Monday, November 30, 2020

நம் வாழ்வில் பரபரப்பு மிகுந்துவிட்டாலும், நமது அடையாளங்களை நாம் மறந்துவிடலாகாது - எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு


ரித்திக்கா ரங்கநாதன் (401) 

“ஒன்பது மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை

ஒன்பதரை ஆனால் உன் அம்மா சொந்தமில்லை 

தாயென்று காட்டுவதற்கும் தாவி எடுப்பதற்கும் 

ஞாயிற்றுக்கிழமை வரும், நல்லவளே கண்ணுறங்கு” 


அவையோர் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கங்கள். நான் இன்று பேச எடுத்துக்கொண்ட தலைப்பு, நம் வாழ்வில் பரபரப்பு மிகுந்துவிட்டாலும், நமது அடையாளங்களை நாம் மறந்துவிடலாகாது. 


அவையோரே, இன்றைய நவீன இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு வாழ்க்கை தொழில்நுட்ப வளர்ச்சியால் மிகுந்த பரபரப்பாகிவிட்டது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக நமது சிங்கை நகரில், நாம் அனைவரும் ஒரு நாளுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் போதால் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பம்பரமாய்ச் சுழன்றுகொண்டிருக்கிறோம். இதன் காரணமாக, சுயமுன்னேற்றம், வெற்றி முதலானவற்றை மட்டுமே மனதில் கொண்டு, நமக்கென ஓர் அடையாளத்தைக் கொடுக்கும் குடும்பம், கலாச்சாரம், நாடு முதலான அம்சங்களை மறந்து நிற்கும் அவலநிலையை அடைந்திருக்குகிறோம். ஆனால், எவ்வளவுதான் வெற்றியைத் துரத்து வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினாலும் தனிமனிதனாக நாம் நம் அடையாளங்களை நிச்சயமாக மறந்துவிடலாகாது. 


முதலாவதாக, நமக்கு மிக அருகில் இருக்கும் குடும்ப நிலையிலிருந்தே துவங்குவோம். அவையோரே, ஒரு நிமிடம் கண்களை மூடிச் சிந்தித்துப் பாருங்கள். கடைசியாக உங்களது தூரத்துச் சொந்தங்களிடம் நீங்கள் எப்போது பேசியிருப்பீர்கள்? ஒரு சில மாதங்கள் ஆகியிருக்குமா? அல்லது ஒரு வருடமே ஆகியிருக்குமா? நம் அடையாளத்தை நாம் எவ்வளவுதான் பேணுகின்றோம் என்பது இதிலிருந்தே தெரிகிறதே அவையோரே! நான் உரையின் தொடக்கத்தில் கூறிய வரிகள் இதை அழகாக எடுதிரைக்கின்றன. நமது பிஞ்சுக் கால்களால் இவ்வுலகிற்குள் முதல் பதம் எடுத்து வைக்கும்போதே, நம்மைச் சூழ்ந்திருப்பது நம் குடும்பம்தான். நன்மை தீமை கற்றுக்கொடுத்து, நமது எண்ணங்களைச் செதுக்கி, புத்திக்கூர்மையும் நற்பண்புகளும் கொண்ட சிறந்த மனிதனாக நம்மை உலக அரங்கில் நிற்கவைப்பவர்கள் நம் குடும்பம்தான். நமது அடையாளத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பார் நம் குடும்பம்தான். வாழ்க்கை பரபரப்பில் நம் குடும்பத்தை நாம் மறந்துவிடலாகுமா? குடும்பம், சொந்தம், பந்தம் எனும் நம் அடையாளங்களை நாம் மறந்துவிட்டால், எவ்வளவுதான் வாழ்க்கை எனும் ஏணியில் மேலே ஏறினாலும், ஆதரவின்றி அங்கே நிலைக்கமுடியாமல் கீழே விழுந்துவிடுவோம். நமது நற்பண்புகளை என்றும் நம்மை இழக்கவிடாமல் வைத்திருப்பது, வாழ்க்கைக்கு காட்டில் நாம் தொலைந்துவிடாமலிருக்க வழிகாட்டியாய் இருப்பது, நம் குடும்பத்தினர் தான். ஆகவே, வாழ்க்கை பரபரப்பில் குடும்பம் எனும் அடையாளத்தை நாம் மறந்துவிட்டால், வாழ்வில் நாம் சிகரங்களைத் தொட்டு சிங்கார நடை போடவியலாது. 


அடுத்தபடியாக, நாம் கலாச்சார நிலைக்குச் செல்வோம் அவையோரே. தனிமனிதனாக நமது அடையாளத்தில் மிகப்பெரிய பங்கை வகிப்பது நம் கலாச்சாரமும் பாரம்பரியமும் தான். குறிப்பாக நம் தமிழ்க்கலாச்சாரத்திற்கு இது நூற்றுக்கு நூறு உண்மையே. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக் குடி நம் தமிழ்க் குடி அல்லவா அவையோரே? நமது கலாச்சாரத்திலே தமிழ்மொழி, உணவுமுறை, உறவுமுறை முதலான பற்பல அம்சங்கள் சேர்ந்து நம் கலாச்சாரத்திற்கு விண்ணளவு தொன்மையும் மண்ணளவு பெருமையும் தருகின்றன; தமிழன் எனும் அடையாளத்தை நமக்குத் தருகின்றன. ஆனால், தொழில்நுட்பத்தாலும் உலகமயமாக்கலாலும் வாழ்க்கை பரபரப்பாலும் இந்த மிக முக்கிய அடையாளத்தை நாம் இழந்துவருவதை நினைக்கும்போதே நெஞ்சம் பதறவில்லையா அவையோரே? பரபரப்பான உலகில் வாழ்கின்றோம் என்ற பெயரில் நாம் நம் மொழியை மறந்துவிட்டு அதை அழிய விடலாமா? நமது கலாச்சார பழக்கவழக்கங்களை புறக்கணிக்கலாமா? நமது அடையாளத்தைச் சாம்பலாய் எரியவிடலாமா? இந்தத் துயரத்தை நோக்கித்தான் நாம் பயணிக்கிறோம் அவையோரே! இந்நிலை நம்மைத் தாக்காமலிருக்க, கலாச்சாரம் எனும் அடையாளத்தை நாம் என்றும் மறக்கக்கூடாது. நாம் தமிழர்கள் என்பதில் பெருமை கொள்ளவேண்டும். அப்போதே உலகம் நம்மை மதிக்கும், நமது அடையாளம் நிலைத்து நிற்கும்!


இறுதியாக, மானிடனிற்கு ஆகப்பெரிய அடையாளம்? அவனது மண்தான்; அவனது நாடுதான். "நாடு அதை நாடு, அதை நாடாவிட்டால் எது வீடு?" எனும் பாடல் வரி காலத்தால் அழியாதது. ஆனால், இன்றைய பரபரப்பான, நவீன உலகில், பல மக்கள் சொந்த நாட்டிலேயே இருப்பதில்லை என்பதை நீங்களே கண்டு அனுபவித்திருக்கலாம் அவையோரே! இப்படி இருக்கும் பெரும்பாலான மக்கள், நாதங்கள் தாயநாடு எனும் அடையாளத்தையே மறந்து, வெவ்வேறு நாடுகளில் வாழும் பரபரப்பான வாழ்க்கையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். அவையோரே, வாழ்வின் பயணத்தில் நாம் எங்கே சென்றாலும், நமது அடையாளத்தை நமக்குத் தருவது நாம் பிறந்து, வளர்ந்து, படித்து, மகிழ்ந்த நம் தாய்நாடுதான். இந்த அடையாளத்தை மட்டுமே நாம் மறந்துவிட்டால், நம் வாழ்விற்கு ஒரு பொருளோ அர்த்தமோ இல்லாமல் போய்விடும். ஆனால், மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், நாடு எனும் அடையாளத்தை மறந்து நிற்பவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மட்டுமல்ல, தாய்நாட்டிலே தொடர்ந்து வாழ்பவர்களும்தான். வீடு, வேலை எனும் நம் சிங்கை நாட்டு பரபரப்பில், நாட்டுப்பற்றை இழந்து, நாட்டை நம் அடையாளமாக நாம் காண்பது கூட அல்ல இவ்வாறே நாம் வாழ்ந்தால், நாடு என்பது வீடாய் இருக்காது, வெறும் நிலமாய் ஆகிவிடும். அந்நிமிடமே, நாம் அனைவரும் அடையாளத்தை இழந்து அனாதையாகிவிடுவோம்! ஆகையால், வாழ்வின் எந்த மூலைக்குச் சென்று என்ன செய்தாலும், நாம் சிங்கப்பூரர்கள் எனும் அடையாளத்தை மட்டுமே மறந்துவிடலாகாது, அவையோரே!


அவையோரே, அடையாளம் என்பது மனிதனாகிய மரத்திற்கு வேரைப்போன்றது. மரம் எவ்வளவுதான் செழித்து வளர்ந்தாலும், அதன் வேர்களை மட்டுமே இழந்துவிட்டால் அடியோடு சாய்ந்துவிடுமல்லவா? அதை போல், மனிதன் எவ்வளவுதான் இன்றைய பரபரப்பான உலகிற்குள் தன்னைப் பூட்டிக்கொண்டு வெற்றியைத் துரத்தித் துரத்திச் சென்றாலும், அடையாளம் எனும் வேர்கள் இல்லாவிடில் மடிந்துவிடுவான். எனவே, நமக்கு என்றென்றும் அடையாளாமாகத் திகழும் குடும்பம், கலாச்சாரம் மற்றும் நாட்டை மறந்துவிடாமல், அவற்றில் பெருமை கொள்ளவேண்டும் அவையோரே! அப்போதுதான் வாழ்க்கை முழுமையானதாகவும் நிறைவானதாகவும் இருக்கும். எனவே, தேடித் சோறு நித்தம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, நரை கூடி கிழப்பருவம் எய்தி, கொடுங்கூற்றுக்கு இரை எனபின் மாயும், பல வேடிக்கை மனிதரைப்போல் வீழாமல் நம் அடையாளத்தைக் கட்டிக்காப்போம், பேணுவோம், போற்றுவோம் -- நமது அடையாள அம்சங்களே நமது மூச்சு என்று உணர்வோம் எனக்கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!




இளையர்கள் இந்தியப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கிறார்களா


ஆராதனா- 204

      இன்றைய இளையர்கள் இந்தியப் பாரம்பரியப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதில் சிறிதளவும் ஆர்வம் காட்டுவதில்லை. பெண்கள் பொட்டு வைப்பதிலிருந்து ஆண்கள் வேட்டி கட்டுவது வரை இன்றைய இளையர்களிடம் காணமுடிவதில்லை. விழாக்காலங்களில் கூட கோவில்களுக்குப் போவதோ , குடும்பத்தினருடன் வாழை இலையில் சாப்பாடு சாப்பிடுவதோ, அவ்வளவு செய்வதில்லை. அவ்வாறு செய்தாலும், பெற்றோர்கள் வற்புறுத்துவதால்தான் செய்கிறார்கள். இந்தியர்கள் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களில் பல நன்மைகள் உண்டு என்று இளைஞர்களுக்குப் புரிவதில்லை.

 

      நம் இந்தியப் பாரம்பரியத்தில், பாரம்பரிய ஆடைகள் அணிவது வழக்கம். பெண்கள் தங்கள் நெற்றியில் பொட்டுவைத்து, பூவைத்து, பல்வேறு நகைகளும் அணிவதுண்டு. நெற்றியில் திருநீறு, குங்குமம் ஆகியவற்றையும் பூசுவார்கள். ஆண்கள் வேட்டி, சட்டை அணிவதும், பெண்கள் சேலை கட்டுவதும் உண்டு. ஆனால் இன்றைய இளைஞர்கள் அவற்றைச் செய்வதில்லை. அவ்வாறு செய்வதில் ஆர்வமும் காட்டுவதில்லை. பாரம்பரிய ஆடைகளையோ ஆபரணங்களையோ அணிவதற்கு அவமானப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் செய்வதற்குத் சோம்பேறித்தனமாகவும் இருக்கிறார்கள். மேலும் பாரம்பரிய ஆடைகள் அணிந்தால் சூடாக இருக்கிறது என்றும் பலர் புலம்புகிறார்கள். ஆனால், இவ்வாறு செய்வது நம்முடைய அடையாளம் என்று புரிந்துகொள்ள வேண்டும். நாம் அணியும் உடைகளையோ ஆபரணங்களையோ பார்த்துத் தான் மற்றவர்கள் நம்மை இந்தியர்கள் என்று அடையாளம் காண்கிறார்கள். இப்படிப்பட்ட பழக்கவழக்கத்தை நாம் கடைப்பிடிக்காவிட்டால், யார் கடைப்பிடிப்பார்? அதோடு இவ்வாறு பாரம்பரிய உடைகள் அணியும்போது தான் மிகவும் அழகாக இருக்கும். 

 

      விழாக்காலங்களின் போது , நாம் வழக்கமாகக் கோவிலுக்குச் செல்வோம். ஆனால் ,  இளைஞர்கள் பலர் கோவிலுக்குச் செல்ல ஆர்வம் காட்டுவதில்லை. சிங்கப்பூரில் , இந்தியப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பல கோவில்களும் கட்டி இருக்கிறார்கள். ஆனால் , கோவிலுக்குச் செல்வதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள மறக்கிறார்கள் இளைஞர்கள். விழா நாளின்போது கோவிலுக்குச்சென்று , காலையில் கடவுளை வணங்கி , ஆசிர்வாதம் பெற்றால் , அந்நாள் நல்லபடியாக இருக்கும். அதுவும் கோவிலுக்குச் சென்று, சாமியைக் கும்பிட்டுச் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து இருப்பது நமக்கு மனஉளைச்சலைக் குறைத்து , நிம்மதியைத் தரும். அதுவும் பல்வேறு கோவில்கள் முன்னோர்கள் காலத்தில் கட்டப்பட்டவை. கோவிலின் கோபுரத்தில் இருக்கும் சிலைகள் எல்லாம் கையாலேயே செய்யப்பட்ட பொருட்கள். அதன் பின் பல கதைகளும் அதிசயங்களும் உண்டு. இவற்றைத் தெரிந்துகொள்ள முயன்றால் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். 

 

      வாழை இலைகளில் சாப்பிடுவதை இளைஞர்கள் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால், எவ்வளவு பேர் கடைப்பிடிக்கிறார்கள் என்பது வேறொரு விஷயம். வாழை இலையில் உணவு பரிமாறுவது இக்காலத்தில் அரிது. ஆனால் , அவ்வாறு செய்வதால் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. வாழை இலையில் சாப்பிடும்போது , அதன் மருத்துவக்குணம் நமக்குக் கிடைக்கும். வாழை இலைக்குப் பல்வேறு மருத்துவக் குணங்கள் இருக்கின்றன. அதுவும் உணவைக் கையில் எடுத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. அப்போதுதான் நமக்கு வேண்டிய அளவுக்கு எடுத்துச் சாப்பிட முடியும். கையில் எடுத்துச் சாப்பிடுவது நம்முடைய முக்கியப் பழக்கவழக்கமாகும். ஆனால், கைகள் அழுக்காகிவிடும் என்று இளையர்கள் கூறி அவ்வாறு செய்வதில்லை. அவ்வாறு செய்வதன் நன்மைகளை முதலில் புரிந்துகொண்டு , இளைஞர்கள் செயல்பட வேண்டும். 

 

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்என்பது பழமொழி.

      நம் பெற்றோர்கள் நம் கண்களுக்கு முன் தென்படும் தெய்வங்கள் என்று நாம் கருதுகிறோம். அவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது ஒரு இந்தியப் பழக்கவழக்கம். ஆனால் , இளைஞர்கள் அவ்வாறு செய்வதும் இல்லை, பெற்றோர்களை மதிப்பதும் இல்லை. ஆனால் , நம்மை இந்த உலகிற்கு கொண்டுவந்ததே அவர்கள் தான். அவர்கள் இல்லாமல் நாம் இல்லை.மாதா பிதா குரு தெய்வம்என்பதில் நம் அம்மாவும் அப்பாவும் தான் முதல். அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும்போது நமக்குப் புண்ணியம் கிடைக்கும். இவ்வளவு மரியாதையுள்ள இந்தப் பழக்கவழக்கத்தைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதுபோல் நம் பாரம்பரியத்தில் பல பழக்கங்கள் இருக்கின்றன. அவற்றின் பின் காரணங்களும் இருக்கின்றன , நன்மைகளும் இருக்கின்றன. இவற்றை இளையர்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இந்தியப் பாரம்பரியம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொன்டே வருகிறது. இளையர்கள் தான் அதைக் கடைப்பிடித்து பாரம்பரியத்தைக் காக்க வேண்டும். அவ்வாறு செய்வது அவர்களுடைய கடமை.ஐந்திலே வளையாதது ஐம்பதில் வளையுமா?" இளமையிலேயே இதுபோன்ற பழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தால் தான் முதுமை வரை பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கலாம். இளமையிலேயே பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். நன்மைகளையும் அவர்களுக்கு விளக்குவது இளைஞர்களின் பொறுப்பு. நம் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் வேறு யார் கடைப்பிடிப்பார்? அதனால் , இளையர்கள் இந்தியப் பாரம்பரியப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது முக்கியம் மற்றும் அவசியம். 

 

      இந்தியப் பழக்கவழக்கங்களே நம்முடைய அடையாளம் அவற்றை மறக்காமல் கடைப்பிடிப்பது அவசியம். இளையர்கள் பழக்கவழக்கங்களின் அவசியத்தையும் நன்மைகளையும் புரிந்துகொள்வது முக்கியம். அப்போது தான் கடைப்பிடிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். அவ்வாறு செய்வதற்கு அவமானமோ சோம்பேறித்தனமோ படக்கூடாது. இந்தியப் பாரம்பரியத்தை காப்பது அவர்களின் கைகளில் தான் இருக்கிறது.இந்தியர்கள் நாம்! பெருமையாக இருப்போம்!யாமறிந்த பாரம்பரியங்களில் இந்தியப் பாரம்பரியம் மிகச்சிறந்தது. இளையர்கள் பெருமையாகப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். 

 

 

மற்றவர்களது குறைகளைப் பற்றிக் கேலி பேசும் பழக்கத்தால் ஏற்பட்ட விளைவு - யாழினிஸ்ரீ அண்ணாதுரை வகுப்பு : 206 - 2020

“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நன்று” என்ற வள்ளுவரின் பொன்சொற்களை நாம் பல முறை கேட்டிருப்போம். ஆனால், இக்குறளை அறிந்தும் நான் அதை நடைமுறையில் கொண்டு வராமல் செயல்பட்ட சம்பவம் என் மனதில் எப்போதும் நிழலாடிக்கொண்டே இருக்கும். நான் அப்போது உயர்நிலை இரண்டில் படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நெருங்கிய தோழிகள் பலர் இருந்தாலும், ஒரு தோழி மட்டும் வித்தியாசமாக இருந்தாள். மாதவி என்ற பெயர் கொண்ட அவள் திக்கித் திக்கிப் பேசுபவள். வகுப்பில் யாரும் அவளுடன் சேரமாட்டார்கள். உயர்நிலை ஒன்றில் அவள் எந்த நண்பரும் இன்றி தனியாகத் தான் இருந்தாள். அவளுக்கும் எனக்கும் இடையே எந்தவித பேச்சு வார்த்தையும் இல்லை. நானும் மற்ற மாணவர்களைப் போல் அவளை விட்டு விலகியே இருந்தேன். ஆனால், உயர்நிலை இரண்டில் எங்களின் வகுப்பாசிரியர் அவளை என் பக்கத்தில் உட்காரச் செய்தார். கணக்கிலும் அறிவியலிலும் நான் சிரம்ப்பட்டுக் கொண்டிருக்க, அவள் அவற்றில் மேதையாக விளங்கினாள். நாட்கள் செல்லச் செல்ல நான் சிரமப்படுவதை அறிந்த அவள் , ‘அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்’ என்பதற்கேற்ப தன் தாட்களை என்னிடம் காட்டி எனக்குப் புரிய வைக்கும்படி கூறினாள். திடீரென்று, அவள் எனக்கு உதவுவதை உணர்ந்த நான் முதலில் அவள் கூறியவற்றைப் பொருட்படுத்தாமல் , “நன்றி. ஆனால், எனக்கு உதவி தேவையில்லை,” என்று அலட்சியமாகக் கூறினேன். ஆனால், இந்த எண்ணத்தை என் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் சுக்கு நூறாக்கிக் காற்றில் பறக்கவிட்டன. கணக்கிலும் அறிவியலிலும் தேர்ச்சி பெறாத நான் இம்முறை தானாகவேச் சென்று மாதவியிடம் உதவி கேட்டேன். அவள் என்னை மன்னித்துவிட்டு எனக்கு ஒவ்வொரு நாளும் உதவ உதவ, நானும் அவளும் கூடிய சீக்கிரத்தில் இணைபிரியா தோழிகள் ஆனோம். ஆனால், என்னிடம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பழக்கம் இருந்தது. அதாவது வகுப்பு மாணவர்களிடம் உள்ள குறைகளைப் பற்றி மற்றவர்களிடம் கூறிக் கேலி பேசி மகிழ்வது ஆகும். மாதவி என் நண்பர்களிலேயே அதிகக் கருணை குணம் கொண்டவள் என்றாலும் அவளது திக்கித் திக்கிப் பேசும் பழக்கம் எனக்கு அதிக வியப்பையேத் தந்தது. என் மற்ற நண்பர்கள் என்னிடம், “நீ ஏன் அவளுடன் பழகுகிறாய்? அவள் பேசுவதை யாராலும் புரிந்துகொள்ள முடியாதே,” என்றெல்லாம் வினவியபோது நான் அவர்களிடம் கல்வியில் உதவி பெறுவதற்காகவே அவளுடன் பழகுவதாகப் பொய் சொல்வேன். பிறகு, அவர்களும் நானும் அவளைத் தொடர்ந்து கேலி செய்வோம். என் மற்ற நண்பர்களை இழக்க விரும்பாத நான் இப்போக்கை ஓட்டிக்கொண்டே இருந்தேன். முகத்தளவில் மட்டும் மாதவியுடன் நட்புகொண்டிருந்ததால் என் உள்ளத்தில் அவள் மீது ஒருவகையான வெறுப்பு வளர்ந்தது. இவை அனைத்தையும் அறியாத மாதவி தனது ஒரே நெருங்கிய தோழியாக விளங்கிய என்னை மிகவும் நேசித்தாள். “உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற வள்ளுவரது சொற்களைப் போல் அவள் எந்த ஒரு சூழ்நிலையிலும் எனக்குத் துணையாக நின்றாள். அம்மாதிரியான நற்குணம் படைக்காத நான் அவள் எனக்குச் செய்ததை எல்லாம் புறக்கணித்து அடுத்த வருடம் வகுப்பு பிரிவதால் அவளைவிட்டுப் போய் விடலாம் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தேன். இந்நிலையில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு முற்றுப்புள்ளியை வைத்தது. ஒருமுறை நான் மாதவியை ஏளனம் செய்துகொண்டிருந்தபோது மாதவி அங்கே இருப்பதை நான் கவனிக்கவில்லை. அன்று உலக நண்பர்கள் தினம் என்பதால் அவள் எனக்காக ஒரு பெரிய பரிசுப்பொருளுடன் நின்றுகொண்டிருப்பதை நான் பார்க்கவில்லை. நான் தொடர்ந்து என் நண்பர்களுடன் அவளைக் கேலி செய்ய, திடீரென்று ஒரு பொருள் பலத்த சத்தத்துடன் விழுவது என் காதுகளில் விழுந்தது. ஆம், அது மாதவி எனக்கு வாங்கி வந்த பொருளாகும். திரும்பிப் பார்த்தபோது மாதவியைக் கண்ட எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவளது கண்களிலிருந்து நீர் அருவிபோல் வழிந்தது. இதைக் கண்ட என் மற்ற நண்பர்கள் நான் நேர்மையின்றி நடப்பதை அறிந்தனர். அவர்கள் என்னை வெறுப்புடன் பார்க்க நான் வெட்கத்தில் தலைகுனிந்து நின்றேன். ஆனால், என் கால்களோ மாதவி சென்ற வழியைப் பின்தொடரச் சென்றன. மாதவி ஓர் ஊஞ்சலில் உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பதைக் கண்டபோது என் மனம் உடைந்தது. “என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன், ஓர் ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்” என்ற பாடல் வரிகள் என் மனத்தில் ஒலித்தன. நான் ஒரு நல்ல தோழி என்று என்னை நம்பி வந்த மாதவியை ஏமாற்றி விட்டேன் என்ற குற்ற உணர்வு என்னுள் குடிகொள்ள நான் கண்ணீர் மல்க என் போக்கைப் பற்றிய உண்மையைக் கூறி அவளிடம் மன்னிப்புக் கேட்டேன். அவள் திக்கித் திக்கி “என்னுடன் இனிமேல் பேசவேப் பேசாதே!” என்று தன் பலத்தைத் திரட்டிக்கொண்டு தொண்டை கிழியக் கத்தினாள். அவள் மனம் புண்படுமாறு நடந்துகொண்ட என்னை அவள் எவ்வாறு மன்னிப்பாள். இவ்வளவு நாள் அவள் முன் மட்டும் இனிதாகப் பேசி அவளுக்குப் பின் அவளைக் கேலி செய்ததை எப்படி மன்னிப்பாள் ? இக்கேள்விகள் அனைத்தும் என் மனத்தை ஆட்கொள்ள நான் என் செயல்களை நினைத்து ஒரு நல்ல தோழியை இழந்துவிட்டோமே என்று வருந்தி வீடு திரும்பினேன். அன்றிலிருந்து என் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் என்னுடன் பழகுவதை நிறுத்தினார்கள். அவர்கள் எல்லோரும் மாதவி மீது பரிதாபப்பட்டு அவளுக்குத் துணையாக இருக்க நான் மட்டும் தனிமையில் வாடினேன். என் செயல்களின் விளைவுகளை அனுபவித்தேன். “நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு ஓடு ராஜா” என்ற பாடல் வரிகளை நாம் பல முறை கேட்டிருப்போம். நேர்மை என்பது மனிதர்களுக்கு இருக்க வேண்டிய தலைசிறந்த பண்பாகும். நம்மை நம்பி இருப்பவர்களைக் கைவிடாமல் அவர்கள் நமக்கு உதவிக்கரம் நீட்டுவது போல் நாமும் அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு வாழ்ந்தால் தான், “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்று நாம் ஒழுக்கத்துடன் வாழ்ந்து வள்ளுவர் கூறும் தெய்வ நிலையை அடைய முடியும். நல்லொழுக்கத்தின் முக்கியமான பண்பாக விளங்கும் நேர்மையை உணர்த்திய இச்சம்பவத்தை நான் என்றென்றும் நினைவில் வைத்துக்கொண்டு நேர்மையுடன் நடத்துகொள்ளத் தொடர்ந்து முற்படுவேன்.