Friday, April 16, 2021

சொற்பொழிவு - பேச்சுப் போட்டிகளுக்குச் சென்ற மாணவர்களுக்கு எழுதிக்கொடுத்த வரைவு

   தலைப்பு: சோதனைகளை வென்று சாதனைகளைப் படைப்போம் 

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் ________________ . நான் --------- உயர்நிலைப் பள்ளியைப் பிரதிநிதித்துப் பேசுகிறேன். இந்தச் சொற்பொழிவுக்கு நான் எடுத்துக்கொண்ட தலைப்பு  சோதனைகளை வென்று சாதனைகளைப் படைப்போம் என்பதுதான். 

   ஒரு சராசரி மாணவனுக்குத் தேர்வுதான்  சோதனை! இணையத்துக்கு அடிமையாகிப் போனப் பதின்ம வயதுப் பிள்ளையைத் திருத்தி மீட்பது பெற்றோருக்குப் பெரும் சோதனை. அண்மைய ஆண்டின்போது ஏற்பட்ட சார்ஸ் நம் நாட்டு மருத்துவ உலகுக்கு ஒரு சோதனை. 

சோதனைகள் இல்லாத வாழ்க்கை எங்கும் எப்போதும் இருந்ததில்லை. தருமனுக்குத் துரியோதனனின் சூதாட்ட அழைப்பு மூலம் சோதனை வந்தது. தருமம் முதலில் தோற்றது. இறுதியில் தருமமே வென்றது. அரியணை ஏற இருந்த ராமனுக்குக் கூனியால் தூண்டப்பட்ட கைகேயினால் சோதனை வந்தது. காட்டுக்குப் போனான். மனைவியை இழந்தான். எண்ணற்ற சோதனைகளயும் வேதனைகளையும் அனுபவித்தான். ஆனாலும், இறுதியில் தருமனும் சரி, இராமனும் சரி தமக்கு நேர்ந்த சோதனைகளை வென்றார்கள், சுடச்சுடரும் பொன்போல் திகழ்ந்தார்கள். இவ்விருவருக்கும் ஏற்பட்டவை  தனிமனித வாழ்வு சம்பந்தப்பட்டவைதான்.  

ஆனால், 1997 இல் நாம் நாடு பொருளியல் மெதுவடைதல் என்னும் சோதனையைச் சந்தித்தது. ஆனால், நம் நாட்டு அரசாங்கம், தொழிலதிபர்கள், ஊழியரணி என முத்தரப்பும் கை கோர்த்தன ;  திட்டங்களை வகுத்துச் செயல்பட்டன; நிலைமையை வெற்றிகரமாகச் சமாளித்தன. மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள். மீண்டும் நமது பொருளியல் வளர்ச்சி பீடு நடை போடத் தொடங்கிற்று. 

அடுத்ததாக மீண்டும் இப்போது 2009 இல் ஒரு பொருளியல் வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டிய நிலை. ஆனால், இப்பொருளியல் வீழ்ச்சி ஒரு சுனாமியைப் போல் உலகெங்கும் பல நிறுவனங்களைச் சுருட்டிப் போட்டுவிட்டது. உலக அளவில் பல நாடுகள் பாதிப்பை எதிர்நோக்குகின்றன. எனவே இம்முறை ஏற்பட்டிருக்கும் பொருளியல் வீழ்ச்சி சற்றுக் கடுமையானது. அது மக்களுக்குக் கொடுமை விளைவிக்கக் கூடும். ஆனால், கவலை வேண்டாம். ஏனென்றால், நம் நாட்டு அரசியல் தலைவர்கள், 

 “வருமுன் காவாதான் வாழ்க்கை எரி முன் 

  வைத்தூறு போல் கெடும்” என்பதை நன்கு உணர்ந்தவர்கள்.  

   அதனால், அவர்கள் தொலைநோக்கோடு சில நாடுகளை ஏற்கெனவே அணுகிப் பலதரப்பட்ட வாய்ப்புகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள். இது ஒரு புறமிருக்க அரசாங்கம் வேறு வகையிலும் இந்தச் சோதனையை முறியடிக்க முயல்கிறது. அதாவது அவசர காலத்துக்கான நிதி வைப்பிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்துப் பயன்படுத்த இருக்கிறது. அதன்காரணமாகப்  பல வேலை வாய்ப்புகள் உருவாகும். அதனால் குடும்பங்கள் மீண்டும் சந்தோஷக் காற்றைச் சுவாசிக்கும். இவ்வழியில் பொருளியல் சரிவு என்னும் சோதனையைச்  சமாளித்து  நம் நாடு மீண்டு வரும் என்பது உறுதி.  

   பொருளியல் சரிவு காரணமாகச் சுற்றுப்பயணிகளின் வருகை இவ்வாண்டு வெகுவாகக் குறைந்துவிட்டது. இது நமக்கு இன்னொரு சோதனைதான். அதற்காக நாம் அஞ்சவோ அரட்டவோ தேவையில்லை. ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் என்பார்கள். அதுபோல, அரசாங்கம் ஏற்கெனவே எடுத்த முயற்சியின் காரணமாக ஒருங்கிணைந்த   உல்லாசத் தளம் இவ்வாண்டின் இறுதியில் செயல்படத் தொடங்கும். நம்நாட்டுக்குச்  சுற்றுப்பயணிகளை ஈர்க்க  அது ஒரு புத்தம் புதுக் கவர்ச்சியாக விளங்¢கும். அதனால், பொருளியலுக்கு அது ஒரு ஊக்குவிப்பாக இருந்து உவகை தரும். ஓடாகத் தேய்ந்துபோன பிறைதான் வட்ட நிலவாக  நாளும் வளர்கிறது. மறைகின்ற சூரியன் தான் மறுநாள் காலையில் மீண்டும் புத்துணர்ச்சியோடு புறப்பட்டுவருகிறது. எனவே பொருளியல் சரிவு என்னும் சோதனையைச் சிங்கப்பூரர்களாகிய நாம் ஒன்றுபட்டு வெல்வோம். பொருளியல் வளர்ச்சியில் சாதனை படைப்போம். நன்றி வணக்கம்.  ( கும்பலிங்கம் உத்தமன்) 


************************************************************************

                      தலைப்பு:     விழிபோல் மொழி காப்போம் 


அ             அனைவருக்கும்  வணக்கம். என் பெயர் _____________________. நான்

­­­­­­­­­____________ உயர்நிலைப் பள்ளியைப் பிரதிநிதித்துப் பேசுகிறேன். இந்தச் சொற்பொழிவுக்கு நான் எடுத்துக்கொண்ட தலைப்பு விழிபோல் மொழி காப்போம். என்பதுதான்.

எந்தப் பெற்றோரும் குழந்தைகளை என்மூக்கே, என் நாக்கே என்று கொஞ்சமாட்டார்கள், கண்ணே கற்கண்டே என்று தான் கொஞ்சுவார்கள். ஏன்தெரியுமா? உடலுறுப்புகளில் விழிதான் அழகைப் பார்க்க, பருக  உதவுகிறது. அதுமட்டுமா! விழியே ஒரு அழகுதான் மானுடத்துக்கு. அதனால்தான் கவிஞர்கள் மான்விழி, மை விழி, சேல்விழி, வேல் விழி, வாள் விழி என்று விழியைப் பலபட விளித்துப்போந்தார்கள். இன்னும் சொல்லலாம். சொன்னால் என் வாய் வலிக்கும். பேச்சில் பொருட்குற்றம் என நீதிபதிகள் முகம் சுளிப்பார்கள்.  

 

சரி ஏன் மொழியை விழியைப் போல் காக்க வேண்டும். இப்போது அதற்கு என்னவாகிவிட்டது? என்று ஒரு கேள்வி உங்களுக்குள் எழலாம். நியாயம்தான். அடுக்குமாடிக் குடியிருப்பில் அண்டை வீட்டார் வேற்று மொழிக்காரர். பள்ளியில் பக்கத்திலிருந்து படிப்பவரோ பிற இனத்தவர். வேலை இடத்திலும் இதே நிலை. எனவே, தமிழ்ப் புழக்கம் குறைந்துவந்துவிட்டதாகப் புள்ளிவிவரங்கள் புகல்கின்றன. மக்களின் நெஞ்சு தமிழ் பேச  நினைக்கிறது. ஆனாலும் நா தமிழை உச்சரிக்க நாணுகிறது, நயம்பட நம் தமிழ் இருக்குமோ இருக்காதோ என்று நினைத்து. விளைவு என்ன? வீட்டில், விளையாட்டில், கட்டிலில், தொட்டிலில் எங்குமே மட்டாகவே ஒலிக்கிறது மதுரத் தமிழ்.

 “யாமறிந்த மொழிகளிலே இனிதாவது எங்கும் காணோம்” என்றார் பாரதியார். என்று மேடையில் முழங்கும் பிள்ளைகளும் சரி, அதைப் பேச்சுப் போட்டியில் பயன்படுத்த எடுத்துக் கொடுத்தவரும் சரி. ம்ம்... ‘ஒரு நாள் கூத்துக்கு மீசைய வச்சான் மேடையிலே’ என்பது போல அன்றோடு மறந்துவிடுகிறார்கள். இந்நிலை மாறி, தமிழுக்கு நன்னிலை உருவாகத்தான் பல்லாற்றானும்  கல்வி அமைச்சு முயன்று வருகின்றது.

 

அக்காலத்தில் மன்னர்கள்,  தமிழில் பொருள் நிறைந்த படைப்புகளைப் புனைந்த புலவர்களைப் போற்றினார்கள். புலவர்களுக்குப் பொன்னும் பொருளும் தந்தார்கள். மெய்சிலிர்க்க மெச்சினார்கள். அதன் பயனாக,  பலனாக உலகம் போற்றும் சங்க  இலக்கியங்கள் கிடைத்தன.  காலத்தை வென்று வாழும் திருக்குறள் முதலான நீதி இலக்கியங்கள் கிடைத்தன. இந்நூல்களின் அருமை பெருமைகளை இன்றைய இளையரும் வருங்காலத் தலைமுறையினரும் அறிந்துகொள்ள வேண்டும். அவை உணர்த்தும் தமிழரின் பண்பாட்டுக்கூறுகளை, பாரம்பரியங்களை,  விழுமங்களை, உணர்ந்து பின்பற்ற வேண்டும். உலகம் போற்றும் உன்னத சமுதாயமாகத் தமிழ்ச் சமூகம் வருங்காலத்திலும் விளங்க வேண்டும். இவையெல்லாம் நடந்தேற தமிழ்மொழியை விழிபோல் போற்ற வேண்டும்; புகழ வேண்டும்.  இல்லையென்றால்,  விழி இழந்த மனிதன் எத்தகயை இன்னல்களை அனுபவிப்பானோ அதுபோல, மொழியைத் தொலைத்துவிட்ட மனிதன் துன்பப்படுவான். துயரப்படுவான். அவன் தன் கலாச்சாரம் தெரியாமல், தனக்கென்று அடையாளம் இல்லாமல் அவதிப்படுவான்.    

 

சிங்கப்பூரில் தமிழை  வாழும்மொழியாகத் தொடர்ந்து வைத்திருப்பதில் அரசு தன் பங்கை ஆற்றிக்கொண்டு வருகிறது. தமிழ் முரசில் அன்றாடச் செய்திகளைத் தமிழில் தாங்கி மலரச் செய்திருக்கின்றது.  வானொலியில் இருபத்து நான்கு மணிநேரமும் தமிழை மெல்லிசையாய் ஒலிக்கச் செய்திருக்கிறது. தொலைக்காட்சியில் நெஞ்சை அள்ளும் நிகழ்ச்சிகளைப் படைக்க உதவியும் ஊக்கமும் அளித்துவருகிறது. சமூக அமைப்புகளும் போட்டிகள், சொற்பொழிவுகள், குடும்ப ஒன்று கூடல்கள் முதலான பல நடவடிக்கைகளை நடத்துகின்றன;  மக்களைத் தமிழ் மழையில் நனைவிக்கின்றன. மக்கள் மனதில் தமிழ் உணர்வைத் தழைக்கச் செய்கின்றன. இவற்றையெல்லாம் நாம் உணர்ந்து நாளும் வாய் மணக்க, நம் வாயிலும் மணக்கத் தமிழ் பேசுவோம்.  தமிழை நம் விழிபோல் காத்து வாழ வைப்போம். “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்வோம் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.   ( கும்பலிங்கம் உத்தமன்)



No comments: