால் தண்ணீரைக் கரிக்க வைத்தேன்
என் இறப்பிற்கு பிறகு நீ தற்கொலைக்கு ஆளானாய் என்பதை உணரவைப்பேன்
************************
ஊழ்வினையோ ஊழியின் வினையோ
ஷ்ரேயா ராமன் (403)
அழகானக் காலை, குளிரானக் காற்று,
மேகம் மூடிய வானம், முகம் காட்டத் துடிக்கும் சூரியன்
நீல வானில், பறவைகள் பறந்துச் செல்லும் நேரம்
மனதை கவரும் கண்கொள்ளாக் காட்சி இது
பூமித் தாயே, எங்களை எப்போதும் உன் கருவறையில் சுமக்கிறாய்
யார் எதை கேட்கிறார்களோ அதை அப்படியே தருகிறாய்
நீ எப்போதும் தேசத்தின் அணிகலனாக விளங்குகிறாய்
ஆனால், மனிதனோ தன் ஆசை, பேராசை தீர என்னென்னவோ செய்கின்றான்
புனிதமான நீரை சாக்கடை நீர் ஆக்குகிறான்
இயற்கை வளமுள்ள காடுகளை எல்லாம் தன் இஷ்டத்திற்கு அழிக்கிறான்
இப்பிரச்சினையில் அவனுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை
இவ்வழியே தொடர்ந்தால், மனித குலம் அழிந்துப் போய்விடுவது தவிர்க்க முடியாத விதி ஆகும்
************************
அழிவை நோக்கும் மனிதனே!
ஹர்ஷ்னி (405)
காய்கனிகளை இலவசமாக வழங்கும் வள்ளல்களை
மனமின்றிக் கொல்லும் அரக்கனே
நம் பூமியை எரித்து ஆகாயத்தின் அழகிய நீல சேலையைக்
கறையாக்கும் சதிகாரனே
நம்மைப் பாராட்டித் தாலாட்டி வளர்த்த தாயை
நிலத்தில் விழுந்த மீன்போல் துடிக்கவைக்கும் துரோகியே
நம் சகோதர சகோதரிகளான விலங்குகளின் வீடுகளைச்
சுடுகாடாகிய சுயநலவாதியே
பிளாஸ்டிக் பையைச் சமுத்திரத்தில் அலட்சியமாக வீசிக் கடலினங்களைத்
தூக்குக்கயிற்றில் சிக்கவைக்கும் சண்டாளனே
கடலைக் களங்கப்படுத்தும்; மரங்களை மரிக்கச் செய்யும்,
மண்ணை மலடாக்கும் முட்டாள் மனிதனே விழி!
இல்லையேல், நீயே உன் அழிவுக்குக் காரணமாவாய்!
************************
அம்மா
கரிஷ்மா (405)
தாய் என்பவள் சிம்மாசனத்தில் அமர வேண்டியவள்; பாசத்தில் சிந்துவாள்
உதிரத்தையும் கண்ணீரையும்
அவளை விட உயர்நிலையில்லை, அவள் கொடுக்கும் அன்பைவிட உயர் தங்கமில்லை.
குழந்தையின் முதல் வார்த்தை அம்மா; பார்க்கும் முதல் முகமானது அம்மா; கேட்கும் முதல்
இருதயம் அம்மா.
பிள்ளைமீது தூசி பட்டால் கூட உலகையே எதிர்த்துப் பேசுவார், நேரில் நிற்கும்
தெய்வம்தான் என் அம்மா
ஆனால், இவ்வுலகில் அனைவரது முதல் மற்றும் கடைசி அடிகளைக் கண்ட ஒருத்தி,
எல்லோரின் தாய், இருக்கிறாள்.
பூமி மாதா என வணங்கும் அம்மா, நம்மை ஒன்பது நிலாக்களாகச் சுமந்தவள்
போன்றில்லையா?
ஒவ்வொரு உயிர்க்கும் உயிர் கொடுத்து, ஒவ்வொருவரின் பாதங்களையும் தன்
தோள்களின்மீது சுமக்கும் தாய் அவள்.
உலகிலேயே உயர்ந்த நிலை இவளுக்குத்தான், ஏனெனில், இவள் இல்லையென்றால்,
உலகே இல்லை.
தாயின் புனித நிலத்தைப் பணத்திற்காக மாசுபடுத்தி, அவளின் கடல்களைக் கணக்கின்றி
பிளாஸ்டிக்கால் நாசபடுத்தியது சரியா?
எதையும் காண முடியாத அளவிற்கு அவளின் காற்றை அழுக்காக்கி அவள்
கொடுத்ததையெல்லாம் கண்ணீரின்றி அழித்தது சரியா?
தாய் நடக்கும் மண்ணை வணங்கும்போது, தாயாக இருக்கும் மண்ணை அவமதித்துத் தலை நிமிர்ந்து நிற்கிறோம்;
பூமி மாதா, உங்களின் குழந்தைகள் உங்களுக்குத் துரோகம் செய்துவிட்டோம்.
************************
செவிடன்
ஸ்ருதி மு. (405)
வானம் வரமாக சிந்தும் நீர் துளிகள்
விவசாயியின் வியர்வைதத் துளிகளுடன் சேரும்போது
வறண்ட பூமியிலும் உயிர் துளிர்க்கின்றது.
அத்துளிகள் மண்ணின் மீது சிந்தும் அவ்வேளையில்
கடலலைகளின் மெல்லிய உறுமல், அடர்ந்த காட்டில் காற்றின் உரசல்
செவிடான மனிதன் செவிகளில் படவில்லையே!
செம்மையான எழில்கொண்ட இயற்கையின்மீதுள்ளப் பொறாமையினால்,
சிதைக்கிறான் அவன் இயற்கையின் பேரழகை
பூமிக்கு வரமாகக் கொடுக்கப்படும் மழைநீர்
சிமெண்ட் தரையில் பட்டு, கால்வாயில் ஓடும் இயற்கை அன்னையின் கண்ணீர்
காடுகளோ தரைமட்டமான பாலைவனங்கள், கடல்களோ மனிதனின் குப்பை மேடுகள்
கண்டு கதறுகிறாள் இயற்கை அன்னை
ஆறரிவு கொண்டவனாம் மனிதன்
ஆனால் அவனுக்கோ அன்னையின் அழுகுரல் கேட்கவில்லையே?
************************
பூமித்தாயின் நவரத்தின மாலை
மஹிமா (405)
வைரமே, உன்னிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்.
செல்லம், உன் அம்மாவை நாசப்படுத்துகிறாய், நஞ்சை நரம்பில் ஊற்றுகிறாயே,
என் வாயில் பிளாஸ்டிக்கை அடைத்து முழுங்க வைக்கிறாயே,
நீலமும் பச்சையுமாய் இருந்த என்மீது பவள ஆறுகளை ஓடவிட்டாயே
வைடூரியமே, உன் சகோதரர்களை வேட்டையாடி கொல்கிறாயே
முத்துமழை பெய்யும் இடத்தில் அமிலமழை பெய்யவைத்துவிட்டாயே
மரகதமென திகழ நினைத்த என்னை மரணப் பிடியில் தவிக்க வைத்தாயே
புஷ்பமும் ராகமும் என் வாழ்வில் என்றுதான் திரும்ப வருமோ…
கோமேதகமே, உன்னை என் வயிற்றில் சுமந்து செல்லமாக வளர்த்தேனே
பாலும் பழமும் அள்ளி அள்ளி அளித்தேனே
உன்னை ஒன்றே ஒன்று மட்டும் கேட்கிறேன் -
உன்னை நான் நேசிக்கின்ற அளவில் ஒரு துளிகூட
திரும்ப நேசித்தால் போதுண்டா. போதும்.
அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றுவாயா?