Saturday, May 24, 2025

சொற்பொழிவு - பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு

            RADHAKRISHNAN SUJITHA - உயர்நிலை 4 ஆம் ஆண்டு - 2025

எனது தாய்மொழியான தமிழை வணங்கி இந்த அவையில் இருக்கும் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு தரப்பினர் சிங்கப்பூரில் குடியேறுகின்றனர். சீனாவிலிருந்து வருகிறார்கள். இந்தியாவிலிருந்து வருகிறார்கள். ஏன், அமெரிக்காவிலிருந்து கூட வருகிறார்கள். இந்த உலகமயமாக்கும் சூழலில் பலர் வேலை வாய்ப்புகளுக்காக சிங்கப்பூருக்கு வருகின்றனர் என்பதே உண்மை. ஆகவே, சிங்கப்பூரில் பல்லினத்தவர் வாழும் நிலை ஏற்படுகிறது. சேர்ந்து படிக்கும் நிலை ஏற்படுகிறது. இதை மனதில்கொண்டு “பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு” என்ற தலைப்பையொட்டி உங்களிடம் பேசப்போகிறேன்.


சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு. உலகத்தில் வெரும் சின்ன புள்ளிதான். சிறிய நாடாக இருந்தாலும் உலகத்திலே உள்ள முதல் 20 செழிப்பான நாடுகளில் இடம்பெறுகிறது. ஏன்? சிறப்பான நீதி, தேர்ச்சிப்பெற்ற பலர் என்ற பல காரணங்களை சொல்லிக்கொண்டே வரலாம். ஆனால், முக்கியக் காரணம்? சமூக ஒற்றுமையே! சிங்கப்பூர் என்பது ஒரு மரம் போல, சமூக ஒற்றுமை என்பது அதன் வேர்கள் போல. வேர்கள் இல்லாவிட்டால், மரமே சாய்ந்துவிடும். ஏன்? வேர்களே மரத்தின் அடித்தளம். அதே போல் நமது அடித்தளமான சமூக ஒற்றுமை கலந்துவிட்டால், சிங்கப்பூர் சிரமப்படும் அவல நிலை ஏற்படும். அதற்கு பிறகு கரை ஏறுவது மிகவும் சிரமம்.


சரி, நான் ஏன் சமூக ஒற்றுமை முக்கியம் என்று சொல்லிவிட்டேன். ஆனால், மாணவர்களின் பங்கு என்ன? இப்போது பார்ப்போம். மாணவர்கள் என்பவர்கள் நமது அடுத்த தலைமுறையினர். அவர்கள் தான் எதிர்காலத்தில் சிங்கப்பூரை ஆள்வார்கள். ஆகவே, மாணவர் பருவத்திலே சமூக ஒற்றுமையை கடைப்பிடிக்கும் பழக்கத்தை வைத்துக்கொண்டால்தான் எதிர்காலத்தில் அவர்கள் சமூக ஒற்றுமையைச் சிங்கப்பூரில் நிலைநாட்ட முடியும். “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை,” என்று நமது முன்னோர் சொல்லியிருக்கின்றனர். ஆகவே, சிறு வயதிலிருந்தே மாணவர்கள் ஒவ்வொரு இனத்தவருடன் பழகுவது இன்றியமையாததாகும். அதுமட்டுமா? இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் வீட்டில் செலவிடும் நேரத்தை விட பள்ளியில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். ஆகவே, மாணவர்கள் தங்களுடைய பங்கை ஆற்றாவிட்டால், பள்ளி படிப்பதற்கு ஒரு சிறந்த சூழலாக அமையாது. அவர்களுக்கிடையே சண்டைப்போட்டால் என்ன பயன்? மற்றவருக்குத் தீமையே அளிக்கும். எந்த நன்மையும் இருக்காது. ஆகவே, மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் எந்த இனத்தவராக இருந்தாலும் சரி, பழகிக்கொள்ள கற்றுக்கொள்ளவேண்டும். பழக வேண்டும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் நமக்கு இருக்கும் நிம்மதி சீர்குலைய அதிக வாய்ப்புள்ளது.


”வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்” என்று நமது முன்னோர் சொல்லியிருக்கின்றனர். ஏன்? ஒரு பிரச்சனை வரும் முன் நாம் ஆயுத்தமாய் இருந்தால்தான் நம்மை ஒரு பிரச்சனையின் விளைவுகளுக்கு ஆளாகாமல் தற்காத்துக்கொள்ளலாம். இது சிங்கப்பூருக்கும் பொருந்தும். சிங்கப்பூர் முதலில் சுதந்திரம் பெற்றபோது, பல பூசல்கள், பல சண்டைகள் என்று நிலவின. நீங்கள் பெரியவர்கள் மட்டுமே இந்த பூசல்களில் பங்கேற்றனர் என்று நினைத்திருக்காலாம். ஆனால், அவ்வாறு அல்ல. மாணவர்கள் கூட இது போன்ற சண்டைகளில் ஈடுப்பட்டனர். இந்த சண்டைகளில் பலர் காயமடைந்தனர், கட்டடங்கள் சேதமடைந்தன. சிலர் அதிக காயங்களாலும் உயிரை இழந்தனர். சிங்கப்பூரின் நிலையே கண்ணீரும் கம்பலையுமாக இருந்தது. இது போன்ற நிலை யாருக்கும் ஏற்படக்க்கூடாது என்ற மனப்போக்கை நாம் கொண்டிருக்க வேண்டும். ஆகவே, இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல், தற்காத்துக்கொள்ள மாணவர்கள் தங்கள் பங்கையாற்ற வேண்டும். எவ்வாறு? அவர்கள் பள்ளியில் சிறு வாக்குவாதங்களை பெரும் சண்டையாக உருவாவதை தடுக்க வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இனத்தைப் பற்றி பேசாமல், பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். இத்தகைய வழிகள் மூலம் சிறு வாக்குவாதங்கள் பெரிதாக்காமல் இருக்கும்.


அடுத்து, சமூக ஒற்றுமை என்பது ஒரு வாழ்க்கைத்திறன் என்று நான் முழுமனதோடு நம்புகிறேன். ஆகவே, அவர்கள் வெளிநாட்டிற்கு செல்லும்போதோ, அல்லது சிங்கப்பூரிலோ மற்றவர்களுடன் சேர்ந்து வேலைகளை வாக்குவாதமின்றி செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். “ஒரு கைத் தட்டினால் ஓசை எழும்புமா?” என்பது போல சமூக ஒற்றுமையோடு ஒருவருடன் ஒருவர் வேலை செய்தால்தான் நாம் எதிர்காலத்தில் ஒரு சிறந்த வேலை செய்யும் சூழலை உருவாக்க இயலும். மாணவர்கள் இப்போதே ஒப்படைப்புகளின்போது மற்ற இனத்தவருடன் சேர்ந்து செய்ய முடியாவிட்டால், எதிர்காலத்தில் எப்படி செய்வார்கள்? நீங்கள் இவ்வாறு மாணவர்களால் செய்ய முடியும் என்று நினைத்தால், இது ஒரு மூட நம்பிக்கை என்று நானே கூறுகிறேன். சமூக ஒற்றுமையை நிலைநாட்டும் கடமை மாணவர்களின் கைகளிலே இருக்கிறது. அந்த கடமையை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான், தற்போதைய வேளையிலும், எதிர்காலத்திலும் சமூக ஒற்றுமையை நிலை நாட்ட முடியும் என்று நான் நம்புகிறேன். 


இறுதியாக, மாணவர்கள் தான் எதிர்காலத்தில் சமூகத்தில் பெரியவர்களாக வாழ்வார்கள். அவர்கள் வீடு வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆகவே, புது வாழ்வை எதிர்காலத்தில் வாழும்போது மற்ற இனத்தவருடன் ஒற்றுமையாக வாழவேண்டும். சிங்கப்பூரில் சுமார் 70% மக்கள் அடுக்குமாடி கட்டடங்களில் வசிக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்த சதவிதம் மாறும். ஆகவே, ஒரே மாடியில், ஒரே கட்டடத்தில் பல்லினத்தவர் சேர்ந்து வாழும் நிலை ஏற்படும். ஆகவே, மாணவர்கள் இப்போதிலிருந்தே அண்டைவீட்டார் வீட்டுக்கு வரும்போது இன்முகத்தோடு வரவேற்க வேண்டும். விருந்தோம்பலை கடைப்பிடித்து வாழ வேண்டும். இவ்வாறுச் செய்யாவிட்டால், மற்றவர்களின் உணர்வுகள் அதிக அளவில் பாதிக்கப்படும். செடிகளை தட்டுவது, முட்டைகளை எறிவது என்று பல நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்க அதிக வாய்புண்டு. ஆகவே, எதிர்காலத்திலும், இப்போதைய சூழலிலும், கட்டடங்களிலே சமூக ஒற்றுமையை நிலைநாட்டுவது முக்கியம்.


ஆகவே, மாணவர்களே! நமது பங்கு சமூக ஒற்றுமைக்கு மிகவும் முக்கியம். சமூக ஒற்றுமைக்கு நாமே ஒரு நுழைவுச்சீட்டுப் போல். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதை கடைப்பிடித்து வாழ்ந்து நிம்மதியாக வாழ்வோம். முழு சமூக ஒற்றுமையை அடைவது கடினம் என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால், மற்றவர்களை மதிப்பது, மற்ற கலாச்சாரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது, வாக்குவாதங்களை பெரிதுபடுத்தாமல் இருப்பது போன்ற எளிய முறைகளின் மூலம் இந்த இலக்கை அடையலாம். சிரமமாக இருந்தாலும் ஒன்றுபட்டு இந்த இலக்கை அடைவோம். ஆகவே, இந்த அவையில் இருக்கும் ஆட்கள் மாணவர்களாக இருந்தால், இந்த பாட்டை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


’வெற்றிக்கொடி கட்டு

மலையை முட்டும் வரை முட்டு 

இலட்சியம் எட்டும் வரை எட்டு

படையெடு படையப்பா’


வெற்றிக்கொடியைக் கட்டுவோம். சிரமமாக இருந்தாலும் இலட்சியத்தை எட்டுவோம், சமூக ஒற்றுமையை நிலைத்திருப்போம். இதோடு எனது உரையை முடித்துக்கொள்றேன்.

அனைவருக்கும் தேசிய தின நல்வாழ்த்துக்கள்!


நன்றி வணக்கம்!


No comments:

குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...