Wednesday, May 20, 2009

உன்னைப் பார்த்து மற்றவர் கேலியும் கிண்டலும் செய்தபோதும் நீ அவற்றைப் பொருட்படுத்தாமல் எப்படி ஒரு செயலில் ஈடுபட்டுச் சாதித்தாய் என்பதை விளக்கி எழுதுக.

S. Dakanie . செ. தஷ்ணி. 4 HTL . 20.2.2009.

A movie clip which was shown to the pupils. In which a mechanic suggested something in a presentation. Thus, the presenter felt uncomfortable. He insulted the mechanic and asked him to get out of the room. Than the mecahnic felt ashamed and wanted to proof himself right. In the end the mechanic succeeded. Pupils were asked to wirte a essay on how a student proofed him/herself right despite others teasing.

அன்று இனிய மாலைப்பொழுது. காற்று மெல்ல வீச, மரங்கள் அசைந்தாடின. பள்ளியின் வாசலைவிட்டுக் கிளம்பிய ஒரு இனிமையான புல்லாங்குழல் இசையைக் கேட்ட நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே கண்ணன் புல்லாங்குழலை வாசித்துக்கொண்டு இருந்தான். அந்த அழகிய கண்ணன் சிலையை நான் ரசித்துப் பார்த்தேன். அந்தக் கண்ணன் சிலையைக் காணும்போதெல்லாம் எனக்கு அன்று நடந்த சம்பவம் மனத்தில் தோன்றும்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்றது. உயர்நிலை இரண்டில் படித்துக்கொண்டிருந்த நான் சந்தர்ப்ப சூழ்நிலையினால் இரண்டு உயிர்த்தோழிகளைப் பெற்றிருந்தேன். அவர்கள் இருவரும் இசையில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். அவர்களுடன் நான் எங்குச் சென்றாலும் ஒரு சிறந்த கச்சேரியை , அதாவது அவர்கள் இருவரும் பாடுவதைக் கேட்டுக்கொண்டு தான் செல்வேன். தேன் போன்ற இனிமையான குரல்களைப் பெற்றிருந்த அவர்கள் சிறந்த பாடகர்களாக விளங்கினர். இவர்களின் இசைத் திறமையைக் கண்டு வியந்த நான், நானும் இசையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற வேட்கை கொண்டேன். என்னுடைய இரண்டு தோழிகளின் அறிவுரையின்படி நான் வீணையை வாசிக்கக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

வழக்கம்போல அவ்வாண்டின் பள்ளி இசைப்போட்டி நடைபெற இருந்தது. போட்டியின் மூலம் இந்திய இசையின் அற்புதத்தைப் பள்ளிக்குச் சித்தரிக்க என்னுடைய நண்பர்கள் ஆசைப்பட்டனர். அதனால், அவர்கள் இருவரிம் போட்டியில் கலந்துகொள்ள தீர்மானித்தனர். என் உயிர்த்தோழிகளான அவர்கள் எச்செயலில் இறங்கினாலும் என்னையும் கலந்துகொள்ள அழைப்பார்கள். அதனால், அவர்கள் என்னை இசைப்போட்டியில் பங்கேற்கும்படி வற்புறுத்தினர். என்னுடைய நண்பர்களின் மனத்தைப் புண்படுத்த நான் விரும்பாததால் நான் போட்டியில் பங்கேற்க இசைந்தேன். என்னுடைய முடிவை அறிந்த அவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். நாங்கள் போட்டிக்காகப் பயிற்சி செய்ய ஆரம்பித்தோம்.

ஒரு போட்டியில் பங்கேற்பது நான் நினைத்ததுபோல ஒரு சுலபமான செயலாக அமையவில்லை. என்னுடைய நண்பர்களின் திறமைக்கு என்னால் வீணையை வாசிக்க இயலவில்லை. நான் எவ்வளவு முயன்றும் அவர்களின் தகுதிக்கு ஒப்பாக என்னால் வாசிக்க முடியவில்லை. இதை அறிந்து நான் மனம் தளர்ந்தேன்.

போட்டி நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாதம் இருந்தது. எங்களின் முயற்சி எவ்வாறு சென்றுகொண்டிருந்தது என்று அறிய என்னுடைய வகுப்பு ஆசிரியர் ஆசைப்பட்டார். அவர் எங்களை வகுப்புக்கு முன்னால் எங்களுடைய திறமையைக் காட்டும்படி கேட்டுக்கொண்டார். நாங்கள் அதற்கு இசைந்தோம்.

அதற்கு அடுத்த நாள் அன்று நாங்கள் எங்களின் வகுப்புக்கு முன்னால் எங்களுடைய இசையாற்றலை வெளிப்படுத்தச் சென்றோம். நான் வீணையை வாசித்தேன். மாலதி தபலாவை வாசித்தாள். ராணி சங்கீதம் பாடினாள். ஆனால், வகுப்புக்கு முன்னால் வாசிப்பதற்கு எனக்குச் சற்றுப் பயமாக இருந்தது. என்னுடைய தோழிகளைப் போல எனக்கு இசை வாசிப்பதில் முன் அனுபவம் இல்லை. அதனால், எங்களின் ஆசிரியர் எங்களை வாசிக்கும்படி கூறியபோது எனக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. பயத்தால் நான் நடுங்கினேன். இதைக் கண்டு என்னுடைய வகுப்பு மாணவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தனர். சிலர் என்னைக் கேலியும் கிண்டலும் செய்தனர். இதைக் கண்டு என்னுடைய கண்களிலிருந்து கணணீர் ஆறுபோல வழிந்தது. அவமானத்தைத் தாங்க முடியாமல் நான் வகுப்பைவிட்டு ஓடினேன். என்னுடைய மாணவர்கள் சிரிக்கும் சத்தம் என்னுடைய செவிகளில் ரீங்காரமிட்டது.

அன்று இரவு நான் பள்ளியில் நடந்ததைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தேன். என்னுடைய வகுப்பு என்னைப் பார்த்துச் சிரித்த காரணத்தால் எனக்குப் போட்டியில் கலந்துகொள்ள சற்றுப் பயமாக இருந்தது. ஆனால், பயம் என்னை ஆளவைத்தால் நான் என்றும் வாழ்க்கையில் வெற்றி அடைய முடியாது என்பதை நான் அறிந்தேன். மேலும், தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் சவால்களைத் தைரியமாக எதிர்நோக்குபவன்தான் உண்மையான சாதனையாளன் என்பதையும் நான் அறிந்தேன். அதுமட்டுமன்றி, நான் போட்டியில் பங்கேற்க அசைப்படும் என்னுடைய நண்பர்களின் மனங்களையும் புண்படுத்த நான் விரும்பவில்லை. அதனால், நான் போட்டிக்காகத் தீவிரமாகப் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய ஈடுபாட்டைக் கண்டு என்னுடைய நண்பர்கள் வியந்தனர். ஆனால், அதே சமயத்தில் அவர்கள் என்னை உற்சாகப்படுத்தினர். தினந்தோறும் பள்ளி முடிந்ததும் வீணையை இரண்டு மணி நேரத்திற்காவது வாசித்துப் பயிற்சி செய்வேன் என்ற வாக்குறுதியையும் நான் எடுத்தேன். அதேபோல நான் தினந்தோறும் பயிற்சி செய்தேன்.

போட்டி நடைபெறும் நாள் வந்தது. எங்களுக்கு எதிராக ஐந்து குழுக்கள் போட்டியில் இருந்தன. அவர்களின் இசைப் படைப்புகளைக் கண்டு களித்த சமயத்தில் எனக்குச் சற்றுப் பயமும் ஏற்பட்டது. அவர்களின் இசைப்படைப்புகள் அமைத்தும் சிறந்து விளங்கின. அவர்களைப் போல நாங்களும் சிறந்து விளங்குவோமா என்ற சந்தேகமும் பயமும் இருந்தது. இருந்தாலும் நான் என்னுடைய அச்சத்தை ஒரு புறம் தள்ளிவிட்டுப் போட்டிக்குத் தயாராகினேன்.

நாங்கள் எங்களின் இசையைப் படைக்கும் நேரம் வந்தது. நான் தைரியத்துடன் மேடையின் மேல் ஏறினேன். அச்சமயத்தில் அங்கிருந்த என்னுடைய வகுப்பு மாணவர்கள் சிரித்தனர். ஆனால், நான் அதைப் பொருட்படுத்தாமல் வாசிக்க ஆரம்பித்தேன். நாங்கள் எப்பிழையுமின்றி இசை படைத்தோம். எங்களுடைய படைப்பு முடிந்ததும் பள்ளி மண்டபமே அதிரும்படி அனைவரும் கைகளைத் தட்டினர். நான் எப்பிழையுமின்றி வாசித்ததைக் கண்டு வியந்த என்னுடைய சக வகுப்பு மாணவர்கள் என்னைப் பாராட்டினார்கள்.

இச்சம்பவம் இன்னும் என்னுடைய மனத்தில் பசுமரத்தாணியைப் போலப் பதிந்து இருக்கிறது. இதன்மூலம் தன்னம்பிக்கையே வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கான வழிகாட்டி என்பதைக் கற்றுக்கொண்டேன். பிறர் நம்மை கேலி செய்தாலும் நாம் அதைப் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் ஒரு செயலில் இறங்கினால் வெற்றி நிச்சயம்.

Sunday, May 17, 2009

I want to ask the GOD!

நான் கடவுளிடம் கேட்க விரும்புபவை

R. அஸ்வினி . உயர் நிலை 4 உயர்தமிழ். 22.4.2009

கடவுள்! இந்த நான்கு எழுத்து வார்த்தைக்குள் தான் எத்தைனை அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன? பலர் கடவுள் ஓர் உயர்ந்த சக்தி என்கிறார்கள். ஆக, கடவுள் என்பது, உலகிற்கு அப்பால் உள்ள, அண்ட சராசரத்தில் வசிக்கும் ஆறறிவு படைத்த மனிதனையும் ஐந்தறிவு படைத்த மிருகங்களையும் ஆளும் ஓர் உயர் சக்தி என்பதுதான் ஐதீகம். உலகத்தில் பிறந்து, கல்வி கற்று, சக்தி என்ற வார்த்தைக்கான அர்த்தத்தைப் புரிந்துகொண்ட நான் அந்த உயர் சக்தியிடம் சிலவற்றைக் கோர இருக்கிறேன்.

முதலாவதாக மனிதனைப் படைத்தாளும் இந்த உயர் சக்தியே பல சமயங்களில் மனிதனைக் கைவிட்டது ஏன் என்பதைக் கேட்டு அறிய விரும்புகிறேன். சமீபத்தில் நாடுகளைத் தாக்கிப் பல உயிர்களை ஈவிரக்கம் இல்லாமல் பறித்துச் சென்ற அந்தச் சுனாமியிலிருந்து மனிதனைக் காக்க ஏன் கடவுள் வரவில்லை? பச்சிளம் குழந்தைகளும் சிறுவயது பாலர்களும் தங்கள் பெற்றோர்களை இழந்து வீதியில் கதறி அழுமாறு செய்த அந்தக் கொடிய ராட்சசனை ஏன் அவர் தடுக்கவில்லை? அப்படி என்றால், கடவுள் என்பவர் மனிதனைக் கடலில் தள்ளி வேடிக்கை பார்க்கும் கல்நெஞ்சம் கொண்டவரா? மனிதனைப் படைத்து அவனுக்கு மகிழ்ச்சி என்ற உயிர் நாடியை ஊட்டிய அவர், எவ்வாறு கல் நெஞ்சம் கொண்டவராக இருக்க முடியும்? இதனை அந்த உயர் சக்தியிடம் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இரண்டாவதாக உலகத்தில் சட்டத்தைப் படைத்து நியாயத்தை நிலைநிறுத்த முற்பட்ட அவர் ஏன் மனிதனுக்குள் பிரிவினைகளை உண்டாக்க வேண்டும்? மதத்தால், மொழியால், கலாசாரத்தால், நிறத்தால் ஏன் மனிதர்களுள் வேறுபாடுகளை உண்டாக்க வேண்டும். பலவகையில் மனதளவிலும் சமூகத்தின் அளவிலும் வேறுபட்டுக் கிடக்கும் மனிதர்கள் எவ்வாறு ஒற்றுமையாக வாழ முடியும். இத்தகைய வித்தியாசங்களால் தங்களைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைந்துகொண்டு சிலர் ஒதுங்கிவிட, சிலர் தங்கள் வித்தியாசங்களைப் பெரிதாக எண்ணிக்கொண்டு சண்டையிடுகின்றனர். இதனால், புவியில் அமைதி என்பது குலைக்கப்பட்டுவிட்டது. ஒரு குழுவை அமைத்து அமைதியைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் நாம். இது ஏன்?

மூன்றாவதாக, பசி, பட்டினி, வறுமை என்ற கொடியவற்றை ஏன் படைக்க வேண்டும்? ஒருபக்கம் மைனாக்களைத் துரத்தி விளையாடும் சந்தோஷமான குழந்தைகள். மறு பக்கம் கழுகுகளால் துரத்தப்படும் பட்டினியால் எலும்பும் தோலுமான குழந்தைகள். இந்த இரு பக்கம் எதற்கு? அமுதத்தைப் படைத்த நீ, ஏன் ஆலகால விஷத்தையும் படைத்தாய்? ஏன்?எதற்காக? பட்டினியில் வாடி வதங்கும் பச்சிளம் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு இவ்வளவு கடுமையான தண்டனை அவசியம் தானா? அவசியம் என்றால் அதற்கான காரணம் என்ன?

அடுத்ததாக, வியாதிகள். கண்களுக்குத் தெரியாத சிறு சிறு கிருமிகள் உண்டாக்கும் குணப்படுத்த முடியாத வியாதிகள். புற்றுநோய். எயிட்ஸ் போன்றவற்றை ஏன் கடவுள் உருவாக்கினார்? இந்த நோய்களுக்கு இன்றுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுசிறு நோய்கள் வந்துபோனால் உடல் மேலும் வலுப்பெறும் என்பது விஞ்ஞான உண்மையாகும். ஆனால், உயிரைப் பறிக்கும் நோய்களின் நோக்கம் என்ன? உலகு மிகவும் கூட்டமான இடமாக மாறுவதைத் தவிர்க்கக் கடவுள் கையாளும் ராட்சச வழிகளுள் இதுவும் ஒன்றோ. இந்த நோய்களின் நோக்கத்தை நான் கடவுளிடம் கேட்டு அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

கடைசியாக உலகில் நிறைய அநியாயங்கள் நடக்கின்றன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்று நிறைய அநியாயங்கள் உககெங்கும் எப்பொழுதும் நடந்துகொண்டே இருக்கின்றன. இவை நடப்பது மனிதர்களின் தீய எண்ணங்களாலும் குணங்களாலும்தான் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால், நான் கடவுளிடம் இவற்றைத் தடுக்கும் சக்தி வாய்ந்த ஆயுதத்தை உருவாக்கக் கூறுவேன். அநியாயங்களை இந்த ஆயுதம் ஒடுக்கும். அநியாயம் செய்பவர்களை இந்த ஆயுதம் தண்டிக்கும். அதுமட்டுமன்றி மனிதர்களுள் தீய எண்ணங்களும் குணங்களும் எழாமல் தடுக்கும். இப்டிப்பட்ட ஒர் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதத்தைக் கடவுள் படைக்க நான் அவரிடம் கோருவேன்.

ஆயுதம் படைத்தால் மட்டும் போதுமா? அதனைப் பயன்படுத்த ஒருவர் வேண்டுமே? நான் ஒரு நியாயவாதி. அநியாயங்களைக் கண்டு, என் மனம் ஆத்திரத்தில் பொங்கி எழுந்தாலும் என்னால் அவற்றைத் தடுக்க முடியாத நிலை. என் எதிரிகளுக்குக் கூட நான் நன்மையையே நினைப்பேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் என் உணர்ச்சிகளுக்கு அதிக இடம் கொடாமல் என் அறிவைக் கொண்டு சிந்திக்கும் ஆற்றல் படைத்தவள் நான். ஆகவே, கடவுள் என்னிடம் அந்தச் சக்தி வாய்ந்த ஆயுதத்தை ஒப்படைக்குமாறு கோருவேன். அப்படி அவர் செய்தால், உலகில் அமைதி என்றும் நிலவும். அனைவரும் நல்ல வழியில் செல்வர் என்று, நான் அவருக்கு உறுதியளித்து அந்த ஆயுதத்தை என்னிடம் ஒப்படைக்குமாறு அவரிடம் வேண்டுவேன்.

நான் கடவளிடம் அதீத நம்பிக்கையுடையவள். தினமும் கடவுளை வணங்கும் ஒரு பக்தை நான். எனவே, என் பக்தியால் கடவுள் திருப்தி அடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன என்பதை இங்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதனால், இன்று முதல் இக்கட்டுரையைப் படிக்கும், நீங்கள் அனைவரும் நியாயமாக நடந்துகொள்ளுங்கள். அல்லாவிடில் வெகுவிரைவில் என்னைச் சந்திக்க நேரிடலாம்!

Monday, September 15, 2008

Saranya`s Letter

பேருந்துகளில் இளையர் சிலர் நடந்துகொள்வது பொதுமக்களுக்கு இடையூறாகவும் எரிச்சல் ஊட்டும்படியும் இருக்கிறது. இது குறித்துத் தமிழ் முழக்கம் செய்தித்தாளுக்கு ஒரு கடிதம்.


அனுப்புநர்:

மதி
புளோக் 125, அங் மோ கியோ சாலை 12
# 10 – 888
சிங்கப்பூர் 560 125


26.08.08

பெறுநர்:

ஆசிரியர்
தமிழ் முழக்கம்
555, அங் மோ கியோ அவென்யூ 5
சிங்கப்பூர் 569555



மதிப்பிற்குரிய ஐயா,

கரு: பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாகவும் எரிச்சல் ஊட்டும்படியும் நடந்துகொள்ளும் இளையர்கள்


வணக்கம்! பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாகவும் எரிச்சல் ஊட்டும்படியும் பேருந்துகளில் நடந்துகொள்ளும் சில இளையர்களைப் பற்றிய எனது ஆதங்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவர ‘தமிழ் முழக்கம்’ செய்தித்தாள் உறுதுணையாயிருக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். என்னுடைய பல நண்பர்களும் இதைப் ஓப்னறு இளையர்களின் நடவடிக்கைகளால் மனதளவில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.


நான் ஓர் இல்லத்தரசி.சந்தைக்குச் சென்று வீடு திரும்பும் வழியில் சில இளையர்கள் நாஃன பயணம் செய்துகொண்டிருந்த பேருந்தில் ஏறினர். அவர்களில் பதினைந்து வயதுடைய இளம் பெண்ணும் இளம் பையனும் மிகவும் ஆபாசமான முஐறயில் கட்டித் தழுவிக்கொண்டிருந்தனர். பேருந்தில் உள்ள அனைவரும் அருவருப்புடனும் எரிச்சலுடனும் தங்களைப் பார்ப்பது தெரிந்தும் அவர்கள் அதைப் பொருட்படுத்தவேயில்லை. மேலும், அவர்கள் பள்ளிச் சீருடை அணிந்திருந்னர். தங்களின் பள்ளிக்கு அவமானம் கொண்டுவருவதை நினைத்துப் பார்க்காமல் அவர்கள் செய்த லீலைகள் என்னை ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாக்கின. இவர்களால் மற்ற நலல் இளையர்களும் தவறான வழிக்குச் செல்ல வாய்ப்புண்டு. இரு இளையர்களின் தாயாகயிருப்பதால் இச்சம்பவம் என் மனத்திரையில் மறுபடியும் ஓடி என்னைத் தூக்கமிழக்கச் செய்துவிட்டது.

இவை தவிர இளையர்கள் செய்யும் அட்டூழியங்கள் பல. பேருந்து பொதுப்போக்குவரத்து என்பதைச் சுத்தமாக மறந்து பல இளையர்கள் அளவுக்கதிகமாகச் சத்தம் போடுகிறார்கள். அச்சத்தத்தால் பலர், குறிப்பாகக் காலையில் வேலைக்குச் செல்வதால் அயர்ந்து தூங்குபவர்களும் மழலைகளும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், மிகவும் பணிவன்பு நிறைந்த நாடு சிங்கப்பூர் என்ற பெயரை மாற்றும் வண்ணம் வாயைத் திறந்தால் சொல்லத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர் இவ்விளையர்கள். இதனால் அதிர்ந்துபோன பல சுற்றுலாப் பயணிகள், சிங்கப்பூரைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? சில இளையர்கள், வேற்று மதத்தினரைப் பற்றியும் இழிவாகப் பெசிப் பலரின் கோபத்தைத் தூண்டுகிறார்கள்.

பேருந்தில் சாப்பிடக்கூடாது என்று தெரிந்தும் சாப்பிடும் இளையர்களுமுண்டு. இது அவர்கள் எந்த அளவுக்குப் பொதுவிதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. சிறு பிள்ளைகள்தான் ஓடிப் பிடித்து விளையாடுவார்கள் என்ற கருத்துக்கு மாறாக, இளையர்களும் அவ்வாறு செய்கிறார்கள். இது கர்ப்பிணி பெண்களுக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் முதியோர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

இறுதியாக என்னை மிகவும் பாதித்தது இதுதான். சில இளையர்கள் பெரும் கும்பல்களில் ஒளிந்துகொண்டு தங்களுடைய ஈ சிலிங் அட்டைகளைப் பயன்படுத்தாமல் தப்பித்துவிடுகிறார்கள். இன்றைய இளையர்களுக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் இருப்பது என்னை ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கடித்தது. அவர்களைத் தட்டிக்கேட்டாலும் தவறே செய்யாததைப் போல் பாசாங்கு காட்டுகின்றனர்.

சிங்கப்பூர் இளையர்கள் பொறுப்பானவர்கள், பக்குமடைந்தவர்கள் என்றெண்ணிய எனக்கு இச்சம்பவங்கள் ஒரு பெரும் அதிர்ச்சியாகவே வந்துள்ளன. ஒரு பக்கம் நமது இளையர்கள் பல போட்டிகளில் பதக்கங்களைக் குவிக்க மறுபக்கத்தில் இப்படிப்பட்ட இளையர்களிருப்பது வேதனையளிக்கிறது. அப்படியென்றால் இளையர்களைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். இவ்வாறு என் இளைய பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுவிடுவார்களோ என்று பயம் என்னை ஆட்கொண்டுள்ளது. உங்கள் செய்தித்தாளின் மூலமாவது இவ்விளையர்களின் மனங்கள்மாறி இனி இதைப் போன்று செய்ய நினைக்கும் இளையர்களுக்கும் இது ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு
உங்கள் உண்மையுள்ள
மதி.
(291 சொற்கள்)
சரண்யா சரவணன் 4 HTL 2008

Janani`s Essay

நீவிர் ஓர் இரவு விருந்து நிகழ்ச்சிக்குச் சென்றீர். குதூகலமாகத் தொடங்கி நடந்துகொண்டிருந்த அந்த நிகழ்ச்சியின் இடையே எதிர்பாராத வகையில் ஒரு குழப்பம் ஏற்பட்டு எல்லாம் தலைகீழாகப் போய்விட்டது. அந்த நிகழ்ச்சியை விவரித்து எழுதுக.
இடம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகள் ஜொலித்தன. பாட்டுச் இசையும் ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டிருந்தது. எல்லோருடைய முகத்திலும் ஆனந்தம் அலை பாய்ந்தது. அன்று என் சித்தப்பா மகளின் கல்யாணத்தையொட்டி அவர், உற்றார் உறவினர் அனவைருக்கும் ஒரு சிறப்பு இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். ஆகவே, அந்நிகழ்ச்சியில் நானும் என் குடும்பத்தினரும் கலந்துகொள்ளச் சென்றிருந்தோம்.

மணப்பெண்ணாகத் தோற்றமளித்த என் சித்தப்பா மகள் ராதா, அழகான ஒரு புடவையில் அனைவரையும் கவரும் வகையில் காணப்பட்டாள். அவர் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அவரது மாப்பிள்ளையும் ‘ஜம்’ என்று இருந்தார். அம்மாப்பிள்ளை, ராதா அமெரிக்காவில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அவளைப் பார்த்தாராம். இருவருக்கும் கண்டதும் காதல் மலர்ந்தது. விரைவில் கல்யாணத்திற்கு மாப்பிள்ளை வற்புறுத்தியதால் ராதாவும் என் சித்தப்பாவின் சம்மதத்துடன் திருமணத்திற்குச் சம்மதித்தார். ராதா கண்ணைக் கவரும் அழகு படைத்தவள்; நற்குணங்கள் நிறைந்தவள். அவளுக்கு இப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது என்று என் பெற்றோர்கள் பேசிக்கொண்டதை நானும் கேட்டேன். ராதாவைப் போல் நானும் காதல் திருமணம் செய்துகொள்ள விரும்பினேன். நன்கு எனது ‘ஓ’ நிலைத் தேர்வை எழுதி முடித்து, பின்னர் ‘ஏ’ நிலைத் தேர்வையும் சிறப்பாக எழுதித் தேர்ச்சி பெற்று வெளிநாட்டிற்குச் சென்று படிக்க உறுதி கொண்டேன்.

இரவு விருந்து நிகழ்ச்சியில் உணவிற்றகு குறையே இல்லை. அனைத்தும் அற்புதம். விதவிதமான உணவு வகைகள் மலை போன்று தட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேசைகள் சுமை தாங்க முடியாமல் உடைந்துவிடும் நிலையில் இருந்தது. நான் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக்கொண்டு அமர்ந்து உண்டேன். ஆட்டம் பாட்டம் கலைகட்டிக்கொண்டிருந்தது. பெரியோர்கள் எல்லோரும் கல்யாணத்தை ஒட்டி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பிள்ளைகள் அனைவரும் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். நான் மட்டும் அந்த இடத்தில் பதின்ம வயதினராய் இருந்ததால் செய்வதறியாது தவித்தேன். சிறு வயதினிலே எனக்கு ஆட்டம் பாட்டத்தில் ஆர்வம் குறைவு. விருந்து நிகழ்ச்சி சிற்றப்பாவின் தரைவீட்டின் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தது. எனவே, உள்ளே சென்று தொலைக்காட்சி காணலாம் என முடிவு செய்தேன்.

தொலைக்காட்சியில் செய்திகளின் சாரம் ஓடிக்கொண்டிருந்தது. என் சிற்றப்பாவின் வீட்டில். ‘சன் டி.வி’ இல்லாததால் நான் செய்திகளையே பார்க்க முடிவெடுத்தேன். செய்திகள் தான் இன்னும் பத்து நிமிடங்களில் முடிந்துவிடுமே என்று நான் செய்திகளின் முடிவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது முக்கியச் செய்தி அறிக்கை ஒன்று வெளிவந்தது. காவலர்கள் ஒரு முக்கிய ஏமாற்றுக் கும்பலைத் தேடிக்கொண்டிருந்ததாம். அக்கும்பல் அழகான பெண்களாகத் தேடிப் பிடித்து ஆசை வார்த்தை காட்டி கல்யாணம் செய்துகொள்ளுமாம். பின்பு பெண்களின் பணம், சொத்து, நகைநட்டு முதலியவற்றையெல்லாம் சுருட்டிக்கொண்டு அப்பெண்களை அமெரிக்கா போன்ற நாட்டிற்குக் கூட்டிச்சென்று விபச்சார விடுதியில் அம்மாதுகளை விற்றுவிடுவராம். அவர்களைப் பற்றி எச்சரித்துக் காவலர்கள் பல புகைப்படங்களைக் காண்ப்பித்தனர். நான் சட்டென்று திடுக்கிட்டேன். என் கால்கள் என்னைச் சுமக்க முடியாமல் தவிப்பதைப் போல் ஓர் உணர்வு. தொலைக்காட்சியில் திருமண வேடங்களில் ராதாவின் வருங்கால மாப்பிள்ளை தோற்றமளித்தார்.

நான் செய்வதறியாது தவித்தேன். என் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. விரைவாகச் சென்று என் பெற்றோரை அழைத்து வந்தேன். அவர்கள் வாயடைத்துப் போனார்கள். சட்டென்று என் தந்தை காவலர்களுக்குத் தொடர்புகொண்டு விஷயத்தைத் தெரிவித்தார். பின்பு நாங்கள் மூவரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு எல்லோரிடமும் அமைதியாக நடந்ததைக் கூறினோம். கேள்விப்பட்ட என் சிற்றப்பா சீற்றம் கொண்டு மாப்பிள்ளையை இரண்டில் ஒன்று பார்க்கப்போவதாகக் கிளம்பினார். என் தந்தை மட்டுமே அவரைச் சமாதானப்படுத்தி, கவாலர்கள் வரும்வரை பொருத்திருக்கச் சொன்னார். யாரும் ராதாவிடம் நடந்ததைக் கூறவில்லை; கூறவும் மனசு வரவில்லை. ஆனந்தமாகச் சிரித்துக்கொண்டிருந்த தனது மகளைப் பார்த்துக் கண்ணீர் தேங்கி நிற்கும் விழிகளுடன் அவர் தாயார் தோற்றமளித்தார். என் மனமும் வாணியது.

காவலர்கள் விரைந்து வந்தனர். அதிர்ச்சியில் மாப்பிள்ளையினால் தப்பிக்க முடியவில்லை. கோழியை அமுக்குவதைப் போல் அவனை அமுக்கிக்கொண்டு காவலர்கள் விரைந்தனர். ராதா பல நாட்களாகத் தொடர்ந்து அழுதாள். தனக்கு நடக்கவிருந்த சம்பவத்தை அவளால் பல வருடங்களுக்கு மறகக முடியவில்லை. ஏழுவருடங்கள் கழிந்த பின்னரே தனது திருமணம் தனது பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையையே மணம் புரிந்துகொண்டாள். நானும் என் காதல் கல்யாண ஆசையை மனதிலேயே புதைத்தேன். என் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையையே கட்டிக்கொள்ள முடிவெடுத்தேன். (416 சொற்கள்)

ஜனனி. SEC 4 HTL 2008

Saranya`s Essay

"வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத் திட்டத்தினால் ( Students Exchange
Programme) சிங்கப்பூர் மாணவர்கள் மிகவும் பயன்பெறுகிறார்கள்"- விவாதிக்க.

"சென்றிடுவீர் எட்டுத்திக்கும்கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" என்று முழங்கினார் பாரதி. அன்று அவர் கூறியதைப் பிரதிபலிக்கும் விதத்தில் இன்றோ, இளையர்கள் பலர் வேறு வேறு நாடுகளுக்குச் சென்று தங்களைத் தாங்களே முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்கின்றனர் என்றால் அது மிகையாகாது. பார்ப்பதையும் கேட்பதையும் ரசிப்பதையும் அப்படியே உள்வாங்கிக்கொண்டு செயல்படும் மாணவ சமுதாயம் மட்டும் இது விலக்கா என்ன? இதைப் போன்ற பயனுள்ள நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்த பள்ளி நிர்வாகமே பல வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத் திட்டங்களை ஏற்பாடு செய்கின்றது. ஆனாலும், பலரின் உள்ளங்களை முள் போலக் குத்திக்கொண்டிருப்பது, “சிங்கப்பூர் மாணவர்கள் இதனால் பயன்பெறுகிறார்களா?” என்ற கேள்விதான். வினவியவர்களுக்கு விடையளிக்கும் வகையில் இந்நிலைமையைச் சற்றே ஆராய்வோம்.

முதலில் நன்மைகளைப் பகுத்தாராய்வோம். இயற்கை கனிமங்கள் எள்ளளவும் இல்லாமல் கடும் முயற்சியாலும் உழைப்பாலும் உலக அரங்கில் பல வல்லரசு நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நாடு, எந்நாடு? சிங்கப்பூர். நாம் இந்நிலைக்கு வந்துவிட்டாலும், சிறிய நாடு என்பதனால் நம்மில் பலரின் சிந்தனை வட்டமும் சிறியதாகவே அமைந்திருக்கிறது. இது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. அப்படியிருக்க உலகத்தை நன்கு அறிய வேண்டியவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அவசியமே. அப்படி செல்லும்போது மற்ற நாட்டினரின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிக பழக்கவழக்கங்கள் இவர்களுக்கு அத்துப்படியாகின்றன. இவ்வாறானவற்றைக் கற்கும்போது மாணவர்களின் பொதுஅறிவோடு மற்றவர்களுடைய பழக்கவழக்கங்களை மதித்துச் செயல்பட வேண்டிய அவசியமும் பக்குவமும் கூடுகிறது.

இன்றைய மாணவர்களில் பலருக்குச் சொகுசான வாழ்க்கைமுறை கைவசமாகியும் தங்களிடம் இருப்பவற்றை ரசிக்காமல் சலித்துக்கொள்கிறார்கள். இவ்வாறான மாணவர்கள் சற்றே வசதி குறைந்த நாடுகளுக்குச் செல்லும்போது தங்களிடம் இருப்பவை எவ்வளவு மதிப்புடையது என்பதை உணர்கிறார்கள். சாப்பாட்டிற்கே வழியில்லாமல் சிலர் இருக்கும்போது, நம் அரசாங்கம் நம்மை எப்படி தங்கத் தட்டில் வைத்துத் தாங்குகிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள இவ்வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் வாய்ப்பளிக்கின்றன. எனவே, மாணவர்களுக்குத் தேசிய பற்று வெகுவாக வளர்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

கூண்டிற்குள் அடைபட்ட பட்சிகளாயிருக்கும் பல மாணவர்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அவர்களிடமிருக்கும் தனித்திறமைகள் குன்றின் மேலிட்ட விளக்குப் போல் வெளிவர வாய்ப்புண்டு. உதாரணத்திற்கு, என்தோழி ஒருத்தி நன்றாக நடிப்பாள். ஆனால், அவளின் திறமை வெளிபடுத்தப் படவேயில்லை. ஒருமுறை இத்தகைய பரிமாற்றத் திட்டத்தின் மூலம் வெளியூர் சென்றவள் அங்குள்ளவர்களின் உந்துதலால் தன் முழுத் திறமையை வெளிப்படுத்திப் பலரை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டாள். உதாரணம் போதுமா? மேலும், மாணவர்கள் தங்களின் திறமைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் செய்கிறார்கள். அவற்றினால் அரிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள்.

இன்றைய உலகில், “ பணமில்லாதவன் பிணம்” என்ற முதுமொழியைப் பின்பற்றி, மனித உறவுகளை உதாசீனபடுத்துபவர்கள் பலர். ஆனால், மனித வாழ்வின் அடிப்படையே இத்தகைய உறவுகள் தான். இதைப் போற்றும் விதமாக மாணவர்கள் சக வெளிநாட்டு மாணவர்களுடன் பேசிப் பழகி, நல்ல உறவுகளை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். “உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற வள்ளுவரின் வாக்கினபடி பல உண்மையான நட்புகள் நிலைநாட்டப்படுகின்றன. எதிர்காலத்தில் இதே நட்புகள் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளையோ குடும்ப வாய்ப்புகளையோ ஏற்படுத்தித் தரலாமல்லவா?

சிங்கப்பூர் மாணவர்கள் இவற்றையெல்லாம் வெளிநாட்டிற்குச் சென்று தெரிந்துகொள்ளலாம். அதேபோல் வேறு நாடுகளிலிருந்து வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் வாயிலாக இங்கு வந்திறங்கும் மாணவர்களின் மூலமும் நம் நாட்டு மாணவர்கள் இவற்றைக் கற்றுக்கொள்ளலாம். ஆகவே, இறுதியாக இத்திட்டம் பல வகையில் பயனளிக்கின்றது.

இறுதியாக இவ்வாறான திட்டங்கள் இத்தனை அனுபங்களையும் குறைந்த விலையில் வழக்குகின்றன. பள்ளி ஏற்பாடு செய்யும் சுற்றுலா என்பதினால் மாணவர்களுக்குப் பல சலுகைகள் கிடைப்பது திண்ணம். சொந்தச் செலவில் போவதைவிட இது மலிவானதே. பெற்றோருக்கும் பாரமில்லை. அதோடு பள்ளி மாணவர்கள் அன்றாகச் செல்லும்போது அவர்களிடையே உள்ள புரிந்துணர்வும் ஒற்றுமையும் கூடுகிறது. குடும்பத்தோடு செல்லும்போது ஒரு மாணவனுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பெற்றோரோ பணிப்பெண்ணோ இருப்பார்கள். ஆனால், சக நண்பர்களுடன் செல்லும்போது ஒருவன் தன்னைத்தானே பார்த்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறான். இதனால், அவனுடைய பொறுப்புணர்வு கூடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையல்லவா?

அப்படியென்றால்,வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத்தினால் தீமைகளே இல்லையா? நிச்சயமாக இருக்கின்றன. சில மாணவர்கள் ஓரிரு நாட்களுக்கு வெளிநாட்டு மாணவர்களுடன் தங்கிவிட்டு அவர்களுக்குப் பிரச்சனைகளேயில்லாததைப் போல் நினைத்து அத்தகைய வாழ்க்கைமுறைக்கு ஏங்கத் தொடங்குகின்றனர். அவர்களைக் கண்டு பொறாமைபடுகின்றனர். நம் நாடும் வீடும் ஏன் இப்படியில்லை என்று நினைத்து அவற்றை வெறுக்கத் தொடங்குகின்றனர். இது அவ்ரகளில் கோபம், தாபம் ஆகியவற்றை ஏற்படுத்தி அவர்களின் மனங்களைக் கரையாக்குகின்றன.

நட்பு கிடைக்கலாமென்றேன். அதுவே, கூடாநட்பாகிவிட்டால்? கவனிக்க வேண்டிய விஷயம் இது. மேலும், சில மாணவர்கள் தவறான பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். அதிலும் மேல் நாட்டினரின் ஆபாசமான உடைகள், அபத்தமான செயல்முறைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டுவிட்டால்?

சரி அப்படியென்றால், இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுதான் என்ன? முதலில் பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்குப் பயனிக்கும் வகையில் இருக்கக்கூடிய வெளிநாட்டுப் பரிமாற்றத் திட்டங்களைச் செயல்படுத்துவது அவசியம். ஆனாலும், எவ்வளவுதான் பள்ளி நல்ல விதமாக முடிவெடுத்தாலும் அத்திட்டத்தை எவ்வகையில் பயன்படுத்துவதென்பது ஒவ்வொரு மாணவனின் கையில்தான் உள்ளது. பாலும் தண்ணீரும் கலந்த கலவையிலிருந்து பாலை மட்டும் பருகும் அன்னப்பறவையைப் போலிருக்க அவன் கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத் திட்டத்தினால் சிங்கப்பூர் மாணவர்கள் மிகவும் பயன்பெறுகிறார்கள் அதை ஒழுங்காகப் பயன்படுத்துவோருக்கு இத்திட்டம் முக்கனியாய் இனிக்கும் என்பது திண்ணம்.

(527 சொற்கள்)
சரண்யா சரவணன். SEC 4 HTL – 2008

குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...