Friday, April 16, 2021

முன்னாள் மாணவர்களின் ( 1998- 2002) கட்டுரைகள்

  உன் மனத்தைப் பாதித்த ஒரு கசப்பான சம்பவம்.

முன்னுரை

மனித வாழ்க்கையில் நாம் எல்லோரும் நிச்சயமாக ஏதாவது கசப்பான அனுபவத்தைக் கடந்து வந்திருக்கலாம். கசப்பான அனுபவம் என்று குறிப்பிடும்போது அச்சம்பவம் நம் மனத்தைப் பாதித்து இருக்கலாம். பலர் வாழ்க்கையில் அச்சம்பவம் பெரும் அளவில் பாதித்திருக்கும். மற்ற சிலர் வாழ்க்கையில் சிறிய அளவில் பாதித்து இருக்கும். 

கசப்பான அனுபவம் அல்லது சம்பவம் என்று கூறும்போது , நிறைய குறிப்பிடலாம். என் பதினைந்து வருட வாழ்க்கையில் , என்னைப் பெரிதும் பாதித்த ஒரு கசப்பான அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். இச்சம்பவம் என்னையும் பால் வடியும் முகம் கொண்ட என் அன்புத் தம்பியையும் பற்றியது.

அன்று புனிதமான வெள்ளிக் கிழமை , நான் குட்டிபோட்ட பூனை போல மருத்துவமனையில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன். ஏனென்றால் எனக்குத் தம்பி பாப்பா பிறக்கப் போகிறான். களிப்பு என்னும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். எனக்குக் காலும் ஓடவில்லை. கையும் ஓடவில்லை.எனக்கென்று ஒரு தம்பி வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை.

 என் தம்பி எப்படி இருப்பான்  என்று கனவு என்னும் உலகில் தத்தளித்தேன். கண்மூடி கண் திறப்பதற்குள்ளாகக் குழந்தை அழும் சத்தம் என் காதில் ஒலித்தது. தாதி ஒருவர் என்னை என் தாயார் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார். உள்ளே நுழைந்ததும் நான் என் அம்மாவிடம் பசுவைப் பார்த்த கன்றுக் குட்டிபோல ஓடினேன். என் தந்தை, என் தாயார்  இருக்கும் இடத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். என் அம்மா பக்கத்தில் ஒரு அழகான குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் அதை பார்த்துக் கொண்டிருந்தபோது குழந்தை தான் என் தம்பி என்று நினைவுக்குத் தோன்றியது. நான் என் தம்பியை அன்பாக தூக்கி அவனை அணைத்தேன்.

நாங்கள் நால்வரும் வீட்டிற்குத் திரும்பினோம் .அன்று முதல் நான் என் தம்பியைக் கண்ணை இமை காப்பது போல காத்து வந்தேன். பள்ளி முடிந்து வந்தவுடன், முதல் வேலை நான் என் தம்பியோடு விளையாடுவேன்.  அவனின் கண்கள் நட்சத்திரம் போல் மின்னின.பெயர் சூட்டும் விழாவில் என் தம்பிக்கு `தேவராஜ்` என்ற பெயரைச் சூட்டினோம்.

நாட்கள் கடந்து ஓடின. என் தம்பி  மழலை மொழியில் பேசத் தொடங்கினான்.  அதை கேட்கக் கேட்க நான் எப்பொழுதும் மெய்மறந்து நிற்பேன்.

ஆண்டுகள் பல கடந்தன. என் தம்பி பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான். அவன் படிப்பில் நன்கு விளங்கினான். எல்லோரும் பாராட்டியபடி அவன் பெயர் வாங்கினான். படிப்பு உயர உயர அவன் வகுப்பில் குன்றின் மேலிட்ட விளக்குப் போல தோன்றினான். அதைப் பார்த்து நான் மிக பெருமை அடைந்தேன்.ஒரு நாள் என் தம்பிக்காக ஆசையாகக் காத்துக் கொண்டிருந்தேன். காரணம் அன்று அவனின் பதினொன்றாவது ஆண்டு பிறந்த நாள். அவன் எங்களிடம் ஆசையோடு கேட்ட நாய்க்குட்டியோடு வாசற்படியில் நின்று கொண்டிருந்தேன்.

மணி சுமார் பிற்பகல் இரண்டாயிற்று . அவன் ஒன்றறைக்கெல்லாம் வீட்டில் இருப்பேன் என்று கூறினானே இன்னும் காணவில்லையே என்று என் மனம் பதறியது. என் தாயர் ஒரு பெரிய பரிசுப் பொருள் ஒன்றை வாங்கி வந்தார்.  ``தேவா இன்னும் வரவில்லையா ? `` என்று ஒரு புன்னகையோடு கேட்டார். நான் தலையசைத்தவாறு `` இன்னும் வரவில்லை`` என்றேன். 

மணி  மூன்றாயிற்று நான் என் அம்மாவிடம் கூறாமல் நான் என் தம்பியின் பாடசாலைக்கு விரைந்து ஓடினேன். என் தம்பியின் தோழன் ஒருவன் அங்கே இருந்தான். அவனிடம் விசாரித்தேன். என் தம்பி ஒரு மணிக்கெல்லாம் சென்று விட்டான் என்று என் தலையில் குண்டு ஒன்றை போட்டான். அவன் வீட்டிற்கு வரும் பாதையில் மனம் ``படபட`` வென்று அடிக்க ஓடினேன். ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு கட்டடக் கீழ்த்தளத்தில் பெருங்கூட்டம் நின்றுகொண்டிருந்தது. நான் வேதனையோடு அங்கே சென்றேன். கூட்டத்தில் வளைந்து நெளிந்து நுழைந்தேன்.நான் கண்ட காட்சி என் தலையில் இடி விழுந்தாற்போல இருந்தது. காரணம், கள்ளம் கபடமில்லாத பிஞ்சு உள்ளம் கொண்ட என் தம்பி இரத்தக் கடலில் மிதந்து கொண்டிருந்தான். நான் அவனின் அருகில் சென்று கதறிக்கதறி அழுதேன். என் தம்பியை யாரோ கொலை செய்து விட்டான் என்ற செய்தி கேட்டவுடன் என் மனம்  சுக்கு நூறாக உடைந்தது.

சிறிது நேரத்தில்  மருத்துவமனை வண்டி என் தம்பியைக் கொண்டு சென்றது..நான என் கைத் தொலைபேசியில் என் தந்தைக்குத் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறினேன். நான் வீட்டிற்கு அழுதுகொண்டே சென்றேன். என் அம்மா அங்கே வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்தார். ` எப்படி சொல்லப்போகிறேன்` என்று திருதிருவென்று விழித்தேன். என் தந்தை கண்கலங்கியவாறு வீட்டை அடைந்தார். என் அம்மாவிடம் நடந்ததைக் கூறினார். என் அம்மாவும் நானும் கதறி அழத் தொடங்கினோம்.

நாங்கள் மருத்துவமனையை அடைந்ததும் மருத்துவர் என் தம்பி இறந்து விட்டான் என்று மொழிந்தார். என் தம்பி இருக்கும் அறைக்குச் சென்றோம். அவன் பரிதாப நிலையில் இருந்தான். நான் அவனை அணைத்து அழுதேன். என் செல்லத் தம்பிக்கு  இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தோம். என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

நாட்கள் பறந்தோடின. என் வீடு அமைதியாக இருந்தது. நான் என் தம்பியின் ஆசை நாய்க்குட்டியைப் பார்க்கும்போதெல்லாம் கண்ணீர் விடுவேன். `` ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ`` என்ற பழமொழி என் நினைவுக்கு வரும்.

என்னால் பல வாரங்கள் படிப்பில் கவனஞ்செலுத்த முடியவில்லை. என் தம்பியின் குரல், சிரிப்பு என் காதில் தினமும் ஒலித்துக்கொண்டேயிருகும். என் தம்பியின் இறப்பு என்னை மிகவம் பாதித்தது. இது தான் என் கசப்பான அனுபவம் என்று மன வருத்தத்தோடு கூறுகிறேன்.

முடிவுரை

நமக்கு எந்தக் கசப்பான நிலை வந்தாலும் நாம் அதை கனவு என்று நினைத்து மறந்து விடவேண்டும். நாம் அதையே நினைத்துக் கொண்டிருந்தால் நம் வாழ்க்கை பாதிக்கப்படால்ம. நம் வாழ் நாள் மிகவும் குறைவு. எனவே நாம் அதை நல்வழியில் செலுத்த வேண்டும்.     (சுந்தரவள்ளி   Sec 4  )


  **************************************************************

அறிவை வளர்க்க இணையத்தை) விட நூலகமே மாணவர்க்குப் பொருத்தமானது - கருத்துரை

``கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே`` என்று நம் முன்னோர் கல்வியின் அருமை குறித்துக் கூறிச் சென்றதை நாம் கேட்டிருக்கலாம். நம் மாணவர்கள் படிப்பதற்கு இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். `` காற்று உள்ள போதே தூற்றிக் கொள்ளவேண்டும். ``இக்கால மாணவர்கள் தாங்கள் கற்றது போதாது என்று சிறுவயதிலேயே அறிந்து கொள்கின்றனர். ``கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு`` அல்லவா?

ஆகையால் அவர்கள் தங்கள் பள்ளிப் பாடங்களை மட்டும் படிக்காமல் வேறு இடங்களிலிருந்தும் தங்கள் பாடங்கள் தொடர்பான  செய்திகளைத் திரட்டுகின்றனர். இக்கால மாணவர்கள் தங்களுக்குத் தேவையான செய்திகளை இணையத்திலிருந்தும் நூலகத்தில் இருக்கும் புத்தகங்களிலிருந்தும் சேகரிக்கின்றனர்.இவ்வழியில் செய்திகளைச் சேகரிக்கும்போது அவர்கள் அவற்றில் இருக்கும் நன்மை தீமைகளை நன்கு ஆராய வேண்டும்.

 

நூலகத்திற்குச் செல்வது ஒரு மிகச்சிறப்பான நடவடிக்கை. அறிவை வளர்க்க வேண்டும் என்றால் நூலகம் ஒரு மிகப் பெரிய உதவியாக இருக்கிறது. பாடப்புத்தகங்கள் முதல் தினசரி செய்தித் தாள் வரை அங்கி¢ருக்கும் புத்தகங்கள் பற்பல.நூலகங்களை ஒரு புத்தகக் கடல் என்று வர்ணிக்கலாம். அங்கு சென்றால் நமக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்கும். நம் பொது அறிவு உலக சஞ்சிகைகள் படிக்கப் படிக்க அதிகரிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. ஆகவே பொது அறிவைச் செலவில்லாமல் வளர்த்துக் கொள்ள நூலங்கள் தூண்களாக இருக்கின்றன.

 

இணையம் என்ற வார்த்தையைக் கேட்டதும் பலருக்குப் பல எண்ணங்கள் ஆசைகள். இணையம் மற்றொரு களஞ்சியம். அதில் இல்லாத விஷயங்களே இல்லை என்று கூறலாம். பொது அறிவையும் , கல்வி அறிவையும் வளர்த்துக்கொள்ள அது மிகவும் துணையாக இருக்கின்ற காரணத்தினால் அதை இக்காலத்தில் மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

 

நூலகத்தில் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் இணையத்தில் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் வேற்றுமைகள் பல. நூலகத்திற்குச் செல்லும்போது நடந்து சென்றால் உடல் உறுதியாகும். `` உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே `` என்று திருமூலர் கூறினார். நீண்ட நாட்கள் வாழ்ந்தால் தான் நாம் நிறைய விசயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் , இணையத்தில் அறிவை வளர்த்துக் கொண்டால் நம் கண்களுக்கும், நம் உடம்பிற்கும் கெடுதல் விளையலாம்.

 

நூலகம் செல்வது ஒரு விலை மலிவான நடவடிக்கை ஆகும். புத்தகங்களை அமைதியான சூழ்நிலையில் படிக்க அங்கே பல வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இப்பொழுது அதிக அளவிலான நூலகங்கள் நம் வீடமைப்புப் பேட்டைகளில் இருக்கின்றன. ஆகவே சென்று வரும் செலவும் மிச்சம். ஆனால், இணையத்தில் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் கணினி வாங்க வேண்டும்,அதற்கு இணைய சேவை வாங்க வேண்டும், என பல செலவுகள். ஆகவே, நம் அறிவை வளர்க்கச் சிக்கனமான வழி நூலகத்திற்குச் செல்வது தான்.

 

இணையம் பலருக்கு ஒரு தகவல் பரிமாற்றக் கருவியாக பயன்படுகிறது. ஒரு மாணவர் செய்யும் ஆராய்ச்சியை வெளிநாட்டு மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு இணையத்தில் வசதி உண்டு. ஆனால் நூலகத்தில் இது இல்லை.

 

இணையத்தில் தகவல்கள் மட்டும் இல்லாமல் பல விசயங்கள் இருக்கின்றன. விளையாட்டுத் தளங்கள், ஆபாசதளங்கள் உள்ளன. வேடிக்கைத் தளங்கள் என்று பல தளங்கள் உள்ளன. இவற்றிற்கு மாணவர்கள் தற்செயலாகச் சென்றாலும் அவர்களுடைய மனம் படிப்பதலிருந்து திசை திரும்பி விடும். ஆனால், செய்திகளை  உடனுக்குடன் இணையத்தில் மட்டுந் தான் பார்க்க முடியும். குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போல இல்லாமல் நம் மாணவர்கள் அவ்வப்போதைய சம்பவங்கள் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் தங்கள் எண்ணங்களைச் சிதைக்கும் பக்கங்களுக்குச்  சென்று தங்கள் நேரத்தை வீணாக்கக் கூடாது. காலம் பொன் போன்றது அல்லவா?

தங்கள் அறிவை வளர்க்க மாணவர்கள் இணையத்தையும் நாடவேண்டும். நூலகங்களுக்கும் செல்ல வேண்டும். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அவர்கள் இருந்தால் அறிவை வளர்க்க முடியாது.முயற்சி எடுத்தால் தான் அறிவை வளர்க்க முடியும். முயற்சி திரு வினையாக்கும்.

( கலைச் செல்வன். 3 E) 

********************************************************************** 

சிங்கப்பூரில் தைப்பூசத்திருநாள் கொண்டாட்டத்தின்போது  நீ வழக்கமாகக்   காணும் காட்சிகளை விவரித்து எழுதுக.   

Note: இந்துக்கள் அல்லாத மாணவர்கள் விரும்பினால் படிக்கலாம்.  விருப்பமில்லை என்றால் விட்டுவிடலாம்.

முன்னுரை

தைப்பூசத் திருநாள் சிங்கப்பூரில் பல்லாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒவ்வோர் ஆண்டும் , நான் என் குடும்பத்தினரோடு ஸ்ரீ தண்டபாணிக் கோயிலுக்குத் தைப் பூசத்திருநாளைக் காணச் செல்வேன்.  

பாடல்கள் வரவசப்படுத்தும் காகண்களுக்கு விருந்தளிக்கும்

     `` வேல் ! வேல் ! வெற்றி வேல் ! `` என ஒரு  கூட்டத்தினர் ஒரு மூளையில் பாடிக்கொண்டே காவடிகளோடு நடந்து வர, இன்னொரு மூளையில் `` கந்தனுக்கு  அரோகரா, முருகனுக்கு அரோகரா `` என்று பஜனைக் குழுக்கள் கைகளில் மேள தாள வாத்தியங்களோடு இசைத்து வருவர். பக்தி மிக்க இப்பாடல்களைக் கேட்கும்போது காதுகளுக்கும் மனத்திற்கும் இன்பமாகவும் இனிமையாகவும் இருக்கும். பலநாள் விரதம் இருந்து வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்களுக்கும் இப்பாடல் பலம் கொடுக்கும். பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி என பல்வேறு காவடிகளைக் காணும்போது என் கண்களையே என்னால் நம்ப முடியாது. அழகுக்கு அழகூட்டும் விதத்தில் சில காவடிகளில் முருகளை வரைந்திருப்பார்கள் மயில் வாகனத்தில் அமர்ந்திருக்கும் கந்தனைக் காண என் கண் இரண்டு போதாது.

கூட்டமும் குழந்தைக

கோயிலுக்குச் செல்லும் வழியில் மிக கூட்டமாக இருக்கும். நான் என் தந்தையாரின் கரத்தை இருக்கமாகப் பிடித்துக் கொள்வேன். சில நேரங்களில்  குழந்தைகள் சிலர் கூட்டத்தில் தொலைந்து போயிருப்பார்கள். இதனால் சில பெற்றொர்களின் முகத்தில் ஈ ஆடாது. பதற்றமும் பயமும் அவர்கைளப் பற்றிக் கொள்ள கதிகலங்கிய நிலையில் கண்களில் கண்ணீர் மல்க, வருவோர் போவோர் அனைவரிடமும் தங்களின் காணாமல் போனக் குழந்தைகளைப் பற்றி விசாரிப்பர். காவல் அதிகாரிகள் இப்பெற்றோருக்கு உதவி செய்வார்கள். ஒலிப் பெருக்கியில் இக்குழந்தைகளைப் பற்றி அறிவிப்பு செய்வர்.

சின்னஞ்சிறு கடைகள்

கோயிலுக்குச் செல்லும் பாதையில் சில வயதான முதியோர்கள் வளைகள், சாமிப்படங்கள், திரு நீர் போன்ற பல பொருட்களை நடைபாதையின் வழியின் ஓரமாக  அமர்ந்தபடி விற்றுக் கொண்டிருப்பார்கள். சில சின்ன கூடாரங்களினுள் மங்கையர்  சிலர் வடை, பாயசம், லட்டு, இட்லி, தோசை மற்றும் பல தின்பண்டங்களையும் குளிர்பானங்களையும் பசியுடையோர் வாங்கி புசிப்பதற்காக விற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்களின் உயவுப்பொருள்களின் வாசனை கமகமவென்று மூக்கைத் துளைக்கும்.

பஞ்சாமிர்தம்

நினைக்கவே எனக்குப் பசிக்கிறதே .எனக்கு மிகவும் பிடித்தது பஞ்சாமிர்தம்.பக்தர்கள் பலரும் தங்களுடைய நேர்த்திக் கடன்களை முடித்த பின்னர் பஞ்சாமிர்தத்தை வழிபட வந்திருப்போரிடம் வழங்குவர். `` ஆசை வெட்கம்அறியாது `` என்று கூறுவர் .நான் கூச்சப்படாமல் நிறைய பஞ்சாமிர்தத்தை வாங்கி உண்ணுவேன்.வாழைப்பழத்தால் செய்யப்பட்ட இந்த பஞ்சாமிர்தம் மிக இனிப்பாக இருக்கும்.

முருகனின் சன்னிதானம்

முருகனின் சன்னிதானத்திற்குள் மக்கள் கூட்டம் அலைமோதும். முட்டி மோதி தான்  கடவுளைக் காண இயலும். மக்கள் நடமாட்டத்தைச் சுலபாக்குவதற்காக பல  தடுப்புக் கம்பிகள்  காவல் அதிகாரிகளால்  போடப்பட்டிருக்கும். இவை ஒரு சில நிமிடங்களுக்கு நாம் முருகளைக் கண்டு வணங்க உதவும் . அதன் பின் நம்மை ஓட ஓட விரட்டி விடுவர் கடமையைச் செய்யும் கண்ணிய காவலர்கள். என் அன்பு வேலனைக் கண்டதே எனக்குக் கிடைத்த  அதிர்ஷ்டம் என நினைத்துக் கொண்டு நான் என்னைத் திருப்தி படுத்திக் கொள்வேன். காவடிகளுடன்  பக்தர்கள் முருகனின் முன் நின்று சில நிமிடங்களுக்குப் பாட்டு தாளத்துக் கேற்றபடி ஆடுவார்கள். காவடிகளைச் சில  பக்தர்கள் சுழற்றும் விதத்தைக் காண அழகாக இருக்கும். சதங்கை ஒலி `` ஜல் ஜல் `` என்று ஒலிக்க என் கால்களும் தன்னை மறந்து தாளம்போடும் . எனக்கும் ஆட ஆசையாக இருக்கும்.

முடிவுரை

ஒவ்வொரு வருடமும் நான் காணும் காவடிகள் வேறு வேறு வகையில் அலங்கரிக்கப் பட்டிருக்கும். நிறைய மயில் தோகைகள், இறகுகள் கொண்டும் , வண்ண வண்ண மாலைகள் கொண்டும் , விதவிதமான பூக்கள் கொண்டும் காவடிகள் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன.  முத்து மணிகளும் மாலைகளும் , முருகனின் புகைப்படங்களும் , வரைபடங்களும்  கூட அலங்காரத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் நான் கேட்கும் பாடல்களும் காணும் வாத்திய இசைக்கருவிகளும் கூட நவீன காலத்திற்கு ஏற்றபடி மாறி வருகின்றன. இவையே சிங்கப்பூரில் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டத்தின் போது நான் வழக்கமாகக் காணும் காட்சிகள் ஆகும். எது எப்படி இருந்தாலும் நான் தைப்பூசத்திருநாளில் கோயிலுக்குச் சென்று பெரும் உவகை அடைகின்றேன். நான் மட்டுமல்ல கடவுளை வணங்கும் அனைவருக்கும் மனத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெருகி இருக்கும்.   (மு. இராஜி 3 )

                                             


No comments: