|
மகிழ்ச்சி, அப்படியென்றால் என்ன? மகிழ்ச்சி என்பது பல பாகங்களைக் கொண்ட, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறாக அர்த்தமளிக்கும், வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்ச்சியாகும். யாருக்க்கு எது மகிழ்ச்சியளுக்கும் என்பது யாராலும் கணிக்க இயலாது; சில சமயங்களில் அவர்களாலே கணிக்க இயலாது. ஆனால், அதுதான் இவ்வுலகில் உள்ள அனைவரும் அடைய விழையும் மிகத் தலைமையான லட்சியம். ஒவ்வொருவரும் நாம் நம் வாழ்க்கையில் எதைச் செய்தால் நம் வாழ்வு ஓர் இன்பக் கடலாய் மாறும் என்று பாடுபடுகிறார்கள். அவற்றில் சிலர், பொருட்செல்வத்தையே மிக முக்கியமாக கருதுகிறார்கள். அவ்வாறானோர், நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிச் சேர்ப்பதால் மட்டும் மகிழ்ச்சியைப் பெற்றுவிட இயலும் என்றெண்ணுகிறார்கள். என்னைப் பொருத்தமட்டில், இக்கருத்தை நான் அறவே ஏற்றுக்கொள்ளமாட்டேன். இவ்வாறு எண்ணுபவர்கள் பெரும்பாலும் சிறிய பிள்ளைகள்தான் என்று அலட்சியாஅக விட்டுவிடுவது தவறு. ஏனெனில், பெரியோர்கள் பலரும்கூட பல பொருட்களைச் சேர்த்தால் மனநிறைவு அடைந்து, நாளடைவில் மகிழ்ச்சியையும் அடையலாம் என்ற தவறான சிந்தனையோட்டத்தைக் கொண்டுள்ளனர். அவற்றையெல்லாம் உடைத்து, இக்கருத்தையொட்டி என்னுடைய வாதத்தை நிலைநாட்டவே இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.
பல புதிய பொருட்களுக்கு உரிமை கொண்டாடினாலே இன்பத்தை அடையமுடியும் எனில், வசதி குறைவுள்ளோர் மகிழ்ச்சியாக வாழத் தகிதியற்றவர்களா? உதாரணத்திற்கு, புதிய ஒரு விளையாட்டுப்பொருளை ஒரு தம்பதியினரால் தங்கள் மகனுக்கு வாங்கித்தர முடியவில்லையெனில், அவன் மகிழ்ச்சியாக வாழவில்லை என்பதில்லையே. அவ்வாறான குழந்தைகள், தங்களின் பெற்றோருடன் நேரம் செலவிடுவதை பொன்னான நேரமாக கருதுவார்கள். குறிப்பாக, இருவரும் வேலைக்குச் சென்று பணம் ஈட்ட பாடுபடும்போது, வாரயிறுதி நாட்களில் ஒன்றாக உணவகம் சென்றாலே அவர்களுக்குப் போதும். புதிய பொருட்களைச் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்திற்கு இடமேயில்லை. பெரியோர்க்கும் இது பொருந்தும். அந்தத் தந்தையானவர், புதிதாக வெளிவந்த உந்துவண்டியை வாங்கினால் மட்டுமே மகிழ்ச்சியை எட்டுவார் என்றில்லை. தன் மனைவி மற்றும் மகனுடன் சிறுசிறு செயல்களைச் செய்வதோ, அன்பான வார்த்தைகளை உதிர்ப்பதோதான் எப்பொருளைக் காட்டிலும் அவருக்கு பேரின்பத்தைத் தேடித்தரும். இத்தகைய பல குடும்பங்கள் கவலையின்றி மனநிறைவுடன் வாழும்போது, புதிய புதிய பொருள்களைச் சேர்ப்பதால் மட்டும் மகிழ்ச்சியைப் பெற்றுவிடமுடியும் என்றெண்ணுவது மெய்யாகாது.
ஆனால், ஒருவருக்கு நிறைய பணச்செல்வம் இருந்தாலும், அவற்றையெல்லாம் பயன்படுத்திப் பொருட்களை உடனுக்குடன் வாங்கிக்கொண்டாலும், அவர் பெருமகிழ்ச்சி அடைவார் என்று திண்ணமாக கூற இயலாது. உணமையான மகிழ்ச்சி என்பது உறவுகள் மூலமே தோன்றும். ஒருவர் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் ஆளும் அளவு செல்வம் கொண்டிருந்தாலும், தனிமையை எதிர்நோக்கினால், மகிழ்ச்சியை அடைய வழியின்றி திணறுவார். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒருவர் கொள்ளும் உறவு விலைமதிப்பில்லா ஒன்றாகும். நம் வாழ்க்கையை நாம் தனியே செலுத்தாமல், நம்முடன் ஒருவர் நடக்கும்போதுதான் உறவுகளின் சிறப்பை அறிந்து இன்னும் அதிகமான இன்பத்தைக் காணமுடியும். மனிதனுக்குத் தேவைப்படும் துணை, புரிந்துணர்வு, அன்பு போன்றவற்றை இன்னொரு மனிதன்தான் வழங்கமுடியும். உணர்ச்சியளவில் எப்பயனும் தராத பொருட்களை வாங்குவதன் மூலமே மகிழ்ச்சியை அடைந்துவிடமுடியும் என்றெண்ணுபவர், தன்னத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
இருப்பினும், புதிய பொருள்களை
உடனுக்குடன் வாங்குவதால் மட்டுமே மகிழ்ச்சியைப் பெற்றுவிடமுடியும் என்றெண்ணுவோரின்
சிந்தனைக்கும் சில அடிப்படை காரணங்கள் உள்ளன. சிங்கப்பூர் போன்ற போட்டித்தன்மை
மிக்க தேசத்தில், பின்தங்கிவிடகூடாது என்ற அச்சத்தை அனைவரும்
கொண்டிருப்பது இயல்பு. சில மாணவர்கள், தாமும் மற்ற
மாணவர்களைப் போலவே இருக்கவேண்டும் என்ற இச்சையால், தங்கள்
பெற்றோரிடம் இவ்வாறான பொருட்களை வாங்கிக்கொடுக்குமாறு வேண்டுகிறார்கள். மற்றவர்கள்
தன்னைத் தாழ்வாக எண்ணினால், தனக்கு நண்பர்கள்
இருக்கமாட்டார்கள் என்று அஞ்சுவார்கள். இக்கருத்து வேலைக்குச் செல்லும்
பெரியோர்க்கும் பொருந்தும். தங்களிடம் உள்ள பொருள்களைப் பற்றி பெருமையாக பேசுவதில்
அவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.
“உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே
இடுக்கண்
களைவதாம் நட்பு”
என்ற
திருக்குறளிற்கேற்ப,
நட்பு என்பது துணை, உதவி, அன்பால் கட்டப்பட்ட ஒரு வீடாகும். ஒருவன் வசதி குறைந்தவனாக இருப்பதாலே
அந்த வீடு உடைந்து பாழாகுமெனில், அந்த வீடு உணர்ச்சிகளை
அடிப்படையாகக் கொண்டு கட்டப்படவில்லை. அவ்வாறு ஏற்படும்போது, அந்நட்பை விட்டொழித்துவிட்டு நமக்கு உண்மையான அன்பளிக்கும் நண்பர்களுடன்
பழகினாலே மகிழ்ச்சி கிட்டும்.
No comments:
Post a Comment