Tuesday, July 8, 2025

‘பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு’ எனும் தலைப்பில் ஒரு சிற்றுரை எழுதவும்.

 

 

KARUPPAIYA BARANI NIVEDHAA 

Year 4- 405 - 2025 



சிங்கை நாடு!

 எந்தன் வீடு!

என்ற பாடல்வரிகளோடு நான் என் உரையைத் தொடங்குகிறேன். மாணவர்கள், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர் பிரதமர்  திரு லாவ்ரன்ஸ் வாங் முதலிய அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தையும் தேசியதின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்! 

இப்போட்டியில் பங்கேற்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. சரி, நான் இழுத்தடிக்கமல் என் தலைப்பைப்பற்றி விவரிக்கிறேன். சிங்கப்பூர், நம் நாடு, இல்லம், உறைவிடம், பள்ளி, என்ற எத்தனை பெயர் கொண்டு அழைத்தாலும் போதாது. உலக வரரைபடத்தில் கண்ணுக்கே தெரியாத சிறு புள்ளியாக இருந்தாலும், கல்வி, மருத்துவம், வணிகம் முதலிய பல்வேறு தொழில்களில் அதிவேகத்தில் முன்னேறுகிறது நம் சிங்கப்பூர். இப்படிப்பட்ட நாட்டின் குடிமக்களாக இருக்க நாம் தினமும் பெருமை கொள்கிறோம், தலை நிமிர்ந்து நடக்கிறோம். ஆனால், சிஙப்பூரை நிம்மதி மிகுந்த வெற்றிகரமான தேசமாக வைத்துக்கொள்வதில் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பங்குண்டு. அதன் ஒரு முக்கிய கூறே சமூக ஒற்றுமையும் நல்லிணக்கமும். இவற்றைக் கடைப்பிடித்து வாழ்வது நம் அனைவரின் தலையாய கடமையாகும். என்னைப் போன்ற மாணவர்களுக்கும்கூட இதில் முக்கியப் பங்குள்ளது. ஆம், நமக்கும் ஒரு மிகப்பெரிய பங்குள்ளது, சரிதானே நண்பர்களே? இப்பங்கைப்பற்றி நான் இவ்வுரையில் மேலும் விளக்குகுகிறேன்!

 

சின்ன சின்ன பிள்ளைகளை நம்பி,

இந்த நாடே இருக்குது தம்பி!

சின்னஞ்சிறு கைகளை நம்பி,

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி!

என்ற பாடல்வரியை நான் பலமுறை கேள்வியுற்றுள்ளேன். சிறுவயதில் கேட்டபோது, அவற்றின்  உண்மையான மகத்துவம் எனக்குப் புரியவில்லை, ஆனால், நான் வளர வளர இவ்வரிகளில் உள்ள உண்மையை நான் மெல்ல மெல்ல உணரத் தொடங்கினேன். இக்காலத்து இளையர்களும் பிள்ளைகளுமேதான், நாளைய சமுதாய தலைவர்களாகவும் மாறுகிறார்கள். அதனால்தான், மாணவர்களாகிய நாம், பள்ளிப்பருவத்திலேயே  இன நல்லிணக்கத்தைப் பற்றியும் பிற இனக் கல்லாச்சாரங்களைப்பற்றியும் நன்கு அறிந்து புரிந்துகொள்ளவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள நம் சீன, மலாய், தமிழ் முதலிய அனைத்து இன நண்பர்களையும் பிரித்துப் பார்க்காமல், ஒரே தராசில் வைத்து வேறுபாடில்லாமல் நட்பு பாராட்ட வேண்டும். 

சிறுவயதில் நம் மனதில் இவ்வெண்ணங்கள் வளர்ந்துவிட்டால், நாம் வளர வளர இதே  நல்லெண்ணத்தோடும் பாகுபாடின்மையோடும் எல்லாரோடும் பழகுவோம்.தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைஎன்று கூறுவர், அதுபோல நாமும் இந்த நல்ல வழக்கத்தைச் சிறுவயதிலிருந்தே கடைப்பிடித்தால், நம் இறுதிக்காலம் வரை இன நல்லிணக்கத்திற்கு நம்மால் முடிந்த பங்கை ஆற்ற இயலும். நம்மில் ஒருவர்கூட முன்வந்து, இன வேறுபாடுகளை எதிர்த்தாலே போதும், அது நம் சமுதாயத்தையே மாற்றியமைக்கும்.

இரண்டாவதாக, மாணவர்களாகிய நமக்கு இக்காலத்தில் கண்டிப்பாக தகவல் தொழில்நுட்பத் தொடர்புத்திறன் கற்பித்து வளர்க்கப்பட்டிருக்கும். எனக்குத் தெரியும், நீங்கள் அனைவரும் என்ன யோசிக்கிறீர்கள் என்று. தகவல் தொழில்நுட்பத் தொடர்புத்திறனிற்கும், சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருத்தலில் மாணவரின் பங்கிற்கும் என்ன தொடர்பு உள்ளது? என்று தானே யோசிக்கிறீர்கள்? நான் கூறுகிறேன், கேளுங்கள். தொழில்நுட்ப வளர்ச்சியடந்த இவ்வுலகில், நொடிக்கு நொடி நமக்குத் தகவல்கள் வருகின்றன. ஆனால், அவற்றில் எவை பொய் எவை உண்மை என்பதை நம்மில் பலர் ஆராயத் தவறுகிறோம். அதிலும் சிலர் ஆராயாமலே பல செய்திகளைப் பரப்புகிறார்கள். இதனால், தகவல்கள் மாறுபட்டு, மக்கிளிடையே பொய்யான எண்ணத்தை உருவாக்குகிறது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இவ்வாறு நடப்பது மிகவும் அபாயமான ஒன்றாகும். ஒரு இனத்தைப்பற்றி தவறான, பொய்யான செய்தி ஒன்று வெளிவந்து, அதை அனைவரும் நம்பிவிட்டால், அவர்கள் மனதில் இவ்வினத்தைப்பற்றிய கெட்ட அபிப்பிராயம் ஏற்பட்டுவிடும். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும் எண்ணங்களும் நிலைப்பாடுகளும்தான், இறுதியில் இனவெறியாகவும் இனவெறுப்பாகவும் வெடிக்கின்றன. ஆனால், நமக்கோ, பொய்யான செய்தியையும் உண்மையான செய்தியையும் வேறுபடுத்த கற்பிக்கப்பட்டுள்ளது. நாம் தவறான தகவல்களின் வலையில் சிக்கிக்கொள்ளாமல், அவ்வாறு பரவும் தவறான தகவல்களைப்பற்றி விழிப்புணர்வும் ஏற்படுத்தலாம். ஓர் இனத்தை அவமானப்படுத்தும் எண்ணத்தோடு பரப்பப்படும் ஏதேனும் ஒரு பொய்யான செய்தியை நாம் கண்டால், அதைப்பற்றி நம் பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள் ஆகிய அனைவரிடமும் கூறி, அதைப் பரப்ப வேண்டாம் என்று கூறலாம். இது ஒரு சிறிய செயலாக தெரிந்தாலும், “சிறு துளி, பெரு வெள்ளம்என்ற பழமொழிக்கேற்ப, நாம் ஒவ்வொருவரும் இச்சிறிய செயலைச் செய்தால், அது நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இறுதியாக, மாணவர்களாகிய நாம் அனைவருக்கும் ஒரு குரல் உள்ளது, நீதி மனப்பாண்மை உள்ளது. பள்ளியில் ஒவ்வொரு நாளும் நாம் நியாயத்தைக் கடைப்பிடிப்பது பற்றியும், தவறு நடப்பதைப் பார்த்தால் தட்டிக்கேட்க வேண்டும் என்பது பற்றியும்  கற்கிறோம். அது கற்றலோடு  மட்டும் நின்றுவிடாமல், நம் வாழ்வில் இடம்பெற வேண்டும். நம் முன் யாரோ தன் மற்ற இன நண்பனைக் குறைத்துப்  பேசுவதையோ இனரீதியாக அவமானப்படுத்துவதையோ நாம் கண்டால், அதை எதிர்த்து நின்று துணிச்சலாகக் கேள்வி கேட்க வேண்டும்; நடக்கும் தவறைத் தடுக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நான் தவறு செய்யாமல் இருந்தால் மட்டும் போதும்; தவற்றைத் தட்டிக்கேட்பது என் கடமையல்ல என்று எண்ணுவோர் பலருண்டு. ஆனால், அது மிகத்தவறான எண்ணப்போக்கு. கண்ணெதிரே நடக்கும் அநீதியைத் தடுப்பது ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும். மாணவர்களாகிய நாமும் பள்ளி, கடைத்தொகுதி, உணவகம் என்று பார்க்காமல், எங்கு இனரீதியாக தவறு நேர்ந்தாலும் அதைத் தட்டிக்கேட்க வேண்டும்.

சரி, இவ்வுரையில், மற்ற இனத்தவரை மதித்து நடப்பதைச் சிறு வயதிலிருந்தே பழக்கமாக்குவது, இனந்தொடர்பாக வரும் பொய்யான செய்திகளை முடக்குவது, இனத்தவறுகளைத் தட்டிக்கேட்பது ஆகியவை இன மற்றும் சமூக ஒற்றுமை நிலைத்திருக்க மாணவர் செய்யும் பங்கு என்று பகிர்ந்துகொண்டுள்ளேன். இதுவரை என் உரையைக் கேட்ட அனைவருக்கும், நான் மனதார நன்றி நல்கி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்!

                                                      ****





'பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு’ எனும் தலைப்பில் ஒரு சிற்றுரை எழுதவும்.

 

Lithra Ramamoorthy -  Year 4 - 408 - 2025 

இனிய மாணவர்களே; வருங்கால தலைவர்களே!  மற்றுமுள்ள பார்வையாளர்களே! உங்களஉங்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்களைத் தெரிவித்து எனது சொற்பொழிவைத் தொடங்க விரும்புகிறேன். இப்போது, நான் உங்கள் அனைவரையுமே சற்றுச் சிந்திக்க வைக்கும் விதத்தில் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். உங்களில் எத்தனை பேரின் பெற்றோர்மலாய் தோழிகளை வைத்துக்கொள்ளாதே,” அல்லது, “சீனக்காரர்கள் இப்படித் தான்,” அல்லது, “இந்தியர்களுடன் பழகாதே,” போன்ற கருத்துகளைக் கூறிக் கேட்டிருக்கிறீர்கள்? இது போன்ற கருத்துகள் இப்பொழுது சிறியதாகத் தெரியும்; “வீட்டிற்குள் பேசுவதுதானே? அதில் என்ன தவறு இருக்கிறது?” என்று பலர் யோசித்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால், இதுபோன்ற சிறிய சிறிய கருத்துகள் சிறு துளி பெருவெள்ளமாய்ச் சேர்ந்து, நமது சமூக ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கும் சூழலை எழுப்புவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, இந்தச் சிற்றுரையின் மூலம், நமது நாட்டிற்கு வருங்கால தலைவர்களாக விளங்கப்போகிற மாணவர்களாகிய உங்களிடம், பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவர்களின் பங்கு பற்றி விளக்கப் போகிறேன்.

முதலாவதாக, “மாணவர்களாகிய நாம் எதற்காகப்  பங்காற்ற வேண்டும்? அதற்குத்தான்  அரசாங்கம் இருக்கிறதே,” என்ற கேள்வி இந்நேரம் உங்களில் பலரது மனங்களில் எழுந்திருக்கும் என்று நம்புகிறேன். இதற்குப் பதிலளிக்க, மானவர்களாகிய நாங்கள் தான் போன தலைமுறைகளின் தவறான எண்ணங்களை உடைத்து, வரும் தலைமுறைகளுக்குச் சிறந்த முன்னோடிகளாக விளங்கவேண்டும். அதனுடைய முதல் படி, நமது வீட்டிற்குள்ளே ஆரம்பமாகுகிறது. மற்ற இனத்தவரிடம் கோபமாகவோ எரிச்சலுடனோ நடந்துகொள்ளும் பெரும்பாலான இளையர்கள் உண்மையில் அதுபோன்ற கருத்துகளைக் கொள்வதில்லை. பெற்றோர் அல்லது மூத்த உறவினர்கள்கள் தான் அதுபோன்ற தவறான கருத்துகளை அவர்களது மனங்களில் பதியும் சூழலை உருவாக்குவர். இதனைத் தடுத்து நிறுத்துவது, மாணவர்களாகிய நமது தலையாய கடமையாக விளங்கவேண்டும். வீட்டினுள் மற்ற இனத்தைப் பற்றிய தவறான கருத்துகளைப் பேசும்போது, அதனைச் சுட்டிக்காட்டி, வேரோடு அறுக்க வேண்டும். அதன் மூலம், இது போன்ற தவறான கருத்துகளைப் பரப்புவதை நிறுத்தலாம். சில நேரம், நாமே மற்ற இனத்தவரைத் தவறாக பேசுகிறோம்  என்று உணரவே மாட்டோம். ஆனால், அவை நம் அன்றாட கலந்துரையாடல்களில் இலைமறை காய்போல் ஒளிந்திருந்தும், அவற்றைச் சுட்டிக்காட்டி, கண்டிப்பதுதான் சமூக ஒற்றுமைக்குப் பங்காற்ற நமக்கு வழிவகுக்கும். 

இரண்டாவதாக, தவறான கருத்துகளை ஒழிப்பது மட்டும் போதாது; புதிய நல்லக் கருத்துகளைப் பரப்பவேண்டும். அடுத்த படியாக, வீட்டுக்குள் மட்டுமின்றி, வெளியுலகத்தில் உள்ள மற்ற இனத்தவரின் மீது ஆர்வம் கொள்ளவேண்டும். மற்ற இனத்தவரிடம் போய் பேசி, பழகி, அவர்களின் கலாச்சாரம் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்! அப்போது, அவர்கள் மீது இருந்த உங்களது தவறான அபிப்பிராயங்கள் எவ்வளவு வேகமாக களைபிடுங்கப்படும் என்று நீங்களே பார்ப்பீர்கள். பெரும்பாலான தவறான கருத்துகள்; புண்படுத்தும் வார்த்தைகள் ஏதோ ஒரு அறியாமையிலிருந்துதான் எழுகின்றன. அந்த அறியாமையைக் கோபமாகக் காட்டாமல் ஆர்வமாகக் காட்டப் பழகுங்கள்!உணவு வாசனை மிகவும் அதிகமாக இருக்கிறது, எனக்குப் பிடிக்கவில்லை,” என்று நினைக்காமல், “இவ்வுணவு வகையில் எவற்றைச் சேர்த்திருக்கிறீர்கள்? நான் சுவைத்துப் பார்க்கலாமா?” என்று கேட்டுப் பழகுங்கள்! இதன் மூலம், ஒருவரைப் பற்றி இன்னொருவர் ஆர்வம் கொண்டு, கலாச்சாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் சமுதாயத்தை உருவாக்கலாம். 

கடைசியாக, “நான் அடுத்த படியாக பங்காற்ற விரும்புகிறேன்! எவ்வழிகள் உள்ளன?” என்று உங்களில் பலரிடம் ஆர்வம் தோன்றியிருக்கும் என்று நம்புகிறேன். முதலில், உங்கள் பள்ளிகளிலே சமூக ஒற்றுமையைப் பாதுகாப்பதைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். பள்ளியில் நண்பர்களிடம் இன நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வழிகளைப் பகிர்ந்துகொள்வதோடு, பிறர் மற்ற இனத்தவர்மீது தவறான அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கும்போது, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் புதிய நல்ல கருத்துகளை எடுத்துரைக்கலாம். இதன் மூலம், அவர்கள் தவற்றை உணர்ந்து, தமது தவறான கருத்துகளை விட்டுவிடுவார்கள். மேலும், தமது இனத்தைப் பற்றிய தவறான கருத்துகளால் புண்பட்டு துடுப்பில்லாமல் நீரில் தத்தளிக்கும் ஒருவரிடம் கைகொடுக்கலாம். இதுபோன்ற செயல்கள் சிறியதாகத் தெரியும். ஆனால், அவை ஒருவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கலாம். அனைவரும் இதுபோன்ற சிறிய படியை முன்வைத்தால் போதும், நம் சமுதாயம் மேலும் ஒற்றுமையாகத் திகழும்.  மாணவர்களுள் சிலர் சமூக ஊடகங்களில் திறமையானவர்களாக இருக்கிறார்கள். அதுபோன்றவர்கள் சமூக ஊடகங்களில் இன நல்லிணக்கத்தை உண்டாக்கும் தகவல்களைப் பகிர்வதன் மூலம், மற்ற மாணவர்களுக்கு இத்தகவல்கள் விரைவாகப் போய் சேரும்; விழிப்புணர்வை உருவாக்கலாம்.

சுருங்கக்கூறின், மாணவர்களாகிய நாம், பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமையை நிலைத்திருக்க செய்வதில் பங்காற்ற பல வழிகள் உள்ளன. வீட்டிலிருந்து ஆரம்பித்து, பள்ளியில் தொடர்ந்து, சமுதாய அளவிற்கு கூட விழிப்புணர்வைக் கொண்டு செல்லும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் நிறைந்திருக்கிறது.ஊருடன் ஒத்து வாழ்என்ற ஔவையின் எளிய, அழகிய பொன்மொழியை மனதில் கொண்டு நாம் ஒவ்வொருவரும் நடந்துகொண்டால், நமது சமூகம் விதவிதமான அழகிய பூக்களைக் கொண்ட பூந்தோட்டத்தைப் போல் திகழும். என் சிற்றுரையை இதுகாறும் செவிமடுத்ததற்கு என் அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவித்து, பணிவுடன் விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

                                              *****


குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...