பெயர்: கப. நிவேதா - வகுப்பு: S3-05 - ஆண்டு - 2024
‘’தமிழர் என்றோர் இனமுண்டு,
தனியே அவர்க்கோர் குணமுண்டு,
மானம் பெரிதென உயிர்விடுவான்,
மற்றவர்க்காகத் துயர்படுவான்’’
என நாமக்கல் கவிஞர் தமிழரைப் பற்றிகக் கூறிய வார்த்தைகளுடன் நான் என் சொற்பொழிவைத் தொடங்குகிறேன். அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று, நான் என் சொற்பொழிவில் கலையும் பண்பாடும் நம்மிரு கண்கள் போல என்ற கருத்தில் சொற்பொழிவு ஆற்றவுள்ளேன். ஒரு மனிதனுக்கு அவன் இரண்டு கண்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு நம் கலைகளும் பண்பாடும் நமக்கு முக்கியம். பார்வையின் மூலம் ஒரு பொருளைப் பார்த்துப் புரிந்துகொள்ளவும் அதன் வண்ணமயத்தையும் அழகையும் ரசிக்கவும் முடிவதுபோல், கலைகள் மற்றும் பண்பாடு மூலம் நம்மால் நம் கலாச்சாரத்தின் அழகையும் நுட்பத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. நம் ஒவ்வொருவருக்கும் நம் பண்பாடு ஒரு அடையாளமாகவும் பெருமையாகவும் திகழ்கிறது.
“கலை என்பது உணர்வின் வெளிப்பாடு. அது உணர்வை வெளியிடுவதுடன் பிறருக்கு அவ்வுணர்வை ஊட்டும் பெருமை உடையது” என்றார் டால்ஸ்டாய். கலை கருத்தின் உறைவிடம்; அழகின் பிறப்பிடம்; நாகரிகத்தின் ஒளிவிளக்கு என்றும் குறிப்பிடுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கலையில் தமிழர்கள் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தனர்.
முதலாவதாக, கலைகள் தமிழரின் பெருமையாக இன்றும் திகழ்கின்றன. முற்காலத்தில் எழுதப்பட்ட பொன்மொழிகள், வரையப்பட்ட ஓவியங்கள், கட்டப்பட்ட கட்டடங்கள் முதலிய பல வியப்புமிக்க கலையாற்றல்களை இன்றும் நாம் கொண்டாடுகிறோம், கண்டு பெருமைப்படுகிறோம். 1000 ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரியகோவில் இன்றும் நம் நாட்டின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் பெருமிதமாகவும் நிமிர்ந்து நின்றுகொண்டிருக்கிறது. நினைத்துப் பார்க்கவே வியப்பாகவுள்ளதல்லவா? எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், எவ்வித தொழில்நுட்பமோ இயந்திரமோ இல்லாமல் எவ்வாறு இவ்வளவு உறுதியான, திடமான கோவிலைக் கட்ட முடிந்தது என்று யோசித்துப் பார்க்கவே ஆச்சரியமாகவுள்ளதல்லவா? அதுமட்டுமல்லாமல், நம் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இன்று உலகளவில் போற்றப்படும் நூலாக விளங்குகிறது. ஒன்றே முக்கால் வரியில் அறக்கருத்துகளை எல்லாக் காலங்களிலும் வாழக்கூடிய மனிதர்களுக்கு பொருந்தும் வகையில் எழுதியவர் திருவள்ளுவர். இவ்வாறு தமிழர் தம் கலைகளின் மூலம் நாட்டில் மட்டுமின்றி உலகத்திலேயே அளவில்லா மாற்றத்தை ஏற்படுத்திவுள்ளனர்; நமக்குப் புகழையும் பெருமையையும் கொண்டுவந்துள்ளனர். கலைகளுக்கு உலகில் பெரிய மாற்றத்தை எற்படுத்தும் ஆற்றல் உள்ளது. நாம் நம் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே நாட்டிற்கும் உலகிற்கும் நல்ல முன்னேற்றம் கொண்டுவர இயலும்.
இரண்டாவதாக, நம் கலைகளின் மூலம் நம்மால் நம் முன்னோர்களின் வாழ்க்கைமுறையைப் பற்றி மேலும் அறிய முடிகிறது. பரதநாட்டியம் போன்ற கலைகளிலிருந்து நாம் நம் முன்னோர்கள் கூறிய கதைகளைப் பற்றி மேலும் அறிய முடிகிறது! வார்த்தைகளாலும், பாவனைகளாலும் நம்மால் கதைகளையும் உணர்வுகளையும் காண முடிவது நம் நாட்டியக்கலையின் சிறப்பாகும்.
இவற்றிலிருந்து, நம்மால் நம் தமிழரின் கலைகளின் மகிமையையும் பெருமையையும் புரிந்துகொள்ளமுடிகிறது, அல்லவா? இவ்வளவு அழகான கலைகளும் நம் அனைவரின் பிறப்பு, வாழ்வு, இறப்பு என்று அனைத்திலும் பங்கேற்று நமக்கு வாழ்வில் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இதனால்தான், நாம் நம் கலைகளை மதித்து, போற்றி, கற்றுக்கொண்டு அவற்றிற்கு உயிர் கொடுக்க வேண்டும். நம் தமிழரின் பெருமையை விட்டுக்கொடுக்காமல், இக்கலைகளைப் பெருமையுடன் உலகிற்குக் காண்பிக்க வேண்டும்; தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்.
சரி, இவ்வளவு நேரம் நம் இரு கண்களில் ஒன்றான கலைகளின் பெருமையை எடுத்துரைத்தேன். இனி, நம் மற்றொரு கண்ணாகிய பண்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குகிறேன்.
நம் பண்பாடு நமக்குப் பல நல்ல பாடங்களைச் சொல்லித் தருகிறது. அதனால், அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் நமக்குப் பல நன்மைகளும் ஏற்படும்! எப்படி? ஒருவர் இப்படித்தான் வாழவேண்டும், இப்படி வாழக்கூடாது; இதைத் தான் செய்யவேண்டும், இதைச் செய்யக்கூடாது; மீறீச் செய்தால் இத்தகைய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பன போன்ற வாழ்க்கை விதிமுறைகளை எடுத்துக்கூறுவது நம் பண்பாடு. அந்த வகையில் பார்த்தால், அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் நீதிநூல்கள் அனைத்தும் நம் பண்பாடை பறைசாற்றுகின்றன என்று கூறினால் அது மிகையாகாது. திண்ணை கட்டுதல், கோலம் இடுதல், விருந்தோம்பல் முதலிய பல செயல்களைக் காலங்காலமாக நாம் செய்துவருகிறோம். ஆனால், இச்செயல்கள் எல்லாம் தமிழரின் நற்குணத்தைக் காட்டுகின்றன என்பதை நம்மில் பலர் அறிந்திருக்கமாட்டோம். அரிசி மாவால் கோலமிட்டு எறும்பு பூச்சிகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று எண்ணிய தமிழரே, வந்து போகும் எவரும் இளைப்பாற தங்கள் வீட்டின் வெளியே திண்ணைகளைக் கட்டியிருக்கிறார்கள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று புறநானூற்றின் வரிகளுக்கு ஏற்ப, தெரிந்தவர், தெரியாதவர் என்று பார்க்காமல் அனைவரையும் சொந்தம் என்று எண்ணி தம் வீட்டினுள் அழைத்து வயிறு நிரம்பும்வரை உணவு பரிமாறினர்.
மற்றவருக்கு நலன் அளிப்பது மட்டுமல்லாமல், தன் நலனிற்காகவும் தன்னைச் சுற்றியுள்ளோரின் நலனிற்காகவும் தமிழர் சில பாரம்பரிய பழக்கங்களை வைத்திருந்தனர். அவற்றை நாம் இன்றும் பின்பற்றினாலும், காரணம் அறியாமல் பெற்றோர் கூறுவதாலே பின்பற்றுகிறோம். நாம் வணக்கம் கூறும் முறை நம் சொந்த தூய்மையையும் சுத்தத்தையும் கடைப்பிடித்து, தன்னிடம் இருக்கும் கிருமியை மற்றவருக்குச் கொடுக்காமலும், மற்றவரிடம் இருக்கும் கிருமியை வாங்கிக்கொள்ளாமலும் இருப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாம். ஒரு சிறு வணக்கத்திற்கே இவ்வளவு பெரிய காரணம் இருப்பது ஆச்சரியமாக உள்ளது! அதுமட்டுமின்றி, ஒருவர் தம் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்குமுன், மாப்பிள்ளையின் வீரத்தை அளவிட அவரை, காளை அடக்குதல், பெருங்கல் சுமத்தல் முதலிய விளையாட்டுகளில் ஈடுபடச் சொல்லுவர். இந்நடவடிக்கைகளின் மூலம் மாப்பிளையின் வீரத்தையும், பலத்தையும் மட்டும் பார்ப்பதில்லை, எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை வலிமையுடன் நின்று சமாளிக்க முடியுமா என்பதையும் பார்க்கின்றனர். இப்பண்பாட்டு நடவடிக்கைகள் பார்ப்பதற்குக் காரணமில்லாமல் செய்வதுபோல் தெரிந்தாலும், ஒவ்வொன்றிருக்கும் சரியான காரணமும் நன்மையும் உள்ளது!
பண்பாடு என்பது வளர்வது: மனதால் உயர்வது; எல்லோருக்கும் பயன்படும் வகையில் உதவுவது; உலகிற்கு நல்ல ஆதாரமாக இருப்பது. நம் தமிழர் பண்பாடு ஆழமான, அழகான ஒன்றாகும். அதன் நுட்பத்தையும், எழிலையும் புரிந்துகொள்வது நமக்குக் கிடைத்த பாக்கியம். இப்பண்பாடு நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள மக்கள், விலங்கு, செடி அனைத்திற்கும் நன்மை அளிக்கும் விதத்தில் இருப்பதால் அது நமக்கு மிகவும் முக்கியமானது!
இரத்தினச் சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால், நம் கலைகளும் பண்பாடும் நம் வாழ்விலும் வரலாற்றிலும் இன்றியமையாத இடம் பிடித்துள்ளன. இவை நமக்கு நன்மை அளிப்பது மட்டுமின்றி, நமக்குக் கதைகள், பாடங்கள் புகட்டி நாட்டிற்கே பெருமையும் தந்துள்ளன என்று கூறினால் அது மிகையாகாது. இத்தகைய காரணங்களால், நாம் நம் கலைகளையும் பண்பாட்டையும் மறந்து கைவிட்டுவிடாமல் அவற்றைக் கற்றுக்கொண்டு வாழ வைக்கவேண்டும்! நாம் இக்கலைகளை மதித்துக் கற்றுக்கொண்டால்தான், எதிர்காலத்தில் இவற்றை நம் பிள்ளைகளிடம் கற்றுக்கொடுத்து, கலைகளைக் காலத்தைத் தாண்டி நிற்க வைக்கவேண்டும். இவ்வளவு மகிமையான, அழகான நம் தமிழர் அடையாளத்தை நாம் ஒவ்வொருவரும் உயிர் போல் காத்து, காப்பாற்றினால்தான் அடுத்த தலைமுறையும் நம் கலாச்சாரத்தின் தனித்துவத்தையும் புரிந்துகொள்ளவும், அனுபவிக்கவும் முடியும். மாணவர்களான நாம் அனைவரும் நம் கலைகளையும் பண்பாட்டையும் இரு கண்கள் போல் எண்ணி அவற்றில் பெருமையோடும் பற்றோடும் பங்கேற்க வேண்டும். நீங்கள் அனைவரும் அதைச் செய்வீர்கள் என்று நான் மனதார நம்புகிறேன். கலைகளும் பண்பாடும் நமக்கு மிகவும் முக்கியமானவை; நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் அழகையும் கொடுப்பவை. இத்தகைய கலைகளையும் பண்பாட்டையும் போற்றுவதில் எவ்வித தவறும் இல்லை னே? யோசித்து பாருங்கள்! இதுவரை என் சொற்பொழிவைக் கேட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம், நன்றி வணக்கம்!