Monday, November 6, 2017

முன்னாள் மாணவியரின்  கட்டுரைகள் 

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, அதன் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் பங்கு முக்கியமானதாகும். விளக்கி எழுதுக.

தேசம் எனப்படுவது ஒரு கப்பல் போன்றது. ஆழிக் கடலில் பிரயாணிக்கும் அக்கப்பல், பாறைகளைத் தவிர்த்து, தரை தட்டாமல், சீராக ஓட, அத்தேசத்தை வழிநடத்திச்செல்ல, அக்கப்பலை ஓட்டிச்செல்ல தலைசிறந்த மாலுமியும், அவரைச் சூழ்ந்து சிறந்த பிற மாலுமிகளும் அவசியம். அவர்களது கைகளில்தான், ஒரு நாட்டின் ஏற்றமும் தாழ்வும் உள்ளது; பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வும் அதில் உள்ளடங்கியுள்ளது. எனவேதான், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்நாட்டு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்பது முழுக்க முழுக்க மெய்யே!

பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்பர். ஆனால், அப்பணம் ஈட்டும் பொருளாதார வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாகவும், அந்நாடு சிறந்து விளங்க ஊன்றுகோலாகவும் திகழ்கிறது. எனவேதான், "சீரான பொருளாதாரம் இல்லாத எத்தேசமும் நெடுநாள் சிறந்து விளங்க முடியாது. வளர்ச்சியை நோக்கி அது எடுக்கும் ஒவ்வொரு அடியும், இறுதியில் அதற்க்கு பங்கம் விளைவித்துவிடும்." என்கிறார் அரசியல் ஆய்வாளரும் சமூக தத்துவ ஞானியுமான காரல் மார்க்ஸ். அவரது பொன்னான வார்த்தைகளின் உண்மை அறியாது செயல்பட்டு, சீனாவின் மாவ் சூ டாங் சீன தேசத்திற்கு பல தலைமுறைகள் தாண்டியும் நீடித்திருக்கும் அளவிற்கு பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் என அனைத்துத் துறைகளிலும் பேரிழப்பை ஏற்ப்படுத்தினார். ஆனால், சிறந்த பொருளாதாரம் ஒன்றினை விரைவில் அமைத்து, தன் நாட்டின் வளர்ச்சிக்கு கண்ணயராமல் உழைத்தவர் நம் சிங்கையின் மதியுரை அமைச்சர் திரு. லீ குவான் யூவ் அவர்களே. பொருளாதார வளர்ச்சிக்கு அவரளித்த முக்கியத்துவமே, அன்று சிறு மீன்பிடி கிராமாகத் திகழ்ந்த சிங்கை, இன்று உலகின் முதற்தர நாடுகளில் ஒன்றாகவும், உலகமெல்லாம் மூக்கின்மீது விரல்வைத்து வியந்து நம்மை அண்ணாந்து பார்த்து போற்றிப் பாடும் அளவிற்கு நம்மை வளர்த்துள்ளது. அப்போருளாதார வளர்ச்சியே சமுகம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் என மற்றத் துறைகளிலும் நமக்கு வளர்ச்சியைத் தந்துள்ளது. ஆக, இதை அறிந்துதான் அகிலமே போற்றும் இந்திய பிரதம மந்திரியான நரேந்திர மோடி அவர்கள், தன் வெளியூர் பயணத்தில் அமேரிக்கா சென்று, அந்நாட்டு தலைசிறந்த வேலை நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பு அதிகாரிகளைச் சந்தித்து, இந்தியாவில் முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். 

மக்களில் பெரும்பாலோர் பணிபுரிந்தால், அவர்களது வருமானத்தின் மூலம் வசூலிக்கப்படும் வருமான வரி, சிறந்த குடி அமைப்பையும் உள்ளூர் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், மக்களுக்கு சேவை செய்யவும் பயன்படுத்தப்படும். இதன் விளைவாக, இந்திய பொருளாதாரம் மேலும் உயர்ந்து, மேன்மேலும் பொருளாதார வளர்ச்சியை ஈர்க்கும். ஆனால், ஒரு நாட்டின் சிறந்த பொருளாதார வளர்ச்சியில் அரசியல் தலைவர்களின் பங்கைத் தாண்டி, அந்நாட்டு சமூகத் தலைவர்களின் பங்கும் இன்றியமையாததாகும்.ஏனெனில், அரசு பாரா இடங்களில் தங்கள் பங்கையாற்றி, துணைக்கோள் போல அரசின் செயல்களுக்கு ஏதுவாக செயல்பட்டு,  சமூகம் ஒன்றாக ஒருங்கிணைந்து வளர சமூகத் தலைவர்களின் பங்கு மிக முக்கியம். சிண்டா, மேன்டாக்கி, சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் சங்கம், சிங்கப்பூர் தொழிலாளர்கள் சங்கம் எனச் சங்கத் தலைவர்கள், அரசு செய்வதையும் தாண்டி, உதவித் தேவைப்படுவோருக்குப் பொருளாதார ரீதியில் உதவவேண்டும்; உள்நாட்டுத் திறன்களையும் நிறுவனங்களையும் தொடர்ந்து ஆதரிக்கவேண்டும். அப்பொழுதுதான், நாடு என்ற கப்பல் பொருளாதார வளர்ச்சியை நோக்கி ஒன்றாகப் பிரயாணித்து, சீரும் சிறப்புமாகத் திகழ இயலும்.

பொருளாதார வளர்ச்சிக்கு அடுத்தப்படியான வளர்ச்சி-- சமூக வளர்ச்சியே. ஏழ்மை, கல்வியின்மை, இறப்பு விகிதம், நோய்வாய்ப்பட்டோர் விகிதம், குற்ற விகிதம், ஆகியவை குறைவாக இருந்து, வாழ்க்கைத்தரமும் மக்களின் மகிழ்ச்சி நிலையும் உயர்ந்திருப்பது சமூக வளர்ச்சியைப் புலப்படுத்துகிறது. அப்படிப்பட்ட சமூக வளர்ச்சியை ஆதரிப்போர், கடவுளுக்கு நிகரான நிலையில் வைக்கப்பட்டு என்றென்றும் சாகாப் புகழ்கொண்டு போற்றப்படுவர். படிக்காத மேதை காமராசர் அவர்கள், ஏழை உழவர் பிள்ளைகள்கூடத் தன்னைப்போல் கல்வி கற்காமல் வளரக்கூடாது என்பதற்காக, பள்ளிகளில் "மதிய உணவு திட்டத்தை" அமல்படுத்தினார்; சமூக வளர்ச்சிக்கு அரும்பங்காற்றினார்.

"யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து  உயர்பவன் புனிதன்"
என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அவர் வாழ்ந்தார்.
"தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு சோறு சம்பாத்தியம்,
இவையுண்டு தானுண்டு என்பவன் கடுகுபோல் சிறிதுள்ளம் கொண்டவன்"

என்ற பாரதிதாசனார் வரிகளுக்கேற்ப, கடுகுபோல் சிறிதுள்ளம் கொள்ளாமல் ஏழை இந்திய மக்களின் துயரத்தைத் துடைப்பதற்காக வாழ்ந்து, மகாத்மா என புவனமே போற்றும் மாமனிதர் காந்தியடிகள். அவர் ஆற்றிய அரும்பணியும் மக்களுக்கு போதித்த அகிம்சையும், இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது; இந்திய நாடு 15-ஆம் தேதி, ஆகஸ்டு மாதம் 1947-ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற நாடாகப் பிறந்தது. 

காந்தி, நெல்சன் மண்டேலா, மார்டின் லூதர் கிங் என்று ஒவ்வோர் நாட்டிலும் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள்
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்று கடுமையாக உழைத்து, தன் நாட்டின் சமூக வளர்ச்சிக்கு உதவி, தாமும் சாகப் புகழ் பெற்றனர். எனவே தான், ஒரு நாட்டின் சமூக வளர்ச்சியில் அந்நாட்டு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள் எனலாம். அவர்களின் கடும் முயற்சியின்றி, பலரது வாழ்வில் வளர்ச்சி என்பது கிட்டா அருங்கனியாகவே போயிருக்கும்.
பொருளாதார வளர்ச்சியையும் சமூக வளர்ச்சியையும் அடுத்து, கலாச்சார வளர்ச்சியிலும் சமூகத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் முக்கியப் பங்காற்றுகின்றனர். மனிதனின் தனிப்பட்ட வளர்ச்சியின் மூலக் காரணம் அவன் மனம் என்றால், ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் துணையாக இருப்பது அதன் கலாச்சாரமே. இளங்கோடியானாலும் ஆலமரமானாலும், தாவரங்கள் தழைத்தோங்க எப்படி வலுவான வேர்கள் அவசியமோ, அதைப்போலவே ஒவ்வொரு  நாடும்  உயரிய நிலையை அடைய, அதன் குடிமக்கள் அவர்களது கலாச்சாரத்தையும், அது கற்பிக்கும் நற்பண்புகளையும் கடைப்பிடிப்பது இன்றியமையாததாகும்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
என்ற வள்ளுவர் கூறியதைப்போல், வளரும் சமூகத்திற்கு வலுவான வேர்களான கலாச்சாரம் அவசியம். ஆனால், களை பறிப்பதுபோல, கலாச்சாரத்திலுள்ள மூட நம்பிக்கைகளையும் காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களையும் களைவது மிக முக்கியம். இதுவே கலாசார வளர்ச்சியாகும். 

அன்று நம் சான்றோர்களான வள்ளுவரும், சமய முனிவர்களும், ஔவையும், கலாச்சார வளர்ச்சிக்கு உதவினர். கைம்பெண்களை கணவனின் சடலத்தோடு உயிருடன் எரிக்கும் வழக்கமான சதியை போக்கி, பல பெண்களின் துயரங்களைத் துடைத்தார் சமூக சீர்த்திருத்தவாதி ராஜாராம் மோகன் ராய் அவர்கள். பெண் விடுதலைக்காகவும், ஜாதி ஒழிப்பிற்காகவும், கலாச்சார புரட்சிக்காகவும் வெகுண்டெழுந்தார் முண்டாசு கவி பாரதி. அவரின்றி, நமக்கு ஓர் இந்திரா காந்தி கிடைத்திருப்பாரா? சமய நல்லிணக்கம் அவசியம்; சாதியில் தாழ்ந்தோர் இல்லை, அவர்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஹரிஜன், என்று இந்தியர்களுக்கு கற்பித்தார் காந்தி. இன்று, பெண்களின் கல்விக்காகவும், அவர்களின் சம உரிமைக்காகவும் போராடுகிறார் 16 வயது இஸ்லாமிய பெண் மலாலா யுசொப்சாய். ஆக, தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பேருதவி அளிக்க, தொடர்ந்து கலாச்சார வளர்ச்சிக்காகப் போராடினர் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள். எனவே, கலாச்சார வளர்ச்சியில் அந்நாட்டு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் பங்கு முக்கியமானதாகும்.

உலகமென்ற தோட்டத்தில் வளரும் மரங்கள்-- தேசங்கள். அவை வளர்ச்சிபெற்று முன்னேறினால்தான் அம்மரங்களில் வண்ணமயமான பூக்கள் பூத்து, இனிய கனிகள் காய்க்கும். ஆனால், அவ்வளர்ச்சிக்கு உதவ அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களான, நலம் விரும்பிகள் அவசியம். களை பறித்து, உரமூட்டி, ஒவ்வொரு மரத்தையும் பேண, ஒருவன் அவசியம். அதைப்போல்தான் ஒரு நாட்டின் வளர்ச்சியில் அந்நாட்டு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என ஆணித்தரமாக நம்புகிறேன்.

~~முற்றும்~~

சாம்பவி ராஜாங்கம்
408

 - 2015  

***********************************************************************************



 ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, அதன் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் பங்கு முக்கியமானதாகும்.  கருத்துரைக்க 


நாடு அதை நாடு,அதை நாடாவிட்டால் ஏது வீடு என்பது நாம் அனைவரும் செலியுற்றிருக்கும் ஒரு இன்தொடர்.ஆம் ,நாடு வெறும் தங்கும் இடமாக,நம் உள்ளத்தில் அமையக்கூடாது.அதை உரிமையுடன் பாதுகாத்து,வளர்த்து, அது செம்மாந்து வளரவைக்க உழைத்து வருவது ஒரு நாட்டின் தலைவர்களின் பொறுப்பு மட்டுமல்ல. ஒரு நாட்டின் விருத்தியை கருத்தில் கொண்டு செயல்படுவது பலரின் கடமை என்பது என் நம்பிக்கை.
முதன் முதலாக, ஒரு நாட்டின் வளர்ச்சியில் அந்நாட்டு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் பங்காற்றுகிறார்கள் என்பது என்றும் மறுக்க இயலாத ஒன்று. எப்படி மறுக்கமுடியும்? நான்கு வருடங்களுக்கு, முழு நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தும் வகையில், நாட்டுத் தலைவர் தேர்தல்கள் ஏற்படுகின்றன.இதன் முக்கிய அடிப்படை நோக்கமே மக்களையும் நாட்டையும் நல்ல முறையில் பாதுகாத்து அந்த நாட்டை மேம்படுத்தும் திறனை பெற்றவர்களை தேர்வு செய்வதுதான்.”மாலுமி இல்லாத கப்பல் எப்படி ஒடாதோ, தலைவர் இல்லாத நாட்டால் செயல்பட இயலாது.” நாட்டின் தலைவர்கள் தான், தங்கள் தேசத்தின் நந்தா பாசத்தைக் கொண்டு, அதற்காக லட்சியங்களையும், குறிக்கோள்களையும் அமைத்து, அப்பாதையில் செலுத்துவர்.அவர்கள் பற்பல நற்குணங்களையும் திறன்களையும் பெற்றிருப்பவர்கள். நாட்டிற்கு பிரச்சனைகள் வந்தால், பதற்றம் அடைந்து நம்பிக்கையை கைவிடமாட்டார்கள். அவர்கள் நம்பி ஆயிரக்கணக்கான மக்களும் ஒரு நாடுமே இருக்கிறதுஅல்லவா?அந்த நம்பிக்கையின் சுமையில்- மடிந்துவிடாமல், நிதானமாக,புத்திகூர்மையுடன் செயல்படுவார்கள். இதற்கு ஏற்ற உதாரணம்,சிங்கப்பூர், நம் சொந்த நாட்டிலேயே உள்ளது. மலேசியாவுடன் சேர்ந்து, ஒரே நாடாக வாழ்ந்துக்கொண்டிருந்தது சிங்கை நாடு.ஆனால் பூசல்கள் ஏற ஏற, பகைமை பெருக்கிக்கொண்டே செல்ல,சிங்கப்பூர் மலேசியாவிடமிருந்து பிரிய வேண்டும், என்று எடுத்த முடிவு,நம் நாட்டை உலுக்கியது.சிறு பிஞ்சு நாடு,”தன்னுடையது” என்று அழைத்துக்கொள்ள ஒரு இயற்கை பொருளும் இல்லை,பிரிட்டிஷ் தலைவர்களும் சென்று விட்டார்கள்.”எப்படி உயிருடன் இருப்பது?” போன்ற கேள்விகள் நம் பிரதமர் லீயை வாட்டி வதைத்து அவர் கம்பீரமாக ,உழைப்புடனும்,புத்திகூர்மையுடனும்,சிங்கப்பூரை ஒரு நவீன, உலகால் பாராட்டப்படும் நாடாக மாற்றியுள்ளார்.ஆகையால்,தலைவர் இல்லாமல் சிங்கப்பூரால் பாதி நிலைகூட அடைந்திருக்க முடியுமா?அவர் இல்லாவிட்டல்,ஏன் ஒரு தலைவர் இல்லாவிட்டால்,மக்கள் சேர்ந்து, பதற்றத்தில் ஆழ்ந்து,நாடே அழிந்திருக்கும்.

மேலும் தலைவர்கள் நாடடிற்காக,உலகளவில் நல்ல முடிவுகளை எடுக்கிறார்கள்.உலகமைப்பில்,அவர்கள் நம்பிக்கையுடனும், திறனுடனும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பங்கேற்கிறார்கள்.அங்கு,தங்கள் நாட்டிற்கு வளர்ச்சி தரும் வகையில்,உலக முடிவுகளை நாடுகின்றனர்.கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்பதை பின்பற்றி,நாட்டு விருத்திக்காக உழைக்கிறார்கள்.ஒரு நாட்டின் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியை மட்டும் குறிப்பதில்லை, மக்களின் வளர்ச்சி, அவர்களிடம் உள்ள நாட்டுப் பற்று, நாட்டின் கலாச்சார, பண்பாட்டுவளர்ச்சி ,நாட்டின் அடையாளம் போன்றவற்றையும் குறிக்கின்றன என்பது என் கருத்து.அவ்வகையில்,ஒவ்வொரு வசிப்பிடத்திற்கும் அந்த இடத்திற்கு தலைவராக உள்ள அரசியல் மற்றும் சமூக தலைவர்கள் வந்துச் சென்று, மாந்தர்களின் பிரச்சனைகளை செவியுற்று, தங்களால் முடிந்ததை செய்கின்றனர். மக்களின் இடையே உறவை மேம்பட்டுத்தவும், ஒற்றுமையையும் ,இன நல்லிணக்கத்தையும் வளர்க்கவும் பற்பல நிகழ்ச்சிகளும்,விழாக்களும் ஏற்படுத்துக்கின்றனர்.ஆண்டுதோறும் தேசிய தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாடுகிறார்கள்.இவற்றையெல்லாம், மக்களுக்கு நாட்டின் மேல் பாசத்தை உண்டாக்குகிறது.நாட்டிற்காக அதன் வளர்ச்சிக்காக உழைக்க தாங்களே வேட்கை கொள்வார்கள்.

மேற்கத்திய காரணங்களினால் ஆம் ஒப்புக்கொள்கிறேன். நாட்டு விருத்தியில், அதன் தலைவர்கள் மிகப் பெரிய பங்காற்றுகிறார்கள். நாட்டை வளர்ச்சி பெற வைப்பது அவர்களின் கடமை என்றே கூறுவேன்!அதற்காக தான்,அவர்களின் மேல் நம்பிக்கை செலுத்தி,மக்கள் தங்கள் தலைவர்களாக அவர்களைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால் “உண்மை என்பது புனிதமான சாதனை” என்று இ.ராதாகிருஷ்ணன் சொல்லியிருப்பதை,மனதிலிருந்து தூக்கி எறிந்துவிட்டு,தவறான முறையில் நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கும் தலைவர்களை,செய்திகளில் வாசித்திருக்கிறோம்.எடுத்துக்காட்டாக, கீரிஸ் நாட்டில் தவறான முறையில் தன் சொந்த பலனுக்காக நாட்டை ஆண்டுக் கொண்டிருந்தார்,ஒரு தலைவர்.பணத்தை மக்கள் கைகளிலிருந்து பிடிங்கிகொண்டிருந்தார்.இந்த சூழ்நிலையில்,மக்களுக்கே சக்தி என்று கூறுவேன்.மக்கள் இல்லாமல்,நாட்டிற்கு அர்த்தம் இருக்காது.மக்கள் இன்றி நாடு இல்லை.ஆகையால் கீரிஸில் மக்களே எழுந்து நி்ன்று உரிமைக்காக போராடினர்.இதிலிருந்து,மக்களுக்கு நாட்டின் வளர்ச்சியில் பெறும் பங்கு உள்ளது என்பதை அறியலாம்.கெட்ட பாதையில் சென்று கொண்டிருக்கும் நாட்டை,சரியான பாதையில் செலுத்த மக்களால் முடியும்.அதேபோல் நாட்டை வளர்ச்சி பெற வைப்பது,மக்களின் கைகளிலேயே! “ நாடு உனக்கு என்ன செய்திருக்கிறது என்று கேட்காதே,நீ நாட்டிற்கு என்ன செய்துள்ளாய் என்று கேள்” என்பது ஜான் எஃ கென்னடியின் வார்த்தைகள்.ஆம்.மக்களின் உழைப்பில்லாமல் நாடு முன்னேறுமா?
  அவ்வாறே,நாம்,நாட்டின் குடிமக்களாகிய நாம்தான்,நாட்டின் வளர்ச்சியை கடமையாக எடுத்து உறிமையுடன் உழைக்க வேண்டும். தினந்தோறும், கைகளை இதயத்தின் இடத்தில் வைத்து,          ,உறுதி மொழிகிறோம்.  நம் நாடு, மகிழ்ச்சி, வளம், முன்னேற்றம் ஆகியவற்றை அடையும் வண்ணம் சமத்துவத்தையும், நீதியையும் அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக சமுதாயத்தை உருவாக்குவதற்கு உறுதி மேற்கொள்வோமாக!” என்று தினந்தோறும் எடுக்கும் உறுதி. அதை பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்பது மக்களின் கடமை. பெரியவர்கள், அலுவங்களில் உழைகாமல், பிள்ளைகள் பள்ளயில் கல்வி பெறாமல் இருந்தால், தலைவர்கள் இருபதற்கு பயன் என்ன.
இறுதியாக, இன்றைய நவீன உலகில், உலகமயாக்கல் என்பதது கருத்தில் கொள்ள வேண்டும் முன்பு போல் நாடுகள் இடத்தால் பிரிக்கபட்டவை அல்ல. பொருளாதாரத்தால் இணைக்கப்பட்டலை.ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரம் மட்ட நிலையை அடைந்தால்,மற்ற நாடுகளுக்கு அதே கதி.உதாரணத்திற்கு,சில ஆண்டுகளுக்கு முன்பு,அமெரிக்காவில் பொருளாதார நிலை,”Wall Street” என்று அழைக்கப்படுவது சரிவை அனுபவித்தது. அமெரிக்கா பொருளாதாரமே அழிவை கண்டது. இதன் காரணமாக உலகமே இத்தகைய பொருளாதார அழிவை அனுபவித்தது.இதை தவிர்க்க இயலாது. இத்தகைய காலகட்டத்தில் கில்லாறான இணைத்த வகையில் தான் உலகம் செயல்படுகிறது.ஆனால் ஒரு நாட்டின் வளர்ச்சிய மற்ற நாடிகளன் கடமை என்றும் நான் கூறவில்லை.” Globlization” என்பது நமக்கு பற்பல நன்மைகளையும் அளிக்கிறது.ஆகையால்,இதற்கு ஒரே முடிவு,”நாடு”, ,”நாடு”என்ற பரிவை மறந்துவிட்டு,”உலக வளர்ப்பு,மேம்பாடு” என்ற முறையில் சிந்திக்க வேண்டும்.அப்போது தான் எல்லா நாடுகளும், வளர்ச்சி பெற முடியும்.

இறுதியாக நாட்டு வளர்ச்சி என்பது, பொருட்களை ஒரு இடத்திற்கு கொண்டு செல்லும் கப்பல்களை ஓட, மாலுமி தேவை, அதைப் போல் நாடு செயல்பட தலைவரும் தேவை, மக்களும் தேவை. ஆனால் ஒரு கப்ப்ல் மூழ்கிணால், எல்லா பொருக்களும் அவ்விடத்திற்கு கொண்டு சேர்க்க முடியாது. ஆகையால் கப்பல்களைப் போல் நாடுகளும் ஒன்று சேர்ந்து வளர்ச்சியை நோக்கி உழைக்க வேண்டும்.

***************************************************************************************
சிங்கப்பூரில் நமது பாரம்பரியக் கலைகள் வருங்காலத்திலும் நிலைத்திருப்பது கடினம். இதுபற்றிக் கருத்துரைக்க.   

            இயல். இசை. நாடகம். இம்மூன்றும்தான் நாம் நம் பாராம்பரிய கலைகளாக கொண்டுள்ளோம் என்று கூறினால் அது மிகையாகது. உலகம் பிறந்ததிலிருந்தே இம்மூன்று முக்கிய கலைகள் இயல்பாக நம் கலாச்சாரத்தில் தென்பட்டுள்ளன. ஓர் உதாரணத்திற்கு இசையை எடுத்துக்கொள்ளலாம். மொழியே இல்லாத சங்க காலத்தில் நம் மக்கள் இசையையே தங்கள் மொழியாக பயன்படுத்தி தொடர்புகொண்டனர். அந்த இசையேதான் இன்னும் நம் உலகில் இடம்பெறுகின்றது. இதைப்போல்தான் மற்றக் கலைகளும். ஆனால், சிங்கப்பூரில் நமது பாரம்பரியக் கலைகள் வருங்காலத்திலும் நிலைத்திருப்பது கடினமா என்பது எல்லோரும் கேட்கும் ஒரு முக்கிய கேள்வியாகும். அதற்கு என் கருத்து, சிங்கப்பூரில் நமது பாரம்பரியக் கலைகள் வருங்காலத்திலும் நிலைத்திருப்பது கடினமில்லை என்பதே ஆகும்.
            முதலில், இயல் என்கிற கலையை நாம் ஆராய்வோம். இயல் என்பது எழுத்து தமிழைக் குறிக்கிறது. இலக்கியங்கள், காப்பியங்கள் அனைத்தும் இயல் என்னும் இக்கலையை சார்ந்தவை.  இக்காலத்தில் பல இலக்கியங்களும் பல காப்பியங்களும் பற்பல விதங்களில் புத்தகமாக வெளியிடப் படுகின்றன. சிறுவர்களுக்காக இலக்கியங்களையும் காப்பியங்களையும் சுருக்கி ஒரு சிறுகதையாக்கி புத்தகமாக வெளியிடுவதை புத்தகக் கடைக்குச் சென்றால் காணமுடியும். அதுமட்டுமல்லாமல், பள்ளிகூடத்து பாடநூல்களிலும் பயிற்சிநூல்களிலும் மாணவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட பல இலக்கியங்களையும் காப்பியங்களையும் புகட்டுவதும் உண்டு. இவ்வாறு நம் அடுத்த தலைமுறையினர் ஆகிய சிறுவர்களிடம் இலக்கியங்களின் நன்மையையும் காப்பியங்களின் உண்மையையும் எடுத்துக் கூறும்போது இயல் என்கிற பாரம்பரிய கலை நிலைத்திருப்பது கடினம் என்பதை கூறுவது மிகவும் தவறு. இவ்வாறு நாம் நம் இளையர்களுக்கு இயல் என்கிற கலையை இலக்கியங்கள் மூலமும் காப்பியங்கள் முலமும் புகட்டினால் இக்கலை அழியவே அழியாது என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன். 

            அடுத்ததாக இசை என்னும் கலையை நாம் ஆராயலாம். இசை என்பது என்னைப் பொருத்தவரை எல்லா இடங்களிலும் காணலாம். ‘சின்ன சின்ன தொட்டில் கட்டி அம்மா சொல்லும் ஆரிராரோ இசைதானே, ஆணும் பெண்ணும் கட்டில் கட்டி ஆசை மெட்டு கட்டுறதும் இசைதானே’ என்ற பாடல் வரிகளுக்கேற்ப மின்விசிறி சுத்தும் சத்தம், தாளைக் கிழிக்கும் சத்தம் ஆகிய அனைத்தும்கூட இசை என்று நாம் கூறலாம். ஆனால், இசையை ஒரு கலையாகப் பார்த்தால் அதை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதல் வகையான இசை, இசை கருவிகளால் நாம் உண்டாக்கும் ஓசையைக் குறிக்கிறது. இரண்டாவது வகையான இசையைதான் நாம் இக்காலத்தில் பாட்டு என்று கூறுகிறோம். இவ்விரண்டு வகையான இசை கலைகள் நீடித்திருப்பது சுலபம் என்பது சிங்கப்பூரிலுள்ள பல இசைக் கழங்கங்கள் சித்தரிக்கின்றன. ஓர் உதாரணத்துக்கு சிங்கப்பூர் இந்திய நுண்கலை கழகத்தை (SIFAS) எடுத்துக்கொள்ளலாம். அங்கு சுமார் முன்னூறு மாணவர்கள் பாட்டு கற்றுகொள்வதாக அண்மையில் நான் அறிந்துக்கொண்டேன். பாட்டு மட்டுமல்லாமல் வீணை, சித்தார், மிருதங்கம், புல்லாங்குழல், போல் பல இசைக் கருவிகளைக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை இன்றும் அதிகமாக தென்படுகின்றன. இவ்வாறு இத்தனை மாணவர்கள் இசை கற்றுக்கொண்டிருக்கும் போது இசை கலை எவ்வாறு நீடிக்காமல் இருக்கும்? அதுமட்டுமல்லாமல், இக்கழகம் ஆண்டுதோறும் பிரபல பாடகர்களையும் பிரபல இசை அமைப்பாளர்களையும் வரவழைத்து கச்சேரிகள், வகுப்புகள் போன்றவற்றை நடத்துகிறது. இம்மாதிரியான நடவடிக்கைகள் இசை கலையின் மீது மக்களிடம் உள்ள ஆர்வத்தை அதிகரிக்கும், கலைகளை வருங்காலமும் நீடித்திருக்கவும் செய்யும். 

            இறுதியாக, நாடகம் என்னும் கலையை ஆராய்வோம். நாடகம் என்பதையும் இரண்டு வகையாக பிரித்துக்கொள்ளலாம். முதல் வகை நடன நாடகமாகும். இரண்டாவது வகை நாம் இப்பொழுது ‘டிராமா’ என குறிப்பிடும் நாடகமாகும். முதலில் நடனத்தை ஆராயலாம். நடனம் என்பது இசையிலிருந்து தோன்றிய கலையாகும் என்று நான் நம்புகிறேன். நடனம் என்றும்  இக்கலையை சுமார் நானூறு மாணவர்கள் சிங்கப்பூர் இந்திய நுண்கலை கழகத்தில் கற்றுக்கொள்கிறார்கள். இக்கழகத்தைப்போல் சிங்கப்பூரில் நாலைந்து கழகங்கள் உள்ளன. இக்காலத்தில் நடனத்தை எத்தனை மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. மாணவர்கள் இக்கழகங்களில் நடனத்தை கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் நடன போட்டிகள், நடன நிகழ்ச்சிகள், போன்றவற்றை நடத்தவும் செய்கின்றனர், அவற்றில் கலந்துக்கொள்ளவும் செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல், மைதிலி பிரகாஷ், ஷோபனா, தனஜயன், போன்ற பிரபல நடனமணிகளைச் சிங்கப்பூருக்கு அழைத்து பல்வேறு வகுப்புகளையும் நிகழ்ச்சிகளையும் நடத்தவும் செய்கின்றன இக் கலை கழகங்கள். இவ்வாறு பல நடவடிக்கைகளை பல கழகங்கள் நடத்துவதால் இக்கலை நீடித்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது இரண்டாவது நாடமாகிய ‘டிராமாவை’ ஆராய்வோம். இதையே எல்லோரும் நாடகம் என்று அழைக்கின்றனர். நாடகம் என்கிற கலை பலவகைகளில் இன்னும் நிலைத்திருக்கிறது எதிர்காலத்திலும் நீடித்திருக்கும். திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற தொழில்நுட்ப நாடகங்கள் இப்பொழுது வெறிபிடித்து அலைகின்றன என்று நான் நம்புகிறேன். நடிகர்கள் நம் கண்முன்னால் நடிக்கும் நாடகங்கள் திரைப்படங்களைப்போல் இல்லை என்றாலும் பலர் அவற்றைப் பார்க்கத்தான் செய்கின்றனர். ஆகையால் நாடகம் என்னும் கலையும் எதிர்காலத்தில் நிலைத்திருப்பது சுலபம் என்று கூறலாம். 

இசை, நடனம், நாடகம், போன்ற கலைகள் நீடித்திருப்பதற்கு காரணங்கள் இக்கழகங்கள் மட்டுமல்ல பள்ளிகளில் இந்திய நடனக் குழு, இந்திய இசைக் குழு, போன்ற துணைப்பாட நடவடிக்கைகள் இருப்பதாலும் இக்கலைகள் நீடித்திருக்கும் என்று நான் நம்புகிறேன். அதுமட்டுமல்லாமல், இசையைப் பற்றியும் நடனத்தைப் பற்றியும் இக்காலத்தில் வெளியிடப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இக்கலைகள் எதிர்காலத்தில் நீடித்திருப்பதற்கு காரணமாகும். ஆகையால், இந்த முக்கிய காரணங்களாலே இயல், இசை, நாடகம் என்னும் நம் பாரம்பரிய கலைகள் நீடித்திருப்பது கடினமல்ல, சுலபம் என்று நான் நம்புகிறேன். கலைகளை வாழ்த்தி நாம் அனைவரும் செழிப்புடன் வாழ முடியும்.
(534 words)    Bala vela 

***********************************************************************************

ஒருவரது மகிழ்ச்சி அவரிடம் உள்ள செல்வத்தைப் பொருத்ததல்ல. இத்தலைப்பை
ஒட்டி உமது கருத்துகளை விளக்கி எழுதவும். 

மகிழ்ச்சி என்றால் என்ன? நடனம் ஆடி கலையை ரசிபத, இல்லை நடன பள்ளியைத் தொடங்கி அதிலிருந்து பணம் சம்பாதிப்பதா? கூட்டுக் குடும்பத்துடன் குடிசையில் வாழ்வதா?, இல்லை மூன்று மாடி வீட்டில் சொகுசாக தனியே வாழ்வதா? மகிழ்ச்சி என்பது மனித இயல்பு; எல்லா மனிதர்களுக்குமே மகிழ்ச்சி வரும். அனால் ஒவ்வொரு ஆளுக்கும் வெவ்வேறு இன்பம். சிலருக்குப் பாட்டு கேட்பதில் மகிழ்ச்சி வரலாம், மற்றவர்களுக்குக் குழந்தைகளுடன் விளையாடுவது முகத்தில் புன்முறுவலை ஏற்படுத்தலாம். மகிழ்ச்சி வெவ்வேறு உருவங்கள் எடுத்து வந்தாலும், இறுதியில் அது எலோருக்கும் இயல்பாக வரக்கொடிய ஒன்று தான். இருப்பினும் மின்னல் வேகத்தில் மாறி வரும் இவ்வுலகில் பணம் தான் பூமியைச் சுற்ற வைக்கிறது என்று நம்பி, சிலர் கண்மூடித்தனமாக மகிழ்ச்சியைத் தேடி செல்வத்தின் பின் "லோ லோ" வென்று அலைகிறார்கள். அனால், பணக்காரன் எலோருக்கும் மகிழ்ச்சியாக இல்லை, ஏழை எல்லாம் மகிழ்ச்சியின்றி வாழ்வதில்லை. ஆதலால், மனித வாழ்கையின் அடிப்படை அம்சமான மகிழ்ச்சி எல்லோருக்கும் சமமாக வரக்கூடியது என்றும், ஒருவருது மகிழ்ச்சி அவரிடம் உள்ள செல்வத்தைப் பொருத்ததல்ல என்றும் நான் கருதுகிறேன். 

மகிழ்ச்சி என்பது ஒருவரின் மனநிலையையும் எண்ணங்களையும் பொருத்தது. ஒரு பரந்த கடலுக்குச் சென்று அங்குள்ள நீரை வாங்க்கி வர ஒரு பாத்திரத்துடன் செல்கிறோம். கடலில் எல்லை இல்ல அளவிற்கு நீர் இருந்தும், நாம் கொண்டு செல்லும் பாத்திரம் அளவிற்குத் தான் நாம் நீரை வாங்க முடியும். இப்பாதிரதைப் போல தான் நமது மனநிலை ஆகும். "பூலோகம் ஆனந்தத்தின் எல்லை, இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை"> இந்த உலகத்தில் ஏராளமான மகிழ்ச்சி உண்டு, ஆனால் ஒருவருக்கு எந்தளவு மகிழ்ச்சி கிடப்பது என்பது அவரின் மனநிலையைப் பொருத்திருக்கிறது. நம்மைச் சுற்றி நடக்கும்ம் நிகழ்வுகளின் நன்மையைப் பார்த்து, இயற்கையில் அடங்கியுள்ள ரகசியங்களைப் பார்த்து, நம்முடன் பழகுவர்களின் நற்குணங்களைக் காணும் பரந்த மனப்பக்குவம் அடைந்தவர்களே அதிக மகிழ்ச்சி அடைவர். மகிழ்ச்சியான எண்ணங்கள் மகிழ்ச்சி தரும். அதைப் போல தான், எப்பொழுதுமே சுற்றி நடக்கும் தீயவற்றைக் கவனித்து கவலையான எண்ணங்களை மனதில் வளர்ப்பர்களுக்கு மகிழ்ச்சி எளிதில் வருவதில்லை. கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டு கதிரவனின் ஒளியை ரசிக்கமுடியுமா? அதனால் கவலைகளிலும் பிரச்சனைகளிலும் நல்லதைப் பார்க்க இயலும் ஒரு சிரத மனநிலையை ஒருவருக்கு மகிழ்சி அளிக்கும்.மற்றவர்களுக்கு உதவி செய்து அவர்களை மகிழ்விப்பதை விட, உலகில் வேறேதும் பெரிய சந்தோஷம் இல்லை. "தோன்றின் புகழோடு தோன்றுக" என்பதைக் கடைப்பிக்கவே நாம் மனிதர்களைப் பிறந்திருக்கோம். பிறரையும் மகிழ்வித்து, நாமும் மகிழ்வதே வாழ்கையின் அர்த்தம் ஆகும். மற்றவர்களுக்கு உதவிக் கரம் நீட்டி அவர்களுக்டைய பிரச்சனைகளைத் தீர்ப்பது நமக்குத் தான் அளவில்லா ஆனந்தத்தை அளிக்கும். பண பலமோ பதவியோ இருந்தாலேயொழிய மற்றவர்களுக்கு நம்மால் உதவி இயலாது என்று கூறினால் அது மிகையாகும். மற்றவர்களுக்கு நாம் செய்யும் உஹ்டவி ஆடம்பரமாக இருக்க அவசியமில்லை. களைப்பாக இருக்கும் தோழனை நகைச்சுவையை நகைக்க வைத்து அவரின் களைப்பைக் கலைத்தால் கூட அது உதவி தான். ஆகையினால், நாம்அன்றாடம் செய்யும் சிறு சிறு உதவிகளையும் மற்றவர்களை மகிழ வைப்பதையும் பொருத்து தான் ஒருவரின் மகிழ்ச்சி அமைகிறது.

பணம் என்ற சக்திவாய்ந்த பொருள்தான் இன்றைய பெருளாதார உலகை படித்துள் லோண்டுதுள்ளது. அதனால் இவ்வுலகில் பலர், பணம் என்ற மந்திர விளக்கை பிடிக்க அடித்துப் பார்த்து ஓடுகின்றனர். மந்திர விளக்குக் கிடைத்தால், அதில் அடங்கியிருக்கும் பூதம் கெட்டதையெல்லாம் கொடுத்து அவர்களுக்கு  மகிழ்ச்சியைத் தரும் என்று போலியான எண்ணம் அவர்களுக்கு உண்டு. பணம் உலகத்தையே வாங்க முடியும். ஆனால் பிடித்ததை செய்யும் மகிழ்ச்சியை வாங்க முடியாது. பணத்தின் மீதுள்ள ஆசையினால் பலரும் தனக்கு இருக்கும் ஆசைகளை விட்டுக்கொடுத்து, தனுக்கு பிடிக்காத வேலைகளை வற்புறுத்தி செய்கிறார்கள். ஒருவர் நாட்டிலே மிகப் பெரிய பணக்காரனாக இருப்பினும், அவன் விட்டுகொடுத்த ஆசைகள் அவனைத் தினமும் உறுத்தும். ஆகவே, ஒருவரின் மகிழ்ச்சி அவரது செல்வத்தை பொறுத்ததல்ல, தான் வாழ்க்கையில் விரும்பியதைச் செய்வதைப் பொறுத்தது.

இறுதியாக, ஒருவர் மகிழ்ச்சி அடைய அவரைச் சுற்றி ஒரு நல்ல குடும்பமும் உயிர் பிரிய நண்பர்களும் இருக்க வேண்டும். தன்னைச் சுற்றி தன்னை நேசிப்பவர்கள் இருக்கும் பொழுது கவளிகள் அனைத்தும் தானாகவே மறையும், மகிழ்ச்சி மலரும். நண்பர்களுடன் நேரம் கழிப்பதும், குடும்பத்தின் ஆதரவோடி ஒரு செயலில் ஈடுப்படுவதும் ஒருவருக்கு எல்லையில்லா மகிழ்ச்சித் தரக்கூடும். ஒருவருக்கு உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் இருக்கலாம். இருப்பினும் அது அவருக்டைய தனிமைக் குறையை  தீர்க்க முடியாது, ஒரு குடும்பம் உண்மையான நண்பர்களும் தர முடியாது. ஏனனில், ஒருவரின் மகிழ்ச்சி தனது குடும்பத்தையும் சுற்றியுள்ள நண்பர்களையும் பொறுத்துள்ளது .  

மனநிலை, மற்றவர்களை மகிஹா வைக்கும் தன்மை, வாழ்க்கையில் விரும்பியதைச் செய்வது, சுற்றி குடும்பமும் நண்பர்களும் இருப்பது. இவை நான்கையும் பொருத்தே மகிழ்ச்சி இருக்கிறது. உலகில்லுல எந்தச் செல்வத்துக்கும் இவை வாங்குவதற்கான சக்தி இல்லை. மகிழ்ச்சியை அடைய இவ்வுலகில் எந்த உயிரினத்துக்கும் பணம் ஒரு தடையில்லை. ஏனென்றால் மகிழ்ச்சியே வாழ்கையின் அடிப்படை நோக்கமாக உள்ளது. ஆகவே , ஒருவரின் மகிழ்ச்சி அவரிடம் உள்ள செல்வத்தைப் பொருத்ததல்ல என்பது என் முடிவான கருத்தாகும்.

-  Sri Shivani Sathyan  - 2015   

************************************************************************************
வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒருவரைப் பற்றியும், அவர் எவ்வாறு உம்மிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினார் என்பது பற்றியும் விளக்கி எழுதுக.
அந்த நாளைச் சிந்தித்துப் பார்க்கும் போது ஒரு விதமான அச்சம் என்னைச் சூழ்கிறது – ஒரு நொடியில் என் வாழ்க்கையை நானே வீணாக்கியிருக்கலாம். ஆனால், அந்த முட்டாள் தனமான முடிவை எடுத்திருக்காவிட்டால் அந்த ஒரு நபரைச் சந்தித்திருக்க மாட்டேன்; என் வாழ்க்கையையே மாற்றியவர்.
என்னை அறியாமலேயே என் வாழ்க்கை திருப்பம் கண்டது. திடீரென்று ஒரு சோகம், பயம், வெறுப்பு – அனைத்தும் என் மனதை ஆட்கொண்டன. அதற்குச் சரியான காரணம் கூடத் தெரியவில்லை. என்னால் உண்ண முடியவில்லை, யாரிடமும் பேச இயலவில்லை. பேசுவதே ஒரு சவாலாகத் தோன்றியது. அந்தளவிற்கு என் தன்னம்பிக்கை குறைந்துகொண்டே சென்றது. பள்ளிப் பாடங்களில் கூட கவனம் செலுத்த முடியாமல் தவித்தேன். வாழ்க்கை ஒரு போராட்டம் போல் இருந்தது. முன்பு விரும்பி செய்த செயல்களில் ஆர்வத்தை இழந்தேன். என்னைச் சுற்றி நண்பர்கள் விலக, தனிமையில் தவிப்பது போல் உணர்வு ஏற்பட்டது. என்னை நானே வெறுக்கத் தொடங்கினேன். இந்த உலகத்தில் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை என்று நினைத்தேன்.
அந்த நாள், நள்ளிரவு மூன்று மணி ஆகிவிட்டது. வழக்கம் போல் நித்திரை இல்லாமல் படுக்கையில் கிடந்தேன். ஆனால் அன்றிரவு ஏதோ வித்தியாசமாக இருந்தது. என் மனம் இறுகியது. திடீரென்று பேயைக் கண்டது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. அதிர்ச்சியில் படுக்கையை விட்டுக் குதித்தேன். பதற்றத்துடன் முன்னும்பின்னுமாக நடந்தேன். தண்ணீர் அருந்த சமையலறைக்குச் சென்றேன். அப்போது மேசையில் கிடந்த மாத்திரைகள் என் கண்களுக்குத் தென்பட்டன. என்னால் சரியாகச் சிந்திக்க முடியவில்லை. அவற்றை எடுத்துக்கொண்டு அறைக்குச் சென்றேன். பயங்கர எண்ணங்கள் என் மனதில் ஓடின. உலகமே என் தோள்களில் நொறுங்கி விழுவது போல் தோன்றியது. யாரிடமும் பேச இயலாமல், முன்பின் யோசிக்காமல் என் எண்ணங்களை வலைப்பூவில் எழுதினேன். நான் இறந்துபோனால், எனக்கு நிம்மதி; யாருக்கும் பாதிப்பில்லை என்று என்னிடம் நானே மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டேன். மாத்திரைகளைக் கையில் எடுத்துக்கொண்டேன்.
அத்தருணத்தில் என் கணினி ஒலித்தது. '1 புதிய மின்னஞ்சல்!' என்று மின்னியதைக் கண்டு தயக்கத்துடன் அதைத் திறந்தேன். என்னால் நம்ப முடியவில்லை. வலைப்பூவில் நான் எழுதியதைக் கண்டு முன்பின் தெரியாத ஒருவர் எனக்குப் பதில் எழுதியிருந்தார்:
தற்கொலை உன் பிரச்சனைகளுக்குத் தீர்வு இல்லை. உன்னைப் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள் என்று நீ இன்று நினைக்கலாம். ஆனால் சற்றுச் சிந்தித்துப் பார்: நாளை காலையில் கதவைத் திறக்கும்போது நீ மூச்சில்லாமல் கிடப்பதைப் பார்க்கும் உன் தாயின் மனம், உன் பிரச்சனைகளை முன்கூட்டியே கவனிக்கத் தவறியது தன் குற்றம் என்று நினைக்கும் உன் அக்காவின் நிலைமை, சிறு வயதிலிருந்து உன்னைக் கண்ணும் கருத்துமாக வளர்த்த உன் அப்பாவின் மனம். உன்னை எனக்குத் தெரியாவிட்டாலும் எனக்கு உன் மேல் அக்கறை உண்டு. தற்கொலை செய்வது தைரியம் அல்ல. பிரச்சனைகளைத் தாண்டி, வாழ முயற்சி செய்வதே உண்மையான தைரியம். தயவு செய்து உன் முடிவை இன்னொரு முறை சிந்தித்துப் பார்.
என்னை அறியாமலேயே என் கண்களில் மல்கிய கண்ணீர் துளிகள் கன்னங்களிலிருந்து விழுந்து தரையில் சிதறின. என்னைத் தெரியாத ஒருவர் என் மேல் இவ்வளவு அக்கறை கொண்டது என் மனதை உருக வைத்தது. அவர் எழுதியதற்கு நன்றி கூறி பதில் எழுதினேன். அன்றிலிருந்து தினமும் அவருடன் பேச ஆரம்பித்தேன். ஆயிரம் மைல்கள் தொலைவில் வாழும் ஒருவரால் என் வாழ்க்கையையே மாற்ற இயலும் என்று நான் ஒரு நிமிடமும் நினைத்திருக்க மாட்டேன்.
அன்றாடம் என் நலம் பற்றி விசாரித்தார். அவரே சிறு வயதில் மன‍ அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்துகொண்டேன். எத்தனையோ பிரச்சனைகளையோ சவால்களையோ சந்தித்தாலும் தொடர்ந்து முயற்சி செய்வதே வாழ்க்கை என்பதைக் கற்றுக்கொடுத்தார்.
'இடுக்கண் வருங்கால் நடுக அதனை
அடுத்தூர்வ த்தொப்ப தில்'
என்பதின் உண்மையை அறிந்தேன். கஷ்டங்களில் உதவி கேட்பதில் எவ்வித தவறுமில்லை என்றும் கூறினார். என்னை நானே நேசிக்க வேண்டுமென வலியுறுத்தினார். என் தன்னம்பிக்கையை வளர்க்க உதவினார். வாழ்க்கையின் இருளி்ல் வெளிச்சம் காண ஆரம்பித்தேன். 

தினமும் தவறாமல் என்னை உற்சாகப்படுத்த சில வார்த்தைகளையோ பாடல் வரிகளையோ அனுப்பினார். அவரின் சொந்த வாழ்க்கை அனுபவங்கள் என்னை ஊக்குவித்தன. சிறு வயதிலேயே தன் தகப்பனை வாகன விபத்தில் இழந்தார். தாயார் மனக் கஷ்ட்ம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். அவர் அனுபவித்த வேதனைகளைக் கேட்டு நானே பயந்தேன். அப்போதுதான் தற்கொலை செய்வது எவ்வளவு பெரிய தவறு என்பதை முழுமையாக உணர்ந்தேன். இத்தனை துன்பங்களிலிருந்து மீண்டு வந்ததைக் கண்டு நான் வியந்தேன். என்னாலும் முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றேன். 

சிறிது சிறிதாக என் வாழ்க்கையும் மாறத் தொடங்கியிது. வாழ்க்கையைப் புதிய கண்ணோட்டத்தில் காண ஆரம்பித்தேன். எளிதாக மனம் தளர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தேன். என்னை நானே தாழ்த்திக்கொள்வதை நிறுத்தினேன்.
'முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு'
என்பதற்கேற்ப என் வாழ்க்கையில் இன்பத்தை மட்டும் பங்குகொள்ளாமல் துன்பத்தில் தோள்கொடுத்தார். என்னை ஒரு நாள் கூட நேரில் சந்திக்காமல் என் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். என் கவலைகளை மனதினுள்ளேயே பூட்டிக்கொண்டு தவிக்காமல் அவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேச உதவினார்.
ஒரு நாள் வழக்கம் போல் எனக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதன் இறுதியில்:
என்னால் சில நாட்களுக்கு எழுத முடியாது... 

என்று எழுதியிருந்தார். அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வேலைகள் அதிகமாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன். நான்கு நாட்கள் கழிந்தன. அவரிடமிருந்து அல்லாமல், அவரின் நண்பர் வழி மின்னஞ்சல் ஒன்று வந்தது:
நேற்றிரவு புற்றுநோயுடன் இரண்டு வருட போராட்ட்தின் முடிவில் அவர் இறந்துவிட்டார். தாமாகவே உன்னிடம் கூற விரும்பினார். ஆனால் அவரால் முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்க கடைசியாகக் கூறினார்... 

என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. அதிர்ச்சியில் வேரூன்றி நின்றேன். கண்களிலிருந்து கண்ணீர் அருவியெனப் பொங்கி பெருக்கெடுத்து ஓடியது. அவரால் எப்படி ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக வாழ முடிந்தது? என் வாழ்க்கையையே மாற்றியவர்.
என் கண்களைத் துடைத்துக்கொண்டேன். நான் கவலைப்படுவதை அவர் விரும்ப மாட்டார் என்பதை உணர்ந்தேன். அவருக்காகவாவது நான் சந்தோசமாக இருக்கவேண்டும். அவர் இன்று இல்லாவிட்டாலும், ஒரு நாளும் சந்தித்திருக்காவிட்டாலும், அவர் செய்த உதவிகளுக்கு என்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். அவரின் வார்த்தைகள் தொடர்ந்து என் வாழ்க்கையை மாற்றி வருகின்றன. அவர் கடைசியாக எழுதியது என்றும் என் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும்: 

நீ தான் உன் தோழி. உன் தோழிக்குப் பிரச்சனைகள் ஏதாவது நேரும் போது நீ அவளை ஊக்குவிப்பாய், அறிவுரை கூறுவாய். அதுபோல உனக்குப் பிரச்சனைகள் ஏற்படும்போது மனம் தளர்ந்து விடாதே. உன்னை நீயே தாழ்த்திப் பேசாதே. உன்னை நீயே தோழியாகக் கருத வேண்டும். அனைவரும் உன்னை விட்டு விலகும் போது, உனக்கு நீ தான் ஊக்கம் கொடுக்க வேண்டும். நீ கூறுவதை நீ தான் கேட்கிறாய். உன் வாழ்க்கைக்கு அர்த்தம் உண்டு. இந்த உலகத்தில் உனக்கென்று இடம் உண்டு. அதை என்றைக்குமே மறந்துவிடாதே.
அன்புடன்,
உன் ஜேம்ஸ்
(701 words)                                                         மிராணி - 2015