Wednesday, December 11, 2024

“நம் கலையும் பண்பாடும் நம்மிரு கண்கள் போல” என்னும் தலைப்பை ஒட்டி உம் வட்டாரப் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் பேச்சுப்போட்டியில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு

 

   

பெயர்: கப. நிவேதா - வகுப்பு: S3-05 - ஆண்டு - 2024

‘’தமிழர் என்றோர் இனமுண்டு,

   தனியே அவர்க்கோர் குணமுண்டு,

   மானம் பெரிதென உயிர்விடுவான், 

   மற்றவர்க்காகத் துயர்படுவான்’’

என நாமக்கல் கவிஞர் தமிழரைப் பற்றிகக் கூறிய வார்த்தைகளுடன் நான் என் சொற்பொழிவைத் தொடங்குகிறேன். அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று, நான் என் சொற்பொழிவில் கலையும் பண்பாடும் நம்மிரு கண்கள் போல என்ற கருத்தில் சொற்பொழிவு ஆற்றவுள்ளேன். ஒரு மனிதனுக்கு அவன் இரண்டு கண்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு நம் கலைகளும் பண்பாடும் நமக்கு முக்கியம். பார்வையின் மூலம் ஒரு பொருளைப் பார்த்துப் புரிந்துகொள்ளவும் அதன் வண்ணமயத்தையும் அழகையும் ரசிக்கவும் முடிவதுபோல், கலைகள் மற்றும் பண்பாடு மூலம் நம்மால் நம் கலாச்சாரத்தின் அழகையும் நுட்பத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. நம் ஒவ்வொருவருக்கும் நம் பண்பாடு ஒரு அடையாளமாகவும் பெருமையாகவும் திகழ்கிறது.

“கலை என்பது உணர்வின் வெளிப்பாடு. அது உணர்வை வெளியிடுவதுடன் பிறருக்கு அவ்வுணர்வை ஊட்டும் பெருமை உடையது” என்றார் டால்ஸ்டாய். கலை கருத்தின் உறைவிடம்; அழகின் பிறப்பிடம்; நாகரிகத்தின் ஒளிவிளக்கு என்றும் குறிப்பிடுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கலையில் தமிழர்கள் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தனர். 

முதலாவதாக, கலைகள் தமிழரின் பெருமையாக இன்றும் திகழ்கின்றன. முற்காலத்தில் எழுதப்பட்ட பொன்மொழிகள், வரையப்பட்ட ஓவியங்கள், கட்டப்பட்ட கட்டடங்கள் முதலிய பல வியப்புமிக்க கலையாற்றல்களை இன்றும் நாம் கொண்டாடுகிறோம், கண்டு பெருமைப்படுகிறோம். 1000 ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரியகோவில் இன்றும் நம் நாட்டின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும்  பெருமிதமாகவும் நிமிர்ந்து நின்றுகொண்டிருக்கிறது. நினைத்துப் பார்க்கவே வியப்பாகவுள்ளதல்லவா? எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், எவ்வித தொழில்நுட்பமோ இயந்திரமோ இல்லாமல் எவ்வாறு இவ்வளவு உறுதியான, திடமான கோவிலைக் கட்ட முடிந்தது என்று யோசித்துப் பார்க்கவே ஆச்சரியமாகவுள்ளதல்லவா? அதுமட்டுமல்லாமல், நம் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இன்று உலகளவில் போற்றப்படும் நூலாக விளங்குகிறது. ஒன்றே முக்கால் வரியில் அறக்கருத்துகளை எல்லாக் காலங்களிலும் வாழக்கூடிய மனிதர்களுக்கு பொருந்தும் வகையில் எழுதியவர் திருவள்ளுவர். இவ்வாறு தமிழர் தம் கலைகளின் மூலம் நாட்டில் மட்டுமின்றி உலகத்திலேயே அளவில்லா மாற்றத்தை ஏற்படுத்திவுள்ளனர்; நமக்குப் புகழையும் பெருமையையும் கொண்டுவந்துள்ளனர். கலைகளுக்கு உலகில் பெரிய மாற்றத்தை எற்படுத்தும் ஆற்றல் உள்ளது. நாம் நம் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே நாட்டிற்கும் உலகிற்கும் நல்ல முன்னேற்றம் கொண்டுவர இயலும்.

இரண்டாவதாக, நம் கலைகளின் மூலம் நம்மால் நம் முன்னோர்களின் வாழ்க்கைமுறையைப் பற்றி மேலும் அறிய முடிகிறது. பரதநாட்டியம் போன்ற கலைகளிலிருந்து நாம் நம் முன்னோர்கள் கூறிய கதைகளைப் பற்றி மேலும் அறிய முடிகிறது! வார்த்தைகளாலும், பாவனைகளாலும் நம்மால் கதைகளையும் உணர்வுகளையும் காண முடிவது நம் நாட்டியக்கலையின் சிறப்பாகும். 

இவற்றிலிருந்து, நம்மால் நம் தமிழரின் கலைகளின் மகிமையையும் பெருமையையும் புரிந்துகொள்ளமுடிகிறது, அல்லவா? இவ்வளவு அழகான கலைகளும் நம் அனைவரின் பிறப்பு, வாழ்வு, இறப்பு என்று அனைத்திலும் பங்கேற்று நமக்கு வாழ்வில் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இதனால்தான், நாம் நம் கலைகளை மதித்து, போற்றி, கற்றுக்கொண்டு அவற்றிற்கு உயிர் கொடுக்க வேண்டும். நம் தமிழரின் பெருமையை விட்டுக்கொடுக்காமல், இக்கலைகளைப் பெருமையுடன் உலகிற்குக்  காண்பிக்க வேண்டும்; தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். 

சரி, இவ்வளவு நேரம் நம் இரு கண்களில் ஒன்றான கலைகளின் பெருமையை எடுத்துரைத்தேன். இனி, நம் மற்றொரு கண்ணாகிய பண்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குகிறேன்.

நம் பண்பாடு நமக்குப் பல நல்ல பாடங்களைச் சொல்லித் தருகிறது. அதனால், அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் நமக்குப் பல நன்மைகளும் ஏற்படும்! எப்படி? ஒருவர் இப்படித்தான் வாழவேண்டும், இப்படி வாழக்கூடாது; இதைத் தான் செய்யவேண்டும், இதைச் செய்யக்கூடாது; மீறீச் செய்தால் இத்தகைய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பன போன்ற வாழ்க்கை விதிமுறைகளை எடுத்துக்கூறுவது நம் பண்பாடு. அந்த வகையில் பார்த்தால், அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் நீதிநூல்கள் அனைத்தும் நம் பண்பாடை பறைசாற்றுகின்றன என்று கூறினால் அது மிகையாகாது. திண்ணை கட்டுதல், கோலம் இடுதல், விருந்தோம்பல் முதலிய பல செயல்களைக் காலங்காலமாக நாம் செய்துவருகிறோம். ஆனால், இச்செயல்கள் எல்லாம் தமிழரின் நற்குணத்தைக் காட்டுகின்றன என்பதை நம்மில் பலர் அறிந்திருக்கமாட்டோம். அரிசி மாவால் கோலமிட்டு எறும்பு பூச்சிகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று எண்ணிய தமிழரே, வந்து போகும் எவரும் இளைப்பாற தங்கள் வீட்டின் வெளியே திண்ணைகளைக் கட்டியிருக்கிறார்கள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று புறநானூற்றின் வரிகளுக்கு ஏற்ப,  தெரிந்தவர், தெரியாதவர் என்று பார்க்காமல் அனைவரையும் சொந்தம் என்று எண்ணி தம் வீட்டினுள் அழைத்து வயிறு நிரம்பும்வரை உணவு பரிமாறினர்.

மற்றவருக்கு நலன் அளிப்பது மட்டுமல்லாமல், தன் நலனிற்காகவும் தன்னைச் சுற்றியுள்ளோரின் நலனிற்காகவும் தமிழர் சில பாரம்பரிய பழக்கங்களை வைத்திருந்தனர். அவற்றை நாம் இன்றும் பின்பற்றினாலும், காரணம் அறியாமல் பெற்றோர் கூறுவதாலே பின்பற்றுகிறோம். நாம் வணக்கம் கூறும் முறை நம் சொந்த தூய்மையையும் சுத்தத்தையும் கடைப்பிடித்து, தன்னிடம் இருக்கும் கிருமியை மற்றவருக்குச் கொடுக்காமலும், மற்றவரிடம் இருக்கும் கிருமியை வாங்கிக்கொள்ளாமலும் இருப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாம். ஒரு சிறு வணக்கத்திற்கே இவ்வளவு பெரிய காரணம் இருப்பது ஆச்சரியமாக உள்ளது! அதுமட்டுமின்றி, ஒருவர் தம் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்குமுன், மாப்பிள்ளையின் வீரத்தை அளவிட அவரை, காளை அடக்குதல், பெருங்கல் சுமத்தல் முதலிய விளையாட்டுகளில் ஈடுபடச் சொல்லுவர். இந்நடவடிக்கைகளின் மூலம் மாப்பிளையின் வீரத்தையும், பலத்தையும் மட்டும் பார்ப்பதில்லை, எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை வலிமையுடன் நின்று சமாளிக்க முடியுமா என்பதையும் பார்க்கின்றனர். இப்பண்பாட்டு நடவடிக்கைகள்  பார்ப்பதற்குக்  காரணமில்லாமல் செய்வதுபோல் தெரிந்தாலும், ஒவ்வொன்றிருக்கும் சரியான காரணமும் நன்மையும் உள்ளது!

பண்பாடு என்பது வளர்வது: மனதால் உயர்வது; எல்லோருக்கும் பயன்படும் வகையில் உதவுவது; உலகிற்கு நல்ல ஆதாரமாக இருப்பது. நம் தமிழர் பண்பாடு ஆழமான, அழகான ஒன்றாகும். அதன் நுட்பத்தையும், எழிலையும் புரிந்துகொள்வது நமக்குக் கிடைத்த பாக்கியம். இப்பண்பாடு நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள மக்கள், விலங்கு, செடி அனைத்திற்கும் நன்மை அளிக்கும் விதத்தில் இருப்பதால் அது நமக்கு மிகவும் முக்கியமானது!

இரத்தினச் சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால், நம் கலைகளும் பண்பாடும் நம் வாழ்விலும் வரலாற்றிலும் இன்றியமையாத இடம் பிடித்துள்ளன. இவை நமக்கு நன்மை அளிப்பது மட்டுமின்றி, நமக்குக்  கதைகள், பாடங்கள் புகட்டி நாட்டிற்கே பெருமையும் தந்துள்ளன என்று கூறினால் அது மிகையாகாது. இத்தகைய காரணங்களால், நாம் நம் கலைகளையும் பண்பாட்டையும் மறந்து கைவிட்டுவிடாமல் அவற்றைக் கற்றுக்கொண்டு வாழ வைக்கவேண்டும்! நாம் இக்கலைகளை மதித்துக் கற்றுக்கொண்டால்தான், எதிர்காலத்தில் இவற்றை நம் பிள்ளைகளிடம் கற்றுக்கொடுத்து, கலைகளைக் காலத்தைத் தாண்டி நிற்க வைக்கவேண்டும். இவ்வளவு மகிமையான, அழகான நம் தமிழர் அடையாளத்தை நாம் ஒவ்வொருவரும் உயிர் போல் காத்து, காப்பாற்றினால்தான் அடுத்த தலைமுறையும் நம் கலாச்சாரத்தின் தனித்துவத்தையும் புரிந்துகொள்ளவும், அனுபவிக்கவும் முடியும். மாணவர்களான நாம் அனைவரும் நம் கலைகளையும் பண்பாட்டையும் இரு கண்கள் போல் எண்ணி அவற்றில் பெருமையோடும் பற்றோடும் பங்கேற்க வேண்டும். நீங்கள் அனைவரும் அதைச் செய்வீர்கள் என்று நான் மனதார நம்புகிறேன். கலைகளும் பண்பாடும் நமக்கு மிகவும் முக்கியமானவை; நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் அழகையும் கொடுப்பவை. இத்தகைய கலைகளையும் பண்பாட்டையும் போற்றுவதில் எவ்வித தவறும் இல்லை னே? யோசித்து பாருங்கள்! இதுவரை என் சொற்பொழிவைக் கேட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம், நன்றி வணக்கம்!


Tuesday, December 10, 2024

“நம் கலையும் பண்பாடும் நம்மிரு கண்கள் போல” என்னும் தலைப்பை ஒட்டி நீவிர் ஆற்றும் சொற்பொழிவு. SELVAKUMAR KANISHKA - வகுப்பு 307 - 2024


‘’தமிழர் என்றோர் இனமுண்டு,

   தனியே அவர்க்கோர் குணமுண்டு "

அமுதே, தமிழே, அழகிய மொழியே, எனதுயிரே!

முதலில் உன்னை என் மனம், மொழி, மெய்யால் வணங்கி மகிழ்கிறேன். அடுத்து என்னருந் தமிழ்ழொழி என் போன்ற இளம்பருவத்தினர் நாவிலும் நற்சிந்தையிலும் நானிலம் போற்றும் நவநாகரிகச் சிங்கையிலும் நிலைத்திட வேண்டும் என்னும் நன்னோக்கத்தில் இப்போட்டியை ஏற்பாடு செய்த குழுவினருக்கும், இங்கு வருகை புரிந்துள்ள பெற்றோருக்கும் பெரியோருக்கும் எனைப் போன்ற மாணவச் செல்வங்களுக்கும் இன்தமிழ் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


தமிழர் பண்பாட்டின் தனித்துவத்தை உணர்த்தும் நாமக்கல் கவிஞரின் வரிகளோடு என் சொற்பொழிவைத் தொடங்கினேன். இதிலிருந்தே உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்ன நினைக்கிறேன் என்று. ஆம், நம் கலையும் பண்பாடும் நம்மிரு கண்கள் போல என்ற தலைப்பைப் பற்றி நான் உரையாற்றப்போகிறேன். 


கலைகள் என்பவை எவற்றைக் குறிக்கின்றன? நம் இந்தியக் கிராமியக்  கலைகளான  ஒயிலாட்டம், கரகாட்டம், முதலிய நடன வகைகளையும், நுண்கலைகளான ஓவியக் கலை, சிற்பக்கலை, பிரமிப்பூட்டக்கூடிய கட்டடக்கலைகளையும்,  வில்லுப்பாட்டு, கர்னாடக வாய்ப்பாட்டு போன்ற இசை வகைகளையும், அடிமுறை, சிலம்பம், ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகளையும் குறிக்கின்றன. நம் பண்பாடு என்பது விழுமிய பண்புகள் பலவும் நிரம்பப் பெற்றுக் குடும்பத்தாருடனும் உலகத்தாருடனும் பொருந்தி அன்புற்று வாழும் மனப்பக்குவத்தைக் குறிக்கிறது. பொறுமை, விட்டுக்கொடுத்தல், பிறர்நலம் பேணுதல் முதலான பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது நம் பண்பாடு.


கலையும் பண்பாடும் காலங்காலமாக ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன. இவை இரண்டையும் ஒரு மரத்தின் வேர்களோடு ஒப்பிடலாம். ஒரு மரத்திற்கு வேர்கள் உறுதியையும் ஊட்டச்சத்தையும் வழங்குவது போல, கலையும் பண்பாடும் நமக்கு ஒரு அடித்தளத்தை வழங்கி நமது பாரம்பரியத்துடன் இருக்கும் தொடர்பையும் ஒற்றுமையையும் அதிகரிக்கின்றன.

முதலாவதாக, நம்மிரு கண்களால் எவ்வாறு வெவ்வேறு பொருட்களை வேறுபடுத்திப் பார்க்க முடிகிறதோ, அதே போல நம் கலையும் பண்பாடும் நம்முடைய சிறப்பு அம்சங்களை வெளிக்காட்டி நம் சமூகத்ததின் தனித்துவத்தைப் புலப்படுகின்றன. 

நாம் யாரென்று இவ்வுலகத்திற்கு நம்மை அடையாளப்படுத்துவது நம் கலையும் பண்பாடும்தான். நமக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிப் பிற கலாச்சாரங்கள் மத்தியில் நமக்கென ஓர் அங்கீகாரம் வழங்குவது நம் பாரம்பரியக் கலைகளின் தனிச் சிறப்பே ஆகும். தஞ்சாவூர் என்றாலே முதலில் உங்களுக்கு நினைவிற்கு வருவது என்ன? தஞ்சைப் பெரிய கோவில் தானே? நம் இந்தியக் கட்டடக்கலையின் பெருமையை உணர்த்துவதற்கு அக்காலத்தில் ராஜராஜ சோழரால் கட்டப்பட்ட இக்கோவிலைவிட வேறு சிறந்த எடுத்துக்காட்டு இல்லை.கி.பி 1010 இல் கட்டப்பட்டிருந்தாலும் இன்றுவரை உலகம் முழுவதும் போற்றப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் அதன் பின்னால் இருக்கும் வரலாறும் கலைத்திறனுமே காரணங்களாகும். 

நம் கலையும் பண்பாடும் நம்மால் பின்பற்றப்படவில்லை என்றால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எடுத்துக்காட்டு ஒன்று கூறுகிறேன். சமோவா, பிஜி போன்ற சிறிய நாடுகள் மேற்கத்திய தாக்கங்களால் குறிப்பிடத்தக்க கலாச்சார மாற்றங்களை அனுபவித்துள்ளன. ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organisation - UNESCO) நடத்திய ஆய்வில், இன்னும் 50 வருடங்களில் இதுபோன்ற சிறிய நாடுகளின் மரபும் பண்பாடும் 40% குறைந்துவிடும் எனத் தெரியவந்தது. பாரம்பரியப் பண்பாடுகளைக் கடைப்பிடிக்காவிட்டால், சமூக ஒருங்கிணைப்பில் எதிர்மறை மாற்றங்கள் ஏற்படுவதோடு, நம் வாழ்க்கை முறையும் நிலையற்றதாக மாறிவிடும். 

அதுமட்டுமல்லாமல், பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளில் முன்பு செழித்திருந்த, போற்றப்பட்ட பலவிதமான கலைகள் தற்போது நவீனமயமாக்கலால் அழிந்துகொண்டு வருகின்றன. அந்நாட்டின் கலாச்சார ஆணையம் நடத்திய ஆய்வில், 70% பாரம்பரிய இசை மற்றும் நடன வகைகள் இன்னும் இரு தலைமுறைகளுக்குப் பிறகு,  காலவோட்டத்தில் மறைந்துவிட வாய்ப்புகள் இருக்கின்றன எனக் கண்டுபிடிக்கப்பட்டது. முக்கியமாக இளையர்கள் இக்கலைகளைப் பயிலவில்லை என்றால் அவை அடுத்த தலைமுறையினரைச் சென்றடையப்போவதில்லை. இதனாலேயே “பண்பாடு இழந்து முன்னேறுவதை விட பண்பாடு குறையாமல் பின்தங்கி இருந்தாலும் தவறில்லை” என்று சிலரால் கூறப்படுகிறது. 

கலையும் பண்பாடும் இல்லையென்றால் கலாச்சாரம் என்ற நம் வாழ்வின் முக்கியப் பங்கு ஒட்டுமொத்தமாக மறைந்துவிடும் என்று மேற்கூறிய சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, நம் அடையாளத்தைக் காப்பதற்குக் கலையும் பண்பாடும் அத்தியாவசியமானவை என்ற கருத்தை உங்களால் மறுக்க முடியுமா?

அடுத்ததாக, நம் கண்களால் எவ்வாறு மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியுமோ, அதே போலக் கலையும் பண்பாடும், பெரியவர் சிறியவர் என அனைத்து வயதினருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பளிக்கின்றன.  


கலைக்கு என்னதான் சக்தி உள்ளது என்று நீங்கள் கேட்கலாம். அறிவியலுக்கும் கலைக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? உள்ளதை உள்ளவாறு சொல்ல முயல்வது அறிவியல். உள்ளதை உணர்ந்தவாறு உணர்த்துவது கலை. அறிவும், ஆராய்ச்சியும் கொண்டு வளர்வது அறிவியல். உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்வது கலை. அந்தக் கற்பனையைத் தூண்டி மனதில் நினைப்பதை உணர்ச்சியுடன் மற்றவர்களுக்கு வெளிக்காட்டக்கூடிய ஆற்றல் கலைக்கு உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. 


“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

பகவன் முதற்றே உலகு”


அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை என்பது போல, என்னைப் பொறுத்தவரையில் உணர்ச்சியின் வெளிப்பாட்டிற்கு முதன்மையானவை கலையும் பண்பாடுமே ஆகும். மனிதன் முதன்முதலில் அவனுக்குத் தோன்றிய கருத்துக்களைப் பதிவு செய்யப் பயன்படுத்தியவை பாறைகளே. அதிலிருந்து மெதுவாக, இயற்கையான சாயங்களைப் பயன்படுத்தி ஓவியம் தீட்டியும், சிற்பங்கள் செதுக்கியும் அவன் தகவல் பறிமாற்றம் செய்யக் கற்றுக்கொண்டான். 


கலையின் மூலம் உரையாடுவதற்கு மொழி தேவையா? சொற்கள் தேவையா? இல்லை. "கலை ஒரு ஆன்மா, மற்றொரு ஆன்மாவுடன் உரையாடும் சங்கேத மொழியாகும்." என்று ரஸ்கின் பாண்டின் கூறுகிறார். ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வெறும் பாவனைகளைக் கொண்டே நடித்துக்காட்டும் கதக்களி நடனத்திலிருந்து, வண்ணங்களால் மட்டுமே எண்ணங்களை வெளிப்படுத்தும் மதுபானி ஓவியக் கலை வரைக்கும், உணர்வுகளைத் தனித்துவமான வகைகளில் வெளிக்காட்ட உதவுகின்றன நம் கலைகள்.  


‘கலை என்பது உணர்வின் வெளிப்பாடு. அது உணர்வை வெளிக்காட்டுவதுடன் பிறருக்கும் அதே உணர்வை ஊட்டும் திறன் கொண்டது" என்கிறார் டால்ஸ்டாய். கலை என்பது கருத்தின் உறைவிடம்; அழகின் பிறப்பிடம்; மகிழ்ச்சியின் மாட்சி; இத்தகைய சிறப்பு வாய்ந்த கலையில் தமிழர்கள் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தனர். பல அரிய கலைகளைப் படைத்தனர். கலை உணர்வு கொண்ட தமிழர்களின் பண்பாட்டைத் தெரிந்துகொள்வதற்கு அவை அடிப்படைச் சான்றுகளாக அமைந்துள்ளன.


"பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்

அஃதின்றேல் மண்புக்கு மாய்வது மன்" என்று மொழிந்தார் வள்ளுவர் 


தமிழரின் தலைசிறந்த பண்பாடுகளில் ஒன்று விருந்தோம்பல் ஆகும். முகம் தெரியாதவர் வீட்டிற்கு வந்தால் கூட அவர்களை அன்போடு உபசரித்து, உணவளித்து, புன்சிரிப்புடன் வழியனுப்பிவைக்கும் பழக்கம் காலங்காலமாய்ப் பின்பற்றப்பட்டு வருகிறது. நம் பண்பாடு மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்குவதால் அனைத்து மனிதர்களிடமும் தூய்மையான பாசத்துடன் பழகவேண்டும் என்று இலக்கியங்கள் வழிகாட்டுகின்றன.  இதன் மூலம், அன்பு, பரிவு, இரக்கம் முதலிய பண்புகளை, எவ்வளவு பரபரப்பான வாழ்க்கைச் சூழலிலும், மறந்துவிடுவதில்லை. நம் பண்பாட்டைக் கடைப்பிடிப்பதால் தானே நாம் சிறந்த மனிதர்களாக நம்மை மேம்படுத்திக்கொள்வது மட்டுமல்லாமல், மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் ஒளிவிளக்குகளாகத் திகழ்கிறோம்?


நம் கலையும் பண்பாடும் நம்முடைய தனித்துவத்தையும் அடையாளத்தையும் வலியுறுத்துவதாலும், பண்புகளையும் உணர்வுகளையும் வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பளிப்பதாலும் அவை நம்மிரு கண்களுக்குச் சமம் என ஆணித்தரமாகக் கூறுகிறேன். 


கண் பார்வையை இழந்தால் அதைச் சுலபமாக திரும்பப் பெற முடியுமா? அதேபோல, நம் பாரம்பரியத்தையும் பண்பாடையும் மறந்துவிட்டால் அவற்றை மறுபடியும் நடைமுறைக்குக் கொண்டு வருவது சாத்தியமா? "வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்" என்பதற்கேற்ப, அவற்றை இரு கண்களாகக் கருதி பாதுகாக்கவேண்டியது நம் கடமையாகும். 


"அப்பியாச வித்தைக்கு அழிவில்லை."  என்றொரு பழமொழி உண்டு. வெறுமையான ஏட்டுக் கல்வி கூடச் சில நாளில் மறந்து போய்விடலாம். ஆனால் ஒன்றைச் செய்முறை பயிற்சி செய்து பார்த்துவிட்டோமானால் அதை என்றுமே மறக்கமாட்டோம் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது. ஆகவே, அடுத்த தலைமுறையை வழிநடத்தப்போகும் இளையர்களாகிய நாம், நமது கலையையும் பண்பாட்டையும் கற்போம், கற்பிப்போம், கட்டிக் காப்போம்! கலையும் பண்பாடும் வரும் காலங்களில் அருங்காட்சியகங்களில் காணும் காட்சிகளாக இல்லாமல், மலரும் அரும்புகளின் வளர்ச்சிபோல் அமையட்டும்.


- முற்றும் - 




குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...