Monday, May 26, 2025

சொற்பொழிவு - தேசியதினக் கொண்டாட்டத்தை ஒட்டிப் பேச்சுப்போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. அதில் நீ கலந்துகொள்ளவிருக்கிறாய். “பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு” எனும் தலைப்பில் ஒரு சிற்றுரை எழுதவும்.


SELVAKUMAR KANISHKA - YEAR 4 - 407- 2025 


“கசடதபற வல்லினம், ஙஞநணமன மெல்லினம், யரலவழள இடையினம், யாவரும் இங்கே ஓரினம்!”


அமுதே, தமிழே, அழகிய மொழியே எனதுயிரே! முதலில் உன்னை மனம், மொழி, மெய்யால் வணங்கி மகிழ்கிறேன். அடுத்து, என்னருந் தமிழ்மொழி என்போன்ற இளம்பருவத்தினர் நாவிலும் நற்சிந்தையிலும் நிலைத்திட வேண்டும் என்னும் நன்னோக்கத்தில் இப்போட்டியை ஏற்பாடு செய்த குழுவினருக்கும் இங்கு வருகை புரிந்துள்ள அனைவருக்கும் இன்தமிழ் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


வேற்றுமை மறந்து ஒற்றுமை என்ற கூற்றிற்கேற்ப, சமூக ஒற்றுமை என்பது அனைத்து இனங்களைச் சார்ந்த மக்களும், இனம், மதம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் முதலிய வேறுபாடுகளைத் தாண்டி கூட்டுறவுடன் வாழ்வதாகும். அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தின் அடித்தளமானது சமூக ஒற்றுமை. இது நிலைத்திருத்தல் என்பது, எப்போதும், இன்னும் வரவிருக்கும் தலைமுறைகளிலும் சமூக ஒற்றுமை வேறூன்றியிருப்பதைக் குறிக்கிறது. இவ்வாறு பல இனத்தவரும் வாழும் சிங்கை நாட்டில் சமூக ஒற்றுமையை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவர்களின் இன்றியமையாத பங்கு என்ன என ஆராய்வோம். 


இக்காலக்கட்டத்தில், பள்ளியில் மாணவர்கள் கற்றலில் மட்டும்தான் ஈடுபடுகிறார்களா என்ன? இணைப்பாடம், குழு திட்டப்பணிகள், கலை சார்ந்த நடவடிக்கைகள் என எண்ணற்ற வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. சமூக ஒற்றுமை என்பதற்கான அஸ்திவாரம் சமூகப் பிணைப்பு என்பதில் துளி அளவும் ஐயம் இல்லை. தமக்கு முக்கியமான சமூக பிரச்சனைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் சக மாணவர்களுடன் ஈடுபட ஏகப்பட்ட வாய்ப்புகளும் ஆதரவும் பள்ளிகளால் வழங்கப்படுகையில், பெரும்பாலான மாணவர்கள் மக்கள் சார்ந்த சமூக பிணைப்பை மேம்படுத்த முன்வருகின்றனர். மற்ற அமைப்புகளுடன் ஒன்றாகச் செயற்பட்டு பலதரப்பட்ட மக்களிடையே இன நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் அதிகரிக்க, நிகழ்ச்சிகள் பலவற்றை அரங்கேற்றுகின்றனர். சிங்கப்பூரிலுள்ள பல இனங்களையும் அவற்றின் தனித்துவமான கலாச்சாரத்தையும் வெளிக்கொண்டுவருவதற்காக, கலை அரங்கேற்றங்கள், பாரம்பரிய விளையாட்டுகளைக் கொண்ட குடும்ப விழாக்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கக்கூடிய நடவடிக்கைகள், முதலியவற்றை மாணவர்களே தன்னிச்சையாகத் திட்டமிட்டு நடத்துகின்றனர். தேசிய அளவில் நிகழும் நிகழ்ச்சிகளில் கூட, குழுக்களில் செயற்படும் மாணவர்கள் இன நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையைப் பற்றியும் பொதுமக்களுக்குக் கற்பிக்க, பயிலரங்குகள், கண்காட்சிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்கின்றனர். 


இதற்கெல்லாம் முக்கிய காரணங்கள் மாணவர்களின் ஆர்வமும் பற்றுமே ஆகும். பள்ளியில் செய்யவேண்டும் என்பதற்காக ஏனோ தானோ என மாணவர்கள் திட்டப்பணிகளில் ஈடுபடுவரில்லை. “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்பதற்கேற்ப, சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையைத் தக்கவைப்பதில் தம்முடைய இன்றியமையாப் பங்கை உணர்ந்து மாணவர்கள் முழு மனதுடனும் உந்துதலுடனும் செயல்படுகின்றனர். அவர்கள் நடத்தும் இந்நிகழ்ச்சிகள் எவ்வாறு உண்மையான, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என நீங்கள் நினைக்கலாம். கலாச்சாரம் ஒட்டிய கருத்துப்பரிமாற்றம் மூலம், மக்கள் ஒருவரையொருவர் பொருத்துக்கொள்ளாமல் புரிந்துகொள்கின்றனர்; மற்ற இனங்களைப் பற்றிய ஆர்வத்தை வளர்த்துக்கொள்கின்றனர். 


இரண்டாவதாக, இன்றைய மாணவ செல்வங்களாகிய நாம்தான் நாளைய தூண்களாவோம், அடுத்த தலைமுறையே நம்மால்தான் வடிவமைக்கப்படுகிறது என்ற கருத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். அவ்வாறு இருக்கையில், சமூக ஒற்றுமையைக் கட்டி காக்க வேண்டுமென்றால், நாம் தானே முதல் குரலை எழுப்பவேண்டும்? என்னதான் நிகழ்ச்சிகள், அரங்கேற்றங்கள், கண்காட்சிகள் போன்றவற்றை நடத்தினாலும், உண்மையான சமூகப் பிணைப்பை வளர்ப்பது அதையும் தாண்டியது. மாணவ குரல்களாகிய நமக்குதான் சமுதாயத்தோடு தொடர்புகொண்டு மனந்திறந்து பேசுவதற்கான தளங்களை உருவாக்கவேண்டிய கடமை உள்ளது. “கூட்டுறவே நாட்டு உயர்வு” என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர். முதலில் கூட்டுறவை வளர்ப்பதற்கு எது தேவை? மக்கள் ஒருவரோடு ஒருவர் முகம் பார்த்துப் பேசவேண்டும். மாணவ பேச்சு தளங்கள், பட்டிமன்றங்கள், சமூக உரையாடல் மேடைகள் முதலியவை சில எடுத்துக்காட்டுகள். நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் பேச்சு போட்டியைவிட வேறு சிறந்த உதாரணம் இல்லை. என்ன கூற வருகிறேன் என்றால், சமூக ஒற்றுமையை வளர்ப்பதற்கு மாணவர்கள் தாமே உரையாடல் தளங்களை உருவாக்குகின்றனர், மற்றவர்களை அவற்றில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்துகின்றனர். தினசரி சமுதாய சிக்கல்களையும் அவற்றைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளையும் மாணவர்கள் ஒன்றாகத் திரட்டுகின்றனர். இதன்மூலம், சமூக ஒற்றுமை இல்லாததற்கான மூல காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காண்கிறார்கள். 


இறுதியாக, மாணவர்கள் சமூக ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எந்த அளவிற்குப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கின்றனரோ, அதே அளவிற்குத் தம் சொந்த பள்ளிகளிலும் சக மாணவர்களுக்கும் பாடங்கள் மூலமும் விளையாட்டுகள் மூலமும் சுலபமாக கற்பிக்கின்றனர். முன்புபோல், சமூக நல்லிணக்கத்தை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உணர்த்துவதில்லை, மாணவர்களே கற்கிறார்கள், கற்பிக்கிறார்கள். தொடக்கநிலை மாணவர்களிலிருத்து உயர்நிலை மாணவர்கள் வரைக்கும், சமூக ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதற்கான வழிகள், ஆலோசனைகள், ஒற்றுமையை ஒட்டிய குழு நடவடிக்கைகள் முதலியவை வழங்கப்படுகின்றன. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பதற்கேற்ப, சிறு வயதிலிருந்தே சமூக ஒற்றுமையை வாழ்க்கையின் அடிப்படையாக மாணவர்கள் காண்பதால், எதிர்காலத்திலும் அதைக் கடைப்பிடிக்கின்றனர். 


சுருங்கக் கூறின், பள்ளி திட்டப்பணிகள் மூலம் சமூக பிணைப்பை வட்டாரங்களில் வளர்ப்பது, மக்களுக்கு திறந்த உரையாடல் தளங்களை அமைத்துக்கொடுப்பது, மற்றும் சக மாணவர்களையும் சமூக ஒற்றுமை குறித்த கற்றலில் ஈடுபடுத்துவது ஆகிய வழிகள் மூலம் மாணவர்கள் சமூக ஒற்றுமை நிலைத்திருக்க பங்காற்றுகின்றனர். இதுவரை என் உரையைச் செவிமடுத்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். 


~ முற்றும் ~


Saturday, May 24, 2025

சொற்பொழிவு - பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு

            RADHAKRISHNAN SUJITHA - உயர்நிலை 4 ஆம் ஆண்டு - 2025

எனது தாய்மொழியான தமிழை வணங்கி இந்த அவையில் இருக்கும் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு தரப்பினர் சிங்கப்பூரில் குடியேறுகின்றனர். சீனாவிலிருந்து வருகிறார்கள். இந்தியாவிலிருந்து வருகிறார்கள். ஏன், அமெரிக்காவிலிருந்து கூட வருகிறார்கள். இந்த உலகமயமாக்கும் சூழலில் பலர் வேலை வாய்ப்புகளுக்காக சிங்கப்பூருக்கு வருகின்றனர் என்பதே உண்மை. ஆகவே, சிங்கப்பூரில் பல்லினத்தவர் வாழும் நிலை ஏற்படுகிறது. சேர்ந்து படிக்கும் நிலை ஏற்படுகிறது. இதை மனதில்கொண்டு “பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு” என்ற தலைப்பையொட்டி உங்களிடம் பேசப்போகிறேன்.


சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு. உலகத்தில் வெரும் சின்ன புள்ளிதான். சிறிய நாடாக இருந்தாலும் உலகத்திலே உள்ள முதல் 20 செழிப்பான நாடுகளில் இடம்பெறுகிறது. ஏன்? சிறப்பான நீதி, தேர்ச்சிப்பெற்ற பலர் என்ற பல காரணங்களை சொல்லிக்கொண்டே வரலாம். ஆனால், முக்கியக் காரணம்? சமூக ஒற்றுமையே! சிங்கப்பூர் என்பது ஒரு மரம் போல, சமூக ஒற்றுமை என்பது அதன் வேர்கள் போல. வேர்கள் இல்லாவிட்டால், மரமே சாய்ந்துவிடும். ஏன்? வேர்களே மரத்தின் அடித்தளம். அதே போல் நமது அடித்தளமான சமூக ஒற்றுமை கலந்துவிட்டால், சிங்கப்பூர் சிரமப்படும் அவல நிலை ஏற்படும். அதற்கு பிறகு கரை ஏறுவது மிகவும் சிரமம்.


சரி, நான் ஏன் சமூக ஒற்றுமை முக்கியம் என்று சொல்லிவிட்டேன். ஆனால், மாணவர்களின் பங்கு என்ன? இப்போது பார்ப்போம். மாணவர்கள் என்பவர்கள் நமது அடுத்த தலைமுறையினர். அவர்கள் தான் எதிர்காலத்தில் சிங்கப்பூரை ஆள்வார்கள். ஆகவே, மாணவர் பருவத்திலே சமூக ஒற்றுமையை கடைப்பிடிக்கும் பழக்கத்தை வைத்துக்கொண்டால்தான் எதிர்காலத்தில் அவர்கள் சமூக ஒற்றுமையைச் சிங்கப்பூரில் நிலைநாட்ட முடியும். “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை,” என்று நமது முன்னோர் சொல்லியிருக்கின்றனர். ஆகவே, சிறு வயதிலிருந்தே மாணவர்கள் ஒவ்வொரு இனத்தவருடன் பழகுவது இன்றியமையாததாகும். அதுமட்டுமா? இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் வீட்டில் செலவிடும் நேரத்தை விட பள்ளியில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். ஆகவே, மாணவர்கள் தங்களுடைய பங்கை ஆற்றாவிட்டால், பள்ளி படிப்பதற்கு ஒரு சிறந்த சூழலாக அமையாது. அவர்களுக்கிடையே சண்டைப்போட்டால் என்ன பயன்? மற்றவருக்குத் தீமையே அளிக்கும். எந்த நன்மையும் இருக்காது. ஆகவே, மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் எந்த இனத்தவராக இருந்தாலும் சரி, பழகிக்கொள்ள கற்றுக்கொள்ளவேண்டும். பழக வேண்டும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் நமக்கு இருக்கும் நிம்மதி சீர்குலைய அதிக வாய்ப்புள்ளது.


”வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்” என்று நமது முன்னோர் சொல்லியிருக்கின்றனர். ஏன்? ஒரு பிரச்சனை வரும் முன் நாம் ஆயுத்தமாய் இருந்தால்தான் நம்மை ஒரு பிரச்சனையின் விளைவுகளுக்கு ஆளாகாமல் தற்காத்துக்கொள்ளலாம். இது சிங்கப்பூருக்கும் பொருந்தும். சிங்கப்பூர் முதலில் சுதந்திரம் பெற்றபோது, பல பூசல்கள், பல சண்டைகள் என்று நிலவின. நீங்கள் பெரியவர்கள் மட்டுமே இந்த பூசல்களில் பங்கேற்றனர் என்று நினைத்திருக்காலாம். ஆனால், அவ்வாறு அல்ல. மாணவர்கள் கூட இது போன்ற சண்டைகளில் ஈடுப்பட்டனர். இந்த சண்டைகளில் பலர் காயமடைந்தனர், கட்டடங்கள் சேதமடைந்தன. சிலர் அதிக காயங்களாலும் உயிரை இழந்தனர். சிங்கப்பூரின் நிலையே கண்ணீரும் கம்பலையுமாக இருந்தது. இது போன்ற நிலை யாருக்கும் ஏற்படக்க்கூடாது என்ற மனப்போக்கை நாம் கொண்டிருக்க வேண்டும். ஆகவே, இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல், தற்காத்துக்கொள்ள மாணவர்கள் தங்கள் பங்கையாற்ற வேண்டும். எவ்வாறு? அவர்கள் பள்ளியில் சிறு வாக்குவாதங்களை பெரும் சண்டையாக உருவாவதை தடுக்க வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இனத்தைப் பற்றி பேசாமல், பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். இத்தகைய வழிகள் மூலம் சிறு வாக்குவாதங்கள் பெரிதாக்காமல் இருக்கும்.


அடுத்து, சமூக ஒற்றுமை என்பது ஒரு வாழ்க்கைத்திறன் என்று நான் முழுமனதோடு நம்புகிறேன். ஆகவே, அவர்கள் வெளிநாட்டிற்கு செல்லும்போதோ, அல்லது சிங்கப்பூரிலோ மற்றவர்களுடன் சேர்ந்து வேலைகளை வாக்குவாதமின்றி செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். “ஒரு கைத் தட்டினால் ஓசை எழும்புமா?” என்பது போல சமூக ஒற்றுமையோடு ஒருவருடன் ஒருவர் வேலை செய்தால்தான் நாம் எதிர்காலத்தில் ஒரு சிறந்த வேலை செய்யும் சூழலை உருவாக்க இயலும். மாணவர்கள் இப்போதே ஒப்படைப்புகளின்போது மற்ற இனத்தவருடன் சேர்ந்து செய்ய முடியாவிட்டால், எதிர்காலத்தில் எப்படி செய்வார்கள்? நீங்கள் இவ்வாறு மாணவர்களால் செய்ய முடியும் என்று நினைத்தால், இது ஒரு மூட நம்பிக்கை என்று நானே கூறுகிறேன். சமூக ஒற்றுமையை நிலைநாட்டும் கடமை மாணவர்களின் கைகளிலே இருக்கிறது. அந்த கடமையை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான், தற்போதைய வேளையிலும், எதிர்காலத்திலும் சமூக ஒற்றுமையை நிலை நாட்ட முடியும் என்று நான் நம்புகிறேன். 


இறுதியாக, மாணவர்கள் தான் எதிர்காலத்தில் சமூகத்தில் பெரியவர்களாக வாழ்வார்கள். அவர்கள் வீடு வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆகவே, புது வாழ்வை எதிர்காலத்தில் வாழும்போது மற்ற இனத்தவருடன் ஒற்றுமையாக வாழவேண்டும். சிங்கப்பூரில் சுமார் 70% மக்கள் அடுக்குமாடி கட்டடங்களில் வசிக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்த சதவிதம் மாறும். ஆகவே, ஒரே மாடியில், ஒரே கட்டடத்தில் பல்லினத்தவர் சேர்ந்து வாழும் நிலை ஏற்படும். ஆகவே, மாணவர்கள் இப்போதிலிருந்தே அண்டைவீட்டார் வீட்டுக்கு வரும்போது இன்முகத்தோடு வரவேற்க வேண்டும். விருந்தோம்பலை கடைப்பிடித்து வாழ வேண்டும். இவ்வாறுச் செய்யாவிட்டால், மற்றவர்களின் உணர்வுகள் அதிக அளவில் பாதிக்கப்படும். செடிகளை தட்டுவது, முட்டைகளை எறிவது என்று பல நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்க அதிக வாய்புண்டு. ஆகவே, எதிர்காலத்திலும், இப்போதைய சூழலிலும், கட்டடங்களிலே சமூக ஒற்றுமையை நிலைநாட்டுவது முக்கியம்.


ஆகவே, மாணவர்களே! நமது பங்கு சமூக ஒற்றுமைக்கு மிகவும் முக்கியம். சமூக ஒற்றுமைக்கு நாமே ஒரு நுழைவுச்சீட்டுப் போல். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதை கடைப்பிடித்து வாழ்ந்து நிம்மதியாக வாழ்வோம். முழு சமூக ஒற்றுமையை அடைவது கடினம் என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால், மற்றவர்களை மதிப்பது, மற்ற கலாச்சாரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது, வாக்குவாதங்களை பெரிதுபடுத்தாமல் இருப்பது போன்ற எளிய முறைகளின் மூலம் இந்த இலக்கை அடையலாம். சிரமமாக இருந்தாலும் ஒன்றுபட்டு இந்த இலக்கை அடைவோம். ஆகவே, இந்த அவையில் இருக்கும் ஆட்கள் மாணவர்களாக இருந்தால், இந்த பாட்டை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


’வெற்றிக்கொடி கட்டு

மலையை முட்டும் வரை முட்டு 

இலட்சியம் எட்டும் வரை எட்டு

படையெடு படையப்பா’


வெற்றிக்கொடியைக் கட்டுவோம். சிரமமாக இருந்தாலும் இலட்சியத்தை எட்டுவோம், சமூக ஒற்றுமையை நிலைத்திருப்போம். இதோடு எனது உரையை முடித்துக்கொள்றேன்.

அனைவருக்கும் தேசிய தின நல்வாழ்த்துக்கள்!


நன்றி வணக்கம்!


குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...