Sunday, August 24, 2025

குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

 


சப்ரினா கான் (302)

அவைக்கு முதற்கண் என் வணக்கம்!  இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலைப்பை மையமாக வைத்து என் கருத்துகளை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமா? ஆம், அதில் ஐயம் இல்லை. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நன்மை தீமை என அனைத்து இடங்களிலும் தங்கள் பங்களிப்பை அளிப்பது அவசியம். இவ்வாறு, குடும்பத்தில் அன்பும் பண்பும் அறிவும் கற்றுக் கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தி, புரிதலை ஏற்படுத்தி, பிணைப்பையும் வலுப்படுத்துகிறார்கள் அல்லவா? ஆனால், இது சாத்தியமாக அனைவரும் தங்கள் உறுப்பினர்களுடன் சேர்ந்து அதிக நேரத்தை ஆக்ககரமாகச்  செலவு செய்ய ஒரு வாய்ப்பு இருக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை ஆகும். அதற்குத் தான் குடும்பக் கொண்டாட்டங்கள் இருக்கின்றன! பாரம்பரிய திருவிழாக்கள், பிறந்தநாட்கள், அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற அனைத்துக் குடும்ப விழாக்களும்  குடும்ப  உறுப்பினர்கள் தங்களுடன் நேரத்தை செலவழிக்க இழக்க முடியாத ஒரு வாய்ப்பை அளிக்கிறன. இக்கொண்டாட்டங்களிலிருந்து குடும்ப உறுப்பினர்கள் தங்கள் குடும்பங்களுக்குள் பண்புகள் கற்றுக் கொள்கிறார்கள், புரிதல் ஏற்படுத்துகிறார்கள், மறக்க முடியா நினைவுகளையும் உருவாக்குகிறார்கள்.

ஒரு குடும்பத்தில் உறுப்பினர்களுக்கு இடையே உள்ள அன்பு, ஆதரவு, மற்றும் புரிதலை நாம் எந்த நாளில் காணலாம்? நிச்சயம் பிறந்தநாள் அன்று தான்!  பிறந்தநாளின்போது பெற்றோர்கள் உங்களுக்குப் பிடித்த உணவையோ, ஆடையையோபொம்மையையோ நிச்சயம் வாங்கியிருப்பார்கள். இதிலிருந்தே அவர்கள் உங்களுக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? என்று நன்கு அறிந்ததைக் காட்டுகிறது.  அதுமட்டுமல்லநிச்சயமாக பிறந்தநாளன்று  இன்னும்  உங்களுக்குப் பரிசு  வாங்கித் தர முடியாத  வயதில்  இருக்கும் உங்கள் சகோதரரிடமிருந்து  ஒரு கடிதத்தைப் பெற்றிருப்பீர்கள் அல்லவா? நினைவிருக்கிறதா? அந்தக் கடிதங்களில் இருக்கும் அழகிய சிறு சிறு வரைபடங்கள், வண்ணம் பூசப்பட்டிருக்கும் ஓவியங்கள், ஒன்று ஒன்றாக சரியான உணர்வை உணர்த்த கையால் எழுதப்பட்ட சொற்கள்முடிவில் ஒரு ஓரத்தில் தெரிவித்த நன்றிகள் ஆகியவை எல்லாம் பார்த்திருப்பீர்கள். அந்த எளிய கடிதத்தில் கொடுக்கப்பட்ட முயற்சி, சிந்தனை, நேரம் ஆகியவை நீங்கள் உண்மையாகக் குடும்ப உறுப்பினர்களால் நேசிக்கப்படுகிறீர்கள் என்று உணர்த்துவதில் உங்கள் பிறந்தநாளன்று ஒரு சக்தி வாய்ந்த நினைவூட்டலாக அமைகிறது. 

தந்தை தாய் பேண்” என்பதற்கு ஏற்பவும் தந்தையர் தினம் மற்றும் அன்னையர் தினத்தன்று எப்போதும்  செலுத்துவதை விட நீங்கள் கொஞ்சம் கூடுதலாக அவர்களிடம்  அன்பு  செலுத்தியிருப்பீர்கள்  அல்லவா? குடும்பத்திற்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்று  அன்று மீண்டும்  உங்கள் நினைவிற்கு வருகிறது.  அப்போதுஅவர்களிடம் உங்கள் நன்றியைத் தெரிவிக்க, அதிக அன்பும் செலுத்தி உதவியும் செய்வீர்கள்.  பெற்றோரும் அளவு கடந்த  மகிழ்ச்சியை அடைகிறார்கள். எனவே, இதிலிருந்து பிறந்தநாட்கள், பெற்றோர் தினங்கள்  ஆகிய குடும்பக் கொண்டாட்டங்கள் உறுப்பினர்களுக்கும் தங்கள் அன்பையும்பிறரைப் பற்றி வைத்திருக்கும் புரிந்துணர்வையும் தெள்ளத் தெளிவாக எல்லோரிடமும்  வெளிக்காட்டுகின்றன. 

நாம் அனைவரும் பாரம்பரியக் கொண்டாட்டங்களைக் குடும்பத்துடன் கொண்டாடியிருக்கிறோம். தீபாவளி, பொங்கல், நோன்புப் பெருநாள் ஆகிய நாட்களன்று  பெற்றோர்கள் எல்லாம் ஏன் அதைக் கொண்டாடுகிறோம், யாரிடமெல்லாம் மதிப்பு காட்ட வேண்டும்பாரம்பரிய மரபாக  என்ன செய்ய வேண்டும் என்று பிள்ளைகளிடம் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் கற்றுக் கொடுக்கின்றனர். 

மக்கள்மெய் தீண்டல்   உடற்கின்பம் மற்று அவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”

என்பதற்கு ஏற்ப பெற்றோருக்குப் பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது அவர்களுடைய உடலுக்கும் இன்பம்அவர்களின் பேச்சைக் கேட்பது அவர்களுடைய காதிற்கு இன்பம். அதனால், கொண்டாட்ட நாளன்று தங்கள் பிள்ளைகள் ஓடி, ஆடி, விளையாடி மகிழ்வதைக் காணுவதையே பெற்றோருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கி அவர்கள் முகத்தில் புன்னகை தோன்ற போதுமானதாக அமைகிறது.  இவ்வாறு குடும்பப் பாரம்பரியக் கொண்டாட்டங்கள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே போதனைகளைப் பரிமாறிக் கொள்ளவும் அனைவரும் மகிழ்ச்சியடையவும் வாய்ப்பு அளிக்கிறது. 

ஆம், இக்குடும்பக் கொண்டாட்டங்களின்போது  சில நேரங்களில் நம் குடும்ப உறுப்பினர்களுடன் சண்டையிட நேரிடும் என்பது எனக்கு நன்கு தெரியும்.  உங்கள் சகோதரர் உங்கள் உணவிலிருந்து சிலவற்றைத் திருடியிருக்கலாம்உங்கள் பெற்றோர் நீங்கள் பெரியவர்களுக்குச் சரியான மரியாதை கொடுக்காமல் இருந்ததற்கு உங்களைத் திட்டியிருக்கலாம், அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர் உங்களுக்குக் கொடுத்த பரிசு உங்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம்.  ஆனால், இப்பிரச்சனைகள் எல்லாக் குடும்பத்திலும் இயல்பாக ஏற்படும் பிரச்சனைகள் தானே? இப்பிரச்சனைகளிலிருந்து நாம் எப்படி உணர்கிறோம் என்பதை ஒருவருக்கொருவர் பேசி உணர்த்துவதன் மூலம் பிறரைப் பற்றி மேலும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அமைகிறது. அவ்வாறு செய்தால் நாம் அனைவரும் ஒருவரையொருவர் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும், வலுவான பிணைப்பையும் மறக்க முடியா இன்ப நினைவுகளையும் உருவாக்கவும் முடியும்.  அதோடு, அந்த நாளில் ஒரு பிரச்சனை இருந்தாலும் அதற்கு ஈடுசெய்ய  பல நல்ல நினைவுகள் ஏற்பட்டிருக்கலாம் –  வேடிக்கையான உரையாடல்கள்மனம் விட்டுப் பேசும் நிகழ்வுகள்சேர்ந்து வாய்விட்டுச் சிரிக்கும் நொடிகள் போன்றவை எல்லாம் கொண்டாட்டங்களின்போது எழுந்த  பிரச்சனையை மறக்க வாய்ப்புகளை நமக்கு உருவாக்குகின்றன.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பது குடும்பத்திற்கும் பொருந்தும்.  சண்டையிட்டுப்  பிரிந்து கிடப்பதைவிட  ஒற்றுமையாக இருப்பது ஒரு குடும்பத்திற்கு நன்மையைத் தரும். மானிடராய் பிறத்தல் அரிது என்பது போல் ஒருவருக்கு நல்ல குடும்பம் அமைவதும் அரிதே. ஆனால் ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்க குடும்பக் கொண்டாட்டங்கள் வாய்ப்புகள் நிறைய தருகின்றன. அவைகுடும்பத்துடன் சேர்ந்து இருக்க நேரம், ஒற்றுமையை வளர்க்கும் சந்தர்ப்பம், கற்றுக்கொள்ள பாடங்கள், மனதில் எப்போதும் மறையாமல் இருக்கும் நினைவுகள் ஆகியவையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

ஆனால், உங்கள் குடும்பத்திடம் உங்கள் அன்பைத் தெரிவிக்கக் குடும்ப கொண்டாட்டங்களுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் — இன்றே அவர்களிடம் உங்கள் மனமார்ந்த நன்றிகளையும் அன்பையும் தெரிவியுங்கள்!   

இததுடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன்.  நன்றி. வணக்கம் !

 


Friday, August 8, 2025

நீ அறியாது செய்த செயலால், உன் உறவினர் ஒருவருக்குச் சமூகத்தில் இருந்த நன்மதிப்பு பாதிக்கப்பட்டது

 


Srutika Sanjaykumar - Year 3 - 2025 

என் மாமாவின் கடையில் அன்று அமைதி நிலவியது. பணமே இல்லாத பணப்பதிவேட்டின் பின்னால் மாமா தொலைபேசியைப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் அருவியெனப் பொங்கி ஆறாக ஓடியது. அழுது அழுது அவர் கண்கள் சிவந்து இருந்தன. மாமாவின் நிலையைப் பார்த்து, என் உள்ளம் நொந்தது. நம்பிக்கை என்பது கண்ணாடி போன்றது. ஒரு முறை அதை உடைத்துவிட்டால், சரி செய்தாலும், வடுக்கள் என்றைக்கும் மறையாது. நான் செய்த தவறு சமூகத்தில் என் மாமா கடினமாக உழைத்து பெற்றிருந்த நற்பெயரைச் சிதைத்தபோது, இதைக் கற்றுக்கொண்டேன். கண்கலங்கிய என் மாமாவைப் பார்த்தவாறே, என் எண்ணங்கள் பின்னோக்கிச் சென்றன. 

 

வா மலர், உன் மாமாவின் கடைக்குச் செல்லலாம்!” என்று அம்மா அழைத்ததும், நான் என் மெத்தையிலிருந்து ஆனந்தத்தில் குதித்தேன். என் மாமாவின் மீது எனக்கு அளவில்லாத அன்பு இருந்தது. தினந்தோறும் அவருடைய கடைக்குச் சென்று நான் உதவிக்கரம் நீட்டுவேன். அன்றைக்கும் அப்படி தான். என் முகத்தில் புன்னகை பூத்தவாறு என் மாமாவின் சிறிய உணவு கடைக்குச் சென்றேன். “மாமா!” என்று நான் கூறி, மாமாவை அனணைத்துக் கொண்டேன். நேரம் சென்றதே எனக்குத் தெரியவில்லை. என் மாமாவின் கடையிலிருந்த பல உணவுப் பொருட்களைச் சரியாக, ஒழுங்கான முறையில் அடுக்க உதவினேன். வியர்வை முத்துகள் என் நெற்றியிலிருந்து வழிந்தன. வேலை அனைத்தும் முடிந்தவுடன், நான் என் தொலைபேசியில் ஒரு புகைப்படத்தை எடுத்து, “மாமாவின் கடையில் வேலை முடிந்தது!” என்ற தலைப்புடன் இணைய தளங்களில் பதிவேற்றினேன். பின்னர் மாமாவிடம், “புறப்படுகிறேன்!” என்று கூறி, அம்மாவுடன் வீட்டிற்குச் சென்றேன். ஆனால், நான் இவ்வாறு செய்தது மாமாவின் நன்மதிப்பைப் பாதித்துவிடும் என்பதை நான் அறியவில்லை. 

 

மறுநாள் காலை இருட்டாக இருந்தது. பலத்த காற்றுடன் கனத்த மழையும் இனணந்தது. கார்மேகங்கள் வானத்தை சூழ்ந்தன. நான் என் மெத்தையிலிருந்து மெதுவாக எழுந்து, என் தொலைபேசியை எடுத்தேன். மலர்ந்திருந்த என் முகம் உடனே வாடியது. என் கண்கள் அகல விரிந்தன. நான் பதிவேற்றிய புகப்படம் ஆயிரக்கணக்கான வெறுப்புக் கருத்துக்களைப் பெற்றிருந்தது. “நான் இந்தக் கடையிலா உணவைச் சாப்பிட்டேன்?” , “ஏமாற்றம்!”, “இப்படிப்பட்ட பொருட்களை விற்பது தவறு!” என்று பல கருத்துக்களை வாசிக்க என் கண்கள் அங்கும் இங்கும் ஓடின. அப்போது மாமா என் தொலைபேசியில் அழைத்தார். “இப்படி நீ செய்வாய் என்று நான் நினைத்துப்பார்க்கவே இல்லை மலர். என் கடைக்கு இனி என்ன நடக்குமோ…” என்று கவலையுடன் கூறியவாறே தொலைபேசியை வைத்தார். அன்று நாள் முழுவதும் மாமாவின் கடைக்கு யாரும் வரவில்லை. மேசைகளும் நாற்காலிகளும் அசையாமல் இருந்தன. என் மாமாவின் கடையைத் திட்டிய பல பதிவுகளை நான் இணையத் தளங்களில் பார்த்தேன். கடையைத் தாண்டி நடப்பவர்கள் அதைச் சுட்டிக்காட்டி, மும்முரமாகப் பேசினர். ஆனால், யாரும் உள்ளே வரவில்லை. நான் என்ன செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. குழப்பதில் என் தலை சுற்றியது. நான் பதிவேற்றிய புகைப்படத்தை உற்றுப் பார்த்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு தான் நான் செய்த தவறு எனக்குப் புரிந்து விட்டது. என் கண்கள் அகல விரிந்தன. நான் செய்த தவறு என்னால் நம்பவே முடியவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியுமா

 

புகைப்படத்தை உற்றுப் பார்த்தபோதுதான் என் உருவத்தின் பின்னால் காலாவதியான உணவுப் பொருட்கள் இருந்ததைக் கவனித்தேன். ஆனால், இந்த உணவுப் பொருட்களை அப்புறப்படுத்தத்தான் மாமா ஒரு மேசையில் வைத்திருந்தார். இதை அறியாத இணைய பயணர்கள் என் மாமாவின் கடைக்குச் செல்வதையே நிறுத்திவிட்டனர். வழக்கமான வாடிக்கையாளர்கள் கடையைத் தவிர்த்தனர். அக்கம் பக்கத்திலிருந்த பலர் கடையின் தரம் எப்படி குறைந்துவிட்டது என்று பேசினர். கடையில் தூய்மைக்கும் தரத்திற்கும் பெயர் பெற்ற என் மாமா வேதனையில் தவித்தார். நான் செய்த தவற்றைச் சரி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, மாமாவின் கடைக்கு ஓடினேன். 

 

இப்பொழுது நான் என்ன செய்வேன் மலர்?” என்று மாமா கவலையுடன் கேட்டது என்னை நிகழ்காலத்திற்குச் சுண்டியிழுத்தது. “என்னை மன்னித்து விடுங்கள் மாமா. நான் தவறு செய்துவிட்டேன். ஆனால், அதைச் சரி செய்ய நான் முயற்சி செய்கிறேன் மாமா…” என்று நான் மன்னிப்பு கோரியதற்கு என் மாமா கவலையுடன் தலையசைத்தார். என் மாமா அனலில் இட்ட புழுவைப்போல் துடித்துக்கொண்டிருந்தது என் தவறால் தான். உடனே, நான் பதிவேற்றிய புகைப்படத்தை நீக்கினேன். பின்னர் என் தவற்றை ஒப்புக்கொண்டு, என் புகைப்படத்தில் இருந்த பொருட்கள் எல்லாம் அப்புறப்படுத்த வைத்திருந்தவை என்பதைத் தெளிவுபடுத்தி, இணையத்தில் பதிவேற்றினேன். அதுமட்டுமின்றி, என் மாமாவின் அன்றாட வழக்கத்தில், அவர் எவ்வாறு கடையைச் சுத்தம் செய்கிறார் என்றும் காலாவதி தேதிகளைச் சரிபார்ப்பதும் ஒவ்வொரு வாடிக்கையாளருடன் அவர் எவ்வாறு பணிவுடன் பழகினார் என்றும் ஒரு காணொளியை உருவாக்கி, இணையத்தில் பதிவேற்றினேன். 

 

மறுநாள் காலையில் ஆவலுடன் என் தொலைபேசியை எடுத்தேன். மக்கள் நான் கூறிய உண்மையை நம்புவார்களா? அல்லது அலட்சியப்படுத்துவார்களா? என் மனம் படபடவென்று அடித்தது. நடுநடுங்கும் கைகளுடன் தொலைபேசியைத் திறந்தேன். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. என்ன ஆச்சரியம்! இணையத்தில் இருந்த அனைவரும் நான் செய்த தவற்றைப் புரிந்து கொண்டு, என்னை மன்னித்துவிட்டனர். பலர் என் நேர்மையைப் பாராட்டினர். “நல்ல வேளை! கடைக்குச் செல்லாமல் இருந்தது எனக்குக் கவலையாக இருந்தது.” போன்ற பல கருத்துகள் இருந்தன. என் முகத்தில் புன்னகை பூத்தது. மாமாவின் கடையில் மக்கள் கூட்டம் மீண்டும் அலைமோதியது. வியாபாரமும் செழித்தது. என் மாமா? முகத்தில் அப்போது தான் புன்னகை பூத்து, “அடுத்தமுறை, சரிபார்த்துவிட்டு, புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்று மலர்! ஆனால், உன் தவற்றை உணர்ந்து, ஏற்பட்ட பாதிப்புகளைப் போக்க முயற்சிகளை மேற்கொண்டது நன்று!” என்று மாமா கூறினார். 



அன்றிலிருந்து, நன்மதிப்பு வளர பல வருடங்கள் எடுக்கும் என்றாலும், அதை ஒரு நொடியிலேயே சேதப்படுத்த முடியும் என்று கற்றுக்கொண்டேன். நான் அறியாது செய்த தவறினால், என் மாமாவின் நன்மதிப்பே பாதிக்கப்பட்டது. அன்று நடந்த மறக்க முடியாத சம்பவம், இணையத்தில் பதிவேற்றுவதற்கு முன்பு சரிபார்ப்பதன் முக்கியத்துவத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தது. 

 

                                                                    - முற்றும் -

 


Tuesday, July 8, 2025

‘பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு’ எனும் தலைப்பில் ஒரு சிற்றுரை எழுதவும்.

 

 

KARUPPAIYA BARANI NIVEDHAA 

Year 4- 405 - 2025 



சிங்கை நாடு!

 எந்தன் வீடு!

என்ற பாடல்வரிகளோடு நான் என் உரையைத் தொடங்குகிறேன். மாணவர்கள், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர் பிரதமர்  திரு லாவ்ரன்ஸ் வாங் முதலிய அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தையும் தேசியதின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்! 

இப்போட்டியில் பங்கேற்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. சரி, நான் இழுத்தடிக்கமல் என் தலைப்பைப்பற்றி விவரிக்கிறேன். சிங்கப்பூர், நம் நாடு, இல்லம், உறைவிடம், பள்ளி, என்ற எத்தனை பெயர் கொண்டு அழைத்தாலும் போதாது. உலக வரரைபடத்தில் கண்ணுக்கே தெரியாத சிறு புள்ளியாக இருந்தாலும், கல்வி, மருத்துவம், வணிகம் முதலிய பல்வேறு தொழில்களில் அதிவேகத்தில் முன்னேறுகிறது நம் சிங்கப்பூர். இப்படிப்பட்ட நாட்டின் குடிமக்களாக இருக்க நாம் தினமும் பெருமை கொள்கிறோம், தலை நிமிர்ந்து நடக்கிறோம். ஆனால், சிஙப்பூரை நிம்மதி மிகுந்த வெற்றிகரமான தேசமாக வைத்துக்கொள்வதில் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பங்குண்டு. அதன் ஒரு முக்கிய கூறே சமூக ஒற்றுமையும் நல்லிணக்கமும். இவற்றைக் கடைப்பிடித்து வாழ்வது நம் அனைவரின் தலையாய கடமையாகும். என்னைப் போன்ற மாணவர்களுக்கும்கூட இதில் முக்கியப் பங்குள்ளது. ஆம், நமக்கும் ஒரு மிகப்பெரிய பங்குள்ளது, சரிதானே நண்பர்களே? இப்பங்கைப்பற்றி நான் இவ்வுரையில் மேலும் விளக்குகுகிறேன்!

 

சின்ன சின்ன பிள்ளைகளை நம்பி,

இந்த நாடே இருக்குது தம்பி!

சின்னஞ்சிறு கைகளை நம்பி,

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி!

என்ற பாடல்வரியை நான் பலமுறை கேள்வியுற்றுள்ளேன். சிறுவயதில் கேட்டபோது, அவற்றின்  உண்மையான மகத்துவம் எனக்குப் புரியவில்லை, ஆனால், நான் வளர வளர இவ்வரிகளில் உள்ள உண்மையை நான் மெல்ல மெல்ல உணரத் தொடங்கினேன். இக்காலத்து இளையர்களும் பிள்ளைகளுமேதான், நாளைய சமுதாய தலைவர்களாகவும் மாறுகிறார்கள். அதனால்தான், மாணவர்களாகிய நாம், பள்ளிப்பருவத்திலேயே  இன நல்லிணக்கத்தைப் பற்றியும் பிற இனக் கல்லாச்சாரங்களைப்பற்றியும் நன்கு அறிந்து புரிந்துகொள்ளவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள நம் சீன, மலாய், தமிழ் முதலிய அனைத்து இன நண்பர்களையும் பிரித்துப் பார்க்காமல், ஒரே தராசில் வைத்து வேறுபாடில்லாமல் நட்பு பாராட்ட வேண்டும். 

சிறுவயதில் நம் மனதில் இவ்வெண்ணங்கள் வளர்ந்துவிட்டால், நாம் வளர வளர இதே  நல்லெண்ணத்தோடும் பாகுபாடின்மையோடும் எல்லாரோடும் பழகுவோம்.தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைஎன்று கூறுவர், அதுபோல நாமும் இந்த நல்ல வழக்கத்தைச் சிறுவயதிலிருந்தே கடைப்பிடித்தால், நம் இறுதிக்காலம் வரை இன நல்லிணக்கத்திற்கு நம்மால் முடிந்த பங்கை ஆற்ற இயலும். நம்மில் ஒருவர்கூட முன்வந்து, இன வேறுபாடுகளை எதிர்த்தாலே போதும், அது நம் சமுதாயத்தையே மாற்றியமைக்கும்.

இரண்டாவதாக, மாணவர்களாகிய நமக்கு இக்காலத்தில் கண்டிப்பாக தகவல் தொழில்நுட்பத் தொடர்புத்திறன் கற்பித்து வளர்க்கப்பட்டிருக்கும். எனக்குத் தெரியும், நீங்கள் அனைவரும் என்ன யோசிக்கிறீர்கள் என்று. தகவல் தொழில்நுட்பத் தொடர்புத்திறனிற்கும், சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருத்தலில் மாணவரின் பங்கிற்கும் என்ன தொடர்பு உள்ளது? என்று தானே யோசிக்கிறீர்கள்? நான் கூறுகிறேன், கேளுங்கள். தொழில்நுட்ப வளர்ச்சியடந்த இவ்வுலகில், நொடிக்கு நொடி நமக்குத் தகவல்கள் வருகின்றன. ஆனால், அவற்றில் எவை பொய் எவை உண்மை என்பதை நம்மில் பலர் ஆராயத் தவறுகிறோம். அதிலும் சிலர் ஆராயாமலே பல செய்திகளைப் பரப்புகிறார்கள். இதனால், தகவல்கள் மாறுபட்டு, மக்கிளிடையே பொய்யான எண்ணத்தை உருவாக்குகிறது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இவ்வாறு நடப்பது மிகவும் அபாயமான ஒன்றாகும். ஒரு இனத்தைப்பற்றி தவறான, பொய்யான செய்தி ஒன்று வெளிவந்து, அதை அனைவரும் நம்பிவிட்டால், அவர்கள் மனதில் இவ்வினத்தைப்பற்றிய கெட்ட அபிப்பிராயம் ஏற்பட்டுவிடும். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும் எண்ணங்களும் நிலைப்பாடுகளும்தான், இறுதியில் இனவெறியாகவும் இனவெறுப்பாகவும் வெடிக்கின்றன. ஆனால், நமக்கோ, பொய்யான செய்தியையும் உண்மையான செய்தியையும் வேறுபடுத்த கற்பிக்கப்பட்டுள்ளது. நாம் தவறான தகவல்களின் வலையில் சிக்கிக்கொள்ளாமல், அவ்வாறு பரவும் தவறான தகவல்களைப்பற்றி விழிப்புணர்வும் ஏற்படுத்தலாம். ஓர் இனத்தை அவமானப்படுத்தும் எண்ணத்தோடு பரப்பப்படும் ஏதேனும் ஒரு பொய்யான செய்தியை நாம் கண்டால், அதைப்பற்றி நம் பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள் ஆகிய அனைவரிடமும் கூறி, அதைப் பரப்ப வேண்டாம் என்று கூறலாம். இது ஒரு சிறிய செயலாக தெரிந்தாலும், “சிறு துளி, பெரு வெள்ளம்என்ற பழமொழிக்கேற்ப, நாம் ஒவ்வொருவரும் இச்சிறிய செயலைச் செய்தால், அது நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இறுதியாக, மாணவர்களாகிய நாம் அனைவருக்கும் ஒரு குரல் உள்ளது, நீதி மனப்பாண்மை உள்ளது. பள்ளியில் ஒவ்வொரு நாளும் நாம் நியாயத்தைக் கடைப்பிடிப்பது பற்றியும், தவறு நடப்பதைப் பார்த்தால் தட்டிக்கேட்க வேண்டும் என்பது பற்றியும்  கற்கிறோம். அது கற்றலோடு  மட்டும் நின்றுவிடாமல், நம் வாழ்வில் இடம்பெற வேண்டும். நம் முன் யாரோ தன் மற்ற இன நண்பனைக் குறைத்துப்  பேசுவதையோ இனரீதியாக அவமானப்படுத்துவதையோ நாம் கண்டால், அதை எதிர்த்து நின்று துணிச்சலாகக் கேள்வி கேட்க வேண்டும்; நடக்கும் தவறைத் தடுக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நான் தவறு செய்யாமல் இருந்தால் மட்டும் போதும்; தவற்றைத் தட்டிக்கேட்பது என் கடமையல்ல என்று எண்ணுவோர் பலருண்டு. ஆனால், அது மிகத்தவறான எண்ணப்போக்கு. கண்ணெதிரே நடக்கும் அநீதியைத் தடுப்பது ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும். மாணவர்களாகிய நாமும் பள்ளி, கடைத்தொகுதி, உணவகம் என்று பார்க்காமல், எங்கு இனரீதியாக தவறு நேர்ந்தாலும் அதைத் தட்டிக்கேட்க வேண்டும்.

சரி, இவ்வுரையில், மற்ற இனத்தவரை மதித்து நடப்பதைச் சிறு வயதிலிருந்தே பழக்கமாக்குவது, இனந்தொடர்பாக வரும் பொய்யான செய்திகளை முடக்குவது, இனத்தவறுகளைத் தட்டிக்கேட்பது ஆகியவை இன மற்றும் சமூக ஒற்றுமை நிலைத்திருக்க மாணவர் செய்யும் பங்கு என்று பகிர்ந்துகொண்டுள்ளேன். இதுவரை என் உரையைக் கேட்ட அனைவருக்கும், நான் மனதார நன்றி நல்கி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்!

                                                      ****





'பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு’ எனும் தலைப்பில் ஒரு சிற்றுரை எழுதவும்.

 

Lithra Ramamoorthy -  Year 4 - 408 - 2025 

இனிய மாணவர்களே; வருங்கால தலைவர்களே!  மற்றுமுள்ள பார்வையாளர்களே! உங்களஉங்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்களைத் தெரிவித்து எனது சொற்பொழிவைத் தொடங்க விரும்புகிறேன். இப்போது, நான் உங்கள் அனைவரையுமே சற்றுச் சிந்திக்க வைக்கும் விதத்தில் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். உங்களில் எத்தனை பேரின் பெற்றோர்மலாய் தோழிகளை வைத்துக்கொள்ளாதே,” அல்லது, “சீனக்காரர்கள் இப்படித் தான்,” அல்லது, “இந்தியர்களுடன் பழகாதே,” போன்ற கருத்துகளைக் கூறிக் கேட்டிருக்கிறீர்கள்? இது போன்ற கருத்துகள் இப்பொழுது சிறியதாகத் தெரியும்; “வீட்டிற்குள் பேசுவதுதானே? அதில் என்ன தவறு இருக்கிறது?” என்று பலர் யோசித்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால், இதுபோன்ற சிறிய சிறிய கருத்துகள் சிறு துளி பெருவெள்ளமாய்ச் சேர்ந்து, நமது சமூக ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கும் சூழலை எழுப்புவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, இந்தச் சிற்றுரையின் மூலம், நமது நாட்டிற்கு வருங்கால தலைவர்களாக விளங்கப்போகிற மாணவர்களாகிய உங்களிடம், பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவர்களின் பங்கு பற்றி விளக்கப் போகிறேன்.

முதலாவதாக, “மாணவர்களாகிய நாம் எதற்காகப்  பங்காற்ற வேண்டும்? அதற்குத்தான்  அரசாங்கம் இருக்கிறதே,” என்ற கேள்வி இந்நேரம் உங்களில் பலரது மனங்களில் எழுந்திருக்கும் என்று நம்புகிறேன். இதற்குப் பதிலளிக்க, மானவர்களாகிய நாங்கள் தான் போன தலைமுறைகளின் தவறான எண்ணங்களை உடைத்து, வரும் தலைமுறைகளுக்குச் சிறந்த முன்னோடிகளாக விளங்கவேண்டும். அதனுடைய முதல் படி, நமது வீட்டிற்குள்ளே ஆரம்பமாகுகிறது. மற்ற இனத்தவரிடம் கோபமாகவோ எரிச்சலுடனோ நடந்துகொள்ளும் பெரும்பாலான இளையர்கள் உண்மையில் அதுபோன்ற கருத்துகளைக் கொள்வதில்லை. பெற்றோர் அல்லது மூத்த உறவினர்கள்கள் தான் அதுபோன்ற தவறான கருத்துகளை அவர்களது மனங்களில் பதியும் சூழலை உருவாக்குவர். இதனைத் தடுத்து நிறுத்துவது, மாணவர்களாகிய நமது தலையாய கடமையாக விளங்கவேண்டும். வீட்டினுள் மற்ற இனத்தைப் பற்றிய தவறான கருத்துகளைப் பேசும்போது, அதனைச் சுட்டிக்காட்டி, வேரோடு அறுக்க வேண்டும். அதன் மூலம், இது போன்ற தவறான கருத்துகளைப் பரப்புவதை நிறுத்தலாம். சில நேரம், நாமே மற்ற இனத்தவரைத் தவறாக பேசுகிறோம்  என்று உணரவே மாட்டோம். ஆனால், அவை நம் அன்றாட கலந்துரையாடல்களில் இலைமறை காய்போல் ஒளிந்திருந்தும், அவற்றைச் சுட்டிக்காட்டி, கண்டிப்பதுதான் சமூக ஒற்றுமைக்குப் பங்காற்ற நமக்கு வழிவகுக்கும். 

இரண்டாவதாக, தவறான கருத்துகளை ஒழிப்பது மட்டும் போதாது; புதிய நல்லக் கருத்துகளைப் பரப்பவேண்டும். அடுத்த படியாக, வீட்டுக்குள் மட்டுமின்றி, வெளியுலகத்தில் உள்ள மற்ற இனத்தவரின் மீது ஆர்வம் கொள்ளவேண்டும். மற்ற இனத்தவரிடம் போய் பேசி, பழகி, அவர்களின் கலாச்சாரம் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்! அப்போது, அவர்கள் மீது இருந்த உங்களது தவறான அபிப்பிராயங்கள் எவ்வளவு வேகமாக களைபிடுங்கப்படும் என்று நீங்களே பார்ப்பீர்கள். பெரும்பாலான தவறான கருத்துகள்; புண்படுத்தும் வார்த்தைகள் ஏதோ ஒரு அறியாமையிலிருந்துதான் எழுகின்றன. அந்த அறியாமையைக் கோபமாகக் காட்டாமல் ஆர்வமாகக் காட்டப் பழகுங்கள்!உணவு வாசனை மிகவும் அதிகமாக இருக்கிறது, எனக்குப் பிடிக்கவில்லை,” என்று நினைக்காமல், “இவ்வுணவு வகையில் எவற்றைச் சேர்த்திருக்கிறீர்கள்? நான் சுவைத்துப் பார்க்கலாமா?” என்று கேட்டுப் பழகுங்கள்! இதன் மூலம், ஒருவரைப் பற்றி இன்னொருவர் ஆர்வம் கொண்டு, கலாச்சாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் சமுதாயத்தை உருவாக்கலாம். 

கடைசியாக, “நான் அடுத்த படியாக பங்காற்ற விரும்புகிறேன்! எவ்வழிகள் உள்ளன?” என்று உங்களில் பலரிடம் ஆர்வம் தோன்றியிருக்கும் என்று நம்புகிறேன். முதலில், உங்கள் பள்ளிகளிலே சமூக ஒற்றுமையைப் பாதுகாப்பதைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். பள்ளியில் நண்பர்களிடம் இன நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வழிகளைப் பகிர்ந்துகொள்வதோடு, பிறர் மற்ற இனத்தவர்மீது தவறான அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கும்போது, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் புதிய நல்ல கருத்துகளை எடுத்துரைக்கலாம். இதன் மூலம், அவர்கள் தவற்றை உணர்ந்து, தமது தவறான கருத்துகளை விட்டுவிடுவார்கள். மேலும், தமது இனத்தைப் பற்றிய தவறான கருத்துகளால் புண்பட்டு துடுப்பில்லாமல் நீரில் தத்தளிக்கும் ஒருவரிடம் கைகொடுக்கலாம். இதுபோன்ற செயல்கள் சிறியதாகத் தெரியும். ஆனால், அவை ஒருவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கலாம். அனைவரும் இதுபோன்ற சிறிய படியை முன்வைத்தால் போதும், நம் சமுதாயம் மேலும் ஒற்றுமையாகத் திகழும்.  மாணவர்களுள் சிலர் சமூக ஊடகங்களில் திறமையானவர்களாக இருக்கிறார்கள். அதுபோன்றவர்கள் சமூக ஊடகங்களில் இன நல்லிணக்கத்தை உண்டாக்கும் தகவல்களைப் பகிர்வதன் மூலம், மற்ற மாணவர்களுக்கு இத்தகவல்கள் விரைவாகப் போய் சேரும்; விழிப்புணர்வை உருவாக்கலாம்.

சுருங்கக்கூறின், மாணவர்களாகிய நாம், பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமையை நிலைத்திருக்க செய்வதில் பங்காற்ற பல வழிகள் உள்ளன. வீட்டிலிருந்து ஆரம்பித்து, பள்ளியில் தொடர்ந்து, சமுதாய அளவிற்கு கூட விழிப்புணர்வைக் கொண்டு செல்லும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் நிறைந்திருக்கிறது.ஊருடன் ஒத்து வாழ்என்ற ஔவையின் எளிய, அழகிய பொன்மொழியை மனதில் கொண்டு நாம் ஒவ்வொருவரும் நடந்துகொண்டால், நமது சமூகம் விதவிதமான அழகிய பூக்களைக் கொண்ட பூந்தோட்டத்தைப் போல் திகழும். என் சிற்றுரையை இதுகாறும் செவிமடுத்ததற்கு என் அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவித்து, பணிவுடன் விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

                                              *****


Monday, June 23, 2025

நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிச் சேர்ப்பதால் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சியைப் பெற்றுவிட இயலாது. இக்கருத்தினை நீ ஏற்றுக்கொள்கிறாயா? ஏன்?

பாண்டியன் மல்லிகா ஶ்ரீ - 405 - 2025 

மகிழ்ச்சி என்பது இயற்கை, மனிதர்களுக்கு அளித்த பரிசாகும். நாம் நமக்குப் பிடித்தமான உணவைச் சாப்பிடும்போதோ, பெற்றோர்களுடன் அல்லது நண்பர்களுடன் நேரத்தைக் கழிக்கும்போதோ மகிழ்ச்சியில் இதயம் ஊஞ்சலாடும். மகிழ்ச்சியைப் பெறுவதற்கு வெவ்வேறு வழிகள் உள்ளன.

மகிழ்ச்சி என்ற உணர்வு ஒரு பொருளால்  வரலாம், விலங்கால்  வரலாம் அல்லது ஒரு மனிதனால் கூட  வரலாம். அம்மகிழ்ச்சி வெவ்வேறு மனிதனுக்கும் வேறுபட்டதாக இருக்கும். ஆனால், இக்காலத்தில், பெரும்பாலான  மக்கள் தங்களது கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அக்கைத்தொலைபேசியில் இருக்கும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு நிறுவனங்கள்ஒவ்வொரு மாதமும் புதிதாக வெளியிடும் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். 'shein', 'lululemon' போன்ற உடைகள் விற்கும் கடைகள் ‘Instagram', 'Tiktok’ போன்ற இணைய வலைத்தளங்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன. 

மேலும், இக்காலத்தினர்  அந்நிறுவனங்கள், வெளியிடும் பொருட்களை உடனுக்குடன் வாங்கி மற்றவர்களிடம் காட்டுவதில் அதிக ஆர்வத்தைக் காட்டுகிறார்கள். மற்றவர்கள் அப்பொருட்களைப் பார்த்து ஆச்சரியம் அடையும்போது அப்பொருட்களை வாங்கியவருக்குப் பாலில் விழுந்த பழத்தைப் போல் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நிறுவனங்கள் வெளியிடும் புதிய புதிய பொருட்களை வாங்குவதன் மூலம் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சி பெறுகிறாரா? இதற்காகவா இயற்கையாகவே மனிதனுக்குள் மகிழ்ச்சி என்ற சிறப்பான உணர்வு உள்ளது? ஆகையால், நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிச் சேர்ப்பதால் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சியைப் பெற்றுவிட இயலாது என்பது எனது ஆணித்தரமான கருத்தாகும். 

முதலாவதாக, குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் அன்பார்ந்த நேரத்தைச் செலவிடுவது. அன்பு என்ற உணர்வு நம் அனைவரிடமுமே உள்ளது. நாம் நம் குடும்பத்தினரிடம் அல்லது நண்பர்களிடம் அதிக அன்பை வெளிக்காட்டுகிறோம். குடும்பம் இல்லாமல் நம்மால் யாராலும் வாழ இயலாது.

" அன்பிற்கு உண்டோ அடைகுந்தாழ் ஆர்வலர்

   பூசல் தரும் புன்கணீர்” 

என்ற திருகுறளுக்கேற்ப, ஒருவர் தம்மிடம் உள்ள அன்பை அடக்கி வைக்க நினைத்தாலும், தம் குடும்பத்தினர் வேதனையில் இருக்கும்போது அன்பு என்ற உணர்வு வழியும். நாம் நம் குடும்பத்தினருடன் பூங்காவிற்குச் சென்று நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, அல்லது வெளியூருக்கு  சென்று நேரத்தை கழிக்கும் போது நமக்கு ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி ஏற்படும். இல்லையென்றால், நாம் ஒரு பிரச்சனையை  எதிர்க்கொள்ளும்போது நமது குடும்பத்தினர் நமக்கு ஊன்றுகோலாக இருப்பதும் நம்மிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி மகிழ்ச்சி அடைய வைக்கும். மேலும், நாம் நம் குடும்பத்துடன் விழாக்கள் அல்லது பண்டிகைகளைக் கொண்டாடும்போது ஒரு தனிக் குடும்ப உணர்வு ஏற்படும். அவ்வுணர்வே குடும்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும். இதனால், குடும்பத்துடன் அதிகளவு நேரத்தைச்  செலவிடுவது ஒரு தனித்துவமான மகிழ்ச்சியை ஏற்படுத்தும்

அடுத்ததாக, நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுலது. பள்ளிப் பருவத்திலிருந்தே வேலை செய்யும் பருவம் வரை ஒரு மனிதனுக்கு நண்பர்கள் இருப்பார்கள். நண்பர்கள் என்பவர்கள் நாமே  உருவாக்கிக்கொள்ளும் குடும்பமாகும். நாம் நம் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ள முடியாத கவலைகளையும் தகவல்களையும் நாம் நம் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம். நண்பர்கள் நாம் ஒரு வெற்றியை அடையும்போது நம்மை மேலும் ஊக்குவிப்பார்கள். அதைக் கேட்பதால் ஒருவித மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களுடன் புதிய புதிய வெளியிடங்களுக்குச் சென்று நேரத்தைச்  செலவிடுவதிலும் ஒரு ஆனந்தம் ஏற்படுகிறது. இதனால், நண்பர்களுடன் அதிகளவு நேரத்தைச் செலவிடுவது ஒரு அற்புதமான ஆனந்தத்தை அளிக்கும். 

அடுத்ததாக, நன்னெறிகளை வளர்த்து, தொண்டூழியம் புரிவது.

"காலத்தினாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின்  மாணப் பெரிது"  

 

என்ற குறளுக்கேற்ப, நாம் செய்யும் தொண்டூழியச் சேவை. சிறிதளவில் இருந்தாலும் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் சக்தியைப் பெற்றுள்ளது. நாம் வேலை முடித்த பின்போ பள்ளி விடுமுறைக்காலங்களிலோ நமது நேரத்தைத் திட்டமிட்டுச் செயல்பட்டுத் தொண்டூழிய வேலையில் ஈடுபடவேண்டும். நாம் தொண்டூழியம் புரிவதால், நாம் உதவி செய்யும் மக்களுக்கு ஒரு நம்பிக்கையும் ஏற்படும்.சமூகத்தில் நமக்கு  உதவுவதற்காக மக்கள் தயாராக இருக்கின்றனர், " என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும். வயதானவர்களுடன் அல்லது பிள்ளைகளுடன் நேரத்தைச்  செலவிடுவது அவர்களுக்கும் இனிய அனுபவமாக இருக்கும், நாமும் நமது சமுகத்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஒருவருக்கு நாம் உதவி செய்யும் பொழுது அவரது முகத்தில் தெரியும் பிரகாசத்தைப்  பார்த்தாலே போதும், ஒரு அளவுக்கு மீறி மகிழ்ச்சி மழை கொட்டும். இதனால், தொண்டூழியம் செய்வதாலும் ஒருவர் மகிழ்ச்சி அடைவார் என்று  உறுதியாகக் கருதுகிறேன்.

ஆனால், சிலர், குடும்பங்களுடன் அல்லது நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதற்கோ  தொண்டூழியம் புரிவதற்கோ அதிக நேரம் இல்லாத  காரணத்தினாலும் கைத்தொலைப்பேசியிலேயே வாங்கக்கூடிய புதிய புதிய பொருட்களால் ஈர்க்கப்படுகின்றனர் என்றும் அப்பொருட்களை வாங்குவதிலேயே அதிகளவு மகிழ்ச்சி இருக்கிறது என்றும் கருதுகின்றனர்.

அக்கருத்தை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஏனென்றால், இக்காலத்தில் வேலைப்பளுவால் பலரால் தங்களது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட முடிவதில்லை. அதற்கு மேல் தொண்டூழியம் புரிவதற்கும் அதிக ஈடுபாடில்லை. இதனால், பலர் ஒய்வு நேரங்களில் கைத்தொலைபேசியையே பயன்படுத்தி புதிய புதிய பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். 

ஆனால், மனிதர்களுடன் இருக்கும் உறவுகளை விட இந்நிறுவனங்கள் தயாரிக்கின்ற பொருட்கள் உயர்ந்ததா? மற்ற மனிதர்களுடன் வளர்த்துக்கொள்ளும் உறவை விட ஒரு பொருள் உயர்ந்தது அல்ல. நாம் வாழ்க்கையில் முன்னேறியதற்கான காரணமாகத்  திகழும் நம் குரும்பத்தினருடன் பேசுவதற்கு நேரத்தை ஒதுக்கவேண்டும், நமது வாழ்க்கைப்  பயணத்தில் நம்முடன் பயணித்த நண்பர்களுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். முக்கியமாக, இச்சமூகத்திற்கு நாம் திரும்பி உதவி புரிவதற்கும் நாம் நம் நேரத்தை ஒதுக்கவேண்டும். இம்மூன்றைச் செய்தாலே, நமக்கு ஏற்படும்

மனநிறைவும் மகிழ்ச்சியும் மேலானதாக இருக்கும். இதனால்,

               "ஞாலம் கருதினும் கைக்கூடும் காலம்

               கருதி யிடத்தாற் செயின் "

 

என்பதற்கேற்ப நமது நேரத்தைத் தகுந்த முறையில் திட்டமிட்டுத்  தகுந்த காலத்தில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிடுவது, தொண்டூழியம் புரிவது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலமும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

இறுதியாக, நிறுவனங்கள் விற்கும் புதிய புதிய பொருட்களை வாங்கிக் குவிப்பது ஆடம்பர வாழ்க்கையாகும். ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமையாகும். நாம் மாதந்தோறும் பணத்தைச்  செலவழித்துக்கொண்டே இருந்தால், இறுதியில், கடன்களைப்  பெற வேண்டியிருக்கும். இதனால் என்ன மகிழ்ச்சி ஏற்படுகிறது? ஆனந்தம் ஏற்பட்டலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, என்பதை நினைவில் கொண்டு புதியபுதிய பொருட்களை வாங்காதது சிறப்பானதாகும்.

இக்கட்டுரையில், நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிக் சேர்ப்பதால்  ஒருவர் மகிழ்ச்சியைப் பெற இயலாதென்றும் குடும்பத்துடன், நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட்டும் தொண்டூழியும் புரிவதும் ஒரு தனித்துவமான மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது என்பதை விளக்கினேன். மகிழ்ச்சி புதிய பொருட்களை வாங்குவதால் மட்டும் ஏற்படாது. மகிழ்ச்சியைல் பணம் கொடுத்து வாங்க முடியாது, உறவுகளால் வளர்க்க முடியும்.

                               ***************

எல்லாத்துறைகளிலும், சிறப்பாகச் செய்யும் நாட்டில் வாழும் மக்கள் எளிதில் மனநிறைவு அடைவதில்லை. கருத்துரைக்க.


பாண்டியன் மல்லிகா ஶ்ரீ - 405 - 2025 

எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாடுகளில், அமெரிக்க, ஜப்பான், பின்லாந்து, சிங்கப்பூர் போன்ற பற்பல நாடுகள் அடங்கும். இந்நாடுகள், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்வதால், அந்நாட்டு மக்கள் மனநிறைவு அடைகிறார்களா? முதலில், மனநிறைவு எப்படி நம் வயிறு நிரம்பியவுடன் போதும் என்று தோன்றுகிறதோ, அவ்வாறு மனம் கிடைத்ததை வைத்து நிறைவு அடைவது ஆகும். ஆனால், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாடுகளில், போட்டித்தன்மை, விலைவாசி உயர்வு, அதிகரித்த எதிர்பார்ப்புகள், மனஅழுத்தும் போன்ற காரணங்களால் அந்நாடுகளில் வாழும் மக்கள் எளிதில் மனநிறைவு அடைவதில்லை என்பது என் ஆணித்தரமான கருத்தாகும். இக்கட்டுரையில், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாட்டில் வாழும் மக்கள் எளிதில் மனநிறைவு அடையாததன் காரணங்களை விளக்குகிறேன்.

முதலாவதாக, போட்டித்எண்மை அதிகரிப்பு. எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாடுகளில், எடுத்துக்காட்டாக, தொழில் நுட்பம் அதிவேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அசுரவளர்ச்சி அடைந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ள இயலாதவர்களால், போட்டித்தன்மை மிகுந்த உலகில் முன்னேற இயலாது. இம்மாதிரியான போட்டித்தன்மையால், குறைந்த வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அதோடு, வேலை செய்பவர்களும் தொடர்ந்து தங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால், வேலை வாய்ப்புகளைத் தேடும் நபர்களும் வேலை வாய்ப்பை நழுவவிடாமல் கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் நபர்களும் போட்டித்தன்மையால் மன அழுத்தத்திற்கு ஆளாகுகின்றனர்.

உதாரணமாக, 2024 ஆம் ஆண்டில், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் ஒரு நாடாக திகழும் சிங்கப்பூர், போட்டித்தன்மைத் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பெற்றதாக 'தமிழ் முரசு குறிப்பிட்டது. மேலும், சிங்கப்பூரில், மன அழுத்த சதவீதம் 2021 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றும், 87 சதவீதம் சிங்கப்பூரர்கள் மன அழுத்தத்தை உணர்ந்ததாக

தெரிவித்துள்ளனர் என்று 'CNA' தெரிவித்துள்ளது. இதனால், சிங்கப்பூரில் கல்வித்துறை சிறந்து விளங்குவதால், அனைத்து மாணவர்களுக்கும் போதுமான கற்றல் பாடங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், அனைத்து மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க, கடினமாக உழைத்து கற்றுக்கொள்கிறார்கள். சிங்கப்பூர் மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சிபெறாமல் இருந்தால், மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். 

‘NTU’ வெளியிட்ட தகவலின்படி, 86 சதவீதம் சிங்கப்பூர் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கல்வித்துறையில் அல்லது எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடுகளில் போட்டித்தன்மை அதிகரிப்பால் அந்நாட்டு மக்கள் மனநிறைவு அடைவதில்லை. பொருளாதார உயர்வுக்கும் காரணமாக அமைந்துள்ளது. ஒரு நாடு எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படுவதால், அதனுடைய பொருளாதாரமும் உயரும். அந்நாட்டில் பொருளாதாரம் அதிகரிப்பால், விலைவாசியும் உயருகிறது. விலைவாசி உயர்ந்தாலும், மக்களது சம்பளம் அதிகமாகாமல் இருப்பதால், மக்கள் பணப்பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கையின் தினசரி தேவைகள் படிப்படியாக உயர்கின்ற நிலையில், பணப்பற்றாக்குறை ஏற்படுவதால், மக்கள் மேலும் கடினமாக உழைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால், மக்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, மருத்துவத்திலும் சிறந்து விளங்கும் நாடாகத் திகழும் சிங்கப்பூரில், மருத்துவ சேவைகளின் செலவுகள் மிகவும் விலையுயர்ந்ததாக இருக்கின்றன. மருத்துவ சேவைகளின் தரம் உயர்ந்ததாக இருப்பதால், கட்டணங்களும் அதிகரிக்கின்றன. இதனால், மக்கள் மருத்துவச் செலவுகளைக் கண்டு மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.இதனால், எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கும் நாட்டில் வாழும் மக்கள், விலைவாசி உயர்வால், மனநிறைவு அடைவதில்லை.

மூன்றாவதாக, அதிகரிக்கும் எதிர்ப்பார்ப்புகள். எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடுகளில், பெரும்பாலான  சேவைகளும் வசதிகளும் சிறந்த தரத்தில் இருக்கும். இவையெல்லாம் மந்திரத்தினால் வருவதில்லை, அந்நாட்டில் உள்ள உழைப்பாளர்கள் கடினமாக உழைத்து நாட்டின்

பொருளாதாரத்தை உயர்த்தியும், அரசாங்கத்தின் நல்ல அணுகுமுறைகளாலும் திட்டங்களாலும் உருவாக்கப்படுகின்றன. எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல் படுகின்ற நாடாக உலகளவில்  தோன்றுவது அந்நாட்டின் மக்களுக்குப் பெருமையாக இருப்பதோடு மற்ற நாடுகளுக்கும் அந்நாடு ஒரு முன்மாதிரியாகத் திகழும். எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடு என்ற முத்திரையை ஒரு நாடு அடையும்போது, அதைப் பல வருடங்களுக்கு தக்கவைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்களும் அரசாங்கமும் ஆசைப்படும். இதனால், இம்முத்திரையை நிலைக்க வைக்க, அந்நாட்டு மக்கள் மேலும் தங்களது. வேலைகளில் சிறந்து செயல்பட்டு, மேலும் கடினமாக உழைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இம்மாதிரியான எதிர்பார்ப்புகளால், எல்லாத்துறைகளிலும்  சிறந்து செயல்படும் நாட்டில் வாழும் மக்கள் மனநிறைவு அடைவதில்லை.

"மனநிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடம்

உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாமே 

தேடிக்கொள்ளும் வறுமை

 

என்று சாக்ரடீஸ் கூறியதுபோல, மனிதர்களாகிய நாம், நம்மிடம் இருப்பதை வைத்து எந்நேரமும் மகிழ்ச்சியாகவோ மனநிறைவாகவோ இருந்ததில்லை. நாம் எப்பொழுதும் முன்னேறப் பார்க்கிறோம். இதனால், நம்மிடம் இருக்கும் செல்வத்தை நாம் பொருட்படுத்தாமல், மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டும், நம்மை நாமே மாற்றிக்கொள்கிறோம். 

இதனால், எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடுகளில் இருக்கின்ற மக்கள், தங்களது நிலையின் மதிப்பை அறியாமல் நன்றியற்றவராக இருக்கின்றனர். எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படாத நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையை ஒப்பிடும்போது, எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும் மக்களின் நிலை ஓரளவிற்கு மேம்பட்டு இருக்கும். ஆனால், இதை அந்நாட்டு மக்கள் புரிந்துகொள்ளாததாலும், அந்நாடு வழங்கும் வசதிகளையும் சேவைகளையும் பொருட்படுத்தாததாலும், அந்நாட்டு மக்கள் மனநிறைவு அடைவதில்லை. தங்களிடம் இருக்கும் செல்வத்தை வைத்து அவரவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தாலே, அவர்கள் எப்பொழுதும் மனநிறைவாக இருப்பார்கள். இதனால், எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும் மக்கள், மனிதனின் ஆசைப்படும் குணத்தால் மனநிறைவு அடைவதில்லை.

இக்கட்டுரையில், எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும் மக்கள் மனநிறைவு அடையாததற்கான  காரணங்களைப் பற்றி என் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். சுருக்கமாக, அதிகரிக்கும் போட்டித்தன்மையினால் ஏற்படும் மன அழுத்தம், பொருளாதார உயர்வால் விளையும் விலைவாசி உயர்வு, 'எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடு' என்ற எதிர்ப்பார்ப்பைத் தக்கவைப்பது மற்றும் மனிதனின் ஆசைப்படும் குணம் ஆகிய காரணங்களால் எல்லாத்துறைகளிலும்,சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும் மக்கள் மனநிறைவு அடைவதில்லை, என்ற எனது ஆணத்தரமான கருத்தை இக்கட்டுரையில் முன்வைத்துள்ளேன். 

****************


குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...