Monday, June 23, 2025

நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிச் சேர்ப்பதால் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சியைப் பெற்றுவிட இயலாது. இக்கருத்தினை நீ ஏற்றுக்கொள்கிறாயா? ஏன்?

பாண்டியன் மல்லிகா ஶ்ரீ - 405 - 2025 

மகிழ்ச்சி என்பது இயற்கை, மனிதர்களுக்கு அளித்த பரிசாகும். நாம் நமக்குப் பிடித்தமான உணவைச் சாப்பிடும்போதோ, பெற்றோர்களுடன் அல்லது நண்பர்களுடன் நேரத்தைக் கழிக்கும்போதோ மகிழ்ச்சியில் இதயம் ஊஞ்சலாடும். மகிழ்ச்சியைப் பெறுவதற்கு வெவ்வேறு வழிகள் உள்ளன.

மகிழ்ச்சி என்ற உணர்வு ஒரு பொருளால்  வரலாம், விலங்கால்  வரலாம் அல்லது ஒரு மனிதனால் கூட  வரலாம். அம்மகிழ்ச்சி வெவ்வேறு மனிதனுக்கும் வேறுபட்டதாக இருக்கும். ஆனால், இக்காலத்தில், பெரும்பாலான  மக்கள் தங்களது கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அக்கைத்தொலைபேசியில் இருக்கும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு நிறுவனங்கள்ஒவ்வொரு மாதமும் புதிதாக வெளியிடும் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். 'shein', 'lululemon' போன்ற உடைகள் விற்கும் கடைகள் ‘Instagram', 'Tiktok’ போன்ற இணைய வலைத்தளங்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன. 

மேலும், இக்காலத்தினர்  அந்நிறுவனங்கள், வெளியிடும் பொருட்களை உடனுக்குடன் வாங்கி மற்றவர்களிடம் காட்டுவதில் அதிக ஆர்வத்தைக் காட்டுகிறார்கள். மற்றவர்கள் அப்பொருட்களைப் பார்த்து ஆச்சரியம் அடையும்போது அப்பொருட்களை வாங்கியவருக்குப் பாலில் விழுந்த பழத்தைப் போல் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நிறுவனங்கள் வெளியிடும் புதிய புதிய பொருட்களை வாங்குவதன் மூலம் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சி பெறுகிறாரா? இதற்காகவா இயற்கையாகவே மனிதனுக்குள் மகிழ்ச்சி என்ற சிறப்பான உணர்வு உள்ளது? ஆகையால், நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிச் சேர்ப்பதால் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சியைப் பெற்றுவிட இயலாது என்பது எனது ஆணித்தரமான கருத்தாகும். 

முதலாவதாக, குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் அன்பார்ந்த நேரத்தைச் செலவிடுவது. அன்பு என்ற உணர்வு நம் அனைவரிடமுமே உள்ளது. நாம் நம் குடும்பத்தினரிடம் அல்லது நண்பர்களிடம் அதிக அன்பை வெளிக்காட்டுகிறோம். குடும்பம் இல்லாமல் நம்மால் யாராலும் வாழ இயலாது.

" அன்பிற்கு உண்டோ அடைகுந்தாழ் ஆர்வலர்

   பூசல் தரும் புன்கணீர்” 

என்ற திருகுறளுக்கேற்ப, ஒருவர் தம்மிடம் உள்ள அன்பை அடக்கி வைக்க நினைத்தாலும், தம் குடும்பத்தினர் வேதனையில் இருக்கும்போது அன்பு என்ற உணர்வு வழியும். நாம் நம் குடும்பத்தினருடன் பூங்காவிற்குச் சென்று நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, அல்லது வெளியூருக்கு  சென்று நேரத்தை கழிக்கும் போது நமக்கு ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி ஏற்படும். இல்லையென்றால், நாம் ஒரு பிரச்சனையை  எதிர்க்கொள்ளும்போது நமது குடும்பத்தினர் நமக்கு ஊன்றுகோலாக இருப்பதும் நம்மிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி மகிழ்ச்சி அடைய வைக்கும். மேலும், நாம் நம் குடும்பத்துடன் விழாக்கள் அல்லது பண்டிகைகளைக் கொண்டாடும்போது ஒரு தனிக் குடும்ப உணர்வு ஏற்படும். அவ்வுணர்வே குடும்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும். இதனால், குடும்பத்துடன் அதிகளவு நேரத்தைச்  செலவிடுவது ஒரு தனித்துவமான மகிழ்ச்சியை ஏற்படுத்தும்

அடுத்ததாக, நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுலது. பள்ளிப் பருவத்திலிருந்தே வேலை செய்யும் பருவம் வரை ஒரு மனிதனுக்கு நண்பர்கள் இருப்பார்கள். நண்பர்கள் என்பவர்கள் நாமே  உருவாக்கிக்கொள்ளும் குடும்பமாகும். நாம் நம் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ள முடியாத கவலைகளையும் தகவல்களையும் நாம் நம் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம். நண்பர்கள் நாம் ஒரு வெற்றியை அடையும்போது நம்மை மேலும் ஊக்குவிப்பார்கள். அதைக் கேட்பதால் ஒருவித மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களுடன் புதிய புதிய வெளியிடங்களுக்குச் சென்று நேரத்தைச்  செலவிடுவதிலும் ஒரு ஆனந்தம் ஏற்படுகிறது. இதனால், நண்பர்களுடன் அதிகளவு நேரத்தைச் செலவிடுவது ஒரு அற்புதமான ஆனந்தத்தை அளிக்கும். 

அடுத்ததாக, நன்னெறிகளை வளர்த்து, தொண்டூழியம் புரிவது.

"காலத்தினாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின்  மாணப் பெரிது"  

 

என்ற குறளுக்கேற்ப, நாம் செய்யும் தொண்டூழியச் சேவை. சிறிதளவில் இருந்தாலும் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் சக்தியைப் பெற்றுள்ளது. நாம் வேலை முடித்த பின்போ பள்ளி விடுமுறைக்காலங்களிலோ நமது நேரத்தைத் திட்டமிட்டுச் செயல்பட்டுத் தொண்டூழிய வேலையில் ஈடுபடவேண்டும். நாம் தொண்டூழியம் புரிவதால், நாம் உதவி செய்யும் மக்களுக்கு ஒரு நம்பிக்கையும் ஏற்படும்.சமூகத்தில் நமக்கு  உதவுவதற்காக மக்கள் தயாராக இருக்கின்றனர், " என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும். வயதானவர்களுடன் அல்லது பிள்ளைகளுடன் நேரத்தைச்  செலவிடுவது அவர்களுக்கும் இனிய அனுபவமாக இருக்கும், நாமும் நமது சமுகத்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஒருவருக்கு நாம் உதவி செய்யும் பொழுது அவரது முகத்தில் தெரியும் பிரகாசத்தைப்  பார்த்தாலே போதும், ஒரு அளவுக்கு மீறி மகிழ்ச்சி மழை கொட்டும். இதனால், தொண்டூழியம் செய்வதாலும் ஒருவர் மகிழ்ச்சி அடைவார் என்று  உறுதியாகக் கருதுகிறேன்.

ஆனால், சிலர், குடும்பங்களுடன் அல்லது நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதற்கோ  தொண்டூழியம் புரிவதற்கோ அதிக நேரம் இல்லாத  காரணத்தினாலும் கைத்தொலைப்பேசியிலேயே வாங்கக்கூடிய புதிய புதிய பொருட்களால் ஈர்க்கப்படுகின்றனர் என்றும் அப்பொருட்களை வாங்குவதிலேயே அதிகளவு மகிழ்ச்சி இருக்கிறது என்றும் கருதுகின்றனர்.

அக்கருத்தை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஏனென்றால், இக்காலத்தில் வேலைப்பளுவால் பலரால் தங்களது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட முடிவதில்லை. அதற்கு மேல் தொண்டூழியம் புரிவதற்கும் அதிக ஈடுபாடில்லை. இதனால், பலர் ஒய்வு நேரங்களில் கைத்தொலைபேசியையே பயன்படுத்தி புதிய புதிய பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். 

ஆனால், மனிதர்களுடன் இருக்கும் உறவுகளை விட இந்நிறுவனங்கள் தயாரிக்கின்ற பொருட்கள் உயர்ந்ததா? மற்ற மனிதர்களுடன் வளர்த்துக்கொள்ளும் உறவை விட ஒரு பொருள் உயர்ந்தது அல்ல. நாம் வாழ்க்கையில் முன்னேறியதற்கான காரணமாகத்  திகழும் நம் குரும்பத்தினருடன் பேசுவதற்கு நேரத்தை ஒதுக்கவேண்டும், நமது வாழ்க்கைப்  பயணத்தில் நம்முடன் பயணித்த நண்பர்களுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். முக்கியமாக, இச்சமூகத்திற்கு நாம் திரும்பி உதவி புரிவதற்கும் நாம் நம் நேரத்தை ஒதுக்கவேண்டும். இம்மூன்றைச் செய்தாலே, நமக்கு ஏற்படும்

மனநிறைவும் மகிழ்ச்சியும் மேலானதாக இருக்கும். இதனால்,

               "ஞாலம் கருதினும் கைக்கூடும் காலம்

               கருதி யிடத்தாற் செயின் "

 

என்பதற்கேற்ப நமது நேரத்தைத் தகுந்த முறையில் திட்டமிட்டுத்  தகுந்த காலத்தில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிடுவது, தொண்டூழியம் புரிவது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலமும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

இறுதியாக, நிறுவனங்கள் விற்கும் புதிய புதிய பொருட்களை வாங்கிக் குவிப்பது ஆடம்பர வாழ்க்கையாகும். ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமையாகும். நாம் மாதந்தோறும் பணத்தைச்  செலவழித்துக்கொண்டே இருந்தால், இறுதியில், கடன்களைப்  பெற வேண்டியிருக்கும். இதனால் என்ன மகிழ்ச்சி ஏற்படுகிறது? ஆனந்தம் ஏற்பட்டலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, என்பதை நினைவில் கொண்டு புதியபுதிய பொருட்களை வாங்காதது சிறப்பானதாகும்.

இக்கட்டுரையில், நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிக் சேர்ப்பதால்  ஒருவர் மகிழ்ச்சியைப் பெற இயலாதென்றும் குடும்பத்துடன், நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட்டும் தொண்டூழியும் புரிவதும் ஒரு தனித்துவமான மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது என்பதை விளக்கினேன். மகிழ்ச்சி புதிய பொருட்களை வாங்குவதால் மட்டும் ஏற்படாது. மகிழ்ச்சியைல் பணம் கொடுத்து வாங்க முடியாது, உறவுகளால் வளர்க்க முடியும்.

                               ***************

No comments:

குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...