Friday, April 16, 2021

கதாக் காலட்சேபம்

 

    அறிமுகம் 

 2002 ஆம் ஆண்டு யூசூன் டவுன் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தபோது. அப்பள்ளியில் தமிழ் பயின்ற மாணவர்களுக்குத் தமிழ்மொழி மற்றும் கலாச்சார முகாம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியபோது சிரவணன் கதையைக் கதாக்கலாட்சேபமாக எழுதி, நண்பர்கள் திரு மோகன் மற்றும் ஞானசேகரனுடன் படைத்தேன். சிரவணன் கதை சிரவணன் என்று ஒரு சிறுவன் இருந்தான். அவனது தாயும் தந்தையும் மிகவும் வயதானவர்கள்.அத்துடன் இருவரும் கண் தெரியாதவர்கள்.தங்களின் மகனின் உதவியில்லாமல் எந்த ஒரு வேலை யையும் செய்ய இயலாதவர்கள். நடக்க இயலாமலும் கண் தெரியாமலும் தவிக்கும் தன் பெற்றோருக்கு ஊன்றுகோலாகவும் கண்ணாகவும் இருந்தான் சிரவணன். இந்நிலையில் அவர்களுக்குத் தொலைதூரத்தில் உள்ள புனித நகரத்துக்குச் சென்றுவர வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. இதை அறிந்த சிரவணன் இரண்டு பெரிய பிரம்புத் தட்டுகளில் இருவரையும் அமரவைத்து அத்தட்டுகளைத் தராசு போல் அமைத்து அதைத்தன் தோளில் தூக்கிக் கொண்டான். வாலிப வயதை நெருங்கியவன் ஆனதால் சிரவணன் சிரமமின்றி தன் பெற்றோரைச் சுமந்து சென்றான். வெகு தூரம் நடந்து வேறு ஒரு காட்டுப் பகுதியை அடைந்தனர். சிரவணனின் தயார் நீர் அருந்தக் கொண்டுவருமாறு கூறினார். தந்தையாரும் தாகமாக உள்ளது எனக்கூறவே இருவரின் தாகத்தையும் நீக்க எண்ணினான். குடுவையில் நீர் காலியாக இருந்ததால் குளமோ கிணறோ அருகில் உள்ளதா எனத் தேடிச் சென்று நீர் கொண்டு வருவதாகக் கூறினான் சிரவணன்..விரைவில் வந்துவிடுமாறு கூறி அனுப்பிவைத்தனர் அந்த வயோதிகத் தம்பதியர். அவர்களை வணங்கி விடை பெற்றுப் புறப்பட்டான் சிரவணன். அந்தப் பகுதி அயோத்தி நகரைச் சேர்ந்தது. அயோத்தி அரசன் தசரதன். காட்டுவிலங்குகளின் துன்பத்திலிருந்து மக்களைக் காப்பதற்காக துஷ்ட மிருகங்களை வேட்டையாட தசரதன் கானகம் வந்திருந்தான். மாலைநேரம். இருள் லேசாகக் கவிந்து கொண்டிருந்தது. மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான் மன்னன். அவன் அருகே மிருகம் ஒன்று தண்ணீர் குடிப்பதுபோல சத்தம் கேட்டது. மன்னன் துள்ளி எழுந்தான்.தன் வில்லில் நாணைத் தொடுத்தான். வில்லிலிருந்து அம்பு புறப்பட்ட மறுகணமே "அம்மா !" என்ற அலறல் குரல் கேட்டது. மனிதக் குரலைக் கேட்ட மறுகணம் மன்னன் திடுக்கிட்டான். குரல் வந்த திசை நோக்கி ஓடினான். அங்கே சிரவணன் அம்பு பட்டு வீழ்ந்து கிடந்தான். அவனிடம் தசரதன் மன்னிக்குமாறு வேண்டினான். தவறு நேர்ந்துவிட்டது என்று புலம்பி அழுதான். அவனைத் தடுத்த சிரவணன், "அரசே! என் பெற்றோர் வனத்தில் தாகத்தால் தவித்தவாறு உள்ளனர். அவர்களிடம் நான் இறந்த செய்தியைச் சொல்லாமல் அவர்களை நீர் அருந்தச் செய்துவிடுங்கள். பெற்ற தாய் தந்தையரின் நீர் வேட்கையைத் தீர்க்காமல் சாகிறேன் .நீங்கள் அவர்களின் மகனாக இருந்து அவர்கள் தாகத்தைத் தீர்த்து விடுங்கள். இதுதான் என் கடைசி ஆசை."என்று கூறிவிட்டு இறந்தான். சிரவணன் கூறியது போல் நீரை எடுத்துக்கொண்டு அவன் பெற்றோர் இருக்குமிடம் நோக்கிச் சென்றான் தசரதன். குரலைக் காட்டாமல் நீரை அந்த வயோதிகத் தாயிடம் கொடுத்தான். தசரதனின் கை பட்டதுமே "யார் நீ?" என்று சத்தமிட்டாள் அந்தத்தாய். இருவரும் "எங்கள் மகன் எங்கே? நீ ஏன் வந்தாய்? எங்கள் மகனுக்கு என்னவாயிற்று?" என்று அழுது புலம்பினர். அதைத் தாங்காத தசரதன் தான் தவறாக அம்பெய்திய காரணத்தால் சிரவணன் மாண்ட செய்தியைக் கூறினான். புத்திர சோகம் தாங்காத அந்தப் பெற்றோர் "ஏ! மன்னா! நாங்கள் மகனை இழந்து தவித்து உயிர் விடுவது போலவே நீயும் எத்தனை புத்திரர்களைப் பெற்றாலும் யாரும் அருகே இல்லாமல் புத்திர சோகத்தாலேயே உயிர் விடுவாய். இது எங்கள் சாபம் " என்று சபித்துவிட்டு உயிர் விட்டனர். பின்னாளில் இந்த தசரதன் ராமனை வனவாசத்திற்கு அனுப்பிவிட்டு புத்திரசோகத்தில் ஆழ்ந்து துன்பப்பட்டான். பரதனும் சத்ருக்னனும் கேகயநாடு செல்லவும் ராம இலக்குவர் வனம் ஏகவும் தசரதன் தனிமையில் தவித்து பின் உயிர் விட்டான். நல்லோர் சொல்லுக்கு வலிமை உண்டு.பெற்றோரை தெய்வமாக எண்ணி அவர்களுக்கு அன்புடன் சேவை செய்து வந்த சிரவணன் பண்பால் பெருமை பெற்றான். அவன் பெற்றோரின் சாபம் பலித்துவிட்டது. எனவே பெற்றோரிடம் நாம் ஆசிபெற என்றும் அவர்களை வணங்க வேண்டும்.  

                        கதாக் காலட்சேபம்

தலைவர்: முன்னொரு காலத்திலே பாரத தேசத்திலே ஒரு கிராமத்திலே சரவணன் சரவணன்னு ஒரு இளைஞன் இருந்தான்.

குழுவினர்: ஆமாம். ஆமாம். இருந்தான்.

தலைவர்: சரவணனுக்கோ ஒரு குறையுமில்ல. ஆனால், அவனோட வயதான பெற்றோருக்கோ கண் இரண்டும் தெரியாது. அதனால, சரவணன்தான் அவாளுக்குப் பணியாள், பக்க துணை எல்லாம்.

இப்படி இருக்கையில ஒரு நாள் அவனோட பெற்றோருக்கு ஒரு ஆசை வந்துச்சு.

சின்ன சின்ன ஆசை. சிறகடிக்கும் ஆசை. முத்து முத்து ஆசை. முடிஞ்சு வைச்ச ஆசை.

குழுவினர்: என்ன ஆசை  சொல்லுங்கோ

தலைவர்: காசி, ராமேஸ்வரம் போகனும்னு ஆசை. அதை மெதுவா சரவணன் காதுல போட்டாங்க. சரவணனுக்கோ பெத்தவங்களோட ஆசையை நிறைவேத்தனுமேன்னு கவலை. சிந்திச்சான்... சிந்திச்சான்.. ராத்திரியெல்லாம் சிந்திச்சான்.  விடிய காலையிலே வீட்டுப் பின் பக்கம் போனான். ஒரு பெரிய மூங்கில் கம்பை எடுத்தான்.

குழுவினர்: அடடா என்னன்னா? பெத்தவாளா அடிக்கப் போறானா?

தலைவர்: அபிஷ்டு. அபிஷ்டு .. பெரிய கம்ப எடுத்து, அதுல முன்னாலயும் பின்னாலயும் ஒவ்வொரு பெரிய கூடைய வெச்சு கட்டினான். அந்தக் கூடைக்குள்ள அவா ரெண்டு பேரையும் தூக்கி  ஓக்கார வெச்சான். கிளம்பிட்டான் காசிக்கு.. 

எப்படி புறப்பட்டான் தெரியுமோ?

தலைவரும் குழுவினரும்:

ஈஸ்வரா வானும் மன்னும் கேண்ட் சேக் பண்ணுது 

உன்னால் ஈஸ்வரா!

நீரும் நெருப்பும் பிரண்ட்ஷிப் ஆனது

உன்னால் ஈஸ்வரா

மயிலையிலே கபாலீஸ்வரா

கயிலையிலே பரமேஸ்வரா

அப்படின்னு பாடிண்டே புறப்பட்டான்.


குழுவினர்: ஆமாம் ஆமாம் பாடிண்டே புறப்பட்டான்.

தலைவர்: சரவணனோ வயசால சின்னப் பையன். ஆனாலும் மனசால பெரியவன்... பெரியவன். குணத்தால சிறந்தவன். ஆகையினாலே  காடு, கோடு, புல், மலை,மழை, ஆறு, வாய்க்கால், குளம், குட்டை இப்படி எல்லாத்தையும் கடந்து நடந்தான். ஆனால், பையன் கொஞ்சங்கூட அலுக்கலை, அசரல, அதாவது  He never grumble lha.

குழுவினர்: ஏன்னா? அந்தப் பையனுக்கு எங்கேயும்  தடங்கல் வரலியோ?

தலைவர்: வந்துது. வந்துது. வராம  இருக்குமோ?

        அப்போல்லாம் என்ன பண்ணுவான் தெரியுமோ?

        வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா

        தடைக்கல்லும் உனக்கு ஒரு படிக்கல்லப்பா

என்று பாடிக்கொண்டே போவான். அப்படி போய்க்கிட்டிருக்கிற வழியில, வழக்கம்போல ஒரு காடு வந்துச்சு.  அந்தக் காட்டு வழியா போய்க்கிட்டிருந்தான். அப்போ அப்பாவும் அம்மாவும் குடிக்க தண்ணி வேணும்னு கேட்டாங்க.  சரவணன் உடனே, அவா ரெண்டு பேரையும் கீழே உட்கார இறக்கி உட்கார வெச்சுட்டு தண்ணி கொண்டு வரப்போனான்.

குழுவினர்: எப்படின்னா புறப்பட்டான்?

தலைவர்: புறப்பட்டான் வீர நடை கொண்டு புறப்பட்டான்

        வெற்றி நடைகொண்டு புறப்பட்டான்.

நடந்தவன் ஒரு நீரோடையை அடைந்தான். கையில் இருந்த சொம்பைத் தண்ணீருக்குள் அமுக்கினான். தண்ணீர் சொம்புக்குள்ள பப். பட் என்ற pubbling sound ஓடு நிறைஞ்சது. அப்போ. அந்தக் காட்டுல ஒரு மரத்துக்குப் பின்னால, மறைஞ்சிருந்தான் ஒரு மக்கு ராஜா. மட சாம்பிராணி ராஜா. அவன், ஏதோ விலங்கு தான் தண்ணி குடிக்குதுனு தப்பா நினைச்சுட்டான். எடுத்தான் வில்லை. விட்டான் அம்பை.

ஆ.. அம்மா. என்ற சத்தத்தால் காடே அதிர்ந்தது. ஓடின மான்கள் மருண்டு நின்றன. பறந்த பறவைகள் பதறி சிறகடித்துக்கொண்டன.

குழுவினர்: அடடா! என்ன ஆச்சு? என்ன? ஆச்சு

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி

சோதனை மேல் சோதனை.

அம்பி சரவணன் அம்பு தாக்கினதால குற்றுயிரும் குறையுயிருமாய் விழுந்தான்.

ராஜா ஓடோடி வந்தான். பையனைத் தூக்கினான்? நீ யாரப்பா? நீ யாரப்பா? என் இங்கு வந்தப்பா? ன்னு  கேட்டான். பையன் நடந்ததை எல்லாம் சொன்னான். 

நானொரு முட்டாளுங்க. நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க.

நானொரு முட்டாளுங்க நானொரு முட்டாளுங்க

என்று அரற்றியபடி அரசன் பையனிடம் அவனோட கடைசி ஆசை என்னன்னு கேட்டான்.  பையன் தன் பெற்றோரின் தண்ணீர் தாகத்தைச் சொன்னான். அவர்களின் புனிதப் பயணத்தை நிறைவேத்தி வைக்கச் சொன்னான்.  பொசுக்குன்னு உயிரையும் விட்டான்.

ராஜா ஆறா மனத்துயரோடு சரவணின் ஆசைகளை நிறைவேற்ற உத்தரவிட்டான்.

இத்தோட கதை முடியறது. இதுவரைக்கும் காதுகொடுத்துக் கதை கேட்டவாளுக்கும். என்னோட கதை சொன்னவாளுக்கும் நன்றி. நன்றி.

தலைவரும் குழுவினரும்:

வாழிய வாழியவே!

சரவணன் நாமம்

வாழிய வாழியவே வாழியவே!

வாழிய வாழியவே வாழியவே!

*********************************

No comments: