Monday, June 23, 2025

நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிச் சேர்ப்பதால் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சியைப் பெற்றுவிட இயலாது. இக்கருத்தினை நீ ஏற்றுக்கொள்கிறாயா? ஏன்?

பாண்டியன் மல்லிகா ஶ்ரீ - 405 - 2025 

மகிழ்ச்சி என்பது இயற்கை, மனிதர்களுக்கு அளித்த பரிசாகும். நாம் நமக்குப் பிடித்தமான உணவைச் சாப்பிடும்போதோ, பெற்றோர்களுடன் அல்லது நண்பர்களுடன் நேரத்தைக் கழிக்கும்போதோ மகிழ்ச்சியில் இதயம் ஊஞ்சலாடும். மகிழ்ச்சியைப் பெறுவதற்கு வெவ்வேறு வழிகள் உள்ளன.

மகிழ்ச்சி என்ற உணர்வு ஒரு பொருளால்  வரலாம், விலங்கால்  வரலாம் அல்லது ஒரு மனிதனால் கூட  வரலாம். அம்மகிழ்ச்சி வெவ்வேறு மனிதனுக்கும் வேறுபட்டதாக இருக்கும். ஆனால், இக்காலத்தில், பெரும்பாலான  மக்கள் தங்களது கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அக்கைத்தொலைபேசியில் இருக்கும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு நிறுவனங்கள்ஒவ்வொரு மாதமும் புதிதாக வெளியிடும் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். 'shein', 'lululemon' போன்ற உடைகள் விற்கும் கடைகள் ‘Instagram', 'Tiktok’ போன்ற இணைய வலைத்தளங்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன. 

மேலும், இக்காலத்தினர்  அந்நிறுவனங்கள், வெளியிடும் பொருட்களை உடனுக்குடன் வாங்கி மற்றவர்களிடம் காட்டுவதில் அதிக ஆர்வத்தைக் காட்டுகிறார்கள். மற்றவர்கள் அப்பொருட்களைப் பார்த்து ஆச்சரியம் அடையும்போது அப்பொருட்களை வாங்கியவருக்குப் பாலில் விழுந்த பழத்தைப் போல் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நிறுவனங்கள் வெளியிடும் புதிய புதிய பொருட்களை வாங்குவதன் மூலம் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சி பெறுகிறாரா? இதற்காகவா இயற்கையாகவே மனிதனுக்குள் மகிழ்ச்சி என்ற சிறப்பான உணர்வு உள்ளது? ஆகையால், நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிச் சேர்ப்பதால் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சியைப் பெற்றுவிட இயலாது என்பது எனது ஆணித்தரமான கருத்தாகும். 

முதலாவதாக, குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் அன்பார்ந்த நேரத்தைச் செலவிடுவது. அன்பு என்ற உணர்வு நம் அனைவரிடமுமே உள்ளது. நாம் நம் குடும்பத்தினரிடம் அல்லது நண்பர்களிடம் அதிக அன்பை வெளிக்காட்டுகிறோம். குடும்பம் இல்லாமல் நம்மால் யாராலும் வாழ இயலாது.

" அன்பிற்கு உண்டோ அடைகுந்தாழ் ஆர்வலர்

   பூசல் தரும் புன்கணீர்” 

என்ற திருகுறளுக்கேற்ப, ஒருவர் தம்மிடம் உள்ள அன்பை அடக்கி வைக்க நினைத்தாலும், தம் குடும்பத்தினர் வேதனையில் இருக்கும்போது அன்பு என்ற உணர்வு வழியும். நாம் நம் குடும்பத்தினருடன் பூங்காவிற்குச் சென்று நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, அல்லது வெளியூருக்கு  சென்று நேரத்தை கழிக்கும் போது நமக்கு ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி ஏற்படும். இல்லையென்றால், நாம் ஒரு பிரச்சனையை  எதிர்க்கொள்ளும்போது நமது குடும்பத்தினர் நமக்கு ஊன்றுகோலாக இருப்பதும் நம்மிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி மகிழ்ச்சி அடைய வைக்கும். மேலும், நாம் நம் குடும்பத்துடன் விழாக்கள் அல்லது பண்டிகைகளைக் கொண்டாடும்போது ஒரு தனிக் குடும்ப உணர்வு ஏற்படும். அவ்வுணர்வே குடும்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும். இதனால், குடும்பத்துடன் அதிகளவு நேரத்தைச்  செலவிடுவது ஒரு தனித்துவமான மகிழ்ச்சியை ஏற்படுத்தும்

அடுத்ததாக, நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுலது. பள்ளிப் பருவத்திலிருந்தே வேலை செய்யும் பருவம் வரை ஒரு மனிதனுக்கு நண்பர்கள் இருப்பார்கள். நண்பர்கள் என்பவர்கள் நாமே  உருவாக்கிக்கொள்ளும் குடும்பமாகும். நாம் நம் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ள முடியாத கவலைகளையும் தகவல்களையும் நாம் நம் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம். நண்பர்கள் நாம் ஒரு வெற்றியை அடையும்போது நம்மை மேலும் ஊக்குவிப்பார்கள். அதைக் கேட்பதால் ஒருவித மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களுடன் புதிய புதிய வெளியிடங்களுக்குச் சென்று நேரத்தைச்  செலவிடுவதிலும் ஒரு ஆனந்தம் ஏற்படுகிறது. இதனால், நண்பர்களுடன் அதிகளவு நேரத்தைச் செலவிடுவது ஒரு அற்புதமான ஆனந்தத்தை அளிக்கும். 

அடுத்ததாக, நன்னெறிகளை வளர்த்து, தொண்டூழியம் புரிவது.

"காலத்தினாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின்  மாணப் பெரிது"  

 

என்ற குறளுக்கேற்ப, நாம் செய்யும் தொண்டூழியச் சேவை. சிறிதளவில் இருந்தாலும் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் சக்தியைப் பெற்றுள்ளது. நாம் வேலை முடித்த பின்போ பள்ளி விடுமுறைக்காலங்களிலோ நமது நேரத்தைத் திட்டமிட்டுச் செயல்பட்டுத் தொண்டூழிய வேலையில் ஈடுபடவேண்டும். நாம் தொண்டூழியம் புரிவதால், நாம் உதவி செய்யும் மக்களுக்கு ஒரு நம்பிக்கையும் ஏற்படும்.சமூகத்தில் நமக்கு  உதவுவதற்காக மக்கள் தயாராக இருக்கின்றனர், " என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும். வயதானவர்களுடன் அல்லது பிள்ளைகளுடன் நேரத்தைச்  செலவிடுவது அவர்களுக்கும் இனிய அனுபவமாக இருக்கும், நாமும் நமது சமுகத்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஒருவருக்கு நாம் உதவி செய்யும் பொழுது அவரது முகத்தில் தெரியும் பிரகாசத்தைப்  பார்த்தாலே போதும், ஒரு அளவுக்கு மீறி மகிழ்ச்சி மழை கொட்டும். இதனால், தொண்டூழியம் செய்வதாலும் ஒருவர் மகிழ்ச்சி அடைவார் என்று  உறுதியாகக் கருதுகிறேன்.

ஆனால், சிலர், குடும்பங்களுடன் அல்லது நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதற்கோ  தொண்டூழியம் புரிவதற்கோ அதிக நேரம் இல்லாத  காரணத்தினாலும் கைத்தொலைப்பேசியிலேயே வாங்கக்கூடிய புதிய புதிய பொருட்களால் ஈர்க்கப்படுகின்றனர் என்றும் அப்பொருட்களை வாங்குவதிலேயே அதிகளவு மகிழ்ச்சி இருக்கிறது என்றும் கருதுகின்றனர்.

அக்கருத்தை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஏனென்றால், இக்காலத்தில் வேலைப்பளுவால் பலரால் தங்களது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட முடிவதில்லை. அதற்கு மேல் தொண்டூழியம் புரிவதற்கும் அதிக ஈடுபாடில்லை. இதனால், பலர் ஒய்வு நேரங்களில் கைத்தொலைபேசியையே பயன்படுத்தி புதிய புதிய பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். 

ஆனால், மனிதர்களுடன் இருக்கும் உறவுகளை விட இந்நிறுவனங்கள் தயாரிக்கின்ற பொருட்கள் உயர்ந்ததா? மற்ற மனிதர்களுடன் வளர்த்துக்கொள்ளும் உறவை விட ஒரு பொருள் உயர்ந்தது அல்ல. நாம் வாழ்க்கையில் முன்னேறியதற்கான காரணமாகத்  திகழும் நம் குரும்பத்தினருடன் பேசுவதற்கு நேரத்தை ஒதுக்கவேண்டும், நமது வாழ்க்கைப்  பயணத்தில் நம்முடன் பயணித்த நண்பர்களுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். முக்கியமாக, இச்சமூகத்திற்கு நாம் திரும்பி உதவி புரிவதற்கும் நாம் நம் நேரத்தை ஒதுக்கவேண்டும். இம்மூன்றைச் செய்தாலே, நமக்கு ஏற்படும்

மனநிறைவும் மகிழ்ச்சியும் மேலானதாக இருக்கும். இதனால்,

               "ஞாலம் கருதினும் கைக்கூடும் காலம்

               கருதி யிடத்தாற் செயின் "

 

என்பதற்கேற்ப நமது நேரத்தைத் தகுந்த முறையில் திட்டமிட்டுத்  தகுந்த காலத்தில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிடுவது, தொண்டூழியம் புரிவது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலமும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

இறுதியாக, நிறுவனங்கள் விற்கும் புதிய புதிய பொருட்களை வாங்கிக் குவிப்பது ஆடம்பர வாழ்க்கையாகும். ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமையாகும். நாம் மாதந்தோறும் பணத்தைச்  செலவழித்துக்கொண்டே இருந்தால், இறுதியில், கடன்களைப்  பெற வேண்டியிருக்கும். இதனால் என்ன மகிழ்ச்சி ஏற்படுகிறது? ஆனந்தம் ஏற்பட்டலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, என்பதை நினைவில் கொண்டு புதியபுதிய பொருட்களை வாங்காதது சிறப்பானதாகும்.

இக்கட்டுரையில், நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிக் சேர்ப்பதால்  ஒருவர் மகிழ்ச்சியைப் பெற இயலாதென்றும் குடும்பத்துடன், நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட்டும் தொண்டூழியும் புரிவதும் ஒரு தனித்துவமான மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது என்பதை விளக்கினேன். மகிழ்ச்சி புதிய பொருட்களை வாங்குவதால் மட்டும் ஏற்படாது. மகிழ்ச்சியைல் பணம் கொடுத்து வாங்க முடியாது, உறவுகளால் வளர்க்க முடியும்.

                               ***************

எல்லாத்துறைகளிலும், சிறப்பாகச் செய்யும் நாட்டில் வாழும் மக்கள் எளிதில் மனநிறைவு அடைவதில்லை. கருத்துரைக்க.


பாண்டியன் மல்லிகா ஶ்ரீ - 405 - 2025 

எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாடுகளில், அமெரிக்க, ஜப்பான், பின்லாந்து, சிங்கப்பூர் போன்ற பற்பல நாடுகள் அடங்கும். இந்நாடுகள், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்வதால், அந்நாட்டு மக்கள் மனநிறைவு அடைகிறார்களா? முதலில், மனநிறைவு எப்படி நம் வயிறு நிரம்பியவுடன் போதும் என்று தோன்றுகிறதோ, அவ்வாறு மனம் கிடைத்ததை வைத்து நிறைவு அடைவது ஆகும். ஆனால், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாடுகளில், போட்டித்தன்மை, விலைவாசி உயர்வு, அதிகரித்த எதிர்பார்ப்புகள், மனஅழுத்தும் போன்ற காரணங்களால் அந்நாடுகளில் வாழும் மக்கள் எளிதில் மனநிறைவு அடைவதில்லை என்பது என் ஆணித்தரமான கருத்தாகும். இக்கட்டுரையில், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாட்டில் வாழும் மக்கள் எளிதில் மனநிறைவு அடையாததன் காரணங்களை விளக்குகிறேன்.

முதலாவதாக, போட்டித்எண்மை அதிகரிப்பு. எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாடுகளில், எடுத்துக்காட்டாக, தொழில் நுட்பம் அதிவேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அசுரவளர்ச்சி அடைந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ள இயலாதவர்களால், போட்டித்தன்மை மிகுந்த உலகில் முன்னேற இயலாது. இம்மாதிரியான போட்டித்தன்மையால், குறைந்த வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அதோடு, வேலை செய்பவர்களும் தொடர்ந்து தங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால், வேலை வாய்ப்புகளைத் தேடும் நபர்களும் வேலை வாய்ப்பை நழுவவிடாமல் கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் நபர்களும் போட்டித்தன்மையால் மன அழுத்தத்திற்கு ஆளாகுகின்றனர்.

உதாரணமாக, 2024 ஆம் ஆண்டில், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் ஒரு நாடாக திகழும் சிங்கப்பூர், போட்டித்தன்மைத் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பெற்றதாக 'தமிழ் முரசு குறிப்பிட்டது. மேலும், சிங்கப்பூரில், மன அழுத்த சதவீதம் 2021 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றும், 87 சதவீதம் சிங்கப்பூரர்கள் மன அழுத்தத்தை உணர்ந்ததாக

தெரிவித்துள்ளனர் என்று 'CNA' தெரிவித்துள்ளது. இதனால், சிங்கப்பூரில் கல்வித்துறை சிறந்து விளங்குவதால், அனைத்து மாணவர்களுக்கும் போதுமான கற்றல் பாடங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், அனைத்து மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க, கடினமாக உழைத்து கற்றுக்கொள்கிறார்கள். சிங்கப்பூர் மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சிபெறாமல் இருந்தால், மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். 

‘NTU’ வெளியிட்ட தகவலின்படி, 86 சதவீதம் சிங்கப்பூர் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கல்வித்துறையில் அல்லது எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடுகளில் போட்டித்தன்மை அதிகரிப்பால் அந்நாட்டு மக்கள் மனநிறைவு அடைவதில்லை. பொருளாதார உயர்வுக்கும் காரணமாக அமைந்துள்ளது. ஒரு நாடு எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படுவதால், அதனுடைய பொருளாதாரமும் உயரும். அந்நாட்டில் பொருளாதாரம் அதிகரிப்பால், விலைவாசியும் உயருகிறது. விலைவாசி உயர்ந்தாலும், மக்களது சம்பளம் அதிகமாகாமல் இருப்பதால், மக்கள் பணப்பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கையின் தினசரி தேவைகள் படிப்படியாக உயர்கின்ற நிலையில், பணப்பற்றாக்குறை ஏற்படுவதால், மக்கள் மேலும் கடினமாக உழைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால், மக்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, மருத்துவத்திலும் சிறந்து விளங்கும் நாடாகத் திகழும் சிங்கப்பூரில், மருத்துவ சேவைகளின் செலவுகள் மிகவும் விலையுயர்ந்ததாக இருக்கின்றன. மருத்துவ சேவைகளின் தரம் உயர்ந்ததாக இருப்பதால், கட்டணங்களும் அதிகரிக்கின்றன. இதனால், மக்கள் மருத்துவச் செலவுகளைக் கண்டு மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.இதனால், எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கும் நாட்டில் வாழும் மக்கள், விலைவாசி உயர்வால், மனநிறைவு அடைவதில்லை.

மூன்றாவதாக, அதிகரிக்கும் எதிர்ப்பார்ப்புகள். எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடுகளில், பெரும்பாலான  சேவைகளும் வசதிகளும் சிறந்த தரத்தில் இருக்கும். இவையெல்லாம் மந்திரத்தினால் வருவதில்லை, அந்நாட்டில் உள்ள உழைப்பாளர்கள் கடினமாக உழைத்து நாட்டின்

பொருளாதாரத்தை உயர்த்தியும், அரசாங்கத்தின் நல்ல அணுகுமுறைகளாலும் திட்டங்களாலும் உருவாக்கப்படுகின்றன. எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல் படுகின்ற நாடாக உலகளவில்  தோன்றுவது அந்நாட்டின் மக்களுக்குப் பெருமையாக இருப்பதோடு மற்ற நாடுகளுக்கும் அந்நாடு ஒரு முன்மாதிரியாகத் திகழும். எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடு என்ற முத்திரையை ஒரு நாடு அடையும்போது, அதைப் பல வருடங்களுக்கு தக்கவைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்களும் அரசாங்கமும் ஆசைப்படும். இதனால், இம்முத்திரையை நிலைக்க வைக்க, அந்நாட்டு மக்கள் மேலும் தங்களது. வேலைகளில் சிறந்து செயல்பட்டு, மேலும் கடினமாக உழைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இம்மாதிரியான எதிர்பார்ப்புகளால், எல்லாத்துறைகளிலும்  சிறந்து செயல்படும் நாட்டில் வாழும் மக்கள் மனநிறைவு அடைவதில்லை.

"மனநிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடம்

உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாமே 

தேடிக்கொள்ளும் வறுமை

 

என்று சாக்ரடீஸ் கூறியதுபோல, மனிதர்களாகிய நாம், நம்மிடம் இருப்பதை வைத்து எந்நேரமும் மகிழ்ச்சியாகவோ மனநிறைவாகவோ இருந்ததில்லை. நாம் எப்பொழுதும் முன்னேறப் பார்க்கிறோம். இதனால், நம்மிடம் இருக்கும் செல்வத்தை நாம் பொருட்படுத்தாமல், மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டும், நம்மை நாமே மாற்றிக்கொள்கிறோம். 

இதனால், எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடுகளில் இருக்கின்ற மக்கள், தங்களது நிலையின் மதிப்பை அறியாமல் நன்றியற்றவராக இருக்கின்றனர். எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படாத நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையை ஒப்பிடும்போது, எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும் மக்களின் நிலை ஓரளவிற்கு மேம்பட்டு இருக்கும். ஆனால், இதை அந்நாட்டு மக்கள் புரிந்துகொள்ளாததாலும், அந்நாடு வழங்கும் வசதிகளையும் சேவைகளையும் பொருட்படுத்தாததாலும், அந்நாட்டு மக்கள் மனநிறைவு அடைவதில்லை. தங்களிடம் இருக்கும் செல்வத்தை வைத்து அவரவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தாலே, அவர்கள் எப்பொழுதும் மனநிறைவாக இருப்பார்கள். இதனால், எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும் மக்கள், மனிதனின் ஆசைப்படும் குணத்தால் மனநிறைவு அடைவதில்லை.

இக்கட்டுரையில், எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும் மக்கள் மனநிறைவு அடையாததற்கான  காரணங்களைப் பற்றி என் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். சுருக்கமாக, அதிகரிக்கும் போட்டித்தன்மையினால் ஏற்படும் மன அழுத்தம், பொருளாதார உயர்வால் விளையும் விலைவாசி உயர்வு, 'எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடு' என்ற எதிர்ப்பார்ப்பைத் தக்கவைப்பது மற்றும் மனிதனின் ஆசைப்படும் குணம் ஆகிய காரணங்களால் எல்லாத்துறைகளிலும்,சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும் மக்கள் மனநிறைவு அடைவதில்லை, என்ற எனது ஆணத்தரமான கருத்தை இக்கட்டுரையில் முன்வைத்துள்ளேன். 

****************


Saturday, June 21, 2025

நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிச் சேர்ப்பதால் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சியைப் பெற்றுவிட இயலாது. இக்கருத்தினை நீ ஏற்றுக்கொள்கிறாயா? ஏன்?

 

    

LAKSHMI KANTHAN SRIVIKA

         Class 405 - 2025 

    மகிழ்ச்சி, அப்படியென்றால் என்ன? மகிழ்ச்சி என்பது பல பாகங்களைக் கொண்ட, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறாக அர்த்தமளிக்கும், வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்ச்சியாகும். யாருக்க்கு எது மகிழ்ச்சியளுக்கும் என்பது யாராலும் கணிக்க இயலாது; சில சமயங்களில் அவர்களாலே கணிக்க இயலாது. ஆனால், அதுதான் இவ்வுலகில் உள்ள அனைவரும் அடைய விழையும் மிகத் தலைமையான லட்சியம். ஒவ்வொருவரும் நாம் நம் வாழ்க்கையில் எதைச் செய்தால் நம் வாழ்வு ஓர் இன்பக் கடலாய் மாறும் என்று பாடுபடுகிறார்கள். அவற்றில் சிலர், பொருட்செல்வத்தையே மிக முக்கியமாக கருதுகிறார்கள். அவ்வாறானோர், நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிச் சேர்ப்பதால் மட்டும் மகிழ்ச்சியைப் பெற்றுவிட இயலும் என்றெண்ணுகிறார்கள். என்னைப் பொருத்தமட்டில், இக்கருத்தை நான் அறவே ஏற்றுக்கொள்ளமாட்டேன். இவ்வாறு எண்ணுபவர்கள் பெரும்பாலும் சிறிய பிள்ளைகள்தான் என்று அலட்சியாஅக விட்டுவிடுவது தவறு. ஏனெனில், பெரியோர்கள் பலரும்கூட பல பொருட்களைச் சேர்த்தால் மனநிறைவு அடைந்து, நாளடைவில் மகிழ்ச்சியையும் அடையலாம் என்ற தவறான சிந்தனையோட்டத்தைக் கொண்டுள்ளனர். அவற்றையெல்லாம் உடைத்து, இக்கருத்தையொட்டி என்னுடைய வாதத்தை நிலைநாட்டவே இக்கட்டுரையை எழுதியுள்ளேன். 

    பல புதிய பொருட்களுக்கு உரிமை கொண்டாடினாலே இன்பத்தை அடையமுடியும் எனில், வசதி குறைவுள்ளோர் மகிழ்ச்சியாக வாழத் தகிதியற்றவர்களா? உதாரணத்திற்கு, புதிய ஒரு விளையாட்டுப்பொருளை ஒரு தம்பதியினரால் தங்கள் மகனுக்கு வாங்கித்தர முடியவில்லையெனில், அவன் மகிழ்ச்சியாக வாழவில்லை என்பதில்லையே. அவ்வாறான குழந்தைகள், தங்களின் பெற்றோருடன் நேரம் செலவிடுவதை பொன்னான நேரமாக கருதுவார்கள். குறிப்பாக, இருவரும் வேலைக்குச் சென்று பணம் ஈட்ட பாடுபடும்போது, வாரயிறுதி நாட்களில் ஒன்றாக உணவகம் சென்றாலே அவர்களுக்குப் போதும். புதிய பொருட்களைச் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்திற்கு இடமேயில்லை. பெரியோர்க்கும் இது பொருந்தும். அந்தத் தந்தையானவர், புதிதாக வெளிவந்த உந்துவண்டியை வாங்கினால் மட்டுமே மகிழ்ச்சியை எட்டுவார் என்றில்லை. தன் மனைவி மற்றும் மகனுடன் சிறுசிறு செயல்களைச் செய்வதோ, அன்பான வார்த்தைகளை உதிர்ப்பதோதான் எப்பொருளைக் காட்டிலும் அவருக்கு பேரின்பத்தைத் தேடித்தரும். இத்தகைய பல குடும்பங்கள் கவலையின்றி மனநிறைவுடன் வாழும்போது, புதிய புதிய பொருள்களைச் சேர்ப்பதால் மட்டும் மகிழ்ச்சியைப் பெற்றுவிடமுடியும் என்றெண்ணுவது மெய்யாகாது.

    ஆனால், ஒருவருக்கு நிறைய பணச்செல்வம் இருந்தாலும், அவற்றையெல்லாம் பயன்படுத்திப் பொருட்களை உடனுக்குடன் வாங்கிக்கொண்டாலும், அவர் பெருமகிழ்ச்சி அடைவார் என்று திண்ணமாக கூற இயலாது. உணமையான மகிழ்ச்சி என்பது உறவுகள் மூலமே தோன்றும். ஒருவர் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் ஆளும் அளவு செல்வம் கொண்டிருந்தாலும், தனிமையை எதிர்நோக்கினால், மகிழ்ச்சியை அடைய வழியின்றி திணறுவார். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒருவர் கொள்ளும் உறவு விலைமதிப்பில்லா ஒன்றாகும். நம் வாழ்க்கையை நாம் தனியே செலுத்தாமல், நம்முடன் ஒருவர் நடக்கும்போதுதான் உறவுகளின் சிறப்பை அறிந்து இன்னும் அதிகமான இன்பத்தைக் காணமுடியும். மனிதனுக்குத் தேவைப்படும் துணை, புரிந்துணர்வு, அன்பு போன்றவற்றை இன்னொரு மனிதன்தான் வழங்கமுடியும். உணர்ச்சியளவில் எப்பயனும் தராத பொருட்களை வாங்குவதன் மூலமே மகிழ்ச்சியை அடைந்துவிடமுடியும் என்றெண்ணுபவர், தன்னத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

    இருப்பினும், புதிய பொருள்களை உடனுக்குடன் வாங்குவதால் மட்டுமே மகிழ்ச்சியைப் பெற்றுவிடமுடியும் என்றெண்ணுவோரின் சிந்தனைக்கும் சில அடிப்படை காரணங்கள் உள்ளன. சிங்கப்பூர் போன்ற போட்டித்தன்மை மிக்க தேசத்தில், பின்தங்கிவிடகூடாது என்ற அச்சத்தை அனைவரும் கொண்டிருப்பது இயல்பு. சில மாணவர்கள், தாமும் மற்ற மாணவர்களைப் போலவே இருக்கவேண்டும் என்ற இச்சையால், தங்கள் பெற்றோரிடம் இவ்வாறான பொருட்களை வாங்கிக்கொடுக்குமாறு வேண்டுகிறார்கள். மற்றவர்கள் தன்னைத் தாழ்வாக எண்ணினால், தனக்கு நண்பர்கள் இருக்கமாட்டார்கள் என்று அஞ்சுவார்கள். இக்கருத்து வேலைக்குச் செல்லும் பெரியோர்க்கும் பொருந்தும். தங்களிடம் உள்ள பொருள்களைப் பற்றி பெருமையாக பேசுவதில் அவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.

     இம்மாற்றுக்கருத்துக்களைப்பற்றி நான் விளக்கினாலும், நான் என் வாதத்தை முழுமனதுடன் மீண்டும் நிலைநாட்டுகிறேன். பொருட்களுக்கு உயிரில்லை. அந்த நிறுவனம் வேறு ஏதேனும் புதிய பொருளை வெளியிட்டால், அனைவரும் அதை வாங்க விழைவார்கள். ஒவ்வோராண்டும், ‘ஐஃபோன்’ நிறுவனம் புதிய தொலைபேசியை வெளியிட்டவுடன், அதில் எவ்வித மாற்றமும் இல்லாவிடிலும், அதை அனைவரும் வாங்குவதைப்போல், புதிய பொருட்கள் ஒருநாள் பழையதாக மாறும். அவ்வாறு பொருள்கள் பழையதாக மாறும்போது, அவை மகிழ்ச்சியளிக்கப்போவதில்லை. நம் வாழ்நாள் முழுதும் நிலைக்கப்போவது நம் உறவுகள்தான். பொருட்செல்வன் ஓர் ஆற்றில் வாழும் பறவைகள் போன்றவை. ஆறு நாளடைவில் வற்றினாலும், அல்லது வற்றாத நிலையிலும், அதாவது காலம் உருண்டோடியவுடன், பறவைகள் வேறு ஆற்றைத் தேடிச் சென்றுவிடும். அதைப் போலவெ, நம் வாழ்வில் நாம் சேர்த்துவைத்திருந்த பொருட்களுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். ஆனால், நம் உறவுகள் அவ்வாற்றில் வாழும் மீன்கள் மற்றும் செடிகள் போன்றவை. எவ்வளவுதான் காலம் கடந்தாலும் நம்முடனே இருப்பார்கள்; நம் வாழ்க்கையில் வாழ்நாள் முழுதும் வெளிச்சத்தை அளிப்பார்கள். 

     இரண்டாவதாக, நம்மை மற்றவர்கள் தாழ்வாக எண்ணக்கூடாது என்பதற்காகவே பல பொருள்களை வாங்கக்கூடாது.

உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே

 இடுக்கண் களைவதாம் நட்பு”

என்ற திருக்குறளிற்கேற்ப, நட்பு என்பது துணை, உதவி, அன்பால் கட்டப்பட்ட ஒரு வீடாகும். ஒருவன் வசதி குறைந்தவனாக இருப்பதாலே அந்த வீடு உடைந்து பாழாகுமெனில், அந்த வீடு உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படவில்லை. அவ்வாறு ஏற்படும்போது, அந்நட்பை விட்டொழித்துவிட்டு நமக்கு உண்மையான அன்பளிக்கும் நண்பர்களுடன் பழகினாலே மகிழ்ச்சி கிட்டும்.

     சுருக்கமாக, நிறுவனங்கள் அறிமுகப்ப்டுத்தும் புதிய பொருள்களை உடனக்குடன் வாங்கிச் சேர்பதால் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சியைப் பெற்றுவிட இயலாது என்பதை நான் உறுதியாக ஏற்கிறேன். நாளடைவில் பழையதாக மாறும் பொருட்களால் விளையும் எவ்வித இன்பமும் நிலைத்திருக்காது. ஆகவே, அதற்குப் பதிலாக, நம் வாழ்நாள் முழுதும் நம்முடன் பயனிக்கும் நபர்களுடன் சிறந்த உறவைக் கொண்டாடுவதே உண்மையான பெருமகிழ்ச்சியை நம் வாழ்விற்குச் சேர்க்கும்.

                               ********************

 


குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...