Friday, September 22, 2023

தொழில்நுட்பக் கருவிகளில் உள்ள செயலிகள் நம்மிடையே சோம்பேறிகள் பெருகுவதற்குக் காரணமாக உள்ளன. கருத்துரைக்க.Aravinthan Yathuri - 205 - 2023

சமீபத்தில், ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் அனைத்து செயல்களைச் செய்யக்கூடிய அளவிற்கு நம் சமுதாயம் முன்னேற்றம் அடைந்துள்ளது. அக்காலத்தைப் போல சிரமப்பட்டு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லவோ மற்ற நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமது நண்பர்களையும் உறவினர்களையும் தொடர்புக்கொள்ளவோ தேவையில்லை என்பதால் நமது அன்றாட வாழ்க்கை சுலபமாகிவிட்டது. ஆனால், அதே சமயத்தில் நம்மிடம் பெரும்பாலும் குறைவான வேலைப்பளு இருப்பதால் குறைந்த சுறுசுறுப்புடன் நமது வேலைகளைச் செய்கிறோம். ஆகவே, தொழில்நுட்பக் கருவிகளில் உள்ள செயலிகள் நம்மிடையே சோம்பேறிகள் பெருகுவதற்குக் காரணமாகவுள்ளது என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறேன். // கோவிட்-19 கிருமித்தொற்றின்போது அனைவரும் வெளியே சென்று உணவுகளை உணவகங்களில் வாங்கமுடியாமல் இருந்ததால், “டெலிவரூ”, “கிரப்” போன்ற உணவு விநியோக செயலிகள் மூலம் உணவுகளை வாங்க ஆரம்பித்தனர். அனைவரிடமும் அந்தச் செயலிகள் பிரபலமானதால் மக்கள் அதிகமாக அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினர். வீட்டிலிருந்து வேலை செய்தவர்களுக்கும் இது நல்ல வசதியாக இருந்தது. கொவிட் 19 காலங்கள் கடந்த பின்னரும் மக்கள் இந்தச் செயலிகளை இன்னும் அதிகமாக நாடுகின்றனர் என்றே கூறலாம். இன்றைய நாட்களில் தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்துவதில் உள்ள ஆர்வம் மற்றைய விடயங்களில் குறைவாகவே உள்ளது. தொழில்நுட்பக் கருவிகளில் உள்ள செயலிகளின் பயன்பாட்டால் சோம்பேறிகளாகியவர்கள் உணவு வாங்க அருகில் உள்ள உணவுக் கடைகளுக்குக் கூடச் செல்லத் தயங்குகின்றனர் மற்றும் சமையல் செய்வதில் ஈடுபாடும் காட்டுவதில்லை. சிலர் நேரமின்மையால் இவ்வாறு செய்தாலும், பெரும்பாலான மக்களுக்கு அந்த வசதி பழகியதால் உணவை உணவு விநியோகம் செய்யும் செயலிகளை அணுகி வாங்குகின்றனர். இதனால், வீட்டிற்கு வெளியே நடந்து சென்று சுமார் ஐந்து நிமிடங்களில் உணவகத்திலிருந்து உணவை வாங்குவதைவிட வெளியே செல்லாமல் வீட்டிலிருந்தே உணவை வாங்க அதிகமாக விரும்புகின்றனர். இதனால், வெளியே உணவை வாங்குவதற்கு நடந்து செல்வதிலிருந்தும் வீட்டிலே தங்களுக்குப் பிடித்த உணவைத் தாங்களே சமைப்பதிலிருந்தும் கிடைத்த உடற்பயிற்சியும், சுறுசுறுப்பும் இன்று இவர்களிடம் காணவில்லை. உணவுச் செயலிகளின் பொத்தான்களை அமுக்கியதும் சுமார் அரை மணி நேரத்தில் தங்களுக்குப் பிடித்த உணவு வீட்டு வாசலில் கிடைப்பதால் இவர்கள் சுறுசுறுப்பின்றிச் சோம்பேறிகளாக மாறுகின்றனர். // உணவு விநியோகம் மட்டுமின்றி, பல்வேறு பொருட்கள் இணையத்தில் வாங்கித் தங்கள் வீடுகளுக்கே விநியோகம் செய்தலும் கோவி-19 கிருமித்தொற்றால் பரவலானது. இரண்டு மாதங்களாக மக்கள் எந்தக் கடைக்கும் சென்று பொருட்களை வாங்கமுடியாமல் இருந்ததால், “ஷொப்பீ”, “லசாடா” போன்ற செயலிகள் அவர்களின் தேவைகளை நிறைவேற்றின. இன்றும் இதுபோன்ற செயலிகள் சிங்கப்பூரில் மக்கள் பலரால் பயன்படுத்தப்படுகின்றன. மக்களிடையே பிரபலமைந்துள்ளன என்றே கூறலாம். சிங்கப்பூரில் இருந்துகொண்டு மற்ற நாடுகளில் விற்கப்படும் பொருட்களையும் இந்தச் செயலிகள் மூலம் வாங்கக் கூடியதாகவுள்ளது. விரைவாகவும் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், அதே சமயத்தில், கணினிக்கு முன்னால் இருந்து பிடித்ததையெல்லாம் சுலபமாக வாங்குவதையும், எக்கச்சக்கமான பொருட்களை உடனடியாக பார்ப்பதையும் நிறைய மக்கள் விரும்புவதால், அவர்கள் அதிகமாக பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்லாமல் தங்களது கணினிகளையோ திறன்பேசிகளையோ தான் நாடுகின்றனர். அதனால் தேவையில்லாத பொருட்களை வாங்கும் நிலை ஏற்படுகிறது. அருகிலிருக்கும் கடைக்குச் சென்று அங்கிருக்கும் மின்விளக்கையோ திரைச்சீலைகளையோ வாங்காமல், அதற்கும் பொருள் வாங்கும் செயலிகளை நாடுகின்றனர். இதனால் இவர்கள் சோம்பேறிகளாகியது மட்டுமில்லாமல் உள்ளூர் வியாபாரங்களுக்கும் சரிவு ஏற்படுகிறது. சிறிய வேலைக்கும் செயலிகளைச் சார்ந்து வாழ்கின்றனர். // புத்தகம் வாசிப்போர் பலர் கோவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் நூலகங்களுக்குச் சென்று அங்கே நேரம் செலவழித்து தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை இரவல் வாங்க முடியாமல் இருந்ததால் “லிபி” பொன்ற செயலிகளை நாடிப் புத்தகங்களை வீட்டிலிருந்தே இரவல் வாங்க நேர்ந்தது. இதனால், நூலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமும் குறைந்தது. இன்று பலர் தமது திறன்பேசிகள் மூலமாகவே தாங்கள் வாசிக்க விரும்பும் புத்தகத்தை இரவல் வாங்குகின்றனர். ஆனால், வீட்டிலிருந்தே தங்களது கருவிகளின் மூலம் புத்தகத்தை வாசிப்பது இம்மக்களுக்கு வசதியாக இருந்தாலும், அதே புத்தகத்தைக் கைகளில் பிடித்துக்கொண்டு நூலகத்தில் வாசிப்பதன் அழகை இவர்கள் மறக்க ஆரம்பிக்கின்றனர். வசதிக்காகவே நூலகங்களின் அருமையை மறந்து அதற்காக வெளியே செல்லவேண்டுமே என்ற நோக்கில் சோம்பேறிகளாகி இவர்கள் வீட்டிலேயே இருந்து புத்தகங்களை வாசிக்கின்றனர். // மேலும், நண்பருடைய வீட்டிற்குச் செல்லவோ உடற்பயிற்சி செய்ய உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்லவோ பெரும்பாலானோர் நடந்து செல்கின்றனர். அல்லது பொது போக்குவரத்து எடுக்கின்றனர். ஆனால், சமீபத்தில், “க்ரேப்” போன்ற வாடகை உந்துவண்டிச் செயலிகளால், ஐந்து நிமிடங்களில் நடந்து ஓரிடத்திற்குச் செல்லாமல் அதிகமான மக்கள் தங்களது காசையும் வீணாக்கி உடற்பயிற்சி நேரத்தையும் குறைத்து வசதிக்காக வாடகை உந்துவண்டிகளையழைத்து அதில் பயணம் மேற்கொள்ள ஆரம்பிக்கின்றனர். நல்லக் காற்றைச் சுவாசித்து உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் நடைப்பயிற்சியில் ஈடுபடாமல், அது தங்களைச் சோர்வடையச் செய்யும் என்றெண்ணி உந்துவண்டியில் உட்கார்ந்து தங்களது பணத்தை விரமாக்குகின்றனர். உடல் வலுவையும் இழக்கின்றனர். இவ்வாறு செய்வதால் நடக்கக்கூட இவர்களுக்குச் சோர்வாக இருக்கும். அந்தளவுக்குச் சோம்பேறிகளாக மாறிவிடுவார்கள். ஆரோக்கியமான உணவு, நல்ல உடற்பயிற்சி இரண்டும், இரண்டு கண்கள் போன்றவை. இந்தத் தொழில்நுட்ப செயலிகளால் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்ற பொன்மொழியையும் மறந்துவிட்டனர். // கடைசியாக, நிறைய மாணவர்கள் இன்று தமது வீட்டுப்பாடங்களுக்கும் ஒப்படைப்புகளுக்கும் “ச்சேட் ஜீபீதீ” என்ற செயலியை அணுகுகின்றனர். இதனால் அவர்களது வேலைப்பளு குறைவதோடு தமது பாடங்களைச் சுலபத்துடன் செய்கின்றனர். ஆனால், இதனால் இம்மாணவர்கள் தாங்களே சொந்தமாக யோசித்து விடையளிக்கச் சோர்வடைகின்றனர். தங்களிடம் உள்ள ஆக்கப்பூர்வமான யோசனைகளைத் திரட்டாமல் ஏற்கனவே எல்லா ஆலோசனைகளையும் கொண்ட இச்செயலிகளை நாடுகின்றனர். இதனால், இவர்களுடைய ஒப்படைப்புகள் தங்களது தனி முயற்சியில்லாமல் போய்விடுகிறது. தனித்தன்மையும் இல்லாமல் போகிறது. தேர்வுகளின்போதும் யோசித்துத் தமது சொந்த பதில்களை எழுதச் சிரமப்படுகின்றனர். ஆகவே, 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா' என்ற பொன்மொழிக்கேற்ப இன்று செய்யச் சோம்பல்படும் செயல்கள் நாளை நடக்கா.// ஆகவே, பெரும்பாலான மக்கள் தங்களின் திறன்பேசிகள், கணினிகள் முதலிய தொழில்நுட்பக் கருவிகளில் இருக்கும் செயலிகளின் மூலம், உணவை வாங்குவதற்கும், பொருட்களை வாங்குவதற்கும், புத்தகங்களை இரவல் வாங்குவதற்கும், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கும், செயலியை அணுகி விடைகளைத் திரட்டுவதற்கும் செயல்படுவதால், அவர்கள் இன்னும் சோம்பேறிகளாகத்தான் மாறுகின்றனர். இச்செயலிகளில்லாமல் இவர்களால் சுறுசுறுப்புடன் ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது. ஆகையால், தொழில்நுட்பக் கருவிகளில் உள்ள செயலிகள் நம்மிடையே சோம்பேறிகள் பெருகுவதற்குக் காரணமாகவுள்ளது என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறேன்.

Sunday, September 17, 2023

சிங்கப்பூரில் அதிக இயற்கை வளங்கள் இல்லாததால், அண்டை நாடுகளோடு எச்சூழலிலும் நமது நாடு சுமூகமான உறவை கட்டிக் காக்க வேண்டியுள்ளது. கருத்துரைக்க. சுசித்தா மணிகண்டன் ( 406 - 2023)

மனிதர்களாகிய நாம் கோவில் கோபுரத்தில் உள்ள சிறப்பும் வனப்புமிக்க கலசத்தையும் தான் பெரும்பாலும் ரசிப்போம். ஆனால், அக்கலசம் நூறடி உயரத்தில் கம்பீரமாக நிலைத்து நிறக காரணமாக உள்ள தூண்களையும் அடித்தளத்தையும் மறந்துவிடுகிறோம். மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கப்பூர், இன்று வையகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதற்கு அடிப்படைக் காரணம், அண்டை நாடுகளுடன் நாம் கொண்டுள்ள வலிமையான உறவே ஆகும். பூப் பூத்திட வேண்டுமாயின் வேர்கள் நீர் ஈர்த்திட தான் வேண்டும். அதுபோல், வளங்கள் இல்லா சிங்கப்பூர் செழிப்புற வேண்டுமானால் நம் அண்டை நாடுகள் துணை புரிய வேண்டும். ஆக , சிங்கப்பூரில் அதிக இயற்கை வளங்கள் இல்லாததால், அண்டை நாடுகளோடு எச்சூழலிலும் நமது நாடு சமூகமான உறவைக் கட்டிக் காக்க வேண்டியுள்ளது எனும் கூற்றை நான் திணை அளவும் ஐயம் இன்றி ஏற்கிறேன். அண்டை நாடுகளை மலேசியா இந்தோனேசியா போன்ற ஆசியான் நாடுகளாக காணலாம். சுமூகமான உறவு என்பதே சண்டை, சச்சரவு, கசப்புகள் இல்லாத இரு வழி உறவாக எடுத்துக் கொள்ளலாம். இதை மனதில் கொண்டு தண்ணீர், மின்சாரம், வர்த்தகம் ஆகிய மூன்று மேலோட்டமான பார்வைகளில் ஆராய்வோம். // முதலில், தண்ணீர். சிங்கப்பூரில் நியூ வாட்டர் (NeWater), தண்ணீர் தேக்கங்கள் போன்ற அமைப்புகள் இருந்தாலும், இவை நமது தண்ணீர் தேவையில் 50% கீழே தான் பூர்த்தி செய்கின்றன. ஆகையால் தண்ணீர் வளத்திற்கு நாம் பெரும்பாலும் மலேசியாவைத் தான் நம்பி உள்ளோம். சுற்றிலும் கடல் இருக்கும் ஒரு தீவாக இருந்தாலும், தண்ணீர் வளம் என்பது நம்மிடம் குறைவே. இவ்வடிப்படைத் தேவையின்றி சிங்கப்பூரர்கள் யாவரும் எவ்வாறு இயங்குவார்கள்? இதுபோன்று ஒரு இன்றியமையாத வளத்திற்கு நாம் மலேசியாவை சார்ந்திருப்பதால், மலேசியாவுடன் சுமூகமான உறவைக் கட்டிக்காப்பது அவசியமானதாகும். “வரும் முன்னர் காவாத்தான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்” என்பது அன்பு வள்ளுவரின் கூற்று. அதாவது, பிரச்சனையோ துன்பமா வருவதற்கு முன்பே எச்சரிக்கையுடன் தன்னை காத்துக் கொள்ளாதவனின் வாழ்க்கை தீமுன் உள்ள வைக்கோல் போர் போல் கெடும். ஆக தண்ணீர் பற்றாக்குறை என்று ஓரு சவால் ஏற்படுவதற்கு முன்னரே நாம் எச்சரிக்கையாய் செயல்பட வேண்டும். கவனித்துகொள்ளலாம் என்ற மனப்போக்குடன் அண்டை நாடுகளோடு வளர்த்துள்ள உறவினை துண்டித்துக்கொள்வதோ அவ்வுறவுக்கு ஆபத்துண்டாக்குமாறு நடந்து கொள்வதோ சாமர்த்தியமல்ல. அது நமது தலையிலேயே மண்ணை வாரி கொட்டிக்கொள்வது போன்றதாகும். // அடுத்து மின்சாரப் பற்றாக்குறை. மின்சாரம் என்பது அனைத்து சேவைகளுக்கும் அடிப்படையான தேவையாக அமைகிறது. சாலையில் உள்ள விளக்குகளிலிருந்து வீட்டில் ஆகாரம் சமைக்க பயன்படுத்தும் அடுப்பு வரை அனைத்தும் மின்சாரத்தை நம்பியே உள்ளன. அலுவலகங்கள், பள்ளிகள், வீடுகள் என அனைத்தும் இயங்க மின்சாரம் தேவை. அத்தகைய மின்சார வளமும் சிங்கப்பூரிடம் போதுமான அளவில்லை. இதற்கும் நாம் மலேசியா, இந்தோனேசியா, லாவோஸ் போன்ற அண்டை நாடுகளை நம்பித்தான் உள்ளோம். அண்டை நாடுகளுடன் உள்ள நல்லுறவு என்பது மிகவும் வலிமையானதாகும். அதற்குக் கற்பாரையையும் ஒரே நொடியில் ஈர மண்ணாக்கும் திறன் உண்டு. சிங்கப்பூர் முழுவதும் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் மின்சாரம் செலுத்த இவ்வளவு உதவிக்கரம் நீட்டுகிறது. இது இல்லையேல் இரவில் வெளிச்சம் இருக்காது, பகலில் குளிர்ச்சி இருக்காது. ஆனால், இது தான் பிரச்சனை. முழு சிங்கையும் இயங்க நாம் அண்டை நாடுகளை நம்பி உள்ளோம் என்றால் அவர்களுடனான உறவு எவ்வளவு முக்கியமானது? உறவுகள் என்பது மெல்லிய நூலில் கோர்க்கப்பட்ட மல்லிப் பூப் போல். சற்று இறுக்கிக் கட்டினால் , பூ கசங்கிவிடும். அதனால், உறவுகளைக் கவனமாக கட்டி காப்பது என்பது அவசியமானது. அன்று நம் முன்னாள் பிரதமர் கூறியது போல் “அண்டை நாடுகளுடன் நாம் கொண்டுள்ள நல்லுறவே நமது பலம்.” இவ்வுறவு சுமூகமாக இல்லையேல் அண்டை நாடுகள் நம்முடன் பகிர்ந்து கொள்ளும் வளங்களை துண்டிக்கும் . இது நமக்குப் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, மலேசியாவில் ஏற்பட்ட கோழி குறைவால் சிங்கப்பூருக்குக் கோழிகள் அனுப்புவதை ரத்து செய்தபோது, பலரும் அவர்கள் விரும்பி உண்ணும் சிக்கன் ரைஸ் போன்ற பாரம்பரிய உணவுகளின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டனர். கோழிக்கே இந்நிலை என்றால் மின்சாரத்திற்கு? // அடுத்து, சிங்கப்பூர் ஒரு வர்த்தகமையமாக அமைந்திருப்பது. இயற்கை வளம் இல்லாத நாம், வர்த்தகத்தின் மூலம் தேவையான பொருட்களை ஈட்டுவதோடு உற்பத்தி சேவைகள் இல்லாமலும் பொருளாதார ரீதியாக பயன் பெறுகிறோம். வெட்டப்படாத, பொலிவில்லாத வைரத்தை தோண்டி, வெட்டி, பட்டைத் தீட்டி, பளபளப்பாக்குவது போல் எவ்விதமான வளங்களும் இல்லாத நம் நாட்டை செழிப்புறச் செய்தது வர்த்தகமே. வர்த்தகமும் அண்டை நாடுகளுடன் கொண்ட உறவுகளும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டது. நீரின் உயரத்திற்கு ஏற்ப பூவின் தாளுடைய உயரம். அதேபோல நம் உறவுகளின் ஆழம் அளவே, நமது வர்த்தகமும். “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு” என்பது வள்ளுவரின் மற்றொரு கூற்று. ஆக ஒரு செயலைப் புரிவதற்கு முன் நன்கு ஆராய்ந்து நடக்க வேண்டும். அண்டை நாடுகளோடு கசப்பினை உண்டாக்கிக் கொண்டால், பிற்காலத்தில் அது சிறியதாக இருந்தாலும் நம்மை பாதிக்கக்கூடும். ஏனெனில், நாடுகளுக்கு இடையே உண்டாகும் கசப்பு எளிதில் தீர்க்கக்கூடியது அல்ல. தவிர, வர்த்தகம் சிங்கப்பூர் பொருளாதரத்திற்கு பில்லியன் கணக்கில் உதவுகையில், அதனை தொடர்ந்து கட்டிக்காப்பது அவசியமாகும். அண்டை நாடுகள் நட்புடன் இருப்பதால்தான் மின் சாதனங்கள், காய்கறிகள், விளையாட்டுப் பொருள்கள் போன்ற எக்கச்சக்க பொருள்களை நம்மிடம் வர்த்தகம் செய்கின்றன. இசசுமுகமான உறவு இல்லையேல், வளம் இல்லாத நாம் கரை காணா கப்பலாக திண்டாடத்தான் வேண்டும். ஆக கலங்கரை விளக்கமாக திகழும் இவ்வுறவே பாதுகாப்பது, இன்றியமையாதது. // ஆனால், வேறு சிலரோ அனைத்துச் சூழல்களிலும் இயற்கை வளங்கள் இல்லாத ஒரே காரணத்தால் நமது அண்டை நாடுகளுடன் நாம் சுமூகமான உறவை கட்டிக்காக வேண்டுமா என வினவலாம். அந்நாடு அதர்மம் வழியில் செயல்பட்டுக் கொண்டிருந்தால்? அந்நாடு நமக்குத் தீங்கு நினைத்திருந்தால்? எடுத்துக்காட்டாக, ரஷ்ய நாடு உக்ரேனின் மீது போர் தொடுத்த போது, உலக நாடுகள் அனைத்தும் அந்நாட்டிற்கு எதிராயினர். ஏனென்றால், அவர்களது செயல் மனிதநேயமும் நியாயமும் இன்றி அமைந்தன. இது போன்ற சூழலிலும் சமூகமான உறவினை கட்டிக்காப்பது அவசியமா? பாரதியார் கூறியபடி, ரௌத்திரம் பழக வேண்டுமா? எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமா? என்னை பொறுத்தவரையில், வேண்டும்தான் ஆனால் எல்லையை மீற லாகாது. ரஷ்யா போன்ற பெரும் நாடுகள் மின்சாரம் போன்ற துறைகளில் அதிகம் வளம் கொண்டவை. ஆனால் அவற்றின் செயல்களை நாம் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக நடுநிலையை நாம் எடுத்துக்கொள்ளலாம். இது அண்டை நாடுகளுக்கும் பொருந்தும். அண்டை நாடுகளோடு பகையை உண்டாக்குவதற்கு மாறாக பிரச்சனைகளை ஒன்று கூடிப் பேசித் தீர்க்க வேண்டும் அல்லது நடுநிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். இது சுமூகமான உறவு இல்லை என்றாலும் பகையையாவது தவிர்க்கலாம். // சுருங்கக்கூறின், தண்ணீர், மின்சாரம், வர்த்தகம் போன்ற அடிப்படை மற்றும் அவசியமான துறைகளில் நாம் அண்டை நாடுகளை நம்பி இருப்பதாலும் உறவுகள் எளிதில் இதனை பாதிக்கும் என்பதாலும் தனி நாடாக சிங்கப்பூரால் இயங்க இயலாது என்பதாலும் அண்டை நாடுகளோடு எச்சூழலிலும் நமது நாடு சமூகமான உறவைக் கட்டிக்காக வேண்டியுள்ளது என்பதே என் ஆணித்தரமான கருத்து. நாட்டின் வளர்ச்சி என்பது ஒரு ஏணியை கட்டுவது போன்றதாகும். வெறும் ரம்பமும் கயிறும் இருந்தால் ஏணி கட்ட இயலுமா? சுத்தியல், ஆணிகள், கட்டைகள் போன்ற எண்ணற்ற பொருள்கள் தேவை. அவற்றுக்காக வேறொரு ஆசாரியிடம் நம் பொருள்களை இரவல் பெறத்தான் வேண்டும். சண்டையிட்டோ மரியாதையின்றியோ பொருள்களைக் கேட்டால் அவை கிடைக்குமா? சமூகமாக அன்புடன் வினவினால் தான் கிட்டும். இயற்கை வளம் இல்லாத நிலையிலும் “யார் என்ன சொன்னாலும் யார் என்ன செய்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்” என்பதைப்போல நாம் அண்டை நாடுகளுடன் கொண்டுள்ள நல்லுறவே நமக்கு உதவிக் கரம் நீட்டும். மண்ணுக்கடியில் உள்ள விதை போராடி வெளிவந்து செழிப்பான செடியாக உருவெடுக்கத் தண்ணீர், மண், சூரிய வெளிச்சம் என நிறைய தேவைகள் உண்டு. அதுபோல், இயற்கை வளம் குறைவாக இருக்கும் நம் நாட்டின் வளர்ச்சிக்குச் சமூகமான அண்டை நாடு உறவுகளும் அவசியமே… ~ முற்றும் ~

Wednesday, September 13, 2023

சொற்பொழிவுக் கட்டுரை - தலைப்பு: ‘ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் இளைஞர்களின் கைகளில் தான் உள்ளது’ - இனியா கொண்டாரெட்டி - Year 4 - 2023

இங்குக் கூடியிருக்கும் அவையோர் அனைவருக்கும் எனது முத்தமிழ் வணக்கங்கள். நீங்கள் எப்போதாவது உலகத்திலுள்ள பல நாடுகளை ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்களா? சில நாடுகள் வெற்றி கண்டு வளர்ச்சி அடைந்துள்ளன. மற்றவை சிலபல காரணங்களால் பின்தங்கியுள்ளன. ஆனால் இந்நிலைமை கூடிய சீக்கிரமே மாறவுள்ளது. ஒவ்வொரு நாட்டின் எதிர்காலமும் ஒரு சிலரின் கைகளில் தான் இருக்கிறது. யார் இந்த ‘சிலர்’? ஆம், அது சரி: இளையர்கள் தான்! அவையிலுள்ள அனைத்து இளையர்களும் பெருமையுடன் கையை நன்கு உயரமாகத் தூக்குங்கள் பார்க்கலாம், சிறப்பு! இன்று நான் ஒரு நாட்டின் எதிர்காலம் ஏன் அதன் இளையர்களின் கைகளில் தான் உள்ளது என்பது குறித்து உரையாற்றவிருக்கிறேன். // உங்கள் மனதில் என்ன கேள்வி உள்ளது என்று எனக்குத் தெரியும். “ நான் ஒரு சாதாரணமான குடிமகன் தான், நாட்டின் எதிர்காலம் என் கையில் உள்ளதா?” ‘ தனிமரம் தோப்பாகாது’ என்பதற்கு ஏற்ப தனியாக இருக்கும்போது நாம் ஒருவர், ஆனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் கூடினால் ஒரு நாட்டின் சதித்திரத்தையே எழுதலாம். நம் சமுதாயத்தில் பெரியவர்கள் எப்போதும் இளையர்களின் அறியாமையையும் அலட்சியத்தையும் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், சமுதாய வளர்ச்சிக்கு முக்கிய கருவியாக அமையப்போவது இளையர்கள் தான்! ‘ இளமை வாழ்வின் அறிவு பெருவினை யார்க்கும் தெரியாது’ என்று நம் மூதாதையர்களே பாராட்டி எழுதியுள்ளனர். இப்போது, என் நிலைப்பாட்டுக்கான காரணங்களைக் குறிப்பிடுகிறேன். // முதலாவதாக, இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்! ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அஸ்திவாரமே அரசாங்கம் தான். ஒரு நாட்டின் முகமாக அமைந்து, நாட்டு மக்களுக்கு வெற்றிப் பாதையைக் காட்டுவதே ஒரு தலைவனுக்கு அழகு. அரசியல்வாதிகள் அனைவரும் உண்மையாக, வெளிப்படையாக, நேர்மையுடன் நாட்டின் நலன் கருதிச் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். இன்னும் சில வருடங்களில் இன்றைய அரசியல்வாதிகள் ஓய்வு பெற, இச்சவாலைச் சமாளிக்கப் போவது நீங்கள் தான் இளையர்களே. கடந்த தலைமுறையை விட, நம் இளைஞர்கள் தலைமைத்துவத்தில் ஒரு படி மேலே இருப்பார்கள் என நான் திண்ணமாக நம்புகிறேன். ஏன் என்று கேட்கிறீர்களா? உங்களில் எத்தனை பேர் பள்ளியில் ஒருமுறையாவது தலைவராக இருந்திருக்கிறீர்கள் எனக் கேட்டால் அனைவரும் கைகளை சட்டென்று மேலே உயர்த்துவீர்கள்! இதுதான் காரணம்; பள்ளியில் தலைமைத்துவத்தைக் கற்கவும் அதை அனுபவிக்கவும் இன்று ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அது மட்டுமா, இளையர்களிடம் புதிய உற்சாகமும் தைரியமும் தெரிகின்றது. ஒரு செயல் தவறு என்று எதிர்த்து கூற மனதில் அச்சம் இருக்காது இன்றைய இளையர்களுக்கு. உதாரணத்திற்கு, இன்று ஊழலில் ஈடுபட்டிருக்கும் பலரைத் தட்டிக் கேட்பவர்கள் இளைஞர்கள் தான். இளைஞர்களின் புதிய சிந்தனைகளும் புத்தாக்கமும் முற்போக்கான சமூகத்தை உருவாக்கும். இளைஞர்கள் மாற்றங்களை உண்டாக்க செயலில் இறங்குவர், பதவியை விரும்பி செயல்படுவதைவிட மக்களுக்குச் சேவை செய்வர். அதாவது, பல வருடங்களுக்கு மாற்றப்படாத பழைய சட்டங்களை இன்றைய சமூகத்திற்கு ஏற்ப மாற்றியமைப்பது நாட்டின் அமைப்பை நல்வழியில் மாற்றும். அத்துடன், கண்ணாடியை போலவே வெளிப்படையாக, ஒளிவுமறைவின்றி நடந்து கொள்வர். ‘பிறருக்கு உரைப்பாய்வு ஆகா இறைவன் அறிவர் ஆகும் அறிவு’ என்ற முத்து முத்தான எழுத்துகள், மக்களுடைய கருத்துக்களைப் புரிந்து கொள்வது தான் புத்திசாலியான தலைவருக்கு அழகு என்ற அர்த்தத்தை கொண்டுள்ளன. இளைஞர்களின் தலைமையில் பல குடிமக்கள் அரசியலில் பங்கேற்பர். தங்களுய கருத்துக்களை பகிர்வதும் பொறுப்பாக தேர்தலில் பங்கேற்பதும் குடிமக்களுக்கும் அரசாங்கத்துக்கும் உள்ள இணைப்பை வலிமையாக்கும். // இரண்டாவதாக, இளையர்கள் சமூக பிரச்சினைகளில் அதீத அக்கறையைக் காட்டுகின்றனர். பள்ளியில் கட்டாயத்துக்குச் செய்து வரும் சமூக சேவை வளர வளர பழக்கமாகவே மாறிவிடுகிறது. பலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவி அல்லது பொருள் உதவி செய்கின்றனர். சிலர் செஞ்சிலுவை சங்கத்தைப் போன்ற இலாப நோக்கமற்ற நிறுவனங்களில் தொண்டூழியம் மேற்கொண்டு சமூகத்திற்கு திருப்பிக் கொடுக்கின்றனர். இந்த முயற்சிகளால் சமத்துவத்தையும் நாட்டில் உதவும் கலாச்சாரத்தையும் நாட்டு நிம்மதியையும் நிலவச் செய்யலாம். இதன் மூலம் நாடு வளரும்- மக்களின் மகிழ்ச்சியும் வாழ்க்கைத் தரமும் மேம்படும். இதற்கு கரெட்டா தன்பர்கைச் சிறந்த உதாரணமாக குறிப்பிடலாம். இளமைப் பருவத்திலேயே பருவநிலை மாற்றத்தை குறைக்க, அனைவரும் பள்ளிக்கு செல்ல, அவர் ‘ வெள்ளை மாளிகைக்கு’ சென்று அரசியல்வாதிகளுடன் பேசினார். இளைஞர்களிடம் உள்ள தைரியத்தையும் உலக பிரச்சனைகளின் மீதான அக்கறையையும் அவர் பிரதிபலிக்கின்றார். இவரைப் போலவே, நம் சிங்கையின் இளையர்கள் கோவிட்-19 நிலையில் சிறு சிறு வழிகளில் நாட்டுக்குச் சேவையாற்றினர். அதைத் தவிர்த்து, சிலர் மற்ற நாடுகளுக்கு பயணித்து இயற்கைப் பேரிடருக்குப் பின்னர் உதவியிருக்கின்றனர். சுற்றுச்சூழல், ஏழ்மை, ஆண்-பெண் சமத்துவம் முதலான பல சிக்கல்களைக் கவனித்து குறைந்தவசதி படைத்தோருக்குக் குரல் தருகின்றனர். இதன்மூலம் வாழ்க்கைகளையும் நாட்டையும் மேம்படுத்துகின்றனர். அன்பு, பரிவு போன்ற பண்புகளை வெளிப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்களா, அனைவரும்? சிறப்பு. // மூன்றாவதாக, இளைஞர்களே, உங்கள் பெற்றோர் உங்களை அதிகமாக கண்டிப்பது எந்தச் செயலுக்கு? ஆமாம், நாம் அனைவரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு தான்! ஆனால், இந்த தொழில்நுட்பம் நமது எதிர்காலத்துக்கு உதவியாக அமையும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஒரு சொடுக்கால் செய்தியை உலக மக்களிடம் பரவச் செய்யலாமே, சமூக ஊடகங்களின் மூலம். விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மக்களை செயல்படுத்தவும் இது மிக பயனுள்ளதாக அமையும். அதுமட்டுமின்றி, தலைவர்கள் பிற நாடுகளில் நடந்தவற்றை அறிவதன்மூலம் தங்களுடைய நாட்டில் என்ன செய்யலாம், எவ்வாறு அதைப்போன்ற அசம்பாவிதத்தை தடுக்கலாம் என்று சிந்திப்பார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியை நல்லதுக்கு பயன்படுத்த இளைஞர்கள் மருத்துவம், அறிவியல் முதலிய பல துறைகளை வளர்க்கலாம். நாட்டின் வளர்ச்சி அதிகரிக்க, வாழ்க்கைத் தரமும் மேம்படும். தொழில்நுட்பத்துடன் புதிய உருவாக்கங்களை தேவையானபோது பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு, ஆப்பிரிக்காவில் ஒரு இளைஞர் குழு வெள்ளம் வரும்போது அனைவரிடமும் செய்தி பரப்ப ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியது. இளைஞர்களின் அறிவு, பற்று மற்றும் புத்தாக்கத்தை இது காட்டுகிறது அல்லவா? // அடுத்ததாக, விளையாட்டு மற்றும் கலைகளைக் கவனிப்போம். சமீபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த திருமதி சாந்தி பெரெரா ஓட்டப்பந்தயத்தில் சிங்கையைப் பிரதிநிதித்து பல சாதனைகளைப் படைத்துவந்துள்ளார். நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவரைப் போலவே பல இளைஞர்கள் தங்களுடைய நாட்டுக்கு எதிர்காலத்தில் பெருமைச் சேர்ப்பார்கள். இளைஞர்கள் கலைகளிலும் விளையாட்டிலும் உள்ள தங்களது ஈடுபாட்டை தங்களுடைய திறனாக மாற்ற பல வாய்ப்புகள் உள்ளன. இன்றைய சமுதாயம் பிடித்ததைப் படிக்காதே, எதிர்காலத்தில் அதிகம் சம்பளம் அளிக்கும் படிப்பைப் படி என்று சொல்கிறது. ஆனால், இந்த போலி சந்தோஷத்தை விட்டுவிட்டு இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமானதைச் செய்வதால் நாட்டுக்குப் பெருமையை வாங்கி தரலாம். // கடைசியாக, கல்வி. உங்களில் எத்தனை பேர் கல்வியின்று ஒரு நாடு வெற்றியடைய முடியாது என்று நம்புகிறீர்கள்? உங்களுக்குக் கிடைத்த கல்வியை அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டு செல்லுங்கள்! நீங்கள் அனைவரும் தான் உங்களது நாட்டின் தூண்கள் என்பதை மறவாதீர்கள். தலைவர்கள், சேவை செய்யுங்கள்! அனைவரும் சமுதாயத்தில் பண்புகளை வளர்க்க சமூக பிரச்சினைகளில் ஈடுபடுங்கள்! மேலும், உங்களுடைய அறிவை வளர்த்து, தொழில்நுட்பத்தின் உதவியால் நாட்டை மேம்படுத்துங்கள்! நாட்டை பிரதிநிதித்து வென்று வாருங்கள்! // ‘ஒரு நாட்டின் எதிர்காலமே உங்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் தான் உள்ளது!’ என்று கூறி எனது உரையை முடிக்கிறேன். அனைவருக்கும் நன்றி. வணக்கம்.

சொற்பொழிவுக் கட்டுரை - நான் மதித்துப் போற்றும் தமிழறிஞர் டாக்டர் மு வரதராசனார்

தமிழறிஞர் — டாக்டர் மு வரதராசனார் ஸ்மிருதி ச ஐயர் – Year 3 – 2023 “உன்னுதிரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆயிரம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!” என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வரிகளுடன் உங்கள் அனைவரையும் வணங்குகிறேன். நமது செம்மொழியின் நீடித்த நிலைதன்மைக்கும் வளர்ச்சிக்கும் அல்லும் பகலும் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த பேராசிரியர்கள் பலர்; அவர்களில் சிலர் மட்டுமே தமிழர்களின் மனத்தில் மறைந்தும் மறையாமல் வாழ்கின்றனர். அவர்களில் ஒருவரான டாக்டர் மு வரதராசனார் அவர்களைப் பற்றியே இன்று நான் பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன். இருபதாம் நூற்றாண்டின் பெரும்பாலன தலைசிறந்த தமிழாசிரியர்களைப் போலவே டாக்டர் மு வரதராசனார் ஏராளமான பதவிகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார் — அவை அனைத்தையும் நான் இப்போது கூறினால், அன் வாய்தான் வலிக்கும்! ஆனால், பல கல்வியறிவு பெற்ற ஆசிரியர்களிடம் இன்றும் காணப்படாத உயர்ந்த விழுமியங்கள் அவரிடம் காளப்பட்டன; அவரின் வாழ்வு முழுவதும் அவரிடம் காணப்பட்ட கடின உழைப்பும் எல்லையில்லா உதவும் மணப்பான்மையும் அவரை முன்னேற்றத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றன. ‘மு.வ.’ என்ற செல்லப்பெயரைப் பெற்ற டாக்டர் மு வரதராசர், ஆயிரத்து தொள்ளாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு ஏப்ரல் இருபத்தைந்து அன்று, எளிய குடும்பத்தில் பிறந்தார். இவ்வாறு அதிக பணமோ உதவியோ இல்லாமல் வளர்ந்த ஒருவர் எவ்வாறு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் தலைசிறந்து விளங்கி, புகழ்பெற்ற கதாசிரியராகவும் தமிழாசிரியராகவும் பிரபலம் பெற்றார், என்று சந்தேகம் உங்களினுள்ளே இப்போது எழலாம். இதற்கான பதில் என்னவென்றால், கடின உழைப்பே ஆகும். பள்ளிப்படிப்பை முடித்தபின்னர், அவர் பிறந்த திருப்பத்தூரிலே வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியைத் தொடங்கினார். பின்னர், அவர் கொண்டிருந்த தமிழ்ப்பற்றினால், தனியே படித்துப் புலவர் தேர்வில் முதல்வராகத் தேர்ச்சி பெற்றார்; அவ்வூர் நகராட்சி உயர்னிலைப் பள்ளி ஆசிரியரானர்; பின்னர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். அங்கே, அவர் விடாமுயற்சியுடன் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் நோக்கத்துடன் அயராது உழைத்தார்; பெராசிரியராக உயர்ந்தார்; மதுரை காமராசர் பல்கலைகழக்த்தின் துணைவேந்தராக கௌரவிக்கப்பட்டார். இவ்வாறு அவர் உறுதியான ஓர் இலத்சியத்திற்காக அரும்பாடு பட்டதால் அவரால் வானத்தை வசப்படுத்த முடிந்தது. “இதையெல்லாம் விடுங்கள்; அவர் சிறந்த ஆசிரியராக விளங்கினார் என்பதற்கான சான்றுகள் என்ன?” என்ற எண்ணம் உங்களிடையே பலருக்குத் தோன்றலாம். சில ஆசிரியர்கள் மாணவர்களை அதிரிகலாகக் கருதி அவர்கள் செய்யும் ஒவ்வொரு தவற்றுக்கும் தண்டனை வழங்குவர்; மற்ற சிலர் மாணவர்களுக்குக் கற்பித்துவிட்டு, வேலையை மட்டும் முடித்துவிட்டு சென்றுவிடுவர். ஆனால் மிகச்சிலரே மாணவர்களைத் தங்கள் மக்களாகக் கருதி, எல்லா வகையிலும் துணையாக நிற்பார்கள். இறுதிவகை ஆசிரியர்களைச் சேர்ந்த ஒருவர்தான் டாக்டர் முவ. “அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர்” என்ற வள்ளுவரின் வார்த்தைக்கேற்ப, ஒவ்வொரு மாண்வரையும் அன்புடனும் மனிதநேயத்துடனும் நடத்தினார் டாக்டர் முவ. மாணவர்களுகுப் பாடங்கற்பிக்கும் ஆசிரியராக மட்டுமின்றி, ஒரு வழிகாட்டும் தந்தையாகவும் திகழ்ந்தார். ஒவ்வொருவரின் குடும்பச் சூழலையும் உணர்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு உதவி வழங்கினார். எடுத்துக்காட்டாக, தன் எளிய மாணவர்களைத் தம் வீட்டிலேயே தங்கச்செய்து உணவளித்துப் படிக்க செய்தார்; மற்ற சில மாணவர்கள் வறுமையில் வாடியபோது அவர்களின் பள்ளி அல்லது கல்லூரிக் கட்டணத்தைக் கட்டி அவர்களிக்குக் கல்வி வழங்கினார். இவ்வாறு, தம் மாணவர்கள் பிறந்த சூரல் அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இல்லாததை உறுதிசெய்து, பல தமிழ்பேராசிரியர்களை உருவாக்கினார். தமது பணியை தமக்கு வருவாய் கொடுக்கும் வேலையாக மட்டும் கருதாமல், மாணவர்களை வாழ்விக்கும் பணியாகக் கருதி அரும்பாடுபட்ட டாக்டர் முவ தமிழகத்தின் வரலாற்றில் என்றுமே மெச்சப்படுவார் என்று கூறினால் மிகையாகாது என்று நாம் நம்புகிறேன். முவ அவர்கள் பேரும் புகழும் பெறுவதற்கு அவரின் கொள்கைதான் காரணம் என்று நான் மீண்டும் ஒருமுறைகூட கூறினால் உங்களின் காது வலிக்கும். இக்கொள்கையின் மிக முக்கியமான அம்சங்கள், வள்ளுவமும் காந்தியமும் ஆகும். தேசியத்தை மறவாத தமிழ்ப்பற்றும், இறைப்பற்றை இகழாத சீர்திருத்தமும், பிறர் மனதைக் காயப்படுத்தாத எழுத்தாற்றலும் பெற்றிருந்த டாக்டர் முவ, நமது முன்னோர்களின் உயர்ந்த நெறிகளுக்கும் வள்ளுவரின் வார்த்தைகளுக்கும் தூய வாழ்வொன்றுக்கும் அடங்கி வாழ்ந்தார். எவ்வளவு சிரமப்பட்டுக்கொண்டிருந்தாலும் பிறரிடமிருந்து பறித்து வாழாமல் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் வைராகியத்தினாலும் கஷ்டத்திலிரிந்து மீண்டு வந்தார். அனைவரிடத்திலும் அன்பும் மனிதனேயமும் காட்டி வந்ததோடு, இந்நெறிகளை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுக்க, தங்கைக்கு போன்ற பல தமிழ்ப்புத்தகங்களை எழுதினார். டாக்டர் மு வரதராசனார் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து நான்காம் ஆண்டு காலமானாலும், தமிழர்களின் மனங்களிலும் நினைவுகளிலும் ஓர் உயர்ந்த மனிதராகவும் புலவராகவும் தொடர்ந்து உயிர்வாழ்ந்து வருகிறார். இன்று இங்கே உட்கார்ந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நான் தெரிவிக்க விரும்பும் மையகருத்து இதோ — டாக்டர் மு வரதராசனார் அவர்கள் உயர்ந்த வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து, தமிழ்மொழிக்கு மட்டுமின்றி தமிழர்களுக்கும் அளவில்லா பேரும் புகழும் சேர்த்துள்ளார். அவரை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு, நாம் நமது நெறிகளிலும் வாழ்விலும், தேசபற்றிலும் தமிழ்ப்பற்றிலும், பணியிலும் செயலிலும் தூய்மையையும் அறத்தையும் கடைபிடித்தால், நமகும் நமது கலாச்சாரத்திற்கும் பெருமை சேருவது நிச்சயம். இறுதியாக — தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்! நன்றி வணக்கம். ஸ்மிருதி ச ஐயர் – Year 3 – 2023

சொற்பொழிவுக் கட்டுரை - நான் மதித்துப் போற்றும் ஒரு தமிழர் - ஶ்ரீநிதி பேரின்பநாதன் - (308 - 2023 )

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழுக்கும் வீரம் நிறைந்த தமிழ் மண்ணுக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய செந்தமிழ் மொழி வானத்தில் அணையா நட்சத்திரமாக மிளிர காரணம், தங்களின் ஒவ்வொரு எண்ணத்தை, சுவாசிப்பை, இதயத்துடிப்பை தமிழ்மொழியின் தொடர்ந்த வாழ்விற்காக அர்பணித்த நமது தமிழ் அறிஞர்களேதான். அப்படிப்பட்ட நிகரற்ற தமிழ் பற்றை கொண்ட தமிழுக்காகவே உழைத்த ஒருவர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் ஆவார்.// வ.சுப.மாணிக்கம் அவர்கள் 17 ஏப்ரல் 1917 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலைச்சிவபுரியில் வ.சுப்ரமணியன் செட்டியாருக்கும் தெய்வானை ஆச்சிக்கும் ஐந்தாவது மகனாக பிறந்தார். தமது தாயை ஆறாம் வயதில் இழந்து பின் பத்து மாதங்கள் கழித்து தந்தையையும் இழந்த இவர் தாய்வழி பாட்டனார் மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார் // “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்பதற்கேற்ப வ.சுப. மாணிக்கம் அவர்களின் சிறந்த பண்புகள் தமது சிறிய வயதிலேயே தெரிந்தன. தமது பதினொன்றாம் வயதில் வட்டித்தொழில் கற்றுக்கொள்வதற்காக பர்மாவுக்கு சென்று பெட்டி அடிப்பையனாக ஒரு வட்டிக்கடையில் பணிபுரிந்தார். அக்கடையின் முதலாளி ஒருமுறை இவரிடம் ஒருவரின் பெயரை கொடுத்து, அந்த நபர் கடைக்கு வந்து தன்னை எங்கே என்று கேட்டால் “முதலாளி இல்லை” என்று சொல்லிவிடுமாறு வற்புறுத்தினார். ஆனால் அப்படி நேர்மையற்ற வகையில் பொய்சொல்ல விரும்பாத சிறுவன் பிடிவாதமாக இதனை மறுத்தான். இறுதியில் இதற்காக வட்டிக்கடையில் பணியாற்றுவதிலிருந்து நீக்கப்பட்டான். நம்மில் எத்தனை பெயர் அதிகாரத்தின் இருப்பிலும், சம்பாத்திய இழப்பிலும், அச்சுறுத்தலிலும் விழுமியங்களை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிற்கிறோம். அந்த சிறிய வயதிலும் கூட எந்த வெள்ளம் வந்தாலும் கல்லணையாக உடையாமல் நின்றது அவரது நேர்மை // வட்டிக்கடையில் வேலை செய்ய முடியாத நிலையில் பர்மாவிலிருந்து இந்தியாவிற்க்குத் திரும்பிய வ.சுப.மாணிக்கத்தின் தமிழ்ப் பயணம் நிலைக்கத்துவங்கியது. ஊர் திரும்பிய அவருக்குத் தமிழ் நூல்களை ஊன்றிக் கற்ற பண்டிதமணி மு.கதிரேச செட்டியார் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் தமிழில் உள்ள அவரது நாட்டம் சிறகடித்துப் பறந்தது. பண்டிதமணி அவர்களின் வழி புகழ்பெற்ற அண்ணாமலை பல்கலைகழகத்தில் சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதுமட்டுமில்லாமல் அவர் விடாமுயற்சியுடன் பயின்று முனைவர் பட்டத்தைப் பெற்றார். தமிழ்க் கல்விப்பணியில் வாழ்நாள் முழுவதும் இறங்கி, 1941 இலிருந்து 1982ல் இறப்புவரை பல்கலைகழகங்களில் பல உயர்ந்த பதவிகளைப் பெற்றிருந்தார்.// ஆனால் நீங்கள் இதுமட்டும்தான் அவர் தமிழ்மொழிக்குச் செய்த தொண்டு என்று நினைத்துவிடாதீர்கள்! புத்தகங்கள், இயக்கங்கள், விருப்புமுறிகள் என எண்ணற்ற வழிகளில் தொண்டு செய்துள்ளார். வ.சுப.மாணிக்கம் தமது வாழ்நாள் முழுவதும் இலக்கணம், இலக்கியம், காப்பியம் என தான் இயற்றிய இருபத்தி எட்டுப் புத்தகங்களாகிய ரத்தினங்களைத் தமிழ் மொழி என்ற கருவூலத்திற்க்கு வழங்கியுள்ளார். மேலும் வ.சு.மாணிக்கம் சீரான சிந்தனையாளராகத் திகழ்ந்து, பழைமையையும் புதுமையையும் ஒருமித்த மனதோடு ஏற்றுப்போற்றினார். இதனால், அவர் தமிழ் சொல்லாக்கங்களை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் முனைப்புக்காட்டினார். அதுமட்டுமா, அவர் தமிழ் வழி கல்வி இயக்கம் என்ற அமைப்பை நிறுவி, இவ்வியக்கம் நன்கு பரவும் வழி காண தமிழ் சுற்றுலாவையும் மேற்கொண்டார்! வ.சுப.மாணிக்கம் உண்மையிலேயே மக்களிடமும் தமிழ் அக்கினியைப் பரப்ப முற்பட்டார். நம்மைப் போன்ற சாதாரண தமிழ் மக்கள் தமிழைப் பயன்படுத்தவில்லை என்றால், தமிழ் மொழியின் புழக்கம் எப்படி தொடரும்?// வா.சுப.மாணிக்கம் தமிழ் மொழிக்கு மட்டும்தான் உழைத்தார் என்று நினைக்கிறீர்களா? இல்லை இல்லை, அவர் தமிழ் சமூகத்திற்கும் தொண்டு செய்தார்! தம் சொத்தில் ஆறில் ஒரு பங்கை அறநிலையத்திற்கு வழங்க விரும்பினார். இவர் பிறந்த ஊரான மேலச்சிவபுரியில் தன் சேமிப்பிலிருந்து செலவு செய்து மருத்துவம், குழந்தை நலம், நலவாழ்வு கல்வி போன்ற தொண்டுகளைச் சாதி சமய வேறுபாடின்றி இலவசமாக வழங்கினார். அதுமட்டுமின்றி, சொந்த நூலகத்தில் இவர் தொகுத்துவைத்த 4500 நூல்களைக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நூலகத்திற்கு இலவசமாக வழங்கினார். // வா.சுப.மாணிக்கம் தமிழுக்காகவும், தமிழ் சமுதாயத்திற்காகவும் முழுமூச்சுடன் மற்றும் இடைவிடாப் பற்றுடன் அரும்பாடு பட்டிருக்கிறார். இவர் மற்றும் இவரை போன்ற நமது தமிழ் சேவையாளர்களின் முயற்சிகளை கௌரவித்து, அவற்றை வாழ வைப்பதற்கான பொறுப்பை நாமே சுமக்கவேண்டும் // தமிழில் சிறந்து விளங்கி அதை உபயோகப்படுத்த சற்று ஆர்வமும் திறந்த மனமும் மட்டுமே தேவை. தமிழ் நூல்களை படிக்கலாம், தமிழில் பேச முற்படலாம். தமிழில் தேர்ச்சி அடைந்த நம்மில் சிலர் தமிழில் ஆர்வத்தையும் கற்றலையும் வளர்த்துகொள்ள தமிழ் இலக்கியங்களையும் படிக்கலாம்; எழுதவும் செய்யலாம். இந்த சிறு சிறு முயற்சிகள் மூலம், தமிழின் படைவீரர்களாகிய நாம் தமிழ் என்ற நமது இராச்சியத்தை பாதுகாத்து நமது அறிஞர்களின் சேவைகளை கௌரவித்து நமது சமுகத்தின் செழிப்பை உலகத்திடம் உரக்க உரைப்போம்.// தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்!! நன்றி வணக்கம்.

Wednesday, November 24, 2021

காணாமல் போன உன் செல்லப்பிராணி உனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது. இந்நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளுடன் விளக்கி எழுதுக. கேரன் பெனீட்டா 107 - 2021

“டிம்மி! டிம்மி!” என்று காதை பிளக்கும் வண்ணம் அலறிக் கொண்டிருந்தேன். நான் கத்திக்கொண்டே இருந்தது கண்டிப்பாக அடுத்த நாள் என்னை குரல் இல்லாமலேயே ஆக்கிவிடும் என்று என்னை உறுதியாக நினைக்க வைத்தது. அன்று குளிர்காற்று என்னை முத்தமிட்டு சென்றது. எங்கும் பச்சே பசேலென இருந்தது. அங்கும் இங்கும் மலர்கள் பூத்துக் குலுங்கின. மாலை மங்கி இலேசாக இருள் வானைக் கௌவத் தொடங்கியது. என் நாய்க்குட்டி, டிம்மியுடன், பூங்காவில் நடக்க இது என்ன ஒரு அருமையான நாள் என்று நினைத்திருந்தேன். ஆனால் வழியில் கண்ட நண்பனிடம் ஐந்து நிமிடம் பேசிய நான் அந்நேரத்தில் என் செல்லப்பிராணி தொலைந்து போய் விடும் என்று சிந்தித்தே பார்க்கவில்லை. என்னுடன் நெருக்கமாகப் பழகியிருந்த என் தாத்தா இறப்பதற்கு முன் எனக்கு அளித்த கடைசிப் பரிசு டிம்மிதான். தாத்தா இறந்த பிறகு அதனுடன்தான் என் முழு நேரத்தை செலவழித்தேன். எப்போதும் என் அறுகிலேயே இருக்கும் டிம்மி இப்பொழுது காணாமல் போனது என் வயிற்றில் இடி விழுந்தது போலிருந்தது. “கண்டிப்பாக யாராவது டிம்மியை நான் கவனிக்காதபோது தூக்கியிருப்பார்கள்!” என்று எண்ணிப் பதறினேன். அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த என்னால் சோர்வைத் தாங்க முடியவில்லை. என் முகம் சிவந்திருந்தது. என் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வீழ்ச்சியைப் போல் வழிந்தது. “டிம்மி அடுத்த நிமிடமே என் கைகளில் இருக்க வேண்டும்!” என்று கடவுளிடம் என் மனதில் கெஞ்சினேன். யாரை வினவினாலும் டிம்மியை பார்க்கவில்லை என்று பதிலளித்தனர். அப்பொழுது நிறைய நீர் ஒரு ஆறுபோல் ஓடுவதைச் செவி மடுத்தேன். திரும்பிப் பார்த்த நான், என் அருகே ஒரு பெரிய கால்வாய் இருப்பதை அறிந்தேன். கருப்பு நிறமான ஒரு பை கால்வாயின் நேரில் என் கண்ணுக்கு புலப்பட்டது. உற்றுப் பார்த்த நான் அந்த பையினுள் எதோ நகர்வது போல் இருப்பதை உணர்ந்தேன்! “யாரோ டிம்மியை பையினுள் அடைத்து வைத்து விட்டார்களா ? என்ற கேள்வி என் மனதில் எழும்பியது. என் இதயம் “படக் படக் “ என்று பதற்றத்தில் தாளம் போடுவது என் கைக்கடிகாரத்தின் “டிக் டிக் “ ஒலியை விட சத்தமாக இருப்பதை போல் இருந்தது. என் சிந்தனைகள் பயத்தில் அங்கும் இங்கும் அலை பாய்ந்தது. “டிம்மியை காப்பாற்ற ஒரே வழிதான் உள்ளது,” என்று எண்ணினேன். நான் எதிர்பாராததைச் செய்தேன் ஒரு கணம் கூட செலவழிக்காமல் கால்வாயினுள் இறங்கி நீரினுள் குதித்தேன்! வேகமாக ஓடிக் கொண்டிருந்த நீர் என்னைத் தள்ள கடினமாக உழைத்து நீச்சலடித்தேன். “டிம்மி!” என்று அலறியபடியே என் அருகில் நீருடன் ஓடிக்கொண்டிருந்த கருப்பு பையை நீட்டி பிடித்து கொண்டபின் ஆனந்த கண்ணீர் வடித்தேன். என் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது. டிம்மியை பையிலிருந்து மீட்க பையைத் திறந்தேன். கருப்பு பையினுள் ஒரு காலணிதான் இருந்தது என்று அறிந்த எனக்கு யாரோ ‘டமார்!’ என்று தலையில் அடித்ததுப் போலிருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. டிம்மி என்னிடம் இல்லை! கால்வாயிலிருந்து வெளியே வர முயன்ற நான் அப்பொழுதுதான் என் முட்டாள்தனத்தை புரிந்துகொண்டேன். நான் நீரின் வேகத்தைப் பற்றி யோசிக்காமல் கால்வாயினுள் குதித்திருந்தேன். நீர் என்னை இழுத்துக்கொண்டே இருந்தது. அச்சம் என் மனதை கௌவியது. எப்படி நீரிலிருந்து வெளியே வருவது என்று தெரியவில்லை. பயத்தால் என் இரதம் பனிக்கட்டியைப்போல் உறைந்தது. “காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று நான் காது பிள்ளைக்கும் வண்ணம் அலறினேன். ஏன் நான் சிந்திக்காமல் கால்வாயினுள் இறங்கினேன் என்று வருந்தினேன். அப்பொழுது, “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு” என்ற திருக்குறள் என் ஞாபகத்திற்கு வந்தது. நல்ல வேலை சில பேர் கைத்தொலைப்பேசியைப் பயன்படுத்தி மீட்புக் குழுவை அழைத்தனர். அவர்கள் உடனே என்னைக் காப்பாற்றினார்கள். நான் சிந்தித்து செயல்படாததற்கு என்னைக் கண்டித்தார்கள். என்னை அவர்கள் காப்பாற்றாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கவே பயமாக இருந்தது. டிம்மியை இன்னும் காணவில்லை என்ற வருத்தமும் நான் செய்த முட்டால் செயலினாள் எனக்கு என் மீது ஏற்பட்ட கோபமும் சேர்த்து கண்ணீராக வெளிவந்தது. அப்பொழுது என் கையை யாரோ தொடுவதுப் போல் இருக்க நான் திரும்பிப் பார்த்தேன். என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. ஓர் ஆடவர் டிம்மியை தன் கையில் ஏந்தியவாறு நின்றுகொண்டிருந்தார்! “நீ முன்பு என்னிடம் ஒன நாய்க்குட்டியைப் பார்த்தாயா என்று வினவியிருந்தாய். அதன் பிறகு அதை ஒரு புதரினருகில் பட்டாம்பூச்சியுடன் விளையாடுவதைக் கண்டேன்,” என்று கூறினார். வானிலிருந்து வந்த தெய்வம் போல் அவர் எனக்குத் தோற்றமளித்தார். நான் என் நன்றியைப் பலமுறை தெரிவித்த பிறகு டிம்மியை ஆரத்தழுவிக்கொண்டேன். அந்த சம்பவம் என் மனதில் பசுமரத்தாணியைப்போல் பதிந்தது. அன்றிலிருந்து நான் எப்பொழுதும் ஒரு செயலைச் செய்வதற்கு முன் இரண்டு முறையாவது சிந்தித்து பார்க்க முடிவு செய்தேன். மேலும் டிம்மியை இன்னும் கவனத்துடன் பார்த்துக்கொள்ள தொடங்கினேன். ~முற்றம்~

உன் நெருங்கிய தோழி உன் மேல் கொண்ட பொறாமையால், உன்னைவிட்டு விலகக் காரணமாக அமைந்த நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளுடன் விளக்கி எழுதுக. பெயர்: மகேஷ் காயத்ரி வகுப்பு: 108 (2021)

பொறாமை. பொறாமை என்பது நம் அனைவரிடத்திலும் உள்ள ஓர் உணர்வு தான். ஆனால், அதை நாம் மற்றவர்களிடம் வெளிக்காட்டுவதும் வெளிக்காட்டாததும் நம் கையில் உள்ளது. மற்றவர்கள் நம்மைவிட எதிலாவது சிறந்து விளங்கினாலோ நம்மை வென்றுவிட்டாலோ நம்முள் சிலர், “அடாடா! அவர்கள் நம்மைவிட இதில் நன்றாகச் செயல்படுகின்றனரே!” என்று நினைத்துச் சற்று பொறாமையடைவோம். இதற்குப்பதிலாக, வேறு சிலர் அவர்களது வெற்றியைத் தங்களது வெற்றியைப் போல் நினைத்து மகிழ்ச்சியடைந்து அவர்களை வாழ்த்துவார்கள். அவர்களுள் பொறாமை இருந்தாலும் அதை வெளிக்காட்ட மாட்டார்கள். அத்துடன், நட்பினுள் பொறாமை ஏற்பட்டால் நிறைய சண்டை தான் ஏற்படும். சற்றுமுன் நகமும் சதையும் போல இருந்த நண்பர்கள் பொறாமையினால் நாயும் பூனையும்போல் சண்டைபோட்டு நிலைமை மோசமானால் எதிரிகளாகக் கூட ஆகிவிடுவார்கள். இந்தச் சதிக்கெல்லாம் காரணம் பொறாமையே! “ட்ரிங்! ட்ரிங்!” பள்ளி இடைவேளை மணி ஒலித்தது. மாணவர்கள் அனைவரும் வகுப்பைவிட்டு உணவகத்தை நோக்கி சிட்டாய்ப் பறந்தனர். புன்னகைத் தவழ்ந்த முகத்துடன் எனது இணைபிரியாத் தோழி, மாலதி, என்னிடம், “மாயா! நீ வருகிறாயா?” என்று கேட்டாள். நானும் சூரியனைக் கண்ட தாமரையைப் போல மலர்ந்த முகத்துடன் என் தலையை ஆட்டினேன். என் கையடக்கத் தொலைப்பேசியையும் பணப்பையையும் எடுத்துக்கொண்டு மாலதியுடன் உணவகத்திற்குச் செல்லத் தொடங்கினேன். மாலதியும் நானும் தொடக்கப்பள்ளியிலிருந்தே புவும் நாரும் போல நெருங்கிய நண்பர்கள் ஆவோம்! நாங்கள் இருவரும் பணக்கார குடும்பங்களிலிருந்தே வந்தோம். அவளும் நானும் எப்போதுமே சிறந்த மதிப்பெண்கள் எடுப்போம். சொல்லப்போனால், எங்கள் இருவரையும் இரட்டை சகோதரிகள் என்றே கூறலாம். ஆனால், மாலதியோ மிகவும் அழகானவள். அவளது கருப்பு நிற தலைமுடி, பழுப்பு நிற கண்கள் எல்லாம் அவளை ஒரு ராணியைப்போல் அலங்காரப்படுத்தின. மற்றவர்கள் என்னையும் ஓர் அழகானவள் என்று தான் கருதுகின்றனர். இருந்தாலும் மாலதியின் அழகே வேற விதம்! இன்னொன்று! அவளுக்கு எப்பொழுதுமே மேடை மீது நின்றுபேசும்போது அவள் மனதினுள் பீதி குடிக்கொள்ளும். இதை அவள் உணர்ந்தாலும் அவளுக்கு அனைவர் முன் நின்று பேசுவதற்கு ஆசையுண்டு. அந்த அச்சத்தை மட்டும் மாலதியால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனக்கோ மேடையில் பேசுவது என்பது இயல்பானது என்றே கூறலாம். இதையறிந்த அசிரியர்கள் பலர் என்னை போட்டிகளில் கலந்துகொள்ள வைத்திருகின்றனர். அவை அனைத்தும் எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக அமைந்தன. மேலும், அவற்றில் கலந்துகொள்வது எனக்கு எல்லையற்ற ஆனந்தத்தை அளிக்கும். “மாயா, நீ நேற்று உன் குடும்பத்துடன் எங்கேயோ சென்றதாக கூறினாயே. எங்கே?” என்று வினவினாள், மாலதி. நானும் பதிலளிக்க வார இறுதியில் நடந்த நகைச்சுவையான சில விஷயங்களைப் பற்றி பாட்டிகள் போல் அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். வழக்கம்போல நாங்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவாரே வயிறு குலுங்க சிரித்தோம். சிரிப்பு மருந்தைக் குடிப்பதுபோல் இருந்தது! எங்களது வகுப்பு மாணவர்கள் சிலர் எங்களைச் சுலித்த முகத்துடன் பார்த்து, “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்க நான் “‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்ற பழமொழிக்கேற்ப நானும் மாலதியும் நல்ல மாணவர்களாக ஆசிரியர் கற்றுக்கொடுத்ததைச் செய்துகொண்டிருக்கிறோம்!” என்றேன். அடுத்த கணமே, நானும் மாலதியும் கண்ணீர் வரும்வரை சிரிக்காரம்பித்தோம் . இந்தப் பதிலைக் கேட்ட எங்கள் வகுப்பு மாணவர்கள் வெறுப்புடனும் கோவைப்பழம்போல் சிவந்த முகத்துடனும் வேறெங்கேயோ சென்றனர். எங்கள் ஆங்கில அசிரியர் எங்களிடம் வந்தபின்னே நாங்கள் பிசாசுகள்போல சிரிப்பதை நிறுத்தினோம். “மாயா, மாலதி! நீங்கள் சிரிப்பதில் எனக்கு மிக மகிழ்ச்சி. உங்களை தொந்தரவு செய்வதற்கு என் மன்னிப்பு. ஆனால், மாயா நான் உன்னிடம் சற்று பேசவேண்டும்!” என்றார், ஆசிரியர். இதைக் கேட்டவுடன் என்னுடைய கண்கள் அகல விரிந்தன. என் இதயம் ‘படக், படக்’ என்று தாளம்போட நான் என்ன தவறுசெய்தேன் என யோசித்தவாரே ஆசிரியரை அச்சத்துடன் பின்தொடர்ந்தேன். “மாயா, நீ ஆங்கிலத்தில் சிறந்து விளங்கும் மாணவி. மேலும், நீ பல பேச்சு போட்டிகளில் பங்கெடுத்து வென்றிருக்கின்றாய். அதனால் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஒரு போட்டியில் கலந்துகொள்வாயா? நீ நம் பள்ளிக்குப் பெருமை கொண்டு வருவாய் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்று என் ஆசிரியர் என்னிடம் தெரிவித்தார். எனக்கு அப்பொழுது உல்லாச வானில் சிறகடித்துப் பறப்பதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டது. நான் என் ஆசிரியரிடம் என் விருப்பத்தைக் கூறி என்னுடைய தன்னிப்பட்ட தகவல்களை அளித்தேன். எனக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை! அவ்வளவு குஷி! நான் மானைப்போல் துள்ளி குதித்தவாறே மீண்டும் மாலதியிடம் சென்றேன். அவளது முகத்தில் ஈயாடவில்லை. “இன்னொரு போட்டியா?” என்று அவள் முறைத்தவாறு கேட்டாள். நானும், “ஆம்! நீ சந்தோஷமாகத் தானே இருக்கிறாய்?” என்று வினவினேன். அவள் கண்கள் கோபக் கனல்களைச் சுட்டெரித்ததுப்போல் இருந்தது. அவள் என்னைப்ல பொரிந்து தள்ளினாள். “ஏ, மாயா? நான் எதற்கு நீ போட்டியில் கலந்துகொண்டால் மகிழ்ச்சியடையனும்? நான் எந்த ஒரு போட்டியிலும் பங்கெடுக்கவில்லை!” என்று காதைப் பிளக்கும் வண்ணம் கத்தினாள். நான் வியப்பில் வாயைப் பிளந்தவாறு திகைத்து நின்றேன். “இனி, நாம் நண்பர்களே இல்லை!” என்று கூறியப்படி அவள் என்னைவிட்டுச் சென்றுவிட்டாள். மாலதி, என் நெருங்கிய தோழி, என் சகோதரிபோல் இருந்தவள். என் பிரிய தோழி, என்னைவிட்டு விலகிச்சென்றுவிட்டாள். துக்கம் என் தொண்டையை அடைத்தது. முத்துக்கள் போல் கண்ணீர்த் துளிகள் என் முகத்திலிருந்து வழிந்தோடின. நான் அவற்றைத் துடைத்துவிட்டு வகுப்புக்குச் சென்று மாலதி ஓர் உண்மையான தோழியில்லை என உணர்ந்தேன். உண்மையான நண்பர்கள் உங்களைவிட்டுப் பிரிய மாட்டார்கள், உங்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க உதவுவார்கள் முக்கியமாக அவர்களுள் பொறாமை இருந்தால் வெளியே காட்டி நட்பை முறிக்க மாட்டார்கள்! மெதுவாக, என் துக்கம் சினமாக மாறியது. நான் மாலதியைப் பற்றி நினைப்பதை நிறுத்திவிட்டு என் படிப்பில் கவனம்செலுத்தினேன். அவளைப் பற்றி நினைத்து படிப்பில் பின்தங்கி விடக்கூடாது என்பதே என் ஒரே எண்ணம். அந்தப் பேச்சுப் போட்டியில் நான் மீண்டும் முதல் பரிசை வென்றேன். இந்த நிகழ்வுகளிலிந்து நான் கற்றுக்கொண்டது, பிறர் தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் என்பதே. மாலதி பொறாமையாக இருந்திருந்தாலும் அவள் அதைக் காட்டாமல் இருந்திருந்தால் நாங்கள் இன்னும் நண்பர்களாகத் தான் இருந்திருப்போம். ‘அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்’ என்று திருவள்ளுவர் போதித்ததற்கேறப பொறாமைக் கொள்வதை நாம் கட்டுப்படுத்திக்கொண்டும் சினம், பேராசை மற்றும் தீங்கு விளைவிப்பது ஆகிய மற்ற மூன்றையும் தவிர்த்துக் கட்டுப்படுவதே சிறந்ததாகும். ‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்பதற்கேற்பவும் பொறாமை, சினம் போன்றவையில்லாத நட்பே நல்ல நெருக்கமான நட்பாகும். மாலதியுடன் எனக்கு நடந்தது ஒரு சிறபற்ற அனுபவமாக இருந்தாலும் நான் பலவற்றை உணர்ந்துகொண்டேன். இதுதான் என் பெற்றோர் கூறிய, ‘அனுபவம் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என்பதற்கு அர்த்தம் போல!

தொழில்நுட்பக் கருவிகளில் உள்ள செயலிகள் நம்மிடையே சோம்பேறிகள் பெருகுவதற்குக் காரணமாக உள்ளன. கருத்துரைக்க.Aravinthan Yathuri - 205 - 2023

சமீபத்தில், ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் அனைத்து செயல்களைச் செய்யக்கூடிய அளவிற்கு நம் சமுதாயம் முன்னேற்றம் அடைந்துள்ளது. அக்காலத்தைப் போல ...